ஜீரணமாகாத உணவு வயிற்றில் அவஸ்தையை ஏற்படுத்துவது போல சிந்தையின் நிம்மதியை அவ்வப்போது கலைத்துப் போட்டுக் கொண்டேயிருக்கிறது ராஜேஸ்வரி அக்காவின் இழப்பு.
ராஜேஸ்வரி அக்காவுடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றியது மட்டுமல்ல, புத்தி தெரிந்த காலம் முதல் அவரது குரலையும் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்ததும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
அக்காவிடம் பல விசேட தன்மைகள் இருந்தன. நல்ல முன்மாதிரியான பண்புகள் இருந்தன. இவையும் அக்காவை உறவுகளில் ஒன்றாக மனது வரித்துக் கொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.
அக்காவிடம் எப்போதும் ஒரு Perfection ஐப் பார்த்து வந்திருக்கிறேன். அவரது அறிவிப்பு, நடிப்பு, உடை, உணவு, மற்றோருடனான உறவு - இவையெல்லாவற்றிலுமே அந்த முழு நிறைவு இருந்து வந்திருக்கிறது. இதை இன்னும் சொல்லப் போனால் அவரது எல்லா நடவடிக்கைகளிலுமே ஒரு நறுவிசுத் தன்மையும் அழகும் இருந்திருக்கிறது.
நல்லதை மனந்திறந்து பாராட்டுவது அவரது நற்பண்புகளில் ஒன்று. சிறப்பான ஒரு செயலை ஒரு சிறியவர், இளையவர் செய்தால் பெரியவர்கள் பெரும்பாலும் அதைக் கண்டு கொள்வதில்லை. அவ்வாறு பாராட்டுவதற்கு மிகப் பரந்த மனம் வேண்டும். அது அக்காவிடம் இருந்தது. பாராட்டுவதோடு மட்டும் அவர் நின்று விடுவதில்லை. அதை மற்றவர்களிடமும் எடுத்துச் சொல்வது அந்நற்பண்பின் உச்சம்.
ஓர் இரவுச் செய்திக்குப் பிறகு நான் வாசித்த மரண அறிவித்தலில் ‘அழகு மீனாள்’ என்றொரு பெயர் வந்தது. அடுத்த நாள் என்னைக் கண்ட வேளை, “அழகு மீனாள் எப்படியிருப்போளோ தெரியவில்லை... ஆனால் நீ அதை உச்சரித்த விதத்தில் அவள் பேரழகியாக என் மனதில் பதிந்து விட்டாள்” என்று சொன்னார். இதை ஒரு முறை சொன்னதோடு அவர் நிறுத்தி விடவில்லை. அவ்வப்போது சொல்லி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். இதுதான் எங்கள் அன்பான ராஜேஸ்வரி அக்கா!

