(ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான எனது செவ்வி)
சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் இவ்வருடம் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7ம் திகதி இம்மாநாடு சம்பந்தமான எழுத்தாளர் ஒன்று கூடலும் கலந்துரையாடலும் கொழும்பு - 2 வொக்ஷோல் லேனில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்மகாநாடு பற்றி அவருடன் நடத்திய நேர்காணலை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
- அனா
கேள்வி:- கடந்த 7ம் திகதி நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் கலந்துரையாடலுக்கு சிலர் அழைக்கப்படவில்லை என்று அறியக் கிடைக்கிறது... ஏன் அப்படி நடந்தது?
பதில்:- கடந்த 6ம் திகதியிலிருந்துதான் எனது பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இருந்த போதும் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் தங்களால் முடிந்த வரை முகவரிகளைத் தேடி அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்கள். அழைப்பிதழ் அனுப்பப்பட்ட பட்டியல் எம்மிடம் உள்ளது. ஏறக்குறைய 300 பேருக்கு மேல் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தன. சிலருக்கு உரிய வேளையிலும் சிலருக்குத் தாமதமாகவும் கிடைத்திருக்கலாம். பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட பின்பும் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார்கள். சிலரது முகவரிகளோ தொலைபேசி எண்களோ கிடைக்காதமையால் அழைப்பிதழ் அனுப்பத் தவறியிருக்கலாம். அவர்களுக்குச் செய்தி சென்று சேரும் விதமாக இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் இடம்பெற்றிருந்தன.
கேள்வி:- 6ம் திகதிதான் இணைந்து கொண்டதாகக் கூறினீர்கள்? ஏன் அப்படி?
பதில்:- சர்வதேச மாநாடு என்பது புத்தக வெளியீட்டு விழா நடத்துவது மாதிரி அல்ல. அது மிகக் கடுமையான பணி. நாம் முதலில் 2002ல் நடத்திய மாநாட்டுக்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆக பத்து வருடங்கள் வயது கழிந்து விட்டது. இது ஒரு சிரமமான காரியம். எனவே ஒதுங்கியிருந்து ஆதரவு வழங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆய்வரங்கொன்றில் ஒரு கட்டுரை சமர்ப்பிப்பதுடன் என்னுடைய பங்கை மட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்றிருந்தேன். அத்துடன் இந்த மாநாடு ஒற்றைப்பரிமாண அரசியலுக்குள் சிக்கியிருப்பதாகவும் ஒரு எண்ணம் மனதில் இருந்தது.
ஆனால் கௌரவ. அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் என்னை அழைத்து இம்மாடு பற்றி வெகு தெளிவாகச் சில விளக்கங்களை வழங்கினார். சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைப்பதுடன் சகல முஸ்லிம் கலை இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைப்பது என்பன போன்ற சமூக ஒற்றுமைக்கு வழிகோலும் முனைப்பை வெளிப்படுத்தினார். எனவே யாரும் ஒதுங்கிச் செல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அவரது நல்லெண்ணம் எனக்கு உவப்பாக இருந்தது.
எல்லா முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைத்து தொடர்ந்து இலக்கியத்திலும் சமூக நலன்கருதும் தளத்திலும் செயற்படுவோம் என்றும் அவர் தலைமை வகிக்க ஏனைய முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்கள் பிரதித் தலைமை வகிக்க என்னைச் செயலாளராக இருந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். எனவே இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளின் ஒன்றியம்தான் இந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை முன்னெடுத்துச் செல்லும்.
கேள்வி:- ஆனால் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை அல்லவா?
பதில்:- தர்க்கத்துக்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இங்கே ஒன்றுபடுகிறார்கள் என்பது அவதானிக்கத்தக்கது. அப்படியே அரசியல் நலன் இருந்தாலும் கூட ஓர் இலக்கியவாதி என்ற முறையில் இலக்கியத்தை முற்படுத்தும் ஒரு பெருவிழாவுக்கு ஒத்துழைப்பது முக்கியமல்லவா? ஒத்துழைக்காவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கியிருப்பது மேல் அல்லவா?
பாருங்கள்.. 1979ல் இவ்வாறான ஒரு மாநாடு நடந்தது. அப்போது அல்ஹாஜ் பாக்கிர் மாக்கார் துணை நின்றார். அது முடிந்து இருபத்து மூன்று வருடங்கள்.. ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்குப் பிறகு இந்த மண்ணில் ஒரு மாநாடு நடந்தது. அதுவும் உலகத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் ஒரு நாட்டு அரசின் அனுசரணையோடு நடந்த முதல் மாநாடு. அம்மாநாடும் கௌர. ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் நடந்தது. அதன்பிறகு பத்து வருடங்கள் சென்று விட்டன. இப்போதும் அரசியல்வாதிகளின் முன்னெடுப்பில்தான் நடைபெறுகிறது.
இந்த நாட்டு முஸ்லிம் புத்தி ஜீவிகளுக்கும், படிப்பாடிகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும், 'நீங்கள் மாநாட்டை நடத்துங்கள், நாங்கள் பொருளுதவி புரிகிறோம்' என்று எந்தச் செல்வந்தரும் உதவிபுரிந்தது கிடையாது. ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கான பெருந்தொகைப் பணத்தைத் திரட்ட அரசியல்வாதிகளால்தான் முடிகிறது. எனவே, இலக்கியப் படைப்பாளி என்ற வகையில் நமக்கு அவர்கள் பெரும் உந்துதலாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
கேள்வி:- ஏன் அரசியல்வாதிகள் இலக்கியத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்?
பதில்:- இதில் மூடிமறைத்த இரகசியம் எதுவும் இல்லை. இலக்கியவாதிகளே ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துதான் இருக்கிறார்கள். இந்த இலக்கியவாதிகள் எல்லோரும் இணைந்தாலும் கூட ஒரு பிரதேச சபை அங்கத்தவரைக்கூடத் தெரிவு செய்ய முடியாது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலக்கியவாதிகள்தாம் ஒரு சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் எழுதிச் செல்கிறார்கள் என்பதை நமது அரசியல்வாதிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு மெச்சத்தக்க நிலை. இன்னும் நூறு வருடங்கள் கழிந்த பிறகு நமது வாழ்வியல் எப்படியிருந்தது என்பதை இன்று படைக்கப்படும் இலக்கியங்களை அடிப்படையாக வைத்தே வரலாறு குறிப்பெடுக்கும். ஹன்ஸார்டை மாத்திரம் கொண்டு ஒரு சமூகக் குழுமத்தின் வாழ்வியலைத் தீர்மானிக்க முடியாது. வரலாற்றை எழுத முடியாது. இலக்கியம்தான் ஜீவனுடன் அதை எடுத்துச் சொல்லும்.
கேள்வி:- இன்று இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான சவால்களுக்குள் இம்மாநாடு அவசியம் என்று நினைக்கிறீர்களா?
பதில்:- அவசியம்தான். சவால்கள் ஏதோ ஒரு வகையில் எப்போதும் இருக்கவே செய்கின்றன. இதே சவால்களுக்கூடேதான் திருமணங்கள் நடைபெறுகின்றன... எல்லா வகையான அமைப்புகளும் கூட்டங்களை நடத்துகின்றன. விழாக்கள் நடைபெறுகின்றன. ஏன்? நாட்டில் போர்க்காலத்திலும் நாம் இதையெல்லாம் செய்தோம்தானே! எனவே, ஓர் இலக்கிய மாநாட்டையும் அது போலவே நடத்திச் செல்வதில் என்ன பிழை இருக்கிறது?
