Monday, April 8, 2013

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2013


எஸ்.எச்.எம். ஜமீல், கௌரவ. எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கௌரவ ரவூப் ஹக்கீம்.

இவ்வருடம் இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றை நடத்துவது பற்றிய கலந்துரையாடல் முழுநாள் நிகழ்வாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று 07.04.2013 அன்று கொழும்பு - 2 “தாருஸ்ஸலாம்” கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாடு பற்றிய அங்குரார்ப்பணக் கலந்துரையாடல் காலை அமர்வாக நடத்தப்பட்டது.


வரவேற்புரை நிகழ்த்தும் மணிப்புலவர் 
மருதூர் ஏ. மஜீத்

சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்தும் சகல முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புக்களை ஒன்றிணைத்தும் இம்மாநாட்டை நடத்துவது என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது தலைமையுரையில் குறி்ப்பிட்டார்.

இதற்காக அமைச்சர் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலை இலக்கிய  அமைப்புகளின்  ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக அஷ்ரஃப் சிஹாப்தீன் செயற்படுவார் என்றும்  நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கலை இலக்கிய அமைப்புகளின் தலைவர், செயலாளர்கள் இதன் அங்கத்தவர்களாக இயங்குவார்கள் எனவும் எதிர்கால ஒருமித்த இலக்கியச் செயற்பாடுகளையும் சமூக ரீதியான விடயங்களையும் இந்த அமைப்பு முன்னெடுத்துச் செல்லும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


தலைமையுரை நிகழ்த்தும் கௌரவ. ரவூப் ஹக்கீம்

இந்த அமைப்பின் பிரதித் தலைவர்களாக கௌவர. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் (அமைச்சர்). கௌரவ ரிஷாத் பதியுதீன் (அமைச்சர்), கௌரவ பஷீர் சேகுதாவூத் (அமைச்சர்) கௌரவ அல்ஹாஜ் ஏ.எச்எ.ம். அஸ்வர் (பா.உ) அவர்களும் உப தலைவராக கௌரவ ஹஸன் அலி (பா.உ) அவர்களும் செயற்படுவார்கள்.

மாநாட்டின் செயலணிக் குழுவின் தலைவராக டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் செயற்படுவதோடு குழுவில் மருதூர் ஏ. மஜீத், டாக்டர் தாஸிம் அகமது, கவிஞர் ரவூப் ஹஸீர், கவிஞர் அல் அஸூமத், என்.எம். அமீன், திருமதி புர்க்கான் பீ. இப்திகார், மர்ஸூம் மௌலானா, எம்.ஏ.எம். நிலாம், கவிஞர் யாழ் அஸீம், இம்ரான் நெய்னார் ஆகியோர் உள்ளடங்கியிருப்பார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர், இக்குழுவில் இன்னும் ஒரு சிலர் காலக் கிரமத்தில் ஒப்புதல் பெற்று இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு பொறுப்புக்களுக்கான குழுக்களில் மேலும் சிலர் ஒப்புதல் பெறப்பட்டு உள்வாங்கப்பட்டபின் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் அதன் பிறகு தமது பணிகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்தார். எதிர்வரும் தமிழ், தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் பின் குழுக்கள் அழைக்கப்பட்டுத் திட்டமிடற் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.


கௌரவ. எம்.எஸ்.எஸ். அமீர் அலி

கௌரவ. ரிஷாத் பதியுதீனின் பிரதிநிதியாக வருகை தந்த முன்னாள் அமைச்சரும் இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி உரையாற்றுகையில்,

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து செயற்படுவது அவசரமும் அவசியமுமாகும் என்றும் அதை கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களே முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு, அரசியல்வாதிகள் மாத்திரம்தான் சமூக விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்றிராமல் படைப்பாளிகளும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.


கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்

பேராசிரியர். கலாநிதி எம்.எஸ்எம். அனஸ் அவர்கள் தமதுசிறப்புரையில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட இனரீதியாக எதிர்கொண்ட சவால்களைக் கருப்பொருளாகக் கொண்டு காத்திரமான நாவல்கள் எதுவும் படைக்கப்படவில்லை என்றும் முஸ்லிம் சமூகம் இன்னும் தனது வரலாற்றைப் பதிவு செய்வது குறித்து எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்


கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன்


மௌலவி கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் தமதுரையில் முஸ்லிம் சமூகத்தில் உயர்கல்வியில் ஈடுபடும் போது ஒரு குறிப்பிட்ட துறைகளிலேயே ஈடுபடுவதாகவும் பரந்து பட்ட துறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


அஷ்ரஃப் சிஹாப்தீன்

மாநாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றிய குறிப்புக்களையும் விபரங்களையும் அஷ்ரஃப் சிஹாப்தீன் தெளிவுபடுத்தினார். நவீன இலக்கியங்கள், புதிய வடிவங்கள் பற்றியெல்லாம் வெறுமனே கதைத்துக் கொண்டிருப்பதால் எதுவும் ஆகாது என்றும் முஸ்லிம் படைப்பாளிகளின் நவீன இலக்கியப் படைப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதன் மூலமே அவற்றை மேலெடுத்துச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

முதலாவது அமர்வுக்கு கிழக்குமாகாண சபை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமத், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், கிழக்குமாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

இந்த உரையுடன் அமர்வு - 1 நிறைவு பெற்றது. லுஹர் தொழுகையுடன் மதிய உணவுக்காக இடைவேளை விடப்பட்டது.


கௌரவ ஹஸன் அலி (பா.உ)

இரண்டாம் அமர்வு பி.ப. 2.15க்கு கௌரவ. ஹஸன் அலி (பா.உ) தலைமையில் ஆரம்பமானது. சகல இலக்கிய அன்பர்களும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்கக் கோரிய அவர் மாநாடு பற்றிய கருத்துப் பரிமாறல்களை ஆரம்பித்து வைத்தார்.


கவிஞர் ரவூப் ஹஸீர்

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்ற மாநாட்டுத் தலைப்புச் சரியானதா அல்லது அதை மாற்றியமைக்க வேண்டுமா என்பது பற்றிய முதற்கருத்தை கவிஞர் ரவூப் ஹஸீர் முன்வைத்தார்.


கவிஞர் நவாஸ் சௌபி

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்ற தலைப்பு ஏன் பொருத்தமற்றது என்பதை ஏராளமான ஆதாரங்களை முன் வைத்து ஒரு சிறந்த சட்டத்தரணியின் ஸ்டைலில் தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்தார் கவிஞர் நவாஸ் சௌபி. அவருடைய வாதாட்டமும் அவர் அதை சபை முன் எடுத்து வைத்த விதமும் பலரையும் பெரிதும் கவர்ந்திருந்தது.


முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளர்
எம்.பி. ஹூஸைன் பாருக்


கவிஞர் மௌலவி காத்தான்குடி பௌஸ்


கவிஞர் ஜெஸ்மி எம்.மூஸா


முஸ்தீன்

நவாஸ் சௌபியின் கருத்தைத் தொடர்ந்து எம்.பி. ஹூஸைன் பாருக், காத்தான்குடி பௌஸ், ஸூல்பிகா ஷரீப், ஏ.எம்.நஹியா, கவிஞர் ஜெஸ்மி எம்.மூஸா, செல்வி டீன்நூர், ரஷீத் எம்.இம்தியாஸ், அகமட் முனவ்வர், முல்லை முஸ்ரிபா, மேமன் கவி, எம்.சி. நஜிமுதீன், முஸதீன் ஆகியோரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.


இறுதியாக கலந்துரையாடலின் முடிவுரையை கௌரவ ரவூப் ஹக்கீம் நிகழ்த்தினார். நன்றியுரையை எம்.ஏ.எம். நிலாம் வழங்க ஸலவாத்துடன் பி.ப். 5.15க்கு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

(படங்கள் அனுசரணை - சிம் புரடக்ஷன் முஸ்தீன்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: