Sunday, May 17, 2015

வில்பத்து - மறிச்சிக்கட்டி


வில்பத்து!... முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கான வில்லங்கமும்
மரிச்சிகட்டிக்கு மடித்துக் கட்டிச் சென்ற தென்னிலங்கை இனவாதமும்
-----------------------------------------------------------------------------------------------------
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வில்பத்து என்ற இந்த இரு விடயங்களையும் ஒன்றாக முடிச்சுப் போட்டு வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை போடுவதற்கு இன்று தென்னிலங்கை சிங்கள சக்திகள் ஒன்றுபட்டுள்ளன. தேசிய வனத்தை அழித்து முஸ்லிம் பிரதேசம் ஒன்றினை வடக்கில் உருவாக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் திட்டமிட்டுள்ளார் என்ற சோடிக்கப்பட்ட அபாண்டங்கள் இன்று சிங்கள இனவாதிகள் மத்தியில் நிதர்சனமாக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குற்றசாட்டுகளுக்கு, அனைத்துக்கும் ஒரு கை ஓசையாக நின்று பதிலளித்து, நியாயத்தை எவ்வளவுதான் விளக்க அமைச்சர் ரிஷாத் முயன்றாலும் அது தென்னிலங்கையில் தோற்கடிக்கப்பட்ட ஒன்றாகவும் காதுக்கு எட்டாத கணக்கெடுக்கப்படாத விடயமாகவும் மாறியுள்ளது.
அமைசச்ர் ரிஷாத் பதியுதீனுக்கு இந்த அரசாங்கம் பயந்து செயற்படுகிறது என பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார தேரர் பகிரங்கமாகவே கூறி இந்த விடயத்தில் அரசாங்கத்தை சூடேற்ற முயற்சித்துள்ளார்.

முஸ்லிம்களின் சிறிதான மீள்குடியேற்றம் வில்பத்து சரணாலய பகுதிக்கு வெளியில் வில்பத்து சரணாலயத்தின் எல்லையாக மோதரகம ஆற்றுக்கு அப்பாற்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது. மாறாக, வில்பத்துவின் எல்லைக்குள் சட்டவிரோதமாக யாரும் மீள்குடியேற்றப்படவில்லை என அரசாங்க அதிபரான சிங்களவர் ஒருவர் தெரிவித்தும் கூட நம்பாமல் விடாப்பிடியில் நிற்கும் இவர்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுவதனைக் கேட்டு, ஏற்று ஆறுதல் அடைவர் என்று நம்புவதற்கும் நியாமும் இல்லைதான்.

அத்துடன் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சரான பஷில் ராஜபக்ஷவும் இது தொடர்பில் சில விடயங்களை தெரிவித்துள்ளார். வில்பத்து மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டது. வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கப்பட்டது, இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை. தற்போது சிலர் தமது இனவாதச் செயற்பாட்டுக்காக இவ்விவகாரத்தை தூக்கிப் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கு வாழ்கின்ற மக்களுக்கு தலா அரை ஏக்கர் காணி வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அது தனியே முஸ்ஸிம்களுக்கு மாத்திரமல்ல. தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையும் மறைக்கப்பட்டு விட்டது.
இதற்கு மேலாக தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளும் பெளத்த பிக்குகளும் வில்பத்து பிரதேசத்துக்குச் சென்று அங்கு ஒன்றிரண்டாக காணப்படும் முஸ்லிம் குடும்பங்களை வெறுப்போடு பார்வையிட்டு வருகின்றனர். அவர்களது பார்வை காட்டுவாசிகளைக் கண்டு நோக்குவது போன்று கடுப்பாக உள்ளது.

வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு போன்ற பகுதிகளுக்கு சிஹல உறுமய, ராவணபலய, ஜே.வி.பி கட்சிகளைச் சேர்ந்தோர் மட்டுமின்றி பிக்குமாரும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்வையிடுகின்றனர். வன ஜீவிராசிகளை அல்ல.. முஸ்லிம்களைத்தான்.அங்கு செல்வோர் மக்களிடம் உரையாடாமல் புத்தர் சிலை ஒன்றை எங்கு வைப்பதென தங்களுக்குள்ளேயே கலந்தாலோசித்து வருவதாகவம் கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தெரிவித்திருந்தார். அதாவது, தான் ஜனாதிபதியாக பதவியேற்று இதுவரையும் தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தை ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தியதாக கூறியிருந்தார். அதுவும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பிலேயே தான் இவ்வாறு தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்தாக கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வில்பத்து தொடர்பில் அவரது கவனத்துக்குக் கொண்டு வந்து உடனேயே அதனைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட பின்னரே ஜனாதிபதியினால் இவ்வாறானதொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காகவே இன்றைய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதே இதன் மறைபொருள். இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம்தான்.

ஆனால், இந்த நாட்டு முஸ்லிம்கள் காட்டுவாசிகள் அல்லர். காட்டில் வாழும் தேவை அவர்களுக்கு இல்லை. வடபுல முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மிகவும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வசதி வாய்ப்புடனும் வாழ்ந்தவர்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் எதனையும் அடாத்தாகப் பிடித்து வாழவில்லை என்பதனை ஜனாதிபதி அவர்களும் எதிர்பபுச் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் வடமாகாண செயலணியினாலேயே வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு வாழ்விடம் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசத்துக்குள் உட்பட்டவை அல்ல. அந்தப் பணிகளே இன்று வரை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்கப் போவதாகவும் வெளிநாட்டு முஸ்லிம்களையும் அங்கு குடியமர்த்த முயற்சிப்பதாகவும் கூறுவது இட்டுக்கட்டப்பட்ட அபாண்டம்.

இது ஒரு புறமிருக்க, வடபுல முஸ்லிம்கள் பிரச்சினை என்றால் அதனை ரிஷாத் பதியுதீனே பார்த்துக் கொள்ளட்டும் என்ற ஒரு மனப் போக்கு ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காணப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த விடயம் இப்போது பூதாகாரம் பெற்றுள்ள நிலையில் மற்றயை தரப்புகளால் மௌனம் சாதிக்கப்படுவதுதான் இந்தக் கேள்விக்கு காரணமாகிறது இந்தப் பிரச்சினை என்பது ரிஷாத்துடன் தொடர்பானது என மேலெழுந்தவாரியாக நோக்குவது தவறு. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையையும் தேசிய பிரச்சினையாகவே கருதி அனைவரும் செயற்பட வேண்டும்.

மலையக தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்க் கட்சிகளும் அவர்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றன. களத்துக்குச் சென்று காரியம் செய்கின்றன. அதேபோன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மலையக அரசியல் தலைமைகள் குரல் கொடுக்கின்றன. களத்தில் நிற்கின்றன. இதுதான் இன ஐக்கியம் என்பது.

சிங்களவர்களை எடுத்து நோக்குங்கள் அவர்களுக்குள் கட்சி, அரசியல் என பல பிரச்சினைகள், வேறுபாடுகள் உள்ளன. ஆனால், தங்கள் இனம், உரிமை என்று வரும்போது அனைவரும் ஒன்றாக ஐக்கியப்பட்டு விடுகிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, முஸ்லிம்கள் இவ்வாறானவர்களின் பேச்சுகளை நம்பி விடக் கூடாது. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையில் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து ஆக வேண்டிய காரியங்களை ஆற்றுவதே இன்றைய அவசரம்.

எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பங்களிப்பு மிக முக்கியம். இந்த விடயத்திலட அவர் தனது கவனத்தையும் செலுத்தி செயற்படுவாரானால் வடபுல முஸ்லிம்கள் வாழ்வில் நிச்சயம் நிம்மதி ஏற்படும் என்றே நம்பலாம்.

இதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது, வில்பத்துவில் குடியேற்றங்கள் எதுவும் இல்லை என்று. ஆம் அதுதான் உண்மை. ஆனால், சம்பிக்க ரணவக்க இவ்வாறானதொரு கருத்தைக் கூறியதற்காக ஏதோ அவரைப் பாராட்டலாமே தவிர உள்ளார்த்தமாக அவரைப் பாராட்ட முடியாது.

ஏனெனில் முஸ்லிம்களுக்கு அண்மைக் காலங்களில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான பிதா மகன் அவர்தான். பொதுபல சேனாவுக்கு முன்னரேயே இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நூல்களை, எழுதி நச்சுக் கருத்துகளை விதைத்தவர் சம்பிக்கதான. இவரது இனவாத நூல்களைப் படித்ததன் காரணமாககே சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைக்க ஆரம்பித்தனர். மர்ஹும் மாமனிதர் அஷ்ரஃபினையும் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் கடந்த காலங்களில் எவ்வாறு இந்த சம்பிக்க ரணவக்க விமர்சித்தார் என்பது தெரிந்த விடயம்.அக்கரைப்பற்று நுரைச்சோலை திட்டத்தை நிறுத்தியதன் சூத்திரதாரிகளில் இவரும் பிரதானமானவர்தானே?
நன்றி வீரகேசரி வாரவெளியீடு (17-05-2015)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: