Monday, April 15, 2013

உங்களுக்கான கேள்விகள்!



முப்பது ஆண்டு களாய் முக்கு ளித்த ரத்தத்தில்
மூச்சடங்கிப் போகவில்லையா - உங்கள்
மூர்க்கம் இன்னும் தீரவில்லையா?

எப்போது தீரும் என்று ஏக்கங் கொண்ட நெஞ்சங்களை
ஏமாற்றும் வஞ்சம் இல்லையா - இனியும்
இந்நாட்டில் அமைதி இல்லையா?


நடுக்கடலில் மிதந்திடினும் நாலு மதம் கொண்ட மக்கள்
நண்பரென வாழ்ந்ததி்லலையா - இங்கு
நன்மைகள் விளைந்ததில்லையா?

துடுக்குத் தனத்தோடு நின்று துவேசத்தைக் கக்கிநிற்றல்
துரோகமென்று தெரியல்லையா - நாடு
தூளாகிப் போகுமில்லையா?


குட்டக் குட்டக் குனிவதற்கு குரங்குகளே யானாலும்
விட்டுக் கொடுக்காது அல்லவா? - அதனை
விதியெனக் கொள்ளா தல்லவா?

மட்டுப்பட்டு வாழ்ந்த நிலை மலேயேறிப் போயிற்றென்று
மண்டைக்குள் ஏறவில்லையா - உம்
மனச்சாட்சி பேசவில்லையா?


உள்வீட்டுச் சண்டைகளால் உண்டான வேதனைகள்
உள்ளத்தைச் சுட்டதில்லையா - உமக்கு
உண்மைகளே புரிவதில்லையா?

எள்ளாக இருந்திடினும் எல்லோரும் பகிர்ந்து கொண்டால்
இன்பம் ஒரு கோடியல்லவா - எல்லாத்
துன்பங்களும் ஓடுமல்லவா?


தட்டுக்கெட்டு நடந்து தறிகெட்டு அழிவதனை
தர்மம் புறக் கணிக்கவில்லையா - அதைத்
தவிர்ப்பது நலமில்லையா?

விட்டுக் கொடுத் தோம்பி விரல்களைக் கோப்பதில்
விட்டழியும் வெறுப்பு இல்லையா? - விகற்பங்கள்
வேரறுந்து போகுமில்லையா?


அறங்களைப் போதிப்பவர் அறநெறி பிறழ்வது
அவமான மாகுமில்லையா? - அது
அவலத்தைத் தருமில்லையா?

புறத்திலே புண்ணியமும் போர்வைக்குள் புன்மையுமாய்
புகல்வது வெட்கமில்லையா? - நன்மை
அகல்வது துக்கமில்லையா?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: