Showing posts with label வெள்ளிக்கிழமை விளக்கம்!. Show all posts
Showing posts with label வெள்ளிக்கிழமை விளக்கம்!. Show all posts

Sunday, October 4, 2015

வெள்ளிக்கிழமை விளக்கம்!


 - 28 -

வெள்ளிக் கிழமைகளின் ஜூம்ஆ பிரசங்கங்களை அந்நாட்களில் லெப்பைகளே நிகழ்த்துவார்கள். “எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ_த்தஆலாவுக்காயிருக்கும். அவன் எப்படிக்கொத்தவன் என்றால்......” இப்படித்தான் உபந்நியாசம் ஆரம்பிக்கும்.

ஓதலுக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ஒரு தாள லயத்தில் லெப்பை தனது 
குத்பாவை நிகழ்த்துவார். அவரது ராகத்தில் அநேகர் தூங்கிப் போவார்கள்.

அநேகமாகவும் குத்பாவுக்கு என்றொரு கிதாபு (நூல்) அவர்களிடம் இருக்கும். அது தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அரபுத் தமிழில் அமைந்த பிரசங்கங்கள் அதில் அடங்கியிருக்கும். அப்போது சிறுவனாயிருந்த எனது நினைவுகளின் எச்சங்களிலிருந்துதான் இதைச் சொல்லுகிறேன்.

70 களின் நடுப்பகுதியில் எனது நண்பர் காத்தான்குடி பௌஸ் ‘தூக்கம் தரும் குத்பா ஊக்கம் தரல் வேண்டும்’ என்ற தலைப்பில் தொடராகப் பத்திரிகை ஒன்றில் கவிதை எழுதியது ஞாபகம் இருக்கிறது. அவர் அப்போது அரபு மத்ரஸா ஒன்றில் ஓதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

கல்விக்கூடங்களை விட அரபு மத்ரஸாக்களே முக்கியம் எனக் கருதிய சமூகம் தத்தமது பிரதேசங்களில் அவற்றை உருவாக்க ஆரம்பித்தது, ஆலிம்கள் வெளிவர ஆரம்பித்தார்கள். ஆயினும் ஒவ்வொரு பிரதேசத்திலும் மரியாதைக்குரியோராகக் கருதப்பட்ட லெப்பைகள் தாமாக ஓய்வு பெற்ற பிறகே ஆலிம்கள் மிம்பர்களில் ஏற ஆரம்பித்தார்கள். ஒரு சில இடங்களில் இதற்கு மாற்றமாகவும் நிகழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் கூட அவர்களில் பெரும்பான்மையோரது மொழிப் பயன்பாடு சிலாகிக்கத்தக்கதாக இருக்கவில்லை. உயர்திணை, அஃறிணை தெரியாதவர்களாகவும் வார்த்தைகளைச் சரிவர முடித்துக் கொள்ள முடியாதோராகவும் அவர்கள் இருந்தனர். அதே நேரம் மிகவும் அற்புதமாக மொழியைப் பயன்படுத்தவும் எடுத்த தலைப்பில் சரியாகவும் அனைவரையும் கொள்ளை கொண்டு கட்டிப் போடக் கூடியோராகவும் ஒரு சிலர் இருக்கவே செய்தனர். இதற்கு உதாரணமாக மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களைக் குறிப்பிட முடியும். அவரது பேச்சின் கவர்ச்சிக்கும் விசால அறிவுக்கும் சிறந்த மொழி நடைக்கும் காரணம் அவரது இடையறாத வாசிப்பு. அவரது வீட்டில் ஒரு நூலகமே இருந்தது.

பழைய நிலை இன்று மாற்றம் பெற்ற போதும் காலப் போக்குக்கேற்ப
ஆலிம்களில் ஒரு தொகுதியினர் தமது பாணிகளை மாற்றிக் கொள்ளாமலே
இருந்து வருகின்றனர். இது குறித்துச் சமூக ஊடகங்களில் மிகக் கடுமையான
விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் கூட தாம் நபிமார்களின்
வாரிசுகள் என்ற மிடுக்குக் கலையாமல் தாம் செய்வது சரி என்ற போக்கில்
அவர்கள் நடந்து கொள்வது கவலைக்குரியது.

உண்மையில் ஆலிம்களுக்கு இன்றும் - இன்னும் சமூகம் மரியாதை செலுத்தியே வருகிறது. அந்த கண்ணியத்தைச் செலுத்திய படியேதான் அவர்களது குத்பாக்கள் பற்றிய கருத்துக்களும் முன்வைக்கப் படுகின்றன. உண்மையில் பொதுமகன் நல்ல உபந்நியாசத்தைச் செவிமடுக்கும் ஆர்வத்தில் பள்ளிவாசல் வருகிறான். தொடர்ந்தும் அவன் ஏமாற்றமடையும் போது அது விமர்சனமாக மாறுவது தவிர்க்க முடியாதது.

இன்று மார்க்க விளக்கங்களைப் பொது மகன் ஒருவன் பெற்றுக் கொள்ளப் பல புதிய வழிகள் உருவாகி விட்டன. அறிவினைப் பெறுகின்ற புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒரு கடமை நிமித்தம், வணக்கம் நிமித்தம் பள்ளிவாசல் வரும் ஒரு பொதுமகன் நல்லதொரு பிரசங்கத்தைச் செவிமடுக்க விரும்பும் போது அவனது எதிர்பார்ப்பு பற்றிய எவ்வித அக்கறையும் அற்றவையாக ஆங்காங்கே குத்பாக்கள் அமைந்து விடுவது பெரும் சோகம்.

;”ஒரு வயோதிபர் இருந்தாராம். அவர் அவருடைய வாலிப வயதிலிருந்தே ஹஜ் செய்து கொண்டு வந்தாராம். அவர் ஒவ்வொருமுறை ஹஜ் செய்த பின்பும் அவருடைய ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் வருமாம். இவ்வாறு 50வது முறை ஹஜ் செய்த பிறகுதான் அவரது ஹஜ்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வானத்திலிருந்து சப்தம் வந்ததாம்.” இப்படி ஓர் ஆலிம் குத்பா பிரசங்கம் செய்ததாக மிக அண்மையில் கிபாரி முகம்மத் என்ற சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைக் குறிப்பிட்டு விட்டு அவர் செய்திருந்த விமர்சனத்தை இங்கே நான் தவிர்த்திருக்கிறேன். இது ஒரு சாதாரணப் பதிவுதான். இதைவிடக் கடும் கோபத்துடன் பலர் பதிவுகளை இட்டிருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் இங்கே எடுத்தாள்வது பொருத்தமானதாக இருக்காது.

கடந்த ஜூலைமாதம் எனது முகநூல் பக்கத்தில் குத்பாக்கள் பற்றி நான் எழுதிய குறிப்பு இது:-

“ஜம்இய்யத்துல் உலமா சபை குத்பாப்பிரசங்கம் நிகழ்த்தும் ஆலிம்களுக்குப் பின்வரும் முக்கிய விடயங்களைத் தெரிவிப்பது நல்லது. 1. ஒரே தலைப்பில் ஒரே விடயத்தை மாத்திரம் பேசுவது. 2. மொழியைச் சரியாகப் பயன்படுத்துவது. 3. 20 முதல் 30 நிமிடங்களில் பிரசங்கத்தை நிறைவு செய்வது. 4. ஒலிபெருக்கி என்பது நமது சாதாரண குரல் ஒலியை பெரிய அளவில் வெளிப்படுத்தக் கூடியது என்பதை அறிவுறுத்துவது. 5. ஜத்பு ஏறாமல் பார்த்துக் கொள்வது.

உண்மையில் குத்பா உரை நிகழ்த்தும் ஆலிம்களுக்கு மொழிசார், உரைசார் தகையாளர்களைக் கொண்டு பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். ‘நாங்கள் சரியாகவே சொல்லுகிறோம். மார்க்கம் சொல்லும் உரிமையும் அதிகாரமும் எங்களுக்கேயுரியது. எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அவர்கள் கருதினால் பொது வெளிகள் விமர்சனங்களால் நிறைவதைத் தவிர்க்க முடியாது போகும். அது அழகும் அல்ல.

எனது முகநூல் பதிவுக்குச் சிலர் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை இட்டிருந்தனர். அதில் ஒரு சகோதரி இட்டிருந்த பின்னூட்டம் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது!

எனது குறிப்பில் அடுத்ததான நான் சொல்லியிருக்க வேண்டியது என்ற வகையில் ‘கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே நரகவாதிகள் என்ற அடிப்படையில் துள்ளாமலிருப்பது!” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.