Showing posts with label mannar amuthan - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label mannar amuthan - ashroff shihabdeen. Show all posts

Sunday, April 3, 2011

அக்குரோணி

மன்னார் அமுதனின்


அக்குரோணி

கவிதை நூல் - ஒரு கண்ணோட்டம்
 
பத்து வார்த்தைகளில் நம்முடன் பேசும் ஒரு நல்ல கவிதை நம்மில் ஏற்படுத்தும் சிந்தனைகளை எழுதுவதற்கும் அதனை நயந்து பேசுவதற்கும் பத்தாயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. வாசகனின் சிந்தனையை எவ்வளவு தூரத்துக்கு ஒரு கவிதை பரத்தி விசாலித்துச் செல்கிறதோ அந்தளவுக்கு அந்தக் கவிதை சிறப்புப் பெற்று விடுகிறது. நாம் படித்த ஒரு நல்ல கவிதையின் சில வரிகள், சில வார்த்தைகள், அதன் ஞாபகங்கள் இன்னும் நம் மனத்துள் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்றால் அது அந்தக் கவிதைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும் கிடைத்து விட்ட வெற்றி என்று தயங்காமல் சொல்லி விடலாம்.


ஒவ்வொரு நல்ல கவிதைக்கும் அழகான உடலும் உற்சாகமான உறுப்புகளும் தெளிவான பேச்சும் நளினம் கொண்ட கவர்ச்சியும் அமரத்துவம் பெற்ற சுவாசமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அவ்வாறாக கவிதைகள் ஒரு போதும் மறக்கப்படுவதுமில்லை, மரித்துப்போவதும் இல்லை. அவற்றை ஒளித்து வைக்கவும் முடிவதில்லை, ஒழித்துக் கட்டவும் முடிவதில்லை. அவை சாகா வரம் கொண்டு சாசுவதமாக வாழும் வரத்தைத் தாமாகவே பெற்றுக் கொள்வதுடன் தன்னைப் படைத்த கவிஞனையும் காலாதி காலத்துக்கும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. இதைத்தான் “எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று கண்ணதாசன் குறிப்பிட்டார்.

இவ்வாறான கவிதைகளை இப்போதெல்லாம் நாம் காண்பது அரிது என்பதை நீங்களும் நானும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நமது கவிதைகள் இந்த நிலைக்குக் கீழேதான் இருக்கின்றன. அதில் எந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் சரியாக இருக்கும் என்றால் என்றாவது ஒரு நாள் ஓர் அற்புதமான கவிதையை நாம் படைத்து விடுவோம். அந்த ஒரேயொரு கவிதையில் நாம் வாழ்ந்து கொண்டேயிருப்போம். இங்கே புரிதல் என்று நான் குறிப்பிடுவது என்னவென்றால், நான் எழுதுவது கவிதையா அல்லது கவிதையைப் போன்றதா - எனது மொழி நான் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்கு உகந்ததா, இல்லையா - நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் கவிதையின் உயிர் தங்கியிருக்கிறதா இல்லையா - மற்றொருவர் இதை எழுதியிருந்தால் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்குமா இல்லையா - கவிதைக்குத் தேவையற்ற வார்த்தைகள் இதில் அடங்கியிருக்கின்றனவா இல்லையா - எனக்குக் கவிதை வருமா இல்லையா - நான் வலிந்து எழுதுகிறேனா ஓவர் பில்டப் கொடுக்கிறேனா - போன்ற விடயங்களில் ஒவ்வொரு படைப்பாளியும் தெளிவடைந்திருக்க வேண்டும்.