Wednesday, December 5, 2012

இலக்கிய ஆய்வகத்தின் ஒன்றுகூடல் - 2


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் இரண்டாவது ஒன்றுகூடல் கடந்த 01.12.2012 - ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.30க்கு வெள்ளவத்தை, 42வது லேன் இலக்கம் 31ல் அமைந்துள்ள பிரின்ஸ் அகடமியில் ஆய்வகத்தின் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.


கௌரவ. பஷீர் சேகுதாவூத் பா.உ.

“போருக்குப் பின்னரான முஸ்லிம் அரசியலில் மாற்றம் அவசியாமா?” எனும் தலைப்பில் கௌரவ. பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் உரை நிகழ்த்தினார். இலங்கைத் தமிழர் அரசியலின் அடியொற்றியே இலங்கை முஸ்லிம்களின் அரசியல்பாதை ஆரம்பமானது என்று குறிப்பிட்ட அவர் இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மையுடன் ஒட்டி உறவாடியே தனது அரசியலை மேற்கொண்டு வந்தது என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களோடு இணைந்து தமது தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டனர், இலங்கைத் தமிழர்களோ அரசுகளை எதிர்த்துத் தமது அரசியலை வடிவமைத்தனர்” என்று வேலுப்பிள்ளை பிரபாகரன் சொன்னதை ஞாபகப்படுத்தினார்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போக்கை சேர் ராஸிக் பரீத் அவர்கள் நிருபர் ஒருவரது கேள்விக்கு அளித்த பதில்மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், “எப்போதும் ஆட்சியாளர்களுடனேயே இருக்கிறீர்களே ஏன்?” என்று நிருபர் கேட்ட வினாவுக்கு சேர். ராஸிக் பரீத் அவர்கள், “நான் ஒரேயிடத்தில்தான் இருக்கிறேன், அரசுகள்தாம் மாற்றமடைகின்றன” என்று சொன்னதைச் சுட்டிக் காட்டினார்.

இலங்கை முஸ்லிம் அரசியல் குறித்து வெளிப்படையாக மனந்திறந்து தமது கருத்துக்களை அவர் தெரிவித்தார்.



அவரது உரையைத் தொடர்ந்து ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் அவர்கள் முஸ்லிம் படைப்பாளிகளின் போர்க்கால இலக்கியம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இலங்கையில் போர் நடந்த காலப்பிரிவில் வெளிவந்த முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மிக ஆழமான ஓர் உரையை அவர் நிகழ்த்தினார்.

குறிப்பிட்ட நபர்களே கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் பேச்சாளர்கள் தவிர்ந்த 40 பேர் நிகழ்வில் கலந்து கொண்டனர்


உரைகள் முடிவடைந்ததும் உரைகளையொட்டிய வினாக்கள் கலந்து கொண்டாரால் எழுப்பப்பட்டுப் பேச்சாளர்களால் பதில்கள் வழங்கப்பட்டன. கேள்வி பதில் கலந்துரையாடல் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு மேல் நடபார்ந்த முறையில் இடம்பெற்றது.

இரண்டு பேச்சாளர்களதும் உரைகள் பார்வையாளர்களால் விதந்துரைக்கப்பட்டமையானது நிகழ்வின் வெற்றியை எடுத்துக் காட்டியது.


மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 7.45 மணியளவில் சங்கத்தின் உப செயலாளர் நியாஸ் ஏ சமத் அவர்களது நன்றியுரையுடன் இனிதே முடிவடைந்தது.

அடுத்த ஒன்றுகூடலை எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

படங்கள் - முஜிபுர்ரஹ்மான்  மற்றும் கே. பொன்னுத்துரை.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: