Showing posts with label நீ படித்த பெரும் படிப்பு. Show all posts
Showing posts with label நீ படித்த பெரும் படிப்பு. Show all posts

Wednesday, March 25, 2015

நீ படித்த பெரும் படிப்பு!

போகும் போதிருந்ததை விட
இரண்டு சுற்றுப் பருத்திருந்தாய்
பெயருக்குப் பின்னால்
ஏகப்பட்ட ஆங்கில எழுத்துக்கள்
புள்ளிகளுடன்...

பெரும்புள்ளிதான் இனி நீ
தொங்கல் வரை படித்திருக்கிறாய்

விமான நிலையத்துக்கு வந்திருந்த
சொகுசுக் காரில்
ஒரு தேசத் தலைவனைப் போல்
வந்திறங்கினாய் ஊரில்

சில நாட்களில்
கார் அனுப்பிய வீட்டில் இருந்த
பெண்ணிடம் அடைக்கலமானாய்
சொத்துக்களுக்கு அதிபதியானாய்..

அந்நாள் நண்பர்களைக் கண்டால்
ஒரு லேசான தலையாட்டலுடன்
துண்டித்துக் கொண்டாய்

ஊர் அழுக்காக இருப்பதால்
நீ வெளியே வருவதில்லை

அந்நதள் நண்பர்களைக் கண்டால்
ஒரு லேசான தலையாட்டலுடன்
துண்டித்துக் கொண்டாய்

உன்னை மறந்து விடாத பலரை
நீ
மறந்திருந்தாய்!

திருமண வீட்டிலும்
மையித்து வீட்டிலும்
அழைக்கப்படும் பொது நிகழ்வுகளிலும்
பிரமுகரின் கதிரை வரிசையை
எதிர்பார்த்தாய்..

எல்லாமே பழங்காலத்தில் இருப்பதாகத்
தோன்றியது உனக்கு,
பெற்றார், உற்றார், நண்பர் உட்பட
நவீன யுகத்துக்கு மாறாதிருக்கும்
இந்த சமூகத்தின் மீது
சீற்றம் வந்தது உனக்கு!

உனது பாதம் படுமிடங்களிலெல்லாம்
பணம் வரவேண்டுமென்று
நினைத்தாயேயொழிய
நான் என்ன செய்ய வேண்டும்
என்று எண்ண
உன் படிப்பு இடந்தரவில்லை

யார் எந்தச் சிக்கலோடு வந்தாலும்
இறுதித் தீர்ப்பு
உன்னுடையதாக இருக்க வேண்டும்
என்று நினைத்தாய்
ஏனெனில்
உனது படிப்பு அத்தகையது!

உன்னைக் கண்டுகொள்ளத சமூகம்
உருப்படமாட்டாது
என்று தோணுகிறது உனக்கு
ஏனெனில்
தூரநோக்கு உனக்கு மட்டுமே விளங்கும்
அப்பேர்க்கொத்த படிப்பு அது!

நீ மட்டும்
பேசுவதைத்தான்
மற்றவர்கள் கேட்க வேண்டும்
என்று நினைக்கிறாய்
மற்றவர்கள் பேச
நீ கேட்க முடியாது என்பதில்
நியாயம் உண்டு
நீ
தொங்கல் வரை படித்திருப்பதால்!

பிள்ளைகளைத்
தொங்கல் வரை படிப்பிக்க வேண்டுமெனவும்
கற்ற சமூகமே உயிர்க்குமெனவும்
அன்று ஒரு கூட்டத்தில்
உன் குரல் கேட்டது!

நான் சொல்வது என்னவெனில்
உன்னைப் போல் உயர்வதற்கு
தொங்கல் வரை படிப்பதை விட
பம்பாய் முட்டாயோ
பப்படமோ விற்றுப் பிழைப்பது
பெருங் கௌரவம் என்பதைத்தான்!

25.03.2015