Sunday, September 2, 2018

நல்லா பிராண்ட் தரட்டுமா?


டாக்டர் ஹாலித் முகம்மத் புகாரி

உங்களுக்கு வைத்தியரிடம் இருந்து வெளியே பாமசிகளில் வாங்குமாறு எழுதித்தரப்படும் சிட்டையைக் காட்டியதும் பாமசிகளில் கேட்கப்படும் பிரதான கேள்வி இதுதான் !

அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா? அல்லது  அத்தோடு
இந்த மருந்து பழையது அதைவிட சிறந்த புதியமருந்து ஒன்று வந்திருக்கின்றது தரவா?

இவ்வாறான கேள்விகளுக்கிடையில் வைத்தியர்களை பரிகசிக்கவோ அல்லது வைத்தியர்களின் தரத்தை கீறிக்கிழிக்கவோ உள்ள சில வசனங்களும் கூட பொருத்தப்படலாம்.

அனேகமாக ஏன் இந்தக்கேள்வி உங்களிடம் கேட்கப்படுகின்றது?

அப்படியாயின் பாமசிக்காரருக்கு தெரிந்த அந்த நல்ல பிராண்ட் டொக்டருக்கு தெரியாதா?

ஒரு கதை சொல்லி விடுவோம்.

ஒரு கடுங்குளிர்காலம் காலையில் ஒரு வயதுக்குழந்தையுடன் ஒரு தாய் எனது வீட்டிற்கு வந்தார்.

சரியான இருமல், தடிமல் டொக்டர். இரவையில தூங்குறாரும் இல்ல. கடும் கஸ்ட்டமாயிருக்கு !

பரிசோதித்துவிட்டு மூன்று வகையான மருந்துகள் எழுதிக்கொடுத்தேன் அதில் ஒன்று பிரிட்டன் சிரப்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் அதே தாய் அக்குழந்தையுடன் எனது கிளினிக்கிள் வருகிறாள். இருமல் தடிமல் கொஞ்சம் குறைந்திருக்கின்றது. தூக்கம் தான் இல்லை என்றார். அவருக்கும் தூக்கம் இல்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

சரி நான் தந்த மருந்தை தாருங்கள் என்றேன் அவர் அதை தயங்கித்தயங்கி தந்தார். அதில் நான் எழுதிய பிரிட்டன் பாணி இருக்கவில்லை. ஏன் நான் எழுதிய அந்த பிரிட்டன் பாணி வாங்கப்படவில்லை என்று கேட்ட்டேன் .
அதற்கு அவர், இல்ல டொக்டர் அது நீங்க தந்த பிரிட்டன் பாணிய விட  புதுசா ஒரு மருந்து வந்திருக்குதாம் தடிமல் இருமலுக்கு. அந்தமாதிரி மருந்தாம், புது மருந்தாம். பிரிட்டனை விட கடும் நல்லமாம் என்று லொரட்டிடீன் என்ற சிரப்பை காட்டினார்.

இல்லம்மா தடுமல் இருமலுக்கு நல்லமருந்து என்றதோட சேர்த்து பிள்ளை பிரிட்டன் மருந்துக்கு நல்லா தூங்கட்டும் எண்டுதான் நான் பிரிட்டன் சிரப்பை தந்தேன். எனக்கு லொரட்டிடீன் சிரப் தர தெரியாமலா உம்மா நான் உங்களுக்கு பிரிட்டன் சிரப் தந்தேன் என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

இல்ல டொக்டர் ஹஸ்பண்ட்தான் வாங்கி வந்திட்டாரு. எனக்கு தெரியும் டொக்டர் மன்னிச்சிருங்க.

இல்லம்மா, அதெல்லாம் பராவல்ல இந்தாங்க பிரிட்டன் சிரப் இதையும் சேர்த்துகுடுங்க. புள்ள நல்லாதூங்கும். இருமலும் 4 அஞ்சி நாளைல சரியாகிடும் என்று அனுப்பிவைத்தேன் .

நான் கொடுத்த பிரிட்டன் சிறப் 48 ரூபாய். பாமசியில் கொடுக்கப்பட்ட லொரட்டிடீன் சிரப் மட்டும் 300 ரூபாவிற்கு மேல்!.

ஒரு டொக்டர் உங்களுக்கு மருந்து தரும் போது பல விடயங்களை கவனமெடுப்பார் .

உங்களது நோயின் தன்மை, உங்களுக்கு உள்ள மற்ற நோய்களின் தன்மை, உங்களது வயது, உங்களது கிட்னி, ஈரல் போன்றவற்றின் செயற்பாட்டின் அளவு, தரப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் அதன் தேவைகளும் (உதாரணமாக நான் மேலே கூறியது போல் பிரிட்டனின் பக்கவிளைவு சிறிது தூக்கத்தை ஏற்படுத்தல்)  நீங்கள் கருவுற்றிருக்கிறீர்களா? குழந்தைக்கு பாலூட்டுகிறீர்களா? உங்களது அன்றாட செயற்பாடுகள் ( பிரயாணம், பரீட்சை,  நுணுக்கமான வேலைகள்) போன்ற மேலும் பல காரணங்களோடு உங்களது சமூக பொருளாதார நிலையை முக்கியமாக கவனத்தில் எடுத்தே ஒருவைத்தியரால் உங்களுக்கு மருந்து தரப்படும் .

ஆனால்இ அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா! எனக்கேட்கும் நபரோ மேலுள்ள எந்த விடயங்களிளும் பொருத்தமான அறிவைக் கொண்டிருப்பவராக இருக்கமாட்டார். ஏனெனில் தாம் செய்வது இலங்கையில் தடை செய்யப்பட்ட  தண்டனைக்குறிய குற்றமாகும் எனத்தெரிந்துகொண்டு அதன் பாரதூரங்களை அறியாமல் தன் சுயநலத்திற்காக ஒரு குற்றமிழைக்கும் குற்றவாளியே அவர். எமது நாட்டின் சட்டத்தின் ஓட்டைகள் மட்டும் இல்லாவிட்டால் அல்லது வெளிநாடு ஒன்றில் என்றால் கனகாலம் கம்பி எண்ணும் ஒருவராய் இருப்பார்.

இவர்களது அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா என்று கேட்பதற்கான காரணங்கள் பல..

1-விலைகூடுதலான மருந்துப்பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடுதல்

2-அவர்களுக்கு சிறப்பு கொமிசன், சலுகைகளை வழங்கும் மருந்துகளை உங்களுக்கு தள்ளி விடுதல்

3-இலாபம் கூடுதலான மருந்துவகைகளை உங்களுக்கு புகட்டி விடுதல்.

4-ஸ்டொக் அதிகமாக எடுக்கப்பட்ட மருந்துகளை குறைத்துக்கொள்ளல்.

5-திகதி காலாவதியாகும் மருந்துகளை முன்கூட்டி தீர்த்துவிடல்.

6-நீங்கள் கேட்ட அந்த மருந்து அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டியும் சில புனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் டொக்டரை விட தமக்கு நிறைய விடயங்கள்தெரியும் என்ற தனது மூளையின் மகுடிக்கு ஆடுபவர்கள்.

அத்தோடு சிலர் மெடிக்கல் ரெப் சொல்லுவதையெல்லாம் நம்பி, மக்களுக்கு நல்லதைக்கொடுக்க போராடும் தியாக செம்மல்கள்

கவனம்
அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா !

என்பது உங்களுக்கு, அல்லது உங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தாய் முடியலாம்.

அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா ! என்ற
இவ்வாறான குழப்பங்கள் தோன்றினால் உங்கள் வைத்தியரிடம் கலந்தாலோசித்து முடிவை எடுங்கள்!

02

எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாதவிடத்து எந்த 
வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப் பொருளைக்கொண்ட வேறு 
பிராண்ட் பாவிக்கலாமா?

பாமசிகளை குறைகானும் எந்த நோக்கமும் தேவையும் எனக்கில்லை.

எனது நோக்கம் அப்பாவி மக்களுக்கு அறிவூட்டுவதே ஒழிய குற்றம் இழைக்கும் பாமசிக்காரர்களை வம்புக்கிழுப்பதோ, அல்லது அவர்களுடன் யார் அறிவாளி என்று மோதுவதோ, அல்லது அவர்களை திருந்தச்சொல்வதோ, அல்லது அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோ நோக்கம் அல்ல அதை இறைவனும், சட்டமும் பார்த்துக்கொள்ளட்டும்

உங்களுக்கு யாராவது பாமசி நடத்தும் நன்பர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள்.  அங்கே நடக்கும் அநியாயங்களை, கொள்ளையைப்பற்றி நான் சொல்பவை உண்மையா இல்லையா என விளங்கும். சிலர் பாமசிகளில் நடக்கும் இக்கொடுமைகளை அவர்களது வியாபார தந்திரம் என்று தற்புகழ்ச்சி அடைந்துகொள்வர்.

இலங்கை போன்ற சட்டம் காலுக்கு கீழ் போட்டு மிதிக்கப்பட்டாலும் எதுவும் நடந்துவிடாத நாட்டில், பெரும்பாலான பாமசிகள் ஆங்கில மருத்துவத்திற்கு ஒரு கேடு என்றே சொல்லமுடியும். ஆனால் மிகச்சிறந்த நம்பிக்கையான பாமசிக்களும் மிகச்சிறந்த விடய அறிவுடைய பாமசிஸ்ட்களும் டிஸ்பென்சர்களும் இல்லாமல் இல்லை.

பாமசிக்களில் நடக்கும் திருகுதாளங்கள் எல்லாவற்றையும் பற்றி நான் கதைக்க வரவில்லை அவ்வாறு கதைக்கபோனால் ஒரு பெரும் புத்தகம் எழுதும் அளவு திருகுதாளங்களால் நிரம்பி வழிகின்றது சில பாமசிக்கள் இவைத்தியரினால் எழுதப்படும் வெளிச்சிட்டைகளில் என்னவெல்லாம் நடக்கும் எனத்தான் சொல்லவருகின்றேன் இ எப்படியெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதே எனது இன்றைய தலைப்பு.

ஆங்கில மருந்துகள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்ய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை(யேவழையெட (National Medicine Regulatory Authority) பல சட்டங்களை இயற்றி அதனை மீறினால் கடும் தண்டனைகளையும் பிரேரித்திருக்கின்றது. ஆனால் இச்சட்டங்கள் மீறப்படாத பாமசி ஒன்றை இலங்கையில் தேடிக்கண்டுபிடித்தல் மிகக்கடினமானது.

கதை ஒன்றைச்சொல்லிவிடுவோம்...

2016ஆம் ஆண்டில் கொழும்புக்கு வேலைமாற்றம் பெற்று வந்து விட்டேன். வந்ததன் பிற்பாடு எந்தவொரு பிரைவட் கிளினிக் செய்வதிலிருந்தும் பிரைவட் ஹொஸ்ப்பிட்டலில் வேலை செய்வதிலும் ஈடுபடவில்லை.(காரணங்கள் மிகப்பல பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்) அதனால் தேவைப்படும் மருந்துகளை பாமசிக்களில் வாங்கிக்கொள்வேன்.

அன்று வீட்டில் ஒருவருக்கு கால்வலிக்கு பாவிப்பதற்காக டைக்குளொபெனக் எனும் வலிமாத்திரை தேவைப்பட தெமட்டகொட வீதியில் உள்ள ஒரு பாமசிக்கு சென்றேன் (அங்கே நான் டொக்டர் என்று தெரியாது) .
டைக்குளொபெனக் டெப்லட் ஒரு கார்ட் தாங்க என்றேன். அதிலும் நான் ஒரு பிராண்டைச்சொல்லிக்கேட்டேன் அது இல்லை என்று வேறு ஒரு பிராண்ட் இருப்பதாகவும், நல்லபிராண்ட் என்றும் ஏதோஒரு நாட்டின் பெயரையும் சொன்னார். எவ்வளவு என்று கேட்டேன் ஒரு டெப்லட்டின் விலை மாத்திரம் 80 ரூபாய். நான் கேட்ட பிராண்ட் ஒரு டெப்லட்டின் விலை ஒரு ரூபாய் கூட இல்லை. சரி விலைகுறைந்த பிராண்ட் ஒன்றும் இல்லையா என்றேன். இது தான் எங்களிடம் தற்போது உள்ள விலை குறைந்த பிராண்ட் என்றார்.
வேண்டாம் என்று விட்டு வேறு பாமசிக்கு சென்றுவிட்டேன்.

இந்த பாம்சிக்காரர் எவ்வாறு சட்டத்தை மீறுகிறார் என்று பாருங்கள்..

1- நான் கேட்ட உடனே டொக்டரின் சிட்டை இல்லாமல் எனக்கு மருந்தை தரமுற்படுகிறார் (மிகவும் ஒரு தண்டனைக்குரிய குற்றம். போதைமாத்திரைகளின் ஆதிக்கத்துக்கு வழிகோளியது இதுவே)

2- வேறு ஒரு பிராண்ட் இருக்கின்றது என்று அவரது விலைகூடிய மருந்தை என்னில் திணிக்கப்பார்க்கிறார் (உண்மையில் அவ்வாறு இல்லாவிடில் நான் கேட்ட அதே பிராண்டின் விலையை என்னிடம் சொல்லவேண்டும். அத்தோடு அவரிடம் உள்ள மற்ற அதே இரசாயன மருந்தின் பிராண்ட்களின் விலைப்பட்டியலை தரவேண்டும். அதில் ஒன்றை நான் தேர்வுசெய்ய இடமளிக்கவேண்டும்)

3- டைக்குளொபெனக் போன்ற ஓரு அவசியமான மருந்தின் பொதுமருந்து வகையை  (Generic medicine) தமது பாமசியில் வைத்திருக்காமல் விலைகூடியவகை மாத்திரை ஒன்றைமட்டும் வைத்திருத்தல்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சட்டம் 2015-5 , சரத்து 56 இன் படி ஒரு வைத்தியர் ஒரே ஒரு இரசாயனப்பொருள் கொண்ட ஒரு மருந்தின் பொதுப்பெயரையே (Generic name) எழுதவேண்டும். இங்கே அவர் விரும்பினால் அந்த இரசாயனத்தைக்கொண்ட தான் விரும்பும் பிராண்ட் (Brand name)  ஒன்றை குறிப்பிட முடியும். அவ்வாறு பிராண்ட் எழுதப்பட்டிருந்தால் இங்கே பாமசிக்காரர் இதை விட சிறந்த பிராண்ட் இருக்கின்றது தரவா எனக்கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பிராண்ட் இருக்குமிடத்து அவர் அதை தரவேண்டியது கடமை. அந்த பிராண்ட் இல்லாவிடில், எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் அதே இரசாயன மருந்தை மாத்திரம் கொண்ட மற்ற ஏதாவது பிராண்டை உங்களின் விருப்பத்தோடு தரமுடியும். ஆனால் அவர் தன்னிடமுள்ள மற்றய ப்ராண்டுகளினதும்  இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினதும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனத்தைக்கொண்டுள்ள மற்றய பிராண்டுகளினதும் விலைகளை உங்களுக்கு தெரிவித்து அதில் உங்களை தெரிவு செய்யச்சொல்லலாமே ஒழிய பாமசிக்காரர்கள் இது நல்லது இதை எடுங்கள் என்று உங்களை கட்டாயப்படுத்தவோ அல்லது உங்களை மடக்கவோ முடியாது. அவ்வாறு செய்யமுற்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒன்றுக்குமேற்பட்ட இரசாயன மருந்துகளின் கலவையைக் கொண்டுள்ள மாத்திரைகளை அல்லது மருந்துகளை எழுதும் போது வைத்தியர்கள் இவ்விரசாயனப் பெயர்களைக்கொண்ட பொதுப்பெயர்களை (Generic name) எழுதவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிராண்ட் பெயரைமட்டும் எழுதினாலே போதுமானது. இவ்வாறான நிலைகளில் குறித்த பிராண்டைத்தவிர வேறு எதையும் பாமசிக்காரர் தருவது குற்றமாகும்.

இதே மருந்தில் வேறு பிராண்ட் தருகிறோம் என்று விட்டு அதையொத்த ஆனால் இரசாயன ரீதியில் வேறுபட்ட மருந்துகளை தந்து விடுவதில் தான் பாமசிக்காரர்கள் உங்களை ஏமாற்றிவிடுகிறார்கள்.

எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாதவிடத்து எந்த வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப்பொருளைக்கொண்ட வேறு பிராண்ட் பாவிக்கலாமா?

இப்போது நீங்கள் ஆம் என்ற விடையை தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள்

(வைத்தியரின் முகநூல் குறிப்புகள்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: