Wednesday, November 4, 2015

பிறைப் பாட்டு

 - 30 -

சில காலங்களுக்கு முன்னர் தூரத்தில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர் 'பிறைப்பாடல்' என்றால் என்ன என்று தொலைபேசி மூலம் வினவினார். எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

கல்வியமைச்சு வருடாவருடம் நடத்தும் கலாசாரப் போட்டிகளுக்குள் முஸ்லிம் பாடசாலைகளுக் கிடையிலான கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக அது குறிப்பிடப்பட்டிருந்தது. உரிய அமைச்சில் உரிய பிரிவைத் தொடர்பு கொண்டும் நண்பருக்குச் சரியான தகவலைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை. மீண்டும் அவர் என்னைத் தொடர்பு கொண்ட போது கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்குமாறு நண்பரைக் கேட்டுக் கொண்டேன். கல்வி, கலாசார அமைச்சின் நுண்கலைப் பிரிவில் அவர் ஒரு குறிப்பிட்ட காலம் இருந்ததை நான் அறிவேன்.

வில்லிசைப் பாடலின் முஸ்லிம்களுக்கான வடிவமே பிறைப்பாடல் என்பது பின்னால் தெரியவந்தது.

களுத்துறை மாவட்ட அஹதியா பாடசாலைகளுக்கிடையிலான மார்க்க மற்றும் கலாசாரப் போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகிக்கச் சென்ற போது அவர்கள் 'பிறைப்பாடல்' நிகழ்ச்சியையும் போட்டிக்காக அறிவித்து நடத்தியிருந்தார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இப்போட்டியில் கலந்து கொண்ட போதும் சமகால மத்திய கிழக்கு அரசியலை வைத்து, முழுக்கவும் மாணவிகளை வைத்து நடத்தப்பட்ட பிறைப்பாடலை நாங்கள் தெரிவு செய்தோம். மிகச் சரியான மாணவியைத் தலைவியாகக் கொண்டதோடு மட்டுமன்றி பாடுவதற்குப் பொருத்தமான மாணவிகளையும் கொண்டு அந்நிகழ்ச்சி தயார் செய்யப்பட்டிருந்தவும் நிகழ்ச்சியின் கருப் பொருளும் மத்தியஸ்தர்களைக் கவர்ந்திருந்தன.

கடந்தகால வில்லிசைப் பாடலின் போக்கு ஒரு மனச் சந்தோஷத்தை ஏற்படுத்தக் கூடியதான நகைச்சுவைப் பாங்கிலேயே பெரும்பாலும் அமைந்திருந்தன என்று அறிவேன். மேற்படி பாடசாலை மாணவிகளின் நிகழ்ச்சியின் மூலம் பிசிறடிக்காத, அபஸ்வரம் இல்லாத பாடல் திறமை கொண்டு எவ்வகையான ஒரு கருப் பொருளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பது புரிய வந்தது.

கவிஞர் அப்துல்காதர் லெப்பை அவர்களின் 'செய்னம்பு நாச்சியார் மான்மியம்' ஒரு மனமகிழ்வுக் காவியம்.  இது உண்மையில் ஒரு நெடுங் கவிதை. அதிகாரத்தைக் கையில் கொண்ட பெண் செய்னம்பு நாச்சி. இந்தக் கவிதை 1969ம் ஆண்டு வில்லிசைப் பாடலாகக் கொழும்பிலும் பின்னர் காத்தான்குடியிலும் மேடையேற்றப்பட்டதாக கலாநிதி அனஸ் குறிப்பிடுகிறார்.

70களின் நடுப்பகுதியில் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் வில்லிசைப் பாடல்கள் களைகட்டியிருந்தன. காத்தான்குடியில் சாந்தி முகைதீன் குழுவினரும் ஏறாவூரில் அஜ்வாத் ஆசிரியர் குழுவினரும் பல வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்துள்ளார்கள். வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை நேரில் காணும் வாய்ப்புக் கிடைக்காத போதும் அஜ்வாத் ஆசிரியரின் 'மொட் பொடியன் மோறு லெவ்வை', 'ஃபைல் புத்தகம் பறந்து போகுது தலைக்கு மேலாலே..!' ஆகியவற்றை ஒலி நாடாக்களில் கேட்டு ரசித்து மகிழ்ந்ததுண்டு. இந்த ஞாபகம் உந்தித் தள்ள சில மாதங்களுக்கு முன்னர் ஏறாவூர் சென்றிருந்த நான் அஜ்வாத் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து அவரை இலக்கிய மஞ்சரிக்காக நேர்காணல் செய்து வந்தேன்.

ஒரு விடயத்தை, ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நாடகத்தைப் போலவே சிறந்த கலை வடிவம் பிறைப் பாட்டு. ஆனால் இந்த அம்சம் வருடாந்த பாடசாலைப் போட்டிகளில் மட்டுமே உயிர்வாழ்வது கவலைக்குரியது.

கிராமங்கள் நகரங்களாக உருமாறி வருகையில் மனிதர்களும் தங்களை மாற்றிக் கொண்டே வருகிறார்கள். அன்றைய கால அயல் மனிதனுடனான உரையாடலும் அந்நியோன்னிய உறவும் அற்றுப் போய் எல்லோரும் தனித் தனித் தீவுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருக்கும் உறவுகள் கூடக் கணினியோடும் ஆளுக்கொரு ஸ்மார்ட் கைப் பேசியுடனும் தனித் தனியே அமர்ந்திருந்து தமது உலகத்தைச் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதம் சார்ந்த உறவுகள் மரித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு கிராமத்து மனிதனின் விகடப் பேச்சு, நடத்தை, உலகில் நடக்கும் வழமைக்கு மாறான நிகழ்வுகள், சினிமா, பாடல் ஆகியவற்றைத் தமது நவீன கருவிகள் மூலம் பார்த்துத் தனியே அமர்ந்து ரசிப்பதில்தான் தமது பொழுதைப் பலர் கழிக்கிறார்கள். சிலவேளை அவற்றை மற்றவர்களோடு அனுப்பிப் பகிர்ந்தும் மகிழ்கிறார்கள்.

ஒரு சமூதாயத்தின் கலாசாரம், பண்பாடுகள் ஆகியன அவர்தம் கலை வடிவங்களில்தான் வாழுகின்றன. ஆனால் நமக்கான கலை வடிவங்கள் குறித்து நாம் எவ்வித அக்கறையும் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகிறோம். உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் கலை வடிவங்களை நமக்குரிய முறையில் மாற்றியமைத்து சமூகமாற்றத்துக்கும் வழிகாட்டலுக்கும் பயன்படுத்துவதை விடுத்து அவற்றை மார்க்க முரணான அம்சங்களாகச் சித்தரித்துக் கொண்டு மார்க்க முரணான அம்சங்களைக் கணினியிலும் கைத் தொலைபேசியிலும் பார்த்தும் கேட்டும் இரசித்து மகிழ்கிந்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் கேலிக் கூத்தையும் கூட ஒரு சிறந்த பிறைப்பாட்டாகக் கொண்டு வர முடியும். கலாசாரம், பண்பாடு என்பது ஆடைகளிலும் கோலங்களிலும் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதையும் முரணான எதையும் முரணற்றதாக மாற்றிக் கொள்வதற்கு முடியும் என்பதையும் முதலில் பிறைப்பாட்டிலேயே சொல்லி விடலாம்.

வில்லிசையயானது பிறைப்பாடலாக மாற்றம் பெற்றிருப்பதும் இதையே சுட்டிக்காட்டுகிறது!

நன்றி - மீள்பார்வை
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: