Showing posts with label அஷ்ரஃப் சிஹாப்தீன். Show all posts
Showing posts with label அஷ்ரஃப் சிஹாப்தீன். Show all posts

Wednesday, February 26, 2020

ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் மிக அவசியம்!

ஒலி, ஒளிபரப்பாளர், கவிஞர், பன்னூலாசிரியர், கலைஞர் என்று பல் துறை ஆளுமையான அஷ்ரஃப் சிஹாப்தீன் அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கவிதைக்கான 'மகரந்தச் சிறகு' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருடனான நேர்காணல்.
நேர்கண்டவர் - நாச்சியாதீவு பர்வீன்

01. கேள்வி:

அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகம் - கவிக்கோ நினைவு - மகரந்தச் சிறகு விருதை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இது பற்றிய உங்களது எண்ண வெளிப்பாடு என்ன?

பதில்:
இது ஓர் உயர்ந்த விருது. அப்படித்தான் நான் இதனைக் கருதுகிறேன். அகில இலங்கை கம்பன் கழகத்தின் பார்வையும் அவதானமும் என் மீது விழுந்திருக்கிறது என்பதையே ஒரு பெரு மதிப்பாக நினைக்கிறேன். நுணுகி ஆய்ந்துதான் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த விருது எனக்குக் கிடைத்ததையிட்டு அதிலும் அவர்களது வெள்ளி விழா ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கம்பன் கழகத்துக்கும் அதன் உயிர் மூச்சாக இயங்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகம் என சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

02. கேள்வி:

இலக்கியத்தை நோக்கி உங்களை உந்திய காரணிகள் எவை?

பதில்:

எனது தாய் வழிப் பாட்டனார் ஒரு புலவராயிருந்தார். கிண்ணியா நாச்சிக் குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஒலுவிலில் திருமணம் செய்து ஓட்டமாவடியில் வாழ்ந்து வந்தார். அவர் மூன்று விடயங்களில் ஈடுபட்டார். ஒன்று, ஒரு குர்ஆன் மத்ரஸாவை நடத்தினார். இரண்டு, அறபு எழுத்தணியைக் கண்ணாடிகளில் எழுதி விற்பனை செய்து வந்தார். கண்ணாடியில் வலது புறமாக எழுத வேண்டிய அறபு எழுத்துக்களை அவர் இடது புறமாக எழுதினால்தான் அடுத்த பக்கம் சரியான முறையில் தெரியும் என்பதைக் கவனிக்க வேண்டும். மூன்றாவதாக, சிறு சிறு காப்பியங்களைப் படைத்தார், இஸ்லாமிய இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார், அவற்றை விற்பனை செய்தும் வந்தார். எனவே அவரது புத்தகங்களில்தான் அதுவும் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாடல்களை வாசிப்பதில் எனது ஆர்வம் மிகச் சிறிய வயதிலேயே ஆரம்பித்தது.

03. கேள்வி:

இலக்கியத் துறைக்குள் நீங்கள் நுழைந்த காலப் பிரிவு, அப்போதைய சூழல் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்:

1976ல் நான் பேருவளை ஜாமிஆ நளீமியாவுக்குள் மாணவனாக நுழைகிறேன். அங்கு நிறைய வாசிக்க முடிந்தது. சத்தியத் தீபம் என்னொறு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம். அக்காலப் பிரிவில் பலப்பிட்டி அரூஸ் அவர்கள் ஜூம்ஆ என்று ஒரு பத்திரிகை வெளியிட்டார். அதில்தான் எனது முதலாவது சிறிய வசன கவிதை வெளிவந்தது. இன்று அதைக் கவிதை என்று சொல்ல முடியாது. (அந்தக் காலத்து வசன கவிதைகள் இன்று கவிதைகளே இல்லை என்பது வேறு விடயம்) காலியைச் சேர்ந்த எம்.எச்.எம். ஹாரிஸ் அவர்கள் தமிழாசிரியர். இவர் ஆசிரிய கலாசாலைத் தமிழ் விரிவுரையாளராக இருந்த தமிழறிஞர். இவர்தான் மரபுக் கவிதையில் எதுகை மோனை சொல்லித் தந்தவர். மற்றொருவர் எனது வகுப்புத் தோழன் எம்.எம். முகம்மத். தேர்தல் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக இருந்தவர். அவர் ஒரு நல்ல மரபுக் கவிதைக் காரர். ஓசை நயத்தைக் கண்ணதாசனின் கவிதைகளில் கற்றேன்.

அக்காலத்தில் தினபதி பத்திரிகையில் 'தினபதி - கவிதா மண்டலம்' என்று ஒரு பகுதி. அதில் தினமொரு மரபுக் கவிதை வெளிவரும். 1977 இறுதிப் பகுதி அல்லது 78ன் ஆரம்பப் பிரிவில் எனது முதலாவது மரபுக் கவிதை அதில் பிரசுரமானது. அதில் கவிதை வரவேண்டுமாயின் அக்கவிதையை சிபார்சு செய்யவென்று சிலர் பத்திரிகையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த சிபார்சு இல்லாமலே எனது கவிதைகள் பிரசுரமாயின.

தொடர்பு சாதனங்கள், வசதி வாய்ப்புகள் என்று எதுவுமற்ற காலப் பிரிவு அது. நான் 17 வயது இளைஞன். லீவில் வந்தால் ஊரில் உள்ள இலக்கியவாதிகளோடுதான் உறவு இருந்தது. அவ்வேளை பிரதான இலக்கியவாதிகள் மூவர் இருந்தனர். வை. அகமத் அவர்கள் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் அறியப்பட்டவர். எஸ்.எல்.எம். ஹனிபா சிறுகதையாளர். ஓட்டமாவடி ஜூனைத் எனக்கு முன்பே கவிதைத் துறையில் ஈடுபட்டவர். அவருடைய நிறையக் கவிதைகள் பத்திரிகை, சஞ்சிகைளில் வந்திருக்கின்றன. இதற்கப்பால் யூசுப் ஆசிரியர், யூ.அகமட், எஸ்.எம்.தலிபா, ஓட்டமாவடி இஸ்மாயில் என்று சிலர் இலக்கிய ஆர்வத்துடன் இயங்கி வந்தார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு முந்திய தலைமுறையினர். எனக்குப் பிற்பாடு வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம். ஸதக்கா, வாழை மயில் (இஸ்மாயில்) ஆகியோர் கவிதை, கதை, பத்திரிகை, சஞ்சிகை என்று இயங்கி வந்தவர்கள். பின்னால்  எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், ஜிப்ரி ஹஸன், சல்மான் வஹாப், சல்மானுல் ஹாரிஸ் என்று ஒரு படை உருவாகியது. இதற்குள் சில பெயர்கள் ஞாபக மறதியால் விடுபட்டிருக்கலாம். இங்கே நான் குறிப்பிட்டவர்கள்  எனது இலக்கியத் தொடக்கத்தின் சற்று முன்னும் பின்னுமானவர்களாவர்.

இதற்கெல்லாம் அப்பால் ஒருவரை நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர்தான் பொது நூலகராக இருந்த சமத் நானா அவர்கள். நூலகத்துக்கு நல்ல நூல்களைக் கொள்வனவு செய்து வைத்திருப்பார். நல்ல நூல்களை எனக்குத் தெரிந்து வைத்திருந்து தருவார். எல்லாருக்கும் இரண்டு புத்தகங்கள்தாம் வழங்குவார். எனது வாசிப்பு வேகத்தைக் கண்டு எனக்கு மூன்று நூல்கள் தருவார். அவரை என்னால் மறக்க முடியாது.

04. கேள்வி:

உங்களது முதலாவது கவிதை தொகுதிபற்றியும், அதற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:

முதலாவது கவிதைத் தொகுதியான 'காணாமல் போனவர்கள்' 1999ல் வெளி வந்தது. இதில் இடம்பெற்ற இரண்டு கவிதைகளைத் தவிர ஏனைய அனைத்தும் 1978க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பெற்றவை. ஒரு நூலுக்கான கவிதைகளை 1984லேயே தொகுத்து வைத்திருந்தேன். ஆனாலும்  வெளியிடும் அளவு வசதி வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. பயிற்றப்பட்ட ஆசிரியனாக இருந்த நான் 1992ல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரம் பெற்ற அலுவலர் தெரிவுக்கான அகில இலங்கை ரீதியான பரீட்சையில் சித்தியடைந்ததுடன் 1993ல் அதில் இணைக்கப்பட்டேன். 1996 அளவில் எனது முதல் நூலைக் கொண்டு வந்திருக்கலாம். அப்போதும் அதுபற்றி ஆர்வம் இருக்கவில்லை.
1998ம் ஆண்டு எனது முதற்தொகுதியைக் கொண்டு வர பலவந்தப் படுத்தியவர்கள் இருவர். ஒருவர், மறைந்த கவிஞர் ஏ.ஜி.எம். சதக்கா. மற்றையவர் வாழைச்சேனை அமர் என்கிற அப்துல் ரகுமான். இதற்காகவே அவர்கள் ஊரிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டு வந்து ஒரு முழுநாளும் நின்று என்னை ஊக்கப்படுத்தினர். இதன் விளைவாக 1999ல் முதற் தொகுதி வெளியாயிற்று. என்னை மீண்டும் அவர்கள் இலக்கியத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் பின்னால் எழுதப்பட்ட அனைத்து எழுத்துக்களுக்குமான தோற்றுவாயை உண்டு பண்ணியவர்கள் அவர்கள் இருவரும்தாம்.  'காணாமல் போனவர்கள்' முதற்பதிப்பாக ஆயிரம் பிரதிகளும் இரண்டாம் பதிப்பாக அறுநூறு பிரதிகளும் வெளியிடப்பட்டன.

நாச்சியாதீவு பர்வீன் 

அங்கீகாரம் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? யாருடைய அங்கீகாரத்துக்காகவும் நான் எதையும் எழுதவில்லை. யாருடைய அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்ப்பவனும் அல்லன். இன்னின்னார் பாராட்ட வேண்டும், பல்லக்கில் ஏற்ற வேண்டும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. எனக்குக் கவிதை எழுதத் தோன்றினால் எழுதுகிறேன். கதை, கட்டுரை, பத்தி, மொழிபெயர்ப்புகள் - இவையெல்லாமே நானே தீர்மானித்து நானே எழுதினேன், எழுதுகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் எழுதுவேன்.

05. கேள்வி:

ஆரம்பத்தில் கவிதைக்கூடாக ஆரம்பித்த உங்களது இலக்கியப் பயணம் பத்தி எழுத்து, கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு  என்று இலக்கியத்தின் எல்லாத் தளத்திலும் பயணித்தது எவ்வாறு?

பதில்:
இதில் எந்த மாயமோ மந்திரமோ இல்லை. எனக்கு முன்னரும் கவிதையில் ஆரம்பித்து பல் துறைகளில் ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் கிடைக்கக் கிடைக்க அவனது தளம் விரிந்து செல்லும். சிலர் எனக்கு ஒரு துறையே போதும் என்று அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார்கள். இதுவும் வாலாயமாகும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் ஏளைய துறைகளுக்குள்ளும் கால் பதிப்பார்கள்.
சிறுவர் இலக்கியத்தில் ஈடுபட்டது எதிர்பாராமல் நடந்நதது. ரூம் டு ரீட் என்ற நிறுவனத்தில் தமிழ்ப் பிரிவில் கடமை புரிந்த ராஜா மகள் என அறியப்பட்ட லதா சிறுவர் இலக்கியம் பற்றிய பயிலரங்குக்கு அழைத்து இதில் ஈடுபட வைத்தவர். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நான் சொல்ல வேண்டும். இந்தியரான சுபீர் சுக்ளா என்ற பயிற்றுவிப்பாளர்தான் இந்தப் பயிலரங்கை நடத்தியவர். இந்திய கல்வியமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அவர். சிறுவர் இலக்கியத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர். கடந்த காலங்களில் ஈஸாப்பு நீதிக் கதைகள், தந்திரக் கதைகள் போன்றவற்றைச் சிறுவர்களுக்குக் கற்பித்தது பிழை என்று அவர் சொன்னார். தந்திரம், ஏமாற்று ஆகியவற்றைக் கதைகள் மூலம் இளம் பிஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும் முயற்சி மூலம் இலக்கை அடைவதைப் பற்றியே கதைகள் எழுதப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுடன் அதன் படி எழுதவும் தூண்டினால். ஆனால் துரதிர்ஷ்டமாக இன்று விற்பனைக்கிருக்கும் சிறுவர் கதைகள் இந்த நியமங்கள் அடிப்படையில் எழுதப்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பயிலரங்குக்குப் பின் நான் மூன்று கதைகளை எழுதினேன். சிறார்களுக்கென இலக்கியம் படைப்பது ஏனைய படைப்பாங்களைச் செய்வதை விட முற்றிலும் வேறு பட்டது, சவாலானது, சிரமம் மிக்கது என்பதே எனது கணிப்பாகும்.

06. கேள்வி:

இலங்கை அரசினால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற உயர் விருதான சாகித்திய மண்டலப்பரிசினை மூன்று தடவைகள் பெற்றவர் என்ற வகையில் அந்த விபரங்ளை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

பதில்:

முதல் விருது 'என்னைத் தீயில் எறிந்தவள்' என்ற எனது இரண்டாவது கவிதை நூலுக்கு 2009ம் ஆண்டு கிடைத்தது. இரண்டாவது விருது அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' நூலுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'பட்டாம் பூச்சிக் கனவுகள்' தொகுதிக்கு 2016ம் ஆண்டு கிடைத்தது.

இது தவிர, ஏனைய நான்கு நூல்கள் இறுதிச் சுற்றுக்குள் வந்த மூன்று நூல்களில் ஒன்றாக இடம்பிடித்துச் சான்றிதழ் பெற்றன. 2011ல் 'ஒரு குடம் கண்ணீர்', 2014ல் எனது சிறுகதைகளின் தொகுதியான 'விரல்களற்றவனின் பிரார்த்தனை', 2017ல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியான 'யாரும் மற்றொருவர் போல் இல்லை', 2018ல் எனது மூன்றாவது கவிதைத் தொகுதியான 'தேவதைகள் போகும் தெரு' ஆகியனவாகும்.

கேள்வி

07. இலங்கை இந்திய தமிழ் பரப்புக்கு பெரிதும் பரிச்சயமற்ற அரேபிய சிறுகதைகளை மொழி பெயர்க்கும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

என்னுடைய அவதானத்தின் படி உலகத்தை ஆகர்ஷிக்கும் இலக்கியப் படைப்புகள் லத்தீன் அமெரிக்க, அரேபிய, ஆபிரிக்க நாடுகளிலேயே வெளிவருகின்றன. அதிகமாகப் பேசப்படும் இலக்கியங்களாக இவையே இருக்கின்றன. தமழ் சூழலில் என்ன காரணம் பற்றியோ லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுமளவுக்கு, பேசப்படுமளவுக்கு அறபு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதுமில்லை, பேசப்படுவதுமில்லை.

அறபு மொழி இலக்கியச் செழுமையும் ஆழ வேருன்றிய இலக்கியச் சிறப்பும் கொண்டது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கவிதைகளை எழுதி கஃபா என்ற இறை ஆலயத்தில் தொங்க விட்டவர்கள் அவர்கள். கவிதையிலேயே பொருதிக் கொண்டவர்கள். கதையும் அப்படித்தான். ஆயிரத்தொரு அராபியக் கதைகள் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

மேற்கு நாடுகளில் குடியேறிய பல அறபு எழுத்தாளர்கள் ஆண்களும் பெண்களுமாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற மொழிகளில் அற்புதமான இலக்கியங்களைப் படைக்கிறார்கள். 1998லிருந்து லண்டனில் 'பானிபால்' என்றொரு சஞ்சிகை அறபு நாடுகளின் இலக்கியத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதை நிறுவியவர்கள் மார்கிரட் ஒபாங் என்ற பிரிட்டிஷ் பெண்மணியும் சாமுவேல் சிமோன் என்ற ஈராக்கிய எழுத்தாளருமாவர். இருவருமே முஸ்லிம்கள் அல்லர். தேடல்கள் மூலமே இவற்றை நான் அறிந்து கொண்டேன். எனவே அவற்றில் எனக்குப் புரிந்தவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்து மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். நான் மொழிபெயர்த்த சிறுகதை ஒன்றை எழுதியவர் ஜோக்ஹா அல் ஹார்த்தி. ஓமானைச் சேர்ந்த இப்பெண்மணியின் அறபு நாவல் ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேன் புக்கர் விருது பெற்றிருக்கிறது. ஓமானில் இருந்த வேளை நமது முன்னோடி எழுத்தாளர் மானா மக்கீன் அவரைச் சந்தித்ததாக அறிந்தேன்.

எனக்கு மொழிபெயர்ப்புக்கான நூல்களை வாங்கித் தரும் இருவர் லண்டனில் வசிக்கின்றனர். சட்டத்தரணி ஷர்மிலா ஜெய்னுலாப்தீன், ஒலிபரப்பாளர் ஷைபா அப்துல் மலிக் ஆகிய இருவருமே அவர்களாவர்.

அறபு மொழி துறைபோகக் கற்றவர்கள் அந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இது லாபமீட்டும் துறையல்ல. அறபு மொழியில் பாண்டித்தியம் பெற்று அரச பதவிகளில் இருப்பவர்களும் இவ்விடயத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. எல்லாருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனையவர்கள் அறபு நாடுகளில் வாழும் பணிப்பெண்களின் 'பாபா'வுக்குக் கடிதம் எழுதுவனுடன் தமது திறமையை மட்டுப் படுத்திக் கொண்டார்கள்.

எனது அறிவுக்கெட்டியவரை உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஷெய்க் ஏ.பி.எம். இத்ரீஸ், ஷெய்க் ஏ.சீ. மஸாஹிர் போன்றோர் சற்றுப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரியாமலும் வேறு சிலரும் இருக்கக் கூடும்.

Saturday, January 18, 2020

சோலைக்கிளியின் 'கப்புத் தென்னை' - நாடகம்


    சோலைக்கிளி பற்றிக் கேட்டால் முதலாவது அவர் ஒரு அசல் கவிஞர், இரண்டாவதும் அவர் ஒரு அசல் கவிஞர், மூன்றாவதும் அவர் ஒரு அசல் கவிஞர் என்றுதான் என்னால் சொல்லத் தோன்றும். அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவருடைய பேச்சும்கூட நகைச்சுவை ததும்பும் கவிதைத்தனமானதாகவே இருக்கும்.

    நாலாவதாகவும் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல நாடக எழுத்தாளர் என்பேன். கவிதைகளாலேயே அவர் பெயர்பெற்று விட்ட காரணத்தால் அவருக்குள் இருந்த நாடகாசிரியன் பற்றி பெருமளவில் யாரும் கவனித்ததில்லை.

    எண்பதுகளின் பிற்கூறில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சோலைக்கிளியின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாடகங்களில் நானும் நடித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நாடகங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது ஒலிநாடாவில் அவர் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த 13 நாடகங்களை ஓர் இறுவட்டாக எனக்குத் தந்தார். அவற்றுள் சில நாடாவில் இருக்கும்போதே மீள மீள ஒலிக்க விடப்பட்டிருப்பதால் ஒலியளவு மாறியிருந்தன.

    இவரது நாடகங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்த காரணத்தால் அதைப் பெற்று இறுவட்டிலிருந்து கணினிக்கு மாற்றி வைத்திருக்கிறேன். சில போது இலக்கிய மஞ்சரிக்காகவும் அவரது நாடகங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்தாண்டிருக்கிறேன்.

    ஒரு நூலை வாசித்து அது குறித்து எழுதுவதை விட ஒலிப்பதிவைக் கேட்டுக் குறிப்பெடுத்து எழுதுவது சிரமமான காரியம். அதை ஒரே மூச்சில் செய்து முடித்து விட முடியாது. நிறைய நேரம் தேவைப்படும். பொறுமையும் அவகாசமும் தேவை. இருந்த போதும் மனதில் எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாடகமாக எழுதி முடித்துவிடும் தீர்மானத்துக்கு வந்தேன்.

    'கப்புத் தென்னை' என்று ஒரு நாடகம். பொதுவாக தென்னை ஒற்றையாக நெடிதுயர வளரும். அபூர்வமாக மற்றொரு கிளை விடும் தென்னைக்குக் கப்புத் தென்னை என்று பெயர். ஆசிரியராகக் கடமையாற்றும் போது ஐம்பதாயிரம் ரொக்கம், நான்கு ஏக்கர் காணி, வீட்டுடன் திருமணம் செய்யும் பாருக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதும் கார் ஒன்றை வாங்கி ஓடினால்தான் கௌரவம் என்று நினைக்கிறான். எனவே மாமனாரிடம் உள்ள மீதி நான்கு ஏக்கர் காணியையும் தனக்குத் தர வேண்டுமென்று மனைவிடம் தினமும் சண்டை பிடிக்கிறான். தனக்கு மேலும் மூன்று சகோதரிகள் இருந்தும் தன்னிடமிருந்த எட்டு ஏன்னர் காணியில் பாதியை மூத்த பிள்ளை என்று தனக்குத் தந்ததை அவள் எடுத்துச் சொல்லியும் அது தனது பிரச்சனை அல்ல என்று வாதிடுகிறான் பாருக்.

    இதே வேளை பாருக்கின் தந்தையும் தாயும் அவனது வேண்டுகோள் நியாயமானது என்று மகன் பக்கம் நின்று பேசுகிறார்கள். மாமனாருடன் நேரடிப் பேச்சு முற்றி வீட்டை விட்டு வெளியேறுகிறான் பாருக். விவாக ரத்துக்குப் பின்னர் பாருக் வசதி வாய்ப்பான ஓரிடத்தில் காரொன்றை சீதனமாகப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். அவனது மனைவியும் மறுமணம் செய்து கொள்கிறாள். பாருக்கின் பிள்ளையுடன் சேர்த்து புதியவன் அவளை நன்றாக வாழ வைக்கிறான்.

    பாருக்கின் நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்து பாருக்கையும் அவனது தந்தையாரையும் சந்தித்து விட்டு பாருக்கின் முதல் மனைவி, அவளது தந்தையார் ஆகியோரைச் சந்திக்கும் காட்சியில்தான் பாருக் ஒரு காருக்காக எடுத்தது தப்பான முடிவு என்பதை அவர்களே சொன்ன வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறான்.

    பாருக் மனைவியுடன் சண்டையிட்டுத் தன் வீட்டுக்கு வந்ததும் - அவனுடைய தந்தையிடம், 'என்ன.. மகன் கோவிச்சுக்கிட்டு வந்துட்டாராமே..' என்று மற்றவர்கள் கேட்பதைப் பற்றி மனைவியிடம் சொல்லும் போது, 'ஒரு சின்னப் பெரச்சின எண்டா ஊரானுக்கு என்ன சந்தோஷமா இருக்குடா வாப்பா..' என்கிற இடமாகட்டும் - பாருக்கின் தாயார் கணவனிடம் சம்பந்தி குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'மாப்புள கேட்டு வரக்குள்ள கருகின வாழப்பழத்தக் கொண்டாந்த குடும்பம்தானே அது..' என்று சொல்லும் இடமாகட்டும் - வெளிநாட்டிலிருந்து வந்த பாருக்கின் நண்பரிடம் தனது புதிய மருமகளைப் பற்றிச் சொல்லும் போது, 'அவ ஒரு ஊத்தக் கிடா.. தலைக்கி எண்ணெய் வெக்காளுமில்ல.. குளிக்காளுமில்ல..' என்று சொல்லுமிடமாகட்டும் நம்மையறியாமல் சிரிப்புப் பீறிடுகிறது. இதே மாதிரி சோலைக் கிளியின் கிண்டலான வசனங்கள் நாடகம் முழுக்க இடம்பெற்றுள்ளன.

'நான் பிழை செய்துட்டன்.. என்ட காசிலயாவது அவனுக்கு ஒரு காரை வாங்கி நான் குடுத்திருக்கணும். பொண்டாட்டியோட சண்ட புடிச்சிக்கிட்டு வந்தவனை ஏசி திருப்பி அனுப்பியிருக்கணும்' என்று பாருக்கின் தந்தை சொல்வதுடன் நாடகம் முடிவடைகிறது.

    இந்த நாடகத்தில் பாருக்கின் தந்தையாக மறைந்த கே.ஏ.ஜவாஹர் அவர்களும் தாயாக நூர்ஜஹான் மர்ஸூக் அவர்களும் மனைவியாக ஞெய்றஹீம் ஷஹீத் அவர்களும் பாருக்கின் மாமனாராக ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களும் நண்பனாக மஹ்தி ஹஸன் இப்றாஹீம் அவர்களும் நடித்துள்ளனர். பாருக் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தது நான்தான்.

    நாடகத்தின் தொடக்கக் காட்சியில் பாருக்கின் தந்தை இறைச்சிக் கறியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எச்.ஐ.எம். ஹூஸைன் பிச்சைக்கானாக வருவார். 'சனியனுகள்... சாப்பிடுற நேரம் பாத்துத்தான் பிச்சையெடுக்க வருவானுகள்' என்று அவர் சாப்பிட்டுக் கொண்டே கொம்புவதும் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சோறு கேட்பார். சோறு இல்லை என்றதும் 'எங்கேயோ இறைச்சிக் கறி வாசம் வருகிறது' என்று பிச்சைக்காரன் சொல்லுவதும் வெகு சுவாரஸ்யமாகத் தூக்கி விடுகிறது.

18.01.2020

Friday, January 17, 2020

மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் 'நிழலைத் தேடி'



மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'நிழலைத் தேடி'யை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த நூல் 2017ம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 'ஜலசமாதி' 2008 இல் வெளிவந்திருக்கிறது.

ஏ.எஸ். உபைத்துல்லாஹ் ஒரு நல்ல சிறுகதையாளர் என்று முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். 2016ல் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாடு சம்பந்தமான பிரதேசவாரியான எழுத்தாளர் சந்திப்பின் போது ஒரு மாலை வேளை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

திருமலை மாவட்டத்தின் இயற்கை அழகு, கடலும் ஆறும் அண்மிய நிலம், அப்பிரதேச ஊர்களின் கடந்த காலமும், நவீன மயப்படுதலும், அப்பிரதேச மக்களின் ஒற்றுமையான வாழ்க்கை, சுனாமி, இனப்பிரச்சனை ஏற்படுத்திய வடுக்கள், இடப்பெயர்வின் துயரம், மீள்குடியேற்றமற்றுச் சீரழியும் ஏழை - எளியவர்களது வாழ்க்கை, சிறிய வரலாற்றுக் குறிப்புகள், பிரித்தாளும் அரசியல் தந்திரங்கள், பிரதேச கல்வி என்றெல்லாம் நிறைய விடயங்களைத் தனது கதைகளுடே உபைத்துல்லாஹ் பேசுகிறார். திருமலையும் அதனுள்ளடங்கும் பிரதேசங்களும் நீர் வளம் நிரம்பியவை என்பதால் அவரது கதைகளில் கடல், ஆறு, கிணறு என்று நீர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

'தண்ணீர், தண்ணீர்' இத்தொகுதியின் முதலாவது கதை. குடும்பத்தில் வலது குறைந்த பிறந்த,  ஒரு பக்கம் காலை இழுத்துக் கோணி நடக்கும் மம்மறாயன் - முகம்மது இப்றாஹீம் -  நேர்மையாக வாழ வேண்டும் என்ற லட்சியமுடையவன்.  அக்காலத்தில்  வீடுகளில் உள்ள கிணற்று நீர் உவர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்தபடியால் மக்கள் குடிநீருக்கு அலைந்த போது தூரத்தே இருந்த நன்னீர் கிணறுகளில் நீர் பிடித்து வந்து வீடுவீடாகக் கொடுத்து அவர்கள் கொடுப்பதைப் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தான். குடங்களில் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு தள்ளு வண்டியை ஒரு நல்லவர் கொடுக்கிறார். ஏழ்மை நிறைந்த அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் குழாய் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது ஒரே வருமான வழியும் இழக்கப்பட்ட நிலையிலும் வலது குறைந்த மம்மறாயன் மனைவியிடம் சொல்கிறான்.. 'பாத்தும்மா யோசிக்காத... இந்த உலகத்துல தண்ணி யாவாரம் மட்டுந்தான் ஒரு தொழிலா? எத்தனையோ தொழில் இருக்கு.. நமக்குப் பொருத்தமான ஒன்றைத் தேடிக் கொள்ளுவம்..!'

'கொடி பறக்குது' என்ற கதை வெள்ளை மணல் அருகே இருக்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசல், அங்கு வருடா வருடம் விழாவாக நடக்கும் கந்தூரி, பெயர் தெரியாத நாற்பது முழ அவுலியா (இறைநேசர்) அடக்கஸ்தலம், அதனோடு இணைந்த 1815ல் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஆகியவற்றை ஜூனைதீன் என்ற முதியவர் நினைவு கூரும் கதை. இப்போது இந்த இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லி ஒரு பெருமூச்சுடன் முடிவடைகிறது.

நீண்ட நெடுங்காலமாக மூதூர், கிண்ணியா பிரதேசப் பயணத்தைத் தோணி மற்றும் மிதவை மூலம் கடந்த மக்கள் பாலங்கள் அமைக்கப்பட்டதும் அதில் ஒரு சுற்றுலாத் தலம் போல் போய் நின்று மகிழ்ச்சியனுபவித்ததையும் பாலங்கள் அமையுமுன் எப்படியெல்லாம் மக்கள் சிரமங்களை அனுபவித்தார்கள் என்பதையும் நினைவூட்டுகிறது 'நீலக் கடல் தாண்டி' என்ற கதை.

'ஓயாத அலைகள்' என்ற கதையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரதேசத்தின் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு தினத்தில் சென்று கற்பிக்கும் சேவையைச் செய்து கொண்டிருப்பதையும், சிறு வகுப்பு முதல் ஏ.எல் வரை நடக்கும் டியுஷன் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதையும் பேசுகிறது. பாடமற்ற வேளை வேறு ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை அதிபர் கோர, அதை மறுத்துப் பேசும் ஆசிரியர் ஒருவருக்கு உதவிக் கல்விப் பணிப்பாளராகத் தரமுயரும் கடிதம் வருவதோடு கதை முடிகிறது.

மிக அண்மைக் காலம் வரை அறபிகள் பள்ளிவாசல் கட்டித் திறப்பதற்காக வருவதும் அந்தப் பள்ளிகள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் வாழ்வதற்கு வீடுகள் இல்லாத நிலையில் வாழும் மீனவர்கள் பற்றியதுமான கதை 'ஏமாற்றம்.'  'ஊர் துறந்து' என்ற கதை புலிகளுக்கும் அரச படையினருக்கும் நடந்த ஷெல், மோட்டார் வீச்சில் மரித்தவர்களதும், ஊர் துறந்து அகதிகளாகச் சென்றவர்களதும் கதை. 'நிழலைத் தேடி' என்ற கதையும் இனப் பிரச்சனை காரணமாக ஊர் துறத்தலைத்தான் பேசுகிறது. ஆனால் மூவின மக்களும் எப்படித் தத்தம் தொழிலைச் செய்தபடி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதைப் பேசும் ஓர் அருமையான கதை இது.

'வாயில்லாப் பூச்சிகள்' வீடற்ற பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் நிராகரிக்கப்படுவதையும் 'வாழத்துடிப்பவர்கள்' என்ற கதை உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்பும் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதையும் பேசுகிறது.

'அம்மா என்றால் அன்பு' என்ற கதை பாடசாலையில் கொடுக்கும் கஞ்சியை வீட்டிலிருக்கும் தாயாருக்கு எடுத்துச் செல்லும் வறுமைப்பட்ட குடும்பச் சிறுமி பற்றியது.

 மூதூரின் நொக்ஸ் வீதிக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்பதை கப்பல் மாலுமியான நொக்ஸின் வருகை தந்ததை வைத்து உண்டாகியிருக்கிறது என்பதை ஒரு கதையிலும் மலை நாட்டில் இருந்த ஜேம்ஸ் என்ற ஒரு வெள்ளைக்காரன் பொழுது போக்குக்காக திருமலை வந்து அங்கேயிருந்த ஒரு பிரதேசத்தில் தெங்குத் தோட்டம் அமைத்ததையும் அதில் கூலிக்கு வேலை செய்தவர்களையும் கதைகளில் குறிப்பிடுகிறார். பொதுவாக எல்லாக் கதைகளிலும் சாதாரண மக்களின் வாழ்வியல் உபைத்துல்லாஹ்வினால் எடுத்துக் காட்டப்படுகிறது. தான் வாழும் பிரதேசம் பற்றிய அவருடைய ஆழமான அறிவு விதந்துரைக்கத்தக்கது.

Monday, January 13, 2020

கவிஞன் எப்படி இந்தக் காலத்தில்நிலா பார்ப்பான்?


கவிஞர் சோலைக்கிளி 

இந்தப்பிரதேசத்தின் முக்கியமான படைப்பாளி ஒருவரின் நிகழ்வில் சிறப்புரையாற்றுவதையிட்டுமகிழ்ச்சியடைகிறேன்.

சிறப்புரையாற்றுவது சந்தோசமான ஒரு விடயம்தான். வெளியீட்டுரை, விமர்சன உரை, நன்றி உரை, வரவேற்புரை, போன்று ஓர் எல்லைக்குள் நின்று பேசத்தேவையில்லை. காற்றுமாதிரி அங்கும் இங்கும் அலைந்து பூக்களைப் பொறுக்கிக் குவிக்க வேண்டிய ஒன்றுதான் சிறப்புரை. சிறப்புரை ஆற்றுகின்றவனும், அந்த உரையை நிகழ்த்தும்போது ஆனந்தப்படுவான். நான் ஆனந்தப்படவில்லை! இது ஆனந்தப்படுகின்ற ஒருநேரமில்லை.

விடிந்தால் என்ன நடக்குமோ என்று எழும்புகின்றோம். விஷக்காற்று வீசி நமது ஈரல்குலைகள் அழுகிப்போய் இருக்கின்றன. நமக்கு உள்ளிருக்கும் குயில் இப்போது பாடுவதை நிறுத்தியிருக்கிறது. நமது மனதின் புல்வெளி கருகிப்போனது. எப்படி சிறப்புறையாற்றலாம்? சிரித்த முகத்தோடுஎப்படி சபையில் பேசலாம்? எப்படி ஆனந்தம் அடையலாம்?

என் அன்புக்குரியவர்களே! அஸ்ரப் சிஹாப்தீன் முக்கியமான ஒரு படைப்பாளி. கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஒலிபரப்பு, ஒளிபரப்பு,  நிகழ்ச்சித் தயாரிப்பு என்று பல பக்கங்களைக் கொண்டவர். பல பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பதற்கு நீண்ட காலம் எடுப்பதைப் போல, பல பக்கங்களைக் கொண்ட ஒரு மனிதனைப் பற்றிப் பேசுவதற்கும்: அவகாசமும் ஆறுதலான சூழலும் அச்சமில்லாத நிலமையும்  நமக்கு வாய்க்க வேண்டும். இன்று இவைகள் நம்மத்தியில் உள்ளனவா? வெள்ளைக் காகிதத்தைக் கசக்கி எறிந்ததைப் போல விஷக்காற்று நம்மை கசக்கி எறிந்து விட்டதல்லவா?. நாம் குப்பையில் உருளுகின்ற கடதாசிகளைப் போல ஆகிவிட்டோம். நம்மை ஏறி மிதித்துக் கொண்டு கால்கள் நடக்கின்றன. கவிஞன் எப்படி இந்தக்  காலத்தில்நிலா பார்ப்பான்?. அழுகிய தோடம் பழம் போல நிலவு கண்ணீர் வடிக்கிறது. வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே! நான் எப்படி இங்கு சிறப்புரையாற்ற முடியும்? ஆனந்தப்பட முடியும்?

நான் மனமிழந்து போன மனிதனாக இருக்கிறேன். என் அன்றாட வாழ்க்கை கெட்டுவிட்டது. விடிந்தால் வாசலுக்கு வந்து விரிந்திருக்கும் மல்லிகைப் பூவை ரசித்தநான், இப்போது வெயிலேறிய பிறகுதான் வாசலுக்கு வருகிறேன். எதிலும் பிடிப்பற்றுப் போன கூதல் பிடித்த பூனையைப் போல வாசலை முகர்கிறேன். காலையில் மனைவி தரும் தேநீரின் ஆவிபறக்கும் போது இரவு ஏதோ ஒன்று பற்றி எரிந்திருக்கிறது என்ற எண்ணம்தான் வருகிறது. ஒருகிழவனைப் போல மனம் சதாவும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் சுவை குன்றிப் போன ஒரு காலமாக இது இருக்கிறது. பத்திரிக்கைகளைப் பிரித்தால் அனேகமாக எல்லாம் அபத்தமான,அச்சம் தரும் செய்திகளாக இருக்கின்றன. யாருடன் யார் கம்பி நீட்டினான் என்ற இனிப்பானசெய்திகளைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இந்தச் செய்திகளில் சுவை இல்லை. எந்தமணமகனுக்கு எந்த மணமகள் பொருத்தம் என்று பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்ற பகுதியைப் பார்த்து கணித்து மகிழ்ந்த எனக்கு, இப்போது வேலை இல்லை. யாரும் இப்போதுகம்பி நீட்டுவதில்லை. அதைப் பிரசுரிக்க பத்திரிகைகளில் இடமும் இல்லை. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? மேடையில் ஒருகுருவியாக நான் எப்படிப் பறப்பது?

 இதற்குள் நாங்கள் எழுதுவதே ஒரு போராட்டமாக இருக்கிறது. அச்சத்துள் வாழ்ந்து அச்சத்தையே சாப்பிடுகிறோம். அச்சத்தால் ஆடைகட்டுகிறோம். பேனைக்குப் போராட்டம் பிடிக்கும். அதனால் அது சோரவில்லை. நாம் தான் சோர்ந்து  விட்டோம். அஸ்ரப் சிகாப்தீன் துணிச்சலான ஒருபேனைக்காரன். இந்தச் சூழலிலும் அவர்  நிமிர்ந்து நிற்பவர். வாயால் கதையளந்து பெரியஎழுத்தாளனாக முயற்சிக்காதவர். எழுத்தோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருடைய மண்ணில் அவருடைய இரண்டு புத்தகங்கள் இன்று வெளிவருகின்றன. சொந்த மண் எல்லோருக்கும் சுவையானது. அதில் ஒட்டும் கொசுக்கள்தான் நாங்கள் எப்போதும். இதில் என்னை சிறப்புரையாற்றக் கேட்டிருக்கிறார்கள். எப்படி சிறப்புரையாற்றுவது? நான் தண்ணீராக ஓடுவது? இப்போது முடியுமா?

நாம் எப்படித்தான் எழுந்து நின்றாலும், உன்னிப் பறக்கும் சிறகுகள் சோர்ந்துவிட்டனவே!. நாம் எப்படித்தான் நம்மை தயார் செய்து எடுத்தாலும் நாமாக  நடக்கமுடியாமல் இருக்கிறதே! நமது சோற்றுப் பாத்திரங்களில் காகங்கள் குந்திக் கழிக்கின்றனவே! நமது விளை நிலங்களில் எருதுகள் படுத்து பயிர் செய்ய விடாமல் அழிச்சாட்டியம் செய்கின்றனவே! பன்றி வயற்காரனை வெட்டிவிட்டுப் போகிறது. இரவுகளில் நான் பாடிவைத்துவிட்டுப் படுத்த கவிதையைக் காலையில் தேடினால் காணவில்லை. அது களவு போய் இருக்கிறது.  நண்பர்களின் முகங்களில் சிரிப்புகள் போனதைப் போல, என் மேசை வாடிக்கிடக்கிறது. புன்னகைகள் ஊரில் ஒறுத்துப்போய் விட்டன. பதர்கள் உசும்புவதைப்போல மக்கள் உசும்பித் திரிகின்றார்கள். நெல் மணிகள் குறைந்துவட்டன. வயல் செய்தவன் வெறுங்கையோடு வீடு வருகிறான். கவிஞனைப் போல! 'கலவெட்டியில்' பிச்சை கொடுக்கவும் என்னிடம் மகிழ்ச்சி இல்லை. நான் மகிழ்ச்சிக்கு பிச்சை எடுக்கின்ற ஒரு காலம் வந்துவிட்டது. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? என் கவிஞனை விட்டுவிட்டு நான் தன்னந்தனியே சிறப்புரையாற்ற முடியுமா? அவன் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்வா?

 அவன்தானே எனக்கு குதிரை. அவனில்தானே எனது பயணமெல்லாம். எனது கவிஞன் காலக் கொடுமையினால் ஆடிப்போய் சின்னப் சின்னப் பிள்ளையைப் போல யோசனையுடன் நகம் கடித்துக் கொண்டிருக்கிறான். துப்பு துப்பு என்று தலையில் அடித்தாலும், துப்புறானில்லையே! அவனை எழுப்புவது சிரமமாக இருக்கிறது.

சிறப்புரை என்றால், சொல்லாத பல செய்திகளை அது சொல்ல வேண்டும். கேட்டிருப்போர்  மெய்சிலிர்க்க வேண்டும். சிறப்புரை என்றால் அதில் ஒரு கவர்ச்சி, அதில் ஒரு இனிமை, அதில் ஒரு உண்மை, அதில் ஒரு ஆறு ஓடவேண்டும். சிறப்புரை என்று சொல்லிக் கொண்டு, அதில் ஒரு ஓணானாவது ஓடாமல் உரையாற்ற எனக்குவிருப்பமில்லை.

அஸ்ரப் சிகாப்தீனும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக தலைமுடி வெட்டியவர்கள் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் எழுத வந்த காலத்தில்தான்  நானும் எழுத வந்தேன். அவர் பேனை வாங்கிய நேரத்தில் தான் நானும் பேனை வாங்கினேன். கடதாசியும் வாங்கினேன். நானும், அவரும் என்ற இந்த இரண்டு மீன்பிடிக்காரனுக்கும் அவரவருக்கென்று தனித்துவமான வள்ளங்களும் வலைகளும் இருக்கின்றன. இது எழுத்தாளன் என்ற மீன்பிடிக் காரனுக்குமுக்கியமானது. அவர் மீன் பிடிக்கும் முறையும் வேறு வேறானது. இதனால் இவர் இந்தக் கடற்கரையில் இப்போதும் தனித் தன்மையோடும் இருக்கிறவர். எனக்கு இந்தத் 'தண்டையல்' காலம் கடந்துதான் பழக்கமானார். சோலைக்கிளி என்ற தண்டையலும், அஸ்ரப் சிகாப்தீன்  என்ற தண்டையலும் நாட்பட்டு உறவாகிய 'செம்படவர்கள்.
'
எனது மீன்பிடியில் அவர் எந்த இடத்திலும் குறுக்கு வலைபோடவில்லை. என் வலையை வெட்டவில்லை. சிலர்  செம்படவர்களாக மீன்பிடிக்க வந்து தங்கள் 'சிறுவால்களை' இழந்ததுதான் மிச்சம். அறுநாக் கொடியும் அறுந்து போனார்கள். அவர்களை அடையாளப் படுத்தும் அளவுக்கு அவர்களுக்கென்று ஒரு தோணி இல்லை. ஒரு வலை இல்லை. கடல் அவர்களை ஏற்கவில்லை. ஓட்டைவலையில் எப்படி மீன் பிடிப்பது? நிர்வாணம் கடலுக்குப் பிடிக்காது. தன்னில் குளிக்க வந்தசிறுவர்களை விரட்டுவதைப் போல கடல் அவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது.

எனது இந்த உரை ஒரு சிறப்புரையாக அமையாது விட்டாலும், ஒரு சின்னக் காற்று மாதிரி இந்தச்சபையின் மனதைத் தடவும் என்று நினைக்கின்றேன். உங்கள் அகத்துக்குள் நுளைந்து கிளுகிழனுப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நகத்துக்குள் நுளைந்து ஊத்தை எடுக்கும் என்று கருதுகின்றேன். அனேகமாக எனது உரைகளை சபையோர் காதுகளுக்குள் வெந்நீர் ஊற்றுபவையாக இருக்காமல் பார்த்துக்கொள்வது எனது பழக்கம். நான் போன பல கூட்டங்களில் சிலர் ஊற்றிய வெந்நீரால்தான் எனதுகாது பொசுங்கியது. அந்த அனுபவம் எனக்குப் பேசுகிறது.

இப்போது நான் அந்தரத்தில்இருக்கிறேன். எனது எதிரிகள் ஏசும் போது சிரிக்கிறேன். அது என்னவென்று விளங்காமல், விளங்காமல் இருப்பது வாழ்க்கைக்கு நல்லதுதான். நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நல்ல மனிதனாக பெயர் வாங்கலாம் விளங்காமல் இருந்தால்தான். சமுகத்தில் உயர்ந்தும் போகலாம். இந்தச்'செவிடன்'எப்படி சிறப்புரையாற்றுவது?

நீங்கள் கைதட்டுவதே எனக்குக் கேட்கவில்லை. இலக்கியக் கூட்டங்களுக்குப் போய் போய் எனது கேட்கும் திறனை இழந்து வருகிறேன். அதுதான் நான் எந்தக்கூட்டத்திற்கு யார் பேசுகிறார் என்று பார்த்துப் போவது. அண்மையிலும் ஒரு நாவலாசிரியர் என்னை அழைத்தார். நான் போகவில்லை. அங்கு முழங்க இருந்த பீரங்கிகளைப் பார்த்துப் பயந்துவிட்டேன். யுத்தங்களுக்குப் பாவிக்கும் தளபாடங்கள்! நான் மலர் கொய்பவன்தான். மலை உடைப்பவனல்ல. சிலர் மலை உடைக்கிறார்களே கூட்டங்களில்இ ஏன்? மனிதன் இப்படியான நிகழ்வுகளுக்கு வரக்கூடாதென்றா?

இங்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஒரு பூந்தோட்டத்தைப் பார்ப்பது போன்றே இருக்கிறது. மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிகிறது. இது என்னால் உண்டான மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை. உங்கள் அஸ்ரப் சிகாப்தீன் உண்டாக்கிய மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தாளனால் ஊருக்கு மகிழ்சிசி, ஊரால் எழுத்தாளனுக்கு மகிழ்சிசி என்ற நிலை கண்டு நானும் மகிழ்கிறேன். 'பசுமை'இலக்கிய வட்டத்தையும் பாராட்டுகிறேன்.

 இனிய சபையோர்களே! நேரம் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் வால் எரிந்து அலறிக் கொண்டிருக்கிறதல்லவா? இவ்வளவு தூரம் இருந்து வந்து, உங்கள் முன் ஒரு சிறப்புரையாற்றாமல் போவது எனக்கும் கவலைதான். முதல் முதலாக நான் கொடுத்த காதல் கடிதத்தை அவள் கிழித்ததைப்போல.
நிலா வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரவுக்குள் சிறு பூச்சியைப் போலஊர்ந்து ஊர்ந்தாவது நான் ஊர் போய்ச் சேரவேண்டும். என் பூச்சி புழுக்களைப் பார்க்க வேண்டும். நான் போகும் போது ஊர் இருக்குமோ தெரியாது! எவன் வெட்டிச் சாய்த்து அதைத் தோளில் சுமந்து போகிறானோ! நான் அறியமாட்டேன்.! போகும் போது வழிகாட்டநிலாவையும் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும். பகலிலும் இருட்டுப்பட்ட ஊராகிவிட்டதே நமதுஊர்கள்!  அதற்குள் ஒரு சிறப்புரையை ஆற்றிவிடலாமென்றால் முடியாமல்தான் இருக்கிறது. கோழிதான் முக்கி முக்கி முட்டையிடுகிறது. பேச்சாளன் முக்கி முக்கி உரையாற்றலாமா? அது நதி போல ஓடிவரவேண்டுமல்லவா! மழைபோல பெய்து சபையோர் குடைபிடிக்க வைக்கவேண்டும் அல்லவா!

பேச்சு கட்டிப்போனது. அதற்கான காற்று இப்போது இல்லை. மணக்கின்ற காற்றில்தான் மனம் குளிர்ந்து, வார்த்தைகள் துள்ளுகின்றன. காற்றுப் பிழைத்தால் வார்த்தைகளும் சமாதியாகிவிடும். நான் வார்த்தைகளின் எலும்புக் கூடுகளைவைத்துக் கொண்டு எப்படி இங்பு சிறப்புரையாற்றுவேன்? நீங்கள் என்னில் குறை நினைக்கக்கூடாது. நாம் உறவுக்காரர்கள்! அப்படி எடுத்ததற்கெல்லாம் என்னில் குறை நினைக்க நீங்கள் எனக்கு சீதனம் தந்து பெண்னும் தந்த மாமனும் இல்லையே!.

அன்புள்ள சபையோர்களே! நான் உங்களிடம் வந்து கடன் பட்டுக்கொண்டு செல்கின்றேன். காலத்தால் பால்ஒழுகி, நான் நானாகும் போது உங்களுக்கான எனது சிறப்புரையை நிச்சயம் தருவேன். ஒரு புத்தகத்தை படித்து விட்டுத் தருகிறேன் என்று வாங்கினாலும், தராதவன்தான் எழுத்தாளன். இவன் பொய் சொல்லுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் அப்படியல்ல! எனது சோற்றுக்குள் தலை முடியையும் பொறுக்கி எடுத்துஇ இது யாருடையது என்று வினவி உரியவரிடம் ஒப்படைப்பவன். எனது சிறப்புரைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கலாம். காலமும் சரிவரத்தான் போகிறது.

இந்த உலகத்தில் எதுதான் நிரந்தரமாக இருந்தது? கண் இருந்த இடத்தில் மூக்கும், மூக்கு இருந்த இடத்தில் கண்ணுமா, எப்போதும் மனிதன் வாழமாட்டான். அவை உரிய உரிய இடங்களுக்கு வந்துதான் ஆகவேண்டும். எனது கண்ணும் மூக்கும் உரிய இடங்களுக்கு வந்தவுடன் எனது சிறப்புரையும் வரும். ஒரு பறவையாகவேனும் வந்து நின்றுதான் உங்களின் வாசலில் பேசுவேன். காலம்  புரளக்கூடியது. அதை நமது பெருமூச்சுகள் புரட்டிவிடும். நமது சூரியோதயங்களை எவரும் தொடர்ந்து தடுத்துக் கொள்ள முடியாது. இறைவன் எல்லோருக்கும் நீதியானவன். இந்தநம்பிக்கையை நாம் விட்டு விடக்கூடாது. இந்தச் சிறப்புரையை முடிக்கிறேன்.
   
(04.09.2019ல் ஓட்டமாவடியில் நடைபெற்ற இரு நூல்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றப்பட்ட சிறப்புரை - எழுத்துத் தொகுப்பு - எஸ்எம். முர்ஷித், தலைவர், பசுமை கலை இலக்கிய வட்டம் - வாழைச்சேனை)


Friday, January 10, 2020

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'எனக்குள் நகரும் நதி'


நூல் அறிமுகம் : முஹம்மத் றிழா

பத்திரிகைப் பத்திகள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி, அஷ்ரஃப் சிஹாப்தீனின் இரண்டாவது பத்திகளின் தொகுப்பாகும். இவரது முதலாவது பத்திகளின் தொகுப்பாக தீர்க்க வர்ணம் 2009ம் ஆண்டு வெளிவந்தது. இந்த தொகுப்பு பல்சுவை பத்திகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. இந்த பத்தித் தொகுப்பிற்கும் தற்போது வெளிவந்துள்ள பத்தித் தொகுப்பிற்கும் வித்தியாசங்கள் நிறையவே உண்டு. இதனை நூலாசிரியரும் ஏற்றுக் கொள்கிறார். தீர்க்க வர்ணம் பத்தித் தொகுப்பில் இடம்பெற்ற பத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை. முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய விடயங்கள் குறித்தே எனக்குள் நகரும் நதியை நான் எழுதினேன் என்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

இலங்கையில் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் தமிழ்மொழி பத்திரிகையான மீள்பார்வைப் பத்திரிகையில் அஷ்ரஃப் சிஹாப்தீன் பத்தி எழுதினார். அவருக்கென தனியான பகுதியொன்றை மீள்பார்வை வழங்கியிருந்தது. அவர் அப்பத்திரிகையில் எழுதிவந்த காலங்களில் அவரது பத்தி எழுத்துகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்ததை நான் அறிவேன். மீள்பார்வை பத்திரிகையை தொடர்ந்து வாசித்த அனுபவம் எனக்குண்டு என்ற வகையில் நூலாசிரியரால் எழுப்பப்பட்ட கேள்விகள் முஸ்லிம் சமூக, சமய செயற்பாட்டாளர்களுக்கு நெருடலாக அமைந்திருக்கும் என்பது திண்ணம். அவர் இந்த பத்தி எழுத்துக்கள் மூலம் முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு முறை மீள்பரிசீலனை செய்யுமாறு, தனக்கான மொழியில் அழகுறச் சொல்லியிருப்பார். இது அவருக்கேயான தனித்தன்மை என்று கருதுகிறேன்.

எமது பிரதேச எழுத்தாளர்களில் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை நான் புரிந்துகொண்டது ஏனைய எழுத்தாளர்களைச் சங்கடத்திற்கு உட்படுத்தும் என்றிருந்தாலும்,அவர்களை விட இவர் வித்தியாசப்படும் புள்ளியை இங்கு பதிவுசெய்துதான் ஆகவேண்டும். இதனை ஏனைய எழுத்தாளர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எனது நம்பிக்கை மனங்கொள்கின்றது. எமது பிரதேசத்தில் 80களில் எழுதவந்த எழுத்தாளர்களுள் எதுவித சோர்வுமின்றி இன்றுவரை எழுதியும் நூல்களை வெளியிட்டும் வருவர் அஷ்ரஃப் சிஹாப்தீன். இந்த மன உறுதி அவரிடம் இருப்பதே என்னை அவர் மீது ஈர்க்க பிரதான காரணமானது. அவரது ஏனைய அனைத்து நூல்களையும் வாசிக்க முடியாது போனது எனது துரதிஸ்டம். அவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க முடியாது போனதால் அவர் பயணித்துவந்துள்ள கருத்தியல் தளத்தினை என்னால் ஆழமாக புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் இந்த நூல் குறித்தான எழுதுகையை அறிமுகக் கட்டுரையாகவே அமைத்து கொள்ள வேண்டிய நிலை எனக்குள் ஏற்பட்டது.

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைபாளியும் ஒளி, ஒலிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் பன்முக ஆளுமை கொண்டவர். 1978ம் ஆண்டு தினபதி பத்திரிகையின், தினபதி கவிதா மண்டலம் பகுதியில் தனது முதலாவது மரபுக் கவிதையை எழுதுவதன் மூலம் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுத்துலகத்திற்குள் வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து,பயண அனுபவ குறிப்புகள், முகநூல் எழுத்து என்று எழுத்தும் செயற்பாடும் என தன்னை வடிவமைத்துக் கொண்டார்.இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பதன் மூலமும், வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலமும் இலங்கை ஒளி, ஒலிபரப்பாளர் தளத்தில் தனக்கான இடத்தை தடம்பதித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் (1999), என்னைத் தீயில் எறிந்தவள் (2008),தேவதைகள் போகும் தெரு (2018)ஆகிய கவிதைத் தொகுதிகளையும்,புள்ளி (2007), கறுக்கு மொறுக்கு - முறுக்கு (2009),புல்லுக்கு அலைந்த மில்லா (2009) ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களையும்,விரல்களற்றவனின் பிரார்த்தனை (2013) எனும் சிறுகதை தொகுதியையும்,உன்னை வாசிக்கும் எழுத்து (கவிதை) (2007), ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011), பட்டாம்பூச்சிக் கனவுகள் (சிறுகதை) (2015),யாரும் மற்றொருவர் போல் இல்லை (கவிதை) (2017), வெய்யில் மனிதர்கள் (நாவல்)(2019) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும்,பல்சுவைப் பத்திகளின் தொகுப்பான தீர்க்க வர்ணம் (2009),பயண அனுபவ குறிப்பான ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை (2009),உண்மைக் கதைகளின் தொகுப்பான ஒரு குடம் கண்ணீர் (2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரதுஎன்னைத் தீயில் எறிந்தவள் கவிதை தொகுதிக்கும், பட்டமாம்பூச்சிக் கனவுகள் சிறுகதைத் தொகுதிக்கும் அரச சாஹித்தய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.ஓட்டமாவடி அஷ்ரஃப் எனும் பெயரில் ஆரம்பத்தில் எழுத்திய இவர் பின்னர் அஷ்ரஃப் சிஹாப்தீன் என தனது பெயரை மாற்றி கொண்டார். யாத்ரா எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்சிகையின் ஆசிரியராகவுள்ளார். தற்போது இலக்கிய படைப்புகள் ஒலித் தொகுப்புகளாக வெளிவந்து கொண்டுள்ள சமகாலத்தில் யாத்ரா சஞ்சிகையினை இணைய ஒலிச் சஞ்சிகையாக வெளியிட்டு வரவேற்பையும் பெற்றுக் கொண்டார். நாட்டவிழி நெய்தல் எனும் பெயரில் தனது எழுத்துகளை வலைப்பதிவில்; பதிவேற்றமும் செய்துவருகின்றார்.

யாத்ராவின் பதிப்பதில் வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி பத்திரிகைப் பத்தியை தனது தந்தை வழிப் பாட்டனார் மிஷின்கார லெப்பை என அறியப்பட்ட மீராலெப்பை ஆலிம் அவர்கள் நினைவுக்கு என சமர்ப்பணம் செய்துள்ளார். 26 தலைப்புகளை உள்ளடக்கியுள்ள இந்த நூல் பல்வேறு விடயங்களை பேசுகிறது.

எழுத்துச் சேவை, மொழியாள்கை,மன்னரே முதல்வர், ஒரு நாடகமன்றோ நடக்குது,கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்,வற்றாத கடலில் ஓயாத அலைகள்,தெற்கே உதித்த சூரியன்,கண்ணுக்குத் தெரியாத கபட வலை,முகத்திரண்டு புண்ணுடையார்,நுணலும் தன்வாயால் கெடும்,மூக்குகளால் சிந்திப்பவர்கள்,குகைவாசிகள்,நடத்தை காட்டும் நல்வழி, நீ சொன்னால் காவியம்,அவனன்றி அணுவும் அசையாது, அடைந்துகொள்ளப்படாத ஆயுதம்,எல்லைக்குள் எட்டப்படா இடங்கள், மூன்று காட்சிகள், வேர்கள் இறக்கும் விதம், அவளுக்கும் அழுகை என்று பெயர், நோன்புக் குழந்தைகள், அஸ்ஸலாமு அலைக்கும், ஆர்ப்பரிக்கும் ஆசை, ஹஜ் - காசாகி நிற்கும் கடமை, உன்புகழ் கூறாத சொல்லறியேன், அனல் ஹக் ஆகிய தலைப்பில் இந்நூல் பேசுகிறது.

எழுத்தாளனின் பற்றிய சமூகப் புரிதல்,ஒவ்வொரு இஸ்லாமிய முகாமும் இஸ்லாமிய சிந்தனைக்கு முழு வடிவம் கொடுக்காது தங்களை முழுவடிவமாக சமூகத்தில் அடையாளப்படுத்தியதால்; ஏற்பட்ட விளைவுகள், அறபிகளின் அரசியல், பழங்காலப் பெருநாள் கொண்டாட்டமும் அதை தடுத்துநிற்கும் நிலமற்ற வாழ்வியலும், பிரிந்துள்ள முஸ்லிம் அரசியலும் தேர்தலின் பின்னரான உறவும், எகிப்திய ரிஹாம்களாக மாறும் மனங்கள், மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் குறித்த பதிவு, போதைப்பொருள் பாவனையும் சமூக சீரழிவுகளும், பௌத்த போதனையிலுள்ள இஸ்லாமிய வாழ்வு, சிக்கலும் பிரச்சினையும் நிறைந்த குடும்ப வாழ்வை திருப்தியாக வாழ்தல், பிள்ளை வளர்ப்பு, வறுமையும் உதவியும், அன்பு கொள்ளச் செய்யும் தாஈ றபீக், கருத்தை ஏற்றலும் மதித்தலும்,மருதூர் ஏ மஜீதின் மஞ்சமாமாவும் நம்மிடமுள்ள புரிதலும், கவிஞர் கா.மு. ஷரீப் என்ற அற்புதமான கவிஞர் குறித்த பார்வை, மஹ்மூத் தர்வீஷின்யூஸூப் (அலை) பற்றிய கவிதை சொல்லும் செய்தி, ரமளான் மாதமும் நகர் வாழ்வும், பாவம் செய்தல், பெண் கல்வி, நோன்பு, சீர்திருத்தம் வேண்டிநிற்கும் குத்பா பிரசங்கம், இலாபமீட்டும் தொழிலாக மாறியஹஜ் கடமை, வைக்கம் முகம்மது பஷீரின் அனல் ஹக் சிறுகதையும் நாமும் போன்ற விடயங்களை பிரதான பேசு பொருளாக்கியுள்ளார் நூலாசிரியர்.

Sunday, November 18, 2018

'தம்பியார்' - ஓங்கி எழும் எதிர்க் குரல்!


'தம்பியார்'  - ஓங்கி எழும் எதிர்க் குரல்!

எங்கே, எப்போது சந்தித்தேன் என்பது ஞாபமில்லாத போதும் முதல் சந்திப்பிலேயே மனதில் ஒட்டிக் கொண்டவர் டாக்டர் அஸாத். சந்தித்த அன்றே கவிதைக்காரனாகவே அவர் அறிமுகம் செய்யப்பட்டது ஞாபகம் இருக்கிறது.

அவரது முதலாவது கவிதைத் தொகுதி வெளியீடு, பெரும்பாலும் பின்னால் வந்த எனது எல்லா நூல்களினதும் வெளியீட்டு நிகழ்வுகள், ஏனைய நூல் வெளியீட்டு நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று அவ்வப்போது அவரைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களூடே அவருடனான நட்பும் அழகிய கவிதைகளைப் படிப்பது போன்ற அனுபவங்களையே எனக்கு வழங்கியிருக்கின்றன.

ஆயிரமாயிரமாய்ச் சமூக வலைத்தளங்களில் கொட்டப்படும் தமிழ்க் கவிதைகளுள் வெகு சிலவே நமது கவனத்தைக் கவருகின்றன. அவ்வாறு கொட்டப்படும் கவிதைகளுள் - எனது கண்ணில் படும்போது நான் தவறாமல் வாசித்து விடும் கவிதைக்காரர்களுள் டாக்டர் அஸாத் அவர்களும் ஒருவர். அவருடனான அறிமுகமே அவரது கவிதைகளை நோக்கி என்னை இழுத்துச் சென்றாலும் அவருடைய கவிதைகளைத் தவறவிடாமல் வாசிக்கத் தூண்டுவது அவர் கவிதைகளில் அவர் பேசும் விடயதானங்கள்.

இலக்கியம் மக்களுக்கானது என்ற முடிவு எப்போதோ எடுக்கப்பட்டு விட்டது. எனவே இலக்கியப் படைப்புகள் யாவும் மக்களை, மக்களது பிரச்சனைகளை, அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களை பொது வெளியில் கொண்டு சேர்க்கும் கைங்கரியத்தைச் செய்யத் தொடங்கின. புதுக்கவிதை தோற்றம் பெற்ற பிறகு அவை பாரிய அளவில் மக்கள் பிரச்சனைகளையும் மனிதாபிமானத்தையும் தூக்கிப் பிடித்தன.

நவீன கவிதைகள் என்ற பெயரோடு பின்னால் வந்த ஒரு திருப்பம் இந்த நோக்கிலிருந்து பிறழ்ந்து எல்லாவற்றையும் பேசலாம் என்று நடைபோடத் தொடங்கின. சும்மா தேமே என்று அமர்ந்திருக்கும் போது ஓர் பழுத்த இலை விழுதல், ஆகாயத்தில் மேகம் நகர்தல், மழைபெய்தல், குளிரடித்தல் என்று உண்டாகும் உணர்வுகளைப் பெரிது படுத்தி - அவை பேச ஆரம்பித்தன. நவீன கவிதைகள் என்றால் சொற்களைப் புணர்த்தி எழுதுவது என்றொரு மயக்கமும் வந்து சேர்ந்தது.

அண்மையில் வெளியான எனது தேவதைகள் போகும் தெரு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறு குறிப்பில் தற்போதைய கவிதைப் போக்குக் குறித்து நாவலாசிரியரும் சிறந்த சிறுகதையாளரும் கவிஞருமான ஆர். எம். நௌஷாத் 'எனதான இரவு, உனதான மூக்கு என்றெல்லாம் கவிதைகள் படித்து நமதான முடிமயிர் கொட்டுண்ட இந்த வேளையில்...!' என்று சொல்கிறார். இதற்குமேல் அவை பற்றிப் பேசவேண்டியதில்லை.

இவை கவிதைகள் இல்;லை என்றோ குற்றம் என்றோ இங்கு நான் குறிக்க வரவில்லை. ஓர் உன்னதமான கவிஞன் இலக்கியம் மக்களுக்கானது என்ற நோக்கில் செயற்படும்போது அவனது கவிதைகளும் மக்களுக்கானவையாகவும் மகத்துவம் மிக்கவையாகவும் மாறிவிடுகின்றன. அந்த வகையில் புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குள் மக்களுக்கான கவிஞனாக அஸாத் ஹனிபா திகழ்கிறார் என்பதை அவரது கவிதைகள் மூலம் நாம் கண்டு வருகிறோம்.

இன்று வெளியிடப்படும் 'தம்பியார்' என்ற இந்தக் கவிதைத் தொகுதி ஆஸாத் ஹனிபாவின் 3ஆவது கவிதைத் தொகுதி. இதற்கு முன்னர் 'ஆத்மாவின் புண்', 'பிரேத பரிசோதனைகள்' என்ற தலைப்புகளில் இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

'தம்பியார்' கவிதைத் தொகுதியை நான் முழுமையாகப் படித்து விட்டேன் என்பதை அஸாத் ஹனிபாவுக்கும் சபைக்கும் மனச்சுத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். குறித்தளவு பக்கங்களைப் படித்து விட்டு நூல் நயம் செய்யாமல் முழுவதையும் படித்து விட்டு நூல் நயம் செய்வது அபூர்வமாக நடைபெற்றுவரும் சூழலில் நான் முழுவதையும் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன் என்பதையிட்டு அஸாத் ஹனிபா மகிழ்ச்சியடைய வேண்டும்.

197 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 180 பக்கங்களில் 77 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. நான் இதுவரை நூல்நயமோ, விமர்சனமோ, திறனாய்வோ செய்த நூல்களில் வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்ட முதலாவது நூல் இதுதான்.

இக்கவிதைகளை எனது வசதிக்கேற்ப முஸ்லிம் சமூகம் பற்றிய கவிதைகள் - தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள் - முஸ்லிம், தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள், பொதுவான கவிதைகள் என நான்கு வகைகளுக்குள் அடக்கியிருக்கிறேன். பெரும்பான்மை சமூகம் பற்றி ஏதுமில்லையா என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழுவது நியாயம். இவற்றுள் பெரும்பாலான கவிதைகள் அந்தச் சமூகத்தின் முன்னால் நின்றுதான் சுட்டுவிரல் நீட்டியபடி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையைச் சொன்னால் இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளையும் அவை பேசும் விடயங்களையும் குறித்துப் பேச எனக்குக் குறைந்தது ஒரு மணித்தியாலம் தேவைப்படும். அதற்கான வாய்ப்பு ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சாத்தியமற்றது என்பதால் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

இவரது கவிதைகள் மானுடம் என்ற அடித்தளத்தில் நின்றபடி கேள்விகளை எழுப்புகின்றன. அவை வில்பத்துக் குறித்துப் பேசும் அதே வேளை மியன்மார் அகதிகள் குறித்துப் பேசுகின்றன. அம்பாறைக் கலவரம் குறித்துப் பேசும் அதே வேளை சிரியா குறித்துப் பேசுகின்றன. புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் நடந்த கொண்டாட்டம் பற்றிப் பேசும் அதே வேளை காஷ்மீர் கோவிலுக்குள் சிதைக்கப்பட்ட சிறுமி பற்றிப் பேசுகின்றன. தம்புள்ளைப் பள்ளி பற்றிப் பேசும் அதே வேளை ஜெரூசலம் பற்றிப் பேசுகின்றன. காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் பற்றிப் பேசுகின்றன, முள்ளிவாய்க்கால் பற்றிப் பேசுகின்றன. துரத்தப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றிப் பேசுகின்றன. தேசிய அரசியல், சிறுபான்மை அரசியல் பற்றிப் பேசுகின்றன. ஹலால் பிரச்சனை பற்றியும் ஹபாயா பிரச்சனை பற்றியும் பேசுகின்றன.

77 கவிதைகளிலும் குறைந்தது 66 விடயங்கள் பற்றிப் பேசுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு செய்தி இருக்கிறது என்பதுதான் இங்கே ஈண்டு குறிப்பிடத் தக்கது. வெறும் அழகியலை வைத்துக் காலமோட்டும் கவிஞராக அல்லாமல் சமூக, தேசிய, சர்வதேசிய மனிதாபிமானப் பார்வையுடன் அவர் எழுந்து நிற்கிறார்.

அஸாத் ஹனிபாவுடன் பேசுபவர்கள், பழகுபவர்கள் அவரின் அப்பாவி முகத்தையும் குழந்தைச் சிரிப்பையும் கண்ணியமான பேச்சுப் போக்கையும் பார்த்து அவரைப் பற்றி அவர் ஒரு மென்மையான மனிதர்  என்ற ஒரு முடிவுக்கு வருவார்கள். ஆனால் அவரது கவிதைகள் அந்த முடிவுக்குரியவை அல்ல என்பதை இந்த நூலைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஏறக்குறைய சொல்வதானால் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தீக்குச்சியின் உரசல் இருப்பதை நான் உணர்கிறேன். சிறுமை கண்டு பொங்கும் கடும் கோபத்தைக் கவிதைகளினூடு அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். சிறுபான்மைகளுக்கெதிராக நடந்த கொடுமைகளை மிகத் துல்லியமாக வரலாற்றுப் பதிவாக்கி வைத்திருக்கிறார். எல்லாக் கொடுமைகளுக்கும் எதிராக கவிதை கொண்டு ஒரு கூரிய வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார். இதைவிடப் பொருத்தமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு கவிதையையும் ஒரு சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வெட்டலகாக (பிளேட்) ஆகப் பயன்படுத்துகிறார். இதனால் என்ன நடக்கிறது என்றால் அவர் கவிதைகளைச் சொல்லிச் செல்லும் அவரது மொழி மூலம் அவர் என்ன மனோ நிலையில் நின்று பேசுகிறாரோ அதே மனோ நிலைக்கு நம்மையும் ஆளாக்கி விடுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் அவர் தட்டி விடும் தீக்குச்சி நமது மனங்களுக்குள் ஒரு காட்டுத் தீயாய்ப் பரவ ஆரம்பிக்கிறது.

புன்மையை எதிர்த்து நிற்பதும் அநியாயத்துக்கும் அத்து மீறல்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புவதுதான் நேர்மையான ஒரு கவிஞனின் உன்னத பண்பு. அந்தப் பண்பை இந்நூலில் அடங்கியிருக்கும் பெரும்பாலான கவிதைகளில் நீங்கள் கண்டடைய முடியும்.

மானுட மேம்பாட்டுக்கான போராளியாக, அநீதிக்கெதிராக எழுந்து நிற்கும் உள்ளத்தவராக, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தக்காரனாகத் தனது மூன்றாவது கவிதைத் தொகுதியிலேயே பிரகாசிக்க ஆரம்பித்து விட்டார் அஸாத். இந்தக் கொடுப்பினை முப்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டாலும் சிலருக்குச் சித்திக்காமலேயே போய்விடுகிறது.

குறைந்த வார்த்தைகளில் பேசுவது கவிதை. ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் இறங்கும் போது அவனின் சிந்தையில், உணர்வில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் அவனைது ஆவியையும் உடலையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. சிறந்த கவிதையொன்றின் சில வரிகள் ஒரு நூலில் எழுதப்பட வேண்டிய அகக் காட்சியை உண்டு பண்ணி விடுகிறன. சாப்பேறுகள் என்றொரு கவிதையின் இறுதி நான்கு வரிகள் இப்படி முடிகின்றன.

'இங்கு எல்லாமே
பிழையான இடத்தில்தான் உள்ளன
மனிதர்கள் மட்டுமல்ல -
கற்சிலைகளும்தான்!'

பெரும்பான்மையின் அடாத்தான செயற்பாடுகள் குறித்துப் பேசும் இந்தக் கவிதையில் ஒரு நீண்ட காட்சிப் படிமத்தை உருவாக்கி விட்டுச் செல்கிறார். இந்தத் தொகுதிக்குள் இருக்கும் அநேகமான கவிதைகளின் சாராம்சமாகவே நான் இந்த வரிகளைப் பார்க்கிறேன்.

இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த போது பெரும்பான்மையினருக்கு பீடித்த - இன்னும் குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று இந்தத் தேசம், இந்த நிலம் முழுவதும் தங்களுக்கானதே என்று நிறுவ முயன்றது. இதற்காகவே வரலாறு புரட்டிப் புரட்டி எழுதப்பட்டு, அது பாடப் புத்தகங்கள் வரை சென்று வரலாறு என்ற பாடம் கட்டாய பாடமாக ஆக்கப்பட்டது. அது மாணாக்கருக்கு கணித, விஞ்ஞான பாடங்களை விடப் பெரும் சவாலாக மாறிற்று. ஒவ்வொரு அரசனும் பிறந்தது முதற்கொண்டு அவனது அனைத்து செயற்பாடுகளும் வருடங்கள் ரீதியாக எழுதப்பட்டன. இந்த விபரங்களை ஒவ்வொரு மாணவனும் மனனமிடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. வரலாற்றுப் பாட நூல்களை நீங்கள் கையில் எடுத்துப் பார்த்தீர்களானால் அதன் விபரீதத்தை நீங்கள் உணரலாம்.

இந்த வழிமுறையை இவர்கள் இஸ்ரேலிலிருந்து கற்றிருக்க வேண்டும். அங்குதான் அறபிகளின் நிலத்தைப் பிடித்துக் கொண்ட யூதர்கள் தமது மாணாக்கரின் பாட நூல்களில் அது தங்களது பூமி என்ற வரலாற்றை எழுத ஆரம்பித்தனர்.

இது இப்படியே போய்க் கொண்டிருக்க 2009 நடுப்பகுதியிலிருந்து வேறொரு முன்னெடுப்பு ஆரம்பித்தது. எங்கெல்லாம் இராணுவ முகாம்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஓர் அரச மரத்தை நடுவதும் அதன் அருகே கௌதமரின் சிலையொன்றை வைத்து விடுவதும். இது விரிவடைந்து பொதுப் பணி இடங்களில், அரச நிறுவனங்களில், தரிசு நிலங்களிலெல்லாம் இதே செயற்பாட்டின் நீட்சி சென்று கொண்டேயிருக்கிறது.

இது குறித்துப் பேசும் ஒரு கவிதையை இங்கு தருகிறேன். அந்தச் செயற்பாட்டுக்காக மட்டுமன்றி இக்கவிதையை அவர் சொல்லிச் செல்கின்ற அழகுக்காகவும் தெரிவு செய்திருக்கிறேன்.

கௌதம புத்தரை முதன்முதலில்
பாடப் புத்தகத்தில் நான் பார்த்தேன்
மிகவும் சாந்தமாக இருந்தார்
எந்த சந்தேகமும் அவரில் இருக்கவில்லை

அவரின் சீடர்களோ
புத்தகத்தை மட்டுமல்ல -
வரலாற்றையும் கிழித்துக் கிழித்து
மீள எழுதிக் கொண்டிருக்கிறார்கள்

புத்த பெருமான்
வீதியின் இருமருங்கிலும்
புழுதிபடியும் சிலையாகவும்
முச்சக்கர வண்டிகளின்
தரிப்பிடச் சந்திகளில்
காட்சிப் பொருளாகவும் இருந்தார்

அவருக்காக
எமது பூர்வீக நிலமெங்கும்
படைமுகாம்களை அமைத்தனர்
பின்னர் அவற்றை
விகாரைகளாக மாற்றிக் கொண்டனர்

இராணுவச் சிப்பாய்கள்
அன்று காவல்நின்ற
அரச அலுவலகங்களில்
இன்று பாதுகாப்புக்காக
சிலைகள்தாம் உள்ளன

வைப்பதற்கும் இருப்பதற்கும் இடமின்றி
இறுதியில் அவரை
வைத்தியசாலையில் அனுமதித்தனர்

ஒவ்வொரு விடுதிகளுக்குள்ளும்
வெளியிலும்
புத்தர் பகவான்
நோயாளிகளுக்காக
இரவு பகலாகத் தியானத்தில் உள்ளார்

பிரசவ கட்டிலிலிருந்து
பிரேத அறைவரை
அவர்தான் மருத்துவம் செய்கிறார்.

இந்தக் கவிதையை எழுந்தமானமாகப் பார்த்து விட்டு கௌதம சித்தார்த்தரை கவிஞர் அவமதிக்கிறார் என்று கருதினால் அது முழு முட்டாள்தனம். கௌதமர் அவமானப்படுத்தப்படுவதற்கு எதிரான குரல்தான் இந்தக் கவிதை. புத்தரை முன்னிறுத்தி அவர் அவர்கள் ஏதோ நமக்குச் சொல்ல வருகின்றனர். அதைத்தான் அஸாத்தும் சொல்ல வருகிறார்.

இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள் அநேகமானவும் 95 வீதமான கவிதைகளும் எதிர்க் குரலாகவே ஒலிக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

இதே விதமாக முஸ்லிம்கள் தமது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்து நடக்கின்ற, அல்லது பேச்சில் மார்க்கத்தை சரியாகப் பேசிக் கொண்டு 'தொழுவது அல்லாஹ்வுக்காக.. வைக்கோல் திருடுவது மாட்டுக்காக' என்ற பாணியில் நடந்து கொள்வது பற்றி உள்ளார்ந்த கிண்டலும் கோபமுமாய் இந்தத் தொகுதிக்குள் சில கவிதைகள் இருக்கின்றன.

இந்த வகையில் ஏமாளி இந்த நோன்பாளி என்ற தலைப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று இருக்கிறது. ஒருவரைப் பற்றிப் புறம் பேசுவது இறந்த மனிதனின் தசையைப் புசிப்பதற்கு ஒப்பானது என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள். இங்கு இக்கவிதையில் அதைச் சொல்லும் விதத்தைப் பாருங்கள்..

கண்ணியமிக்க புனித நாட்களில்
நானும் பகலில் உண்ணவில்லை
இறந்து போன இனிய நண்பனின்
மாமிசத்தைத் தவிர
சத்தியமாய் எதையுமே புசிக்கவில்லை

எச்சில் துளியுமின்றி
தாகத்தைத் தாங்கிக் கொண்டேன்
பச்சைப் பள்ளிக்குள்
பிறர் நடத்தைகளைக் கழுவி
அதை மட்டுமே
ஐவேளை பருகிக் கொண்டேன் இவ்வாறு தொடரும் இந்தக் கவிதை சப்பென முகத்தில் அறைந்து விட்டுப் போகிறது.

மார்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் மூடத்தனங்களில் மூழ்கிக் கிடப்போரின் நடவடிக்கைகளையும் ஆஸாத் தொட்டுக் காட்டுகிறார். அசேதன மார்க்கம் என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார்...

பிரசவத்துக்கு மருத்துவ மனை
இனித் தேவையில்லையாம்
முதலிரவுக் கட்டிலில்
வீட்டில் பிரசவம் பார்ப்பது
பிழையா என்கிறாள்
உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி..

உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி என்ற வார்த்தையில் ஒலிக்கும் குசும்பு அவதானிக்கத் தக்கது. கவிதையின் சாரம் அதற்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்தான் கவிதையின் குரலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் நஞ்சுக் கொடி என்ற கவிதை. அந்தக் கவிதையில் காட்சிச் சித்தரிப்பு மூலம் முஸ்லிம் சமூகத்தின் மூடத்தனத்தைச் சொல்லிச் செல்லும் அழகு பிரமாதமானது. கவிதை நூலின் 49ம் பக்கத்தில் உள்ள அந்தக் கவிதையை நீங்கள் கட்டாயம் படித்து விட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்து ரசித்த, என்னை ஆவேசத்துக்குள்ளாக்கிய ஒரு கவிதைத் தொகுதி இது. ஏறக்குறைய எனது சிந்தனைப் போக்கையொத்த சிந்தனைப் போக்கு டாக்டர் அஸாத்திடம் இருப்பது அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசமாக நான் உணர்வது என்னவெனில் எனது எழுத்துக்களில் அதிகம் கிண்டலைப் பயன்படுத்துகிறேன். அஸாத் அதை வேறொரு விதத்தில் கையாள்கிறார். அநேகமாகவும் நோகாமலே ஊசி போட்டு விடுகிறார். போட்ட பிறகுதான் வலிக்க ஆரம்பிக்கிறது.

இலக்கியத்தில் வைத்தியத் துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காப்பியக்கோ ஜின்னாஹ், தி. ஞானசேகரன், எம்.கே. முருகானந்தன், தாஸிம் அகமது, ச.முருகானந்தன் என்று நீளும் பட்டியலில் அஸாத் எம். ஹனிபாவும் இணைந்து கொள்கிறார். வைத்தியர்களின் இலக்கியப் பங்களிப்புக் குறித்து ஒரு தனி நூல் எழுதப்படலாம். இன்னும் புதுமைப்பித்தன் கதைகளில் சமூகப் பார்வை என்று தலைப்புக் கொடுத்துக் கொண்டிராமல் இப்படியொரு தலைப்பில் பல்கலைக்கழக மாணாக்கருக்கு ஓர் ஆய்வைச் செய்வதற்கும் பேராசிரியர்கள் வழிகாட்டலாம் - சாத்தியமும் மனமும் இருந்தால்!

அஸாத் ஹனிபாவின் கவிதைகளில் குறைகளே இல்லையா என்று ஒரு கேள்வி வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் கவிதை வெளிப்பாட்டுக்கென்று ஒரு மொழி உண்டு. கருத்தும் இல்லாமல், நோக்கமும் இல்லாமல், மொழியழகும் இல்லாமல், சொல்லிச் செல்லும் வழியும் அறியாமல் அஸாத் ஹனிபாவின் கவிதைகள் சிக்கல்படவில்லை. ஆனால் ஒரு சில கவிதைகளில் மேலதிகச் சொற்களும் வாக்கியங்களும் இருக்கவே செய்கின்றன. கவிதை குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவு அவரிடம் உண்டு. எதிர்காலப் படைப்புகளில் அவற்றை அவராகவே தவிர்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

அசேதன மார்க்கம் என்ற தலைப்பிலான ஒரு சில முஸ்லிம்களின் மூடத்தனத்தைப் பேசும் கவிதையை அவர் இப்படி முடித்திருப்பார். 'என்னையும் அவர்கள் - உற்றுப் பார்க்கிறார்கள் - அவர்களின் தீர்ப்பை நானறிவேன்.' மூட நம்பிக்கை அல்லது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விடயங்கள் குறித்து எதிர்க் கருத்து இருந்தால் உடனே 'மார்க்கத்துக்கு முரணானவன்' என்ற தீர்ப்பை எழுதுவார்கள் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.

அது உண்மைதான். கவிதைகளைப் படிப்பார்கள். அப்புறம் கவிதை நூலின் தலைப்பைப் பார்ப்பார்கள். ;தம்பியார்' என்றிருக்கும் தலைப்பு அவர்களுக்கு 'நம்பியார்' என்று தெரியும்!

(18.11.2018 அன்று கொழும்பு - தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட நயவுரை)




Wednesday, May 2, 2018

ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'


ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து படிப்பதற்கு ஷாமிலாவின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' என்னைத் தூண்டியிருக்கிறது.


ஷாமிலாவின் முதலாவது கவிதைத் தொகுதியான 'நிலவின் கீறல்க'ளுக்கும் இன்று அறிமுகப்படுத்தப்படும் மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'க்குமிடையில் ஷாமிலாவின் கவிதைப் பரப்பின் எல்லை விசாலித்திருப்பதை உணர்கிறேன். இந்த நூலில் உள்ள கவிதைகள் ஷாமிலாவிடம் பெற்றுக் கொண்டு வெளிவந்திருக்கும் வார்த்தைகள் மிகத் தெளிவானவை. ஷாமிலாவின் கல்வியியல், சமூகவியல், குடும்பவியல் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றுக் கொண்டு வந்திருப்பதைப் போலவே அவரது கவிதை வெளியும் விசாலித்துச் செழித்து வளர்ந்திருக்கிறது.

கவிதைகளை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு போகும் போது 28ம் பக்கத்தில் நான் தரிக்க நேர்ந்தது. 'என் இலக்கிய நிலம்' என்ற கவிதையின் முதற் பந்தி என்னைத் தரிக்க வைத்தது. அந்தக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.

எழுத்தில் உடல் விதைத்து
அதைக் கொண்டாடியபடி
கவிதை அறுவடை நடக்கிறதெனில்
என்னுடைய இலக்கிய நிலம்
தரிசாய்க் கிடக்கட்டும்

இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு பாரிய எல்லை கொண்ட ஒரு சிந்தனை வெளி உருக்கொள்கிறது. உடலுக்குள்; இருக்கும் மனமும் அதன் எண்ணங்களும் அது தூண்டும் செயற்பாடுகளும் எழுதித் தீர்க்க முடியாத நிலையில் ஒரு பேரழியாய் பெருஞ் சமுத்திரமாகக் கிடக்கையில் எங்கோ ஓர் இடத்தில் ஆற்றின் நடுவே, அல்லது கடலின் நீர் குறைந்த நீர்ப்பரப்பின் மத்தியில் இருக்கும் ஒரு தீவு பற்றிப் பேசுவதே உடல் விதைக்கும் எழுத்து.

உடல் விதைக்கும் எழுத்து தப்பா என்றால் இல்லை. எப்போது இல்லை என்றால் சகதிக்கு அருகே சகதி படாமல் நடக்கும்போது அது தப்பாக இருக்காது.

இது அவசர உலகம். எல்லாமே அவசமாக நடக்க வேண்டும், எதுவுமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என்று தூண்டல் கொண்ட இடத்துக்கு வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டிருக்கிறது நவீன உலகம். உடனடியாகவே கவிதை எழுதி, உடனடியாகவே கட்டுரை எழுதி, உடனடியாகவே சிறுகதை எழுதி உடனடியாகவே உலகப் புகழ் பெறவேண்டுமானால் அதற்கு மிகவும் பொருத்தமானது உடல் விதைக்கும் எழுத்து.

இந்த எழுத்து ஒன்றும் புதியதல்ல. இப்போதும் உடல் விதைக்கும் எழுத்தை படைப்பாளிகள் 'சரோஜா தேவி' எழுத்து என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர் இத்தகைய எழுத்துக்கள் அடங்கிய பிரசுரங்கள் பெட்டிக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விடப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இவற்றை எழுதுவதற்கென ஒரு எழுத்தாளர் குழு இருந்தது. அச்சிடவும் வெளியிடவும் ஒரு பட்டாளமே இயங்கியது.

அன்று அந்த எழுத்து பணத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்று நவீன இலக்கியம் என்ற பெயரால் உடனடிக் கவனம் பெறவும் உடனடிப் புகழ் பெறவும் இந்த எழுத்துப் பயன்படுத்தப்படுகிறது. நோக்கம் பன்முகமானது இல்லை என்பதாலும் எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாலும் இந்த எழுத்து ஒரு சிறிய சுழல் காற்றுக்கு மேலெழும் சருகுபோல் எழுந்து சட்டெனக் கீழே வந்து விடுகிறது.

அதைத்தான் அதே கவிதையில் இப்படிச் சொல்கிறார்:-

எனது நிலம் ஒரு போதும் துண்டாடப்பட முடியாதது
பருவம் கடந்தாலும் பயிர் விளையும்
பக்குவத்தைக் கொண்டுள்ளது.

ஒரு சிறு காற்றில் விதை பரவி
செழித்து எழுந்து வீச்சு மிக்கதாய்
என் நிலம் வளங்கொழிக்கும்.

எழுத்து வல்லமையும் மொழி வாலாயமும் இருக்கும் எவரும் அவசரப் புகழுக்கு ஆசைப் பட்டு அசூசை கொண்ட இலக்கியம் படைக்கத் தேவையில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்நூலின் 35ம் பக்கத்தில் இதை இன்னும் உறுதியாகவும் தெளிவாகவும் பேசுகிறது மற்றொரு கவிதை. 'கவிதை எழுத்து' என்ற அந்தக் கவிதை.

மௌனத்தைக் கலைத்து
விரதத்தை உடைத்து
சமயத்தை அடகு வைத்து
சாக்கடைகளை
எழுத்தில் கொண்டுவரவேண்டிய தேவையை
ஒருக்காலும் உணரப் போவதில்லை
ஒழுக்கமற்ற எழுத்துக்களை
யார்தான் விரும்பப் போகின்றனர்
விரும்புவோர் குறித்தும் கவலையில்லை
மருந்து குடித்தால் குணமாகிவிடும்
வருத்தமல்லவே எழுத்து

நானும் மீன்காரனும் என்றொரு கவிதை நூலின் 63ம் பக்கத்தில் உள்ளது. ஷாமிலாவுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எனக்கும் 25 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. தன்னிடம் கற்ற மாணவன் கற்றலை விட்டதற்காக அவனிடம் கவலைப்பட்ட போது உங்களது மாதச் சம்பளத்தை நான் நான்கு நாளில் உழைக்கிறேன் என்கிறான். நான் கற்பித்த காலத்தில் துடுக்குத் தனம் மிகுந்த ஒரு மாணவனால் நான் பட்ட அவஸ்தை சொல்லுந்தரமன்று. எனது பாடசாலைக் கற்பித்தல் நேரத்தில் பாதி நேரம் அவன் சம்பந்தப்பட்;ட பஞ்சாயத்திலேயே கழிந்திருக்கிறது. பாடசாலையை விட்டு விலகிய அவன் மூன்று வருடங்களுக்குப் பிறகு பாடசாலை விளையாட்டுப் போட்டியைக் கேள்விப்பட்டு என்னை வந்து சந்தித்தான். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். விளையாட்டு விழா பற்றிய அழைப்பு அடங்கிய நிகழ்ச்சி நிரலை அச்சிட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டேன். எவ்வளவு வரும் என்று கேட்டான். 600 ருபாயளவில் வரும் என்றேன். பணப்பையைத் திறந்து ஆயிரம் ருபாய்த் தாளை உருவி என் முன் மேசையில் வைத்து விட்டுப் போனான். அப்போது எனக்கு மாதச் சம்பளமே 600 தான்.

ஷாமிலாவின் கவிதை பேசுவது கல்வியை விட அவசரமாகப் பணம் உழைப்பதற்கு ஆர்வப்படும் நிலைதான் பெரும்பாலும் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது என்ற கவலையை. இன்றைய அவசர பண உழைப்பு எப்போதும் நிலையாக இருக்காது. ஆனால் கற்றுத் தேர்ந்து ஒரு நிலைக்கானபின் அதன் மூலம் கிடைக்கும் ஒரு தொழில் போனால் மற்றொரு தொழிலை அக்கல்வி பெற்றுத் தரும் என்ற அறிவு அல்லது தெளிவு இன்றைய இளைஞர் தலைமுறையினரிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதைத்தான் ஷாமிலாவின் நானும் மீன்காரனும் கவிதை சொல்லுகிறது.

இந்த நூலில் அரசியல் என்று ஒரு சிறிய கவிதை உண்டு. இதைப் படித்ததும் மருதமுனை ஹரீஸாவின் பெண் பூச்சி என்ற கவிதை ஞாபகம் வந்தது. இரண்டு கவிதைகளும் பூச்சியைக் குறியீடாகக் கொண்டு பேசுகின்றன. இரண்டு கவிதைகளினதும் இறுதி வரிகள் ஒரு கஸல் கவிதையைன் ஈற்றடியை ஒத்தனவாக அமைந்திருக்கின்றன. ஹரீஸாவின் கவிதை இப்படிப் பேசுகிறது..

விறகுக் கட்டுகளிலும்
ஒத்தாப்புத் திண்ணையிலுமாய்
அடிபட்டு அடிபட்டு
தன் தலையை முட்டி மோதி
ராவெல்லாம் ஓங்கியடித்தது கதவை

ராவு ஒழிந்தபின்
தகட்டுக் கதவைத் திறந்து பார்த்தேன்
முதுகைத் தேய்த்தபடி
மல்லாக்கக் கிடந்தது பூச்சியொன்று

சிறகுண்டு
எட்டுக் கால்களுண்டு
ராவுண்டு பகலுண்டு
வானமுண்டு எல்லையில்லை
பின்
உனக்கென்ன பூச்சி?

பூச்சி சொன்னது
நான் பெண் பூச்சி என்று!

ஆனால் ஷாமிலாவின் பூச்சி அரசியலைக் குறியீடாகக் கொண்டது.

காற்றுவரத் திறந்துவைத்த கதவிடுக்கால்
கரப்பான் பூச்சி
பாதணி கொண்டும்
தும்புத்தடி கொண்டும் அடிக்க முயற்சித்து
புரட்டி விட்டேன்
ஓட முடியவில்லை மல்லாந்து கிடக்கிறது
நிமிர்ந்து விடத் துடிக்கிறது
தானாகப் புரண்டு கொள்ளவியலாது
வட்டமிட்டு நேரத்தைக் கடத்துகிறது
காலால் மிதித்துவிட
அருவருப்பால்
வெளியே எத்தி விடுகிறேன்
காகம் கொத்திச் செல்கிறது.

ஹரீஸாவின் கவிதை படித்தவுடன் புரிந்து கொள்ளக் கூடியதான இருக்கிறது. ஷாமிலாவின் கவிதை என்னை நிறையச் சிந்திக்க வைத்தது. அரசியல்வாதியைப் பேசுகிறதா, அரசியலில் புகுந்து கொள்ள இடுக்குகளுக்குள்ளால் நுழைந்து கொள்ள முனைவோரைப் பேசுகிறதா என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் வெளியே போட்டால் காகத்தால் கொத்திச் செல்லத் தக்கதான ஒருவரையோ பலரையோ இது குறிப்பதாகத்தான் நினைக்க முடிகிறது.

மறைக்கப்பட்ட சொற்களின் அழகு கவிதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாக அமைந்திருப்பது 'என்னாடை' என்ற கவிதை. அதில் பெரிதாகக் கவித்துவம் வழிந்தோடவில்லை. ஆனால் அக்கவிதை பேசுகின்ற விடயமும் பேசுகின்ற முறையும் உண்மையில் நயக்கத் தக்கதாகத்தான் இருக்கிறது. நயக்கத்தக்கதாக அமைந்து விட்டால் அது ஒரு நல்ல கவிதைதான்.

இக்காலத்தில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றி அந்தக் கவிதை பேசுகிறது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தில் இந்த ஆடையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்காக இன்னொருவரின் சுதந்திரத்தில் தலையிட்டு அதை நிராகரிக்கச் சொல்லும் உரிமையும் எனக்குக் கிடையாது.
பாதி மார்பகங்களும் அரைவாசி அடித்தொடைகளும் தெரிய அணிந்து செல்லும் ஆடைகள் பற்றி யாருக்கும் எந்த உறுத்தல்களும் இல்லை. முஸ்லிம் பெண்களை நோக்கி இலங்கையருக்குரிய ஆடைகளை அணியுங்கள் என்று சொல்லும் யாருக்கும் அரை குறை ஆடையணிவோரைப் பார்த்து அப்படிச் சொல்லத் துணிவு வருவதில்லை. இந்த விடயத்தைத்தான் ஷாமிலா மிக வினயத்துடன் மனிதனுக்குரியஆடைத் தெரிவுச் சுதந்திரத்துக்கான நியாயத்தை முன் வைத்துக் கேள்விகளாக எழுப்புகிறார். அந்தக் கேள்விகளுக்கூடே முஸ்லிம் பெண்களுக்குரிய ஆடையை விமர்சிப்பதானது குறிப்பாக முஸ்லிம் பெண்களது சுதந்திரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார்.

அந்தக் கவிதையில் இப்படி வருகிறது:-

என் சுதந்திரத்தில்
என் விருப்பத்தேர்வில்
எனக்குப் பிடித்தமானதில்
மற்றவர் விருப்பு வெறுப்புக்களை
ஏன் திணித்துவிட முயல்கின்றார்கள்

உங்கள் பிரச்சனைதான் என்ன
நானா
நான் அணிகின்ற ஆடையா
அல்லது பின்பற்றும் மதமா?

உங்கள் சுதந்திரத்தில்
நான் தலையிடாமல் இருப்பது போல்
என் சுதந்திரத்திலும் நீங்கள்
தலையிடாதிருங்கள்

இது என் வாழ்க்கை
எனக்குப் பிடித்தமான மாதிரித்தான்
வாழ முடியும்

என் ரசனைக்கேற்பவே நான்
ஆடையணிகிறேன்
உங்கள் ரசனைக்கேற்ப
நீங்கள் அணிந்து கொள்ளுங்கள்!

இந்தத் தொகுதியிலிருந்து பதச்சோறாகச் சில கவிதைகளை முன் வைத்துப் பேசியிருக்கிறேன். எல்லாக் கவிதைகளையும் ஒரே உரையில் கொண்டுவருவதும் சாத்தியம் அல்ல.

கவிதை என்பது மிகச் சுருக்க மொழியாலானது. சொல்ல வந்த விடயத்தைச் சொல்வதற்குத் தேவையான சொற்களை மாத்திரம் பயன்படுத்தும் போது அது அழகுபெறும். ஷாமிலாவின்  கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சொற்கள் இல்லை என்ற போதும் ஒரு சில கவிதைகளில் தவிர்த்திருக்க வேண்டிய சொற்;கள் இருக்கின்றன என்று காண்கிறேன். இன்னொருமுறை இக்கவிதைகளை ஷாமிலா வாசிக்கும் போது அவற்றை அடையாளம் காண முடியும்.

பொதுவாக ஷாமிலாவின் கவிதைகளின் அடிநாதமாக அறச்சீற்றத்தை நான் உணர்கிறேன். இது முழு மனித சமூகத்தையோ அல்லது தனது சமூகத்தையோ நோக்கிய அறச்சீற்றமாக அல்லாமல் ஒரு சில தனி நபர்கள், ஒரு சில குழுமங்களை நோக்கியதாகவே இருக்கக் காண்கிறேன். இது வழமையாக கவிதைத் தொகுதிகளில் காணக் கிடையாக்கத ஒரு பண்பு.

அறச்சீற்றமானது பொதுவாகப் படைப்பாளிகளுக்குள்ள ஒரு பொதுப் பண்பாயிருப்பினும் எல்லோரும் அதை வெளிக்காட்டுவதில்லை. தன் பெயர் கெட்டுவிடும், தனது பொன்னாடை தவிர்க்கப்பட்டுவிடும், எனது இடம் கீழே சென்று விடும், எனக்குக் கிடைக்கவிருக்கின்ற பட்டம் தவறிவிடும் அவர் என்ன நினைப்பார், இவர்கள் என்ன நினைப்பார்கள், என்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பன போன்ற அற்பத் தனங்களை மனதில் கொண்டோர் எந்த விதமான ஒரு குற்றத்தையும் பாவத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். இது அந்தப் பாவத்துக்குக் குற்றத்துக்கு இணையான ஒரு செயலாகும்.

எதுவும் ஆகிறதோ இல்லையோ நூறு எதிர்க்குரல்களில் என்னுடைய குரலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக இயங்குவதுமே உன்னதமான இலக்கியத்தின் அச்சாகவும் அசைவாகவும் இருக்கும். மனித குலத்துக்காகக் குரல் தரும் அதிசிறந்த மனத்தின் செயற்பாடாக இருக்கும். அந்த மனம் ஷாமிலாவிடம் இருக்கிறது என்பதை இந்தத் தொகுதியின் கவிதைகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

29.04.2018

Wednesday, September 27, 2017

யாரும் மற்றொருவர்போல் இல்லை!


எப். எச். ஏ. ஷிப்லி (கவிஞர் நிந்தவூர் ஷிப்லி)
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகம் 

பன்முக இலக்கியவாதி, சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் என பல்துறை ஆளுமை கொண்ட  அஷ்ரப் சிஹாப்தீன் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இளமை நதி. வற்றாத அறிவியல் ஊற்று.பல்துறைகளிலும் ஆழமாக் காலூன்றி, வேரூன்றிய கலை ஜாம்பவான்..

அவரதுபத்தாவது நூலாகவும்,மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலாகவும் அண்மையில் வெளியாகியது“யாரும் மற்றொருவர்போல் இல்லை”எனும்மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி.யாத்ரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டஇந்த நூலில் முப்பது நாடுகளைச் சேர்ந்த 49 கவிஞர்களின் ஐம்பது கவிதைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. நூலினைநூலாசிரியர் அவரது தாய்வழிப் பாட்டனார் புலவர் மஹ்மூது அப்துஸ்ஸமது ஆலிம் அவர்கட்கு சமர்ப்பித்துள்ளார்.

இளைய இலக்கியவாதிகளை மனமாரப்பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் மூத்த இலக்கியவாதிகளில் அஷ்ரப் சிஹாப்தீன் முக்கியமானவர். அதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நூற்றுக்கணக்கான இளைய எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை ஊக்கப்படுத்தியமைமுக்கிய சான்று.

இந்த நூலில் இடம்பெற்றுள்ளமொழிபெயர்ப்புக் கவிதைகளின் கவிதைத்தேர்வுகளை வாசிக்கின்றபோது தனிமனித உணர்வு சார் கவிதைகள், காதல் கவிதைகள், யுத்தமும், அதன் கோர நகங்கள் பதித்த வலிமிகுந்த கீறல்கள் தொடர்பான கவிதைகள், அரசியல் சார் கவிதைகள், வாழ்வியலையும், அழகியலையும் பேசக்கூடிய கவிதைகள், மனிதாபிமானம் தொடர்பான கவிதைகள், புரட்சி விதைகளை விதைக்கின்ற கவிதைகள் என்று பல கோணங்களிலும் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றதை அவதானிக்கலாம். அதேபோலகானா, பங்களாதேஷ், பாரசீகம், நமீபியா, போஸ்னியா, பாலஸ்தீன், நேபாளம், பாகிஸ்தான், சிரியா, ஆப்கானிஸ்தான், குர்திஷ், அமெரிக்க, கென்யா, நைஜீரியா, தன்ஜானியா, அல்பேனியா, எகிப்து, கியுபா உள்ளடங்கலாகநாம் இதுவரை வாசிக்காத, நமது தமிழ் வாசிப்புச் சூழலுக்கு அதிகம் பரிச்சயமில்லாத பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்படுள்ளன.

Translation என்ற வார்த்தை "translatio" என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது.

இந்த நூலில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பு உத்தியைப் பார்க்கின்ற போது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான பண்பு “எளிமை” அதாவது எளிய சொற்கள். நோபல் பரிசு பெற்ற காப்ரியல் கார்சியோ மார்க்கேஸ் என்ற ஸ்பானிஷ் எழுத்தாளரை ஆங்கில மொழிபெயர்ப்பில் இலகுவாகப் படித்துப் புரிந்து கொள்ளமுடிகிறது. அனால், அதே எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு வாக்கியத்தைக் கூட புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் ஒருவிதமான சிக்கலான மொழியில் எழுதினால்தான் இலக்கியம் என்ற கருத்து இங்கே நிலவுவது சற்று துரதிஸ்டவசமானது.

அப்படி அல்லாமல் மிக எளிமையான சொற்களின் மூலம், கவிதைகளின் மூலம் கெடாமல் தமிழுக்கு அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் அஷ்ரப் சிஹாப்தீன். மொழிபெயர்ப்பு என்பது இலகுவான இலக்கிய வடிவம் அல்ல. மொழிபெயர்க்கின்ற நபருக்கு மொழியறிவும், கலையுணர்வும், கவிதைகள் தொடர்பான ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவசியம். மிகப்பெரிய இலக்கிய மேதைகள் கூட தடுக்கி விழுகிற இடமே இந்த மொழிபெயர்ப்பு என்றுகூடச் சொல்லலாம்.

இன்றைய திகதியிலுள்ள வாசகர்களுக்கு எளிமையான இலக்கியங்களே அதிகம் புரிகிறது.அதிகம் பிடிக்கிறது.பின்நவீனம், அதிபின்நவீனம் என்று வலுக்கட்டாயமாகப் படைக்கப்படுகிற  இலக்கியங்கள் எடுபடாமல் போவதற்கு இதுவே காரணம்.

கவியரசர் கண்ணதாசனின் வெற்றிக்கு “எளிய” என்கிற உத்தியே மூலகாரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று கண்ணதாசன் எழுதுகிறபோது அது எல்லோரது இதயங்களை இலகுவாக சென்றடைகிறது.

இத்தகைய எளிய என்கிற உத்தி அஷ்ரப் சிஹாப்டீனுக்கும் கைவந்த கலையாகிப்போயிருக்கிறது. “பயமாயிருக்கிறது ஏனெனில்” என்கிற கானா நாட்டுக்கவிஞ்சரின் கவிதையை இப்படி மொழிபெயர்க்கிறார்..
உன்னை முதன்முதலாகப் பார்த்தபோது
உனது பெயரைக்கேட்கப் பயமாயிருந்தது
மனதைக்கவரும் பெண்களைக் காண்கிறபோது எல்லோருக்கும் இயல்பாகவே எழக்கூடிய உணர்வினை உயிருக்கு நெருக்கமான சொற்களால் உரசிச்செல்கிறார்.

அதுபோலவே லஜ்வா கோலூவி என்கிற நமீபிய நாட்டுக் கவிஞரின் அழுகுரல் என்கிற கவிதையில்..
அது ஓர் அழுகுரல்..
ஆம் அழுகுரல்
தெருவில் நிற்கும் பெண்ணின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுப்பார்களா?
யாராவது சென்று பார்ப்பார்களா??
என்று தொடங்கி
எனக்கருகே நிற்கும் பெண்ணின் அழுகுரல்
எனது நெருங்கிய நண்பியின் அழுகுரல்
எனது பெண் குழந்தையின் அழுகுரல்
எனது சொந்த அழுகுரல்
என்று கவிதை விரவி முடிகிறபோது நம் செவிட்டில் யாரோ அறையும் உணர்வு இயல்பாகவே நமக்குள் எழுகிறது.இதுமொழிபெயர்ப்பாளரின் வெற்றி.அவரது மொழிபெயர்ப்பு நுட்பத்தின் வெற்றியேயன்றிவேறில்லை.

இந்த நூலின் கவிதைத்தேர்வின்வகைகளாக நான் ஏலவே குறிப்பிட்ட பல பிரிவுகளில் தனி மனித உணர்வுகள், காதல், யுத்தம் குறித்த கவிதைகள் ஆகிய மூன்று பெரும்பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வதாகவே எனது விமர்சனம் அமைகிறது.நீங்கள் இந்த நூலை வாசிக்கிறபோதுஇதன் மற்றைய பரிமாணங்களை மிக இலகுவாக உங்களால் கண்டடைய முடியும்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் காணக்கூடிய மிகப்பெரிய அபாயம் மூலக்கவிதைகளின் உணர்வுகளை அவர்களது கலை, கலாசார வடிவங்கள் தாண்டி தமிழ் மொழிக்கு ஊடுகடத்துவது. மூலக்கவிதையின் உள்ளுணர்வை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்ப்பது சுலபமான விடயம் என்று யாரேனும் நினைத்தால் அவர்களது இலக்கிய அறிவுக்கு எனது இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூலில் வெவ்வேறு நாடுகளின், வெவ்வேறு கவிஞர்களின், வெவ்வேறு பிரச்சினைகளை, வெவ்வேறு நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒளிந்திருக்கும் எனது உணர்வுகள் என்கிற நபீமிய நாட்டுக் கவிஞர்  எவலைன் ஹைஹம்போ வின் கவிதையின் சில வரிகள் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதைப்பாருங்கள்.
உண்மையாக நான் யார் என்று பாருங்கள்..
எனது வாயால் சொற்களை வெளிப்படுத்த முடியவில்லை
உண்மையை என் இதயம் அறியும்
ஆனால்,
என்னிடமிருந்து அதை வெளியே கொண்டு செல்வது
எப்படியென்று அதற்குத் தெரியாது
என்று விரியும் கவிதை
எனது காதுகளால் கேட்கமுடியவில்லை
எனக்காகக் கேளுங்கள்’
எனது தோலினால் உணர முடியவில்லை
எனக்காக உணருங்கள்
எனது கண்களால் பார்க்கமுடியவில்லை
எனக்காகப் பாருங்கள்
எனது வாயினால் பேச முடியவில்லை
எனக்காகச் சொற்களைப் பேசுங்கள்
எனது ஆத்மாவினால் அறியமுடியவில்லை
நான் அறியத் தவறிய உலகத்தை
நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
அல்லது நான் மறைந்து விடுவேன்..!!

அதேபோலமனிதர்களின்உள்ளுணர்வுகளைப்பேசும் இன்னொரு கவிதை“எனது தாயார் மரணித்த போது” என்கிற நைஜீரிய நாட்டுக் கவிஞர் லேம்பொன் சலிபு முகம்மத்எழுதியகவிதையின் மொழிபெயர்ப்பு. இந்தக்கவிதை கிட்டத்தட்ட எனது நிலையினைப்பேசும் ஒரு கவிதையாக என் உயிருக்குள் ஒட்டிக்கொண்டுவிட்டது.சில ஆண்டுகளுக்குமுதல் விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் எனது தகப்பன் எனக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து “உம்மா மௌத்து” என்று சடுதியாக் கூறியபோது எனக்குள்என்னவெல்லாம் ஊசலாடித்திரிந்தனவோ அதே உணர்வுகளை இக்கவிதையில் உணர்கிறேன்.

அதேபோல“முஹம்மத் றஊப் பஷீர்” எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய“நானும் ஓர் அகதி” என்கிற கவிதை ஒரு அகதியின் உள்ளுணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.
ஓர் அகதியாக உங்களிடம்
உங்களிடம்வந்தமைக்காக
நீங்கள்என்னை மன்னிக்க வேண்டும் அய்யா..
ஓர் அடிமையாக அல்லாமல்
என்னை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
என்று உயிரைப்பிழிந்து நம்மை உலுக்கி எடுக்கும் கவிதை இப்படித் தொடர்கிறது
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?
நான் யார்? நான் என்ன>
என்று நீங்கள் கேட்கிறீர்கள்
நான் கடந்த காலமற்றவன்
நிகழ்காலமுமற்றவன்
முகமுமற்றவன்
நான் ஒரு மனிதனின் எச்சம்
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?

இந்தக்கவிதைஎப்படி அழகாக மொழிபெயர்க்கப்பட்டு, ஒரு அகதியின் வாழ்க்கை வலிகளைஒரு ஊசிமுனை வழியாக நமக்குள் அஷ்ரப் சிஹாப்தீன் ஊடுகடத்துகிறார் என்று பாருங்கள்.
அதேபோல இந்த நூலில் காதல் கவிதைகள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்” என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகள் சொல்வது போல அந்தந்த நாடுகளின் காதல் பற்றிய பார்வையும் இந்தக்கவிதைகள் மூலம் நம்மால் உணரமுடிகிறது.
பயமாயிருக்கிறது ஏனெனில்என்கிற கானா நாட்டுக் காதல் கவிதை “காதலியை இழந்துவிடுவேனோ என்கிற” அச்சதைப்பேசுகிறது
அதேபோல அழகு என்கிற ஆப்கானிஸ்தான் நாட்டுக்காதல்
அவள் மலைகளில் உள்ள
பைன் மரங்களும், அறிந்த உயரமும்,
உடல்நேர்த்தியும் கொண்டவள்
அந்திக்கருக்கலில்நிலவின்
சிறு குடையின் கீழ் சுவர்க்கத்தில் குளித்த
பெண்ணைப் போன்றது உனது குரல்
அவள் அதிகாலையில்
வீட்டின் சுத்தமான
ஓர் ஒலிக்குடுவையை ஒத்தவள்
அவள் மழையின் கிசிகிசுப்பைக் கொண்டு
உருவாக்கப்பட்ட காதணி அணிந்தவள்
அதேபோல அமெரிக்க கவிஞர் சாம் ஹமூத் எழுதிய கவிதை “அவளும் அவனும்” என்கிற தலைப்பில் காதல் உணர்வுகளை மிக இயல்பாக பேசிச்செல்கிறது..

இந்த நூலின் முக்கிய கவிதைகள் என்று பார்க்கிறபோது  “யுத்தம், அதுபரிசளித்தவாழ்வியல் போராட்டங்கள், அரசியல், புரட்சி” என்பனசார்ந்தகவிதைகளுக்கே நூலாசிரியர் முக்கியத்துவம் அளித்துள்ளார்.ஒவ்வொரு கவிதையும்இதயத்தை கீறிக்கிழித்து நம்மை கண்ணீர் மழையில் நனைய வைக்கின்றன.இலங்கை கூட இத்தகைய யுத்த வடுக்களைச் சுமந்திருக்கும் பூமிதான். அதனால்தானோ என்னவோ இந்தக் கவிதைகள் பேசும் போர் குறித்த ரணங்கள் நம்மை மிகக்கடுமையாகப் பாதிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் பிறகு என்கிற பொஸ்னிய நாட்டுக்கவிஞர் கோரன் சிமிக் கின் கவிதை யுத்தம் முடிந்தபின்னரான வாழ்க்கை முறையை சாடிச்செல்கிறது..
அவ்வாறே நிசார்கப்பாணி எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய ஜெருசலமே என்கிற கவிதை ஜெருசலம் மண்ணின் வலிகளைப்பேசிவிட்டு..
நாளை
நமது எலுமிச்சைகள் பூக்கும்
நமது எல்லா ஒலிவ் செடிகளும்
கொண்டாட்டத்தில் திளைக்கும்
உனது விழிகள் நடனமிடும்
உனது குழந்தைகள் யாவும்
மீண்டும் விளையாட ஆரம்பிக்கும்
பிள்ளைகளும் பெற்றோரும்
மீண்டும் உனது அழகிய மலைகளில் சந்தித்துக்கொள்வார்கள்..
என்றுவலிகளைக்கடந்த நம்பிக்கையை பேசிச்செல்கிறது..

அவ்வாறே.. கேரி கோர்சன் எழுதிய“நாங்கள் பாலஸ்தீனியர்கள்” என்கிற கவிதை
உலக சபைக்கு
மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி,
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம்
முறையீடு செய்தோம்.
சிலபோது அவர்கள் அமைதியாகச்
செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோதுஎங்கள் காயங்களைப் பார்த்து கொட்டாவி விட்டார்கள்
என்று நீளும் கவிதை இப்படி முடிகிறது
நாங்கள் மக்கள்
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம் பெரிய மீனைக்கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப்புழு எத்தகையது?
நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப்பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்..
என்று முடியும்போது இதைவிட இந்த வலிகளை வேறெப்படி மொழிபெயர்ப்பது?

அதுபோலவே அந்தனி ஜே.மெர்சலா எழுதிய யுத்தம் என்கிற கவிதையில்..
எவ்வளவோ எழுதப்பட்டும்
எவ்வளவோ பேசப்பட்டும்
எவ்வளவோ செதுக்கப்பட்டும்
யுத்தத்தின் பாடங்கள்
தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்
தொடர்ந்து மறுக்கப்படுவதும்
தொடர்ந்து திரிதுக்கூறப்படுவதும் ஏன்?
இதோ..இன்று சிரியா..
என்று முடிகிற கவிதை மிகப்பெரும் பாறாங்கல்லை எம் நெஞ்சின் மீது உருட்டிவிடுகிறது.

அதேபோன்றுதான்  நாசர் பர்கூதி எழுதிய சிரியாவின் சிறுவர்கள் என்ற கவிதை கரையோரத்தில் கவிழ்ந்து கிடந்த ஐலான் குர்தி என்கிற அழகிய சிறுவனதும், அதற்குப்பின்னர்நம்மைரத்த கண்ணீர் வடிக்க வைத்த யுத்தத்தால்சிதைந்துபோன சிறுவர்களின் புகைப்படங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இப்படிஎளிய சொற்கள் மூலம் அந்த அந்த நாட்டின் மொழியையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை நுணுக்கங்களையும், தமிழ் மொழிக்கு மிக நேர்த்தியாக மொழிபெயர்த்து இலங்கையில்மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதியதொரு ராஜபாட்டையை அஷ்ரப் சிஹாப்தீன் திறந்துவிட்டிருக்கிறார்.
ஒருவிதமான தேக்க நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியத்துறைக்கு இவரது இந்த முயற்சி தாராளமாகவே நீர் பாய்ச்சுகிறது.
இந்த நூலை எதிர்விமர்சனம் செய்யக்காத்திருக்கும் சிலருக்கு சில வார்த்தைகள்.இப்போதெல்லாம் விமர்சனம் என்பது படைப்பை பார்க்காமலே, வாசிக்காமலே, அது என்னவென்றே தெரியாமலே விமர்சிக்கும் ஒரு நிலை நம் மத்தியில் தோன்றியிருக்கிறது.மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது தமிழுக்கு இன்று நேற்று, தோன்றிய ஒன்று அல்ல.
மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்து “தொல்காப்பியத்தில்”
“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே”
இங்கு“மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு” என்பது பொதுவான மொழிபெயர்ப்பையே சுட்டுகின்றது. கி. பி.14 ஆம் நூற்றாண்டு முதல்   19 ஆம் நூற்றாண்டு வரை, மொழிபெயர்ப்புத் துறையில் புராணங்களே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கி.பி.19 ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர்தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்றலாயிற்று. இதன்விளைவாக மொழிபெயர்ப்பு இலக்கியம் முக்கிய ஒன்றாக விளங்கத் தொடங்கிற்று.

இலங்கையை பொறுத்தவரை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நூல் மேகதூதம் - மகாகவி காளிதாசர் வடமொழி மூலம் எழுதிய நூலை சோ.நடராசன் தமிழாக்கம் செய்தார். இது 1954ஆம் ஆண்டு வெளியானது. இதன்பின்னர்கிராமப் பிறழ்வு என்ற மொழிபெயர்ப்பு நாவல்  மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'கம்பரெலிய' சிங்கள நாவலின் அடிப்படையாக்கொண்டு 1964 இல் வெளியானது. அதன்பின்னர் தொண்ணூறுகளுக்குப்பின்னரே பல மொழிபெயர்ப்பு நூலுருவாக்க முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.அவ்வாறு மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் இலங்கையில் ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களாக எஸ். பொன்னுதுரை, சோ. பத்மநாதன்,வி.பி. ஜோசப், சி. சிவசேகரம்,ரூபராஜ் தேவதாசன், அருட்திரு நீ.மரியசேவியர், த.தர்மகுலசிங்கம், கெக்கிராவ சுலைஹா, எம்.எச். முஹம்மது யாக்கூத் என்கிற வரிசையில் நமது நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர்களின் பெயர்களை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. இதில் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை இப்பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு மொழியில், குறிப்பிட்ட ஒரு வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.’ என்பதிலிருந்து ஒரு மொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சாரப் பின்புலங்களை அறிந்துவைத்திருத்தல் வரை மொழிபெயர்ப்பாளன் கடந்து வர வேண்டிய தடைகள் பல. பழமொழிகள், மரபுத் தொடர்களை மொழிபெயர்க்கையில் கவனம் தேவை. வாக்கிய அமைப்பு, இடம் சார்ந்த பொருள் இவற்றையும் கவனித்து மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி, கவனம், மொழியறிவு, மொழிசார் பண்பாடு குறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல், அடர்த்தி ஆகியவற்றை உள்வாங்கும் திறன் ஆகியவை ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளனின் அடையாளங்களாக அமையக்கூடும். ‘எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் ஒருவர் அகராதியைப் புரட்டத் தயங்கக் கூடாது’ என்கிற தியோடர் ஸேவரியின் கூற்றையும் நாம் மறந்துவிட முடியாது.
மொழிபெயர்ப்புகள் வழியே மொழிபெயர்ப்பாளர்கள் உலகை இணைக்கிறார்கள் என்கிற கூற்று உண்மையானதே.இந்த நூலின் மூலம் அஷ்ரப் சிஹாப்தீன் நமக்கு முப்பது நாடுகளின் இலக்கிய வாசனையை நுகரச்செய்கிறார், நாற்பது ஒன்பது கவிஞர்களோடு கைகுலுக்க வைக்கிறார்.ஐம்பது கவிதைகளோடு நம்மை பிணைத்துவிடுகிறார். இந்தமூலக்கவிஞர்கள் யார்? அவர்களது பிற  கவிதைகள் என்னென்ன? என்கிற ஆய்வையும், தேடலையும் இன்றைய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஏற்படுத்திவிடுவதில் நூலாசிரியர் வெற்றி காண்கிறார். அதேபோல மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதிய கதவொன்றையும் நூலாசிரியர் திறந்துவிட்டிருக்கிறார்.

அந்தவகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் மிக முக்கியமான நூலாக இது விளங்கும் என்பதோடு மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் நூலாசிரியர் இன்னும் பல சிகரங்களை அடையவும், அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறந்தோங்கவும் அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(22.09.2017ல் கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)