Sunday, September 20, 2015

உன்புகழ் கூறாத சொல்லறியேன்!


 - 27 -

ஹஜ் காலங்களில் சுபஹூத் தொழுகைக்குப் பின்னர் மதீனா முனவ்வராவைச் சுற்றியுள்ள ஒலிநாடா மற்றும் இறுவெட்டுக் கடைகளிலிருந்து குளிர் காற்றில் எழுந்து வரும் 'தலஅல் பத்ரு அலைனா' மற்றும் அதையொத்த பரவசப்படுத்தும் பாடல் குரல்கள் மற்றெல்லாப் புலன்களையும் தாண்டிக் காதில் விழுவது ஒரு சுகானுபவமாக இருக்கும்.

அழகுணர்வும் கலா ரசனையும் மனிதனது உள்ளத்துடன் சம்பந்தப்பட்டது. மனித மனதைக் கவர்வதில் பாடல்களுக்குப் பெரும் பங்கு உண்டு. மொழிகள் தோன்றிய பிறகு மனித குலம் இயல்பாகவே உருவாக்கிக் கொண்ட கலை அம்சம் பாடலாகத்தான் இருக்க வேண்டும்.

ஏடும் எழுத்தும் அறியாத மக்களினால் வாய்மொழியாகப் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் எனப்படும் பாமரப்பாக்கள் மனித குலம் பயன்படுத்திய, பயன்படுத்துகிற எல்லா மொழிகளிலும் உள்ளன. தாலாட்டு முதற்கொண்டு ஒப்பாரிப் பாடல்கள் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு கால கட்டங்களிலும் செயற்பாடுகளிலும் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் அறிந்தேயிருக்கிறோம். பொதுவான பாடல்களைப் போலவே மத ரீதியான பாடல்களும் நிலவி வந்திருக்கின்றன.

தமிழிலும் அறபுத் தமிழிலும் பல பாடல் இலக்கியங்கள் வெளிவந்திருக்கின்றன. பெண்புத்திமாலை, றசூல்மாலை போன்றவை குழுக்களாகப் பாடப்பட்டும் வந்திருக்கின்றன. நோன்பு காலங்களில் பெண்களுக்கான தொழுகை நடைபெறும் இடங்களில் ஸலவாத்து மாலையை ஒருவர் படிக்க மற்றவர்கள் கோரஸாக ஸலவாத்துச் சொல்லுவார்கள். தொழுகைக்கு வருவோர் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழுகை ஆரம்பமாகும் வரை இந்நிகழ்வு நடந்து கொண்டிருக்கும். வேறு அநாவசியப் பேச்சுக்களையும் ஊர்வம்பையும் தவிர்ப்பது மட்டுமன்றி சன்மார்க்க விழுமியங்களைப் பாடல்களூடாக மீட்டுவதும் இந்நிகழ்வின் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.

பின்னால் இஸ்லாமிய கீதங்கள் உருவாகின. மிகப் பெரும் ஆலிம்களும் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பாடல்கள் எழுத மிகச் சிறந்த பாடகர்கள் அவற்றைப் பாடினர். அவை மக்களை வெகுவிரைவில் சென்றடைந்தன. முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய கீதங்கனைப் பாடிய பாடகர்களின் நீண்ட பட்டியல் உண்டு. காரைக்கால் தாவூத், நாகூர் ஈ.எம். ஹனிபா, காயல் ஷேக் முகம்மத் ஆகியோரை மேலோட்டமான உதாரணத்துக்குத் தொட்டுக் காட்ட முடியும். இலங்கையிலும் பலர் தோன்றினர். ஏறக்குறைய 50கள் தொடங்கி 90 களின் நடுப்பகுதி வரை இவர்களது பாடல்களின் ஆதிக்கம் முஸ்லிம் சமூகத்தில் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

ஆயினும் 80களின் நடுப்பகுதியில் குறித்த சில பாடல்கள் இறைவனுக்குச் சமமாக சில மார்க்கப் பெரியார்களைக் கொண்டாடுகின்றன என்ற அவதானிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவைதான் இந்த இஸ்லாமிய கீதங்களையும் பாடகர்களையும் மக்கள் சமூகத்திடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தது. எனவே மார்க்கத்துக்கு முரண் எனக் கருதப்பட்ட பாடல்களை முஸ்லிம் சேவை ஒலிபரப்புவதைத் தவிர்த்துக் கொண்டது.

இஸ்லாமிய கீதங்கள் இசையுடனேயே பாடப்பட்ட போதும் கூட அவற்றின் இசையை விட வார்த்தைகளின் கவிநயமே மக்கள் மனதில் தங்கி நின்றன. இன்றும் கூட யாரும் அப்பாடல்களை எழுந்தமானமாகப் பாடக்கூடிய நிலையில் இருப்பதைக் கொண்டு இதனைப் புரிந்துகொள்ளலாம். 'இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வது இல்லை!', 'வாழ்நாளெல்லாம் போதாதே.. வள்ளல் நபிகளின் புகழ்பாட...', 'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?', 'உனையன்றி வேறெதுவும் நினைத்தறியேன்.. உன் புகழ் சொல்லாத சொல்லறியேன்.. இணைவைத்து உனைப்பாட நாடவில்லை, தமிழ் இசைக்காக உன்புகழ் பாடவில்லை!' போன்ற பாடல்கள் மொழியழகும் கவிநயமும் கொண்டவை.

இயல்பாகவே மனிதனின் கலையுணர்வை மோசமான, ஆபாச பாடல்கள் மற்றும் இசையிலிருந்து தவிர்ப்பதில் இப்பாடல்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் சன்மார்க்கத்தை மக்களிடம் சேர்ப்பதிலும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. பிரச்சாரகர்கள் நுழையாத கிராமங்களில் கூட இவை காற்றில் கலந்து ஒலித்திருக்கின்றன.

இன்று இந்த சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக உணர முடிகிறது. பழம் பெரும் பாடகர்கள், பாடலாசிரியர்களின் மறைவு, இசைக்கு எதிரான மார்க்கப் போர், அதைத் தாண்டி பாடல்கள் மூலம் மக்களிடம் நல்லவற்றைக் கொண்டு செல்வதில் திறமையின்மை, கலைகளை மறுப்பதன் மூலம் மனித இயல்பான கலைகளுடனான உணர்வை மிதித்தல் ஆகியவற்றால் இத்துறை பாழ்பட்டு நிற்கிறது. நமது தஃவாப் பணி பேச்சு, பேச்சு, எழுத்து, எழுத்து என்ற எல்லைக்குள் சுருங்கிப் போய்க் கிடக்க, மனித மனத்தின் இயல்பான கலையார்வம் வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

பாடல்கள் சக்தி மிக்கவை. உற்சாகமான பொழுதுகளில் இயல்பாகவே ஒரு பாடல் வரியை நாம் முணுமுணுக்கவே செய்கிறோம். அப்போது வாத்தியக் கோஷ்டியை வரவழைத்து வைத்துப் பாடுவதில்லை.  அல்லது வீட்டில் இருப்போரைத் தாளமிடவோ ஆட்டம் போடவோ அழைப்பதில்லை.

ஒவ்வொரு பாடசாலையிலும் ஆகக்குறைந்தது ஒரு மாணவி, ஒரு மாணவன் மிக இனிமையாகப் பாடக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மோசமான இசை, பாடல் என்று குறை சொல்பவர்கள் நல்ல பாடல்களை எழுதிக் கொடுக்கவோ தட்டிக் கொடுக்கவோ முன்வருவதுமில்லை.

மனிதக் கலையுணர்வை மார்க்கத்தின் பெயரால் மறுத்து அதற்கு மாற்றீடு வழங்காமல் மிம்பர்களிலும் பொது உபந்நியாச மேடைகளிலும் மூலம் வெளிவரச் சத்தம் போடுவதால் மனிதக் கலையுணர்வு அற்றுப் போவதில்லை. அது வேறு வடிவங்களையும் வழிகளையும் தேர்ந்து கொள்ளும்!

அந்த வழியும் வடிவமும் மோசமானதாகவும் மார்க்க முரணானதாகவும் இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: