Showing posts with label fish head curry - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label fish head curry - ashroff shihabdeen. Show all posts

Thursday, April 7, 2011

தலைக்கறி மான்மியம்

தலைக்கறியில் எனக்கு ரசனையை ஏற்படுத்தி உசுப்பேற்றி விட்டவன் ரவீந்திரன்.


“அண்ணை... உங்களுக்குத் தெரியுமா... மீன் தலை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது, கொலஸ்ட்ரோலையும் கட்டுப்படுத்தலாம்” என்கிற மேலதிக வைத்தியத் தகவலையும் சேர்த்துத் தலைக்கறியின் ருசியை அவன் விளக்கிய போது நாக்கில் ஜலம் ஊறியது. அப்படித்தான் அவன் சொன்னான்.

திணைக்களத்தில் என்னோடு கடமை செய்த ரவீந்திரன் தகவல்களை அச்சொட்டாகச் சொல்லுவான். எங்கள் குழுவில் அவன் வயதில் குறைந்தவன் என்ற போதும் எதையும் சுவையாகவும் உரிய சொற்களையும் பயன்படுத்திப் பேசத் தெரிந்தவன் என்பதால் ஒரு சமவயதுத் தோழனாகவே இருந்தான்.

முதன் முதலாக மீன் தலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் நான் ஒரு பெரிய சிக்கலை எதிர் நோக்கினேன். என்னைத் தவிர வேறு யாரும் அந்தக் கறியில் கரிசனை காட்டவில்லை. வீட்டிலுள்ள ஏனையவர்கள் தமக்கென வேறு கறி ஆக்கிக் கொள்ள நான் தலைக் கறியில் புகுந்து விளையாடுவேன். ஒரு பெரிய மீன் தலையை நான் மட்டும் சாப்பிட்டாக வேண்டியிருந்தமையாலும் அதன் ருசியில் என்னை மறந்திருக்க வேண்டியிருப்பதாலும் சாப்பிட உட்காரும் போது ஒரு போர் வீரனைப் போல் அல்லது ஒரு விளையாட்டு வீரனைப் போலத் தயார் பண்ணிக் கொண்டே களத்தில் இறங்குவேன். சாப்பிட்டு முடியும் வரை உலகத்தின் எல்லாத் தொடர்புகளை விட்டும் என்னை அறுத்துக் கொள்வேன். போனில் என்னை யாரும் அழைத்தாலும் அதற்கு நான் பதில் சொல்வதில்லை என்றால் என் ஏற்பாடுகள் எப்படியிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.