Tuesday, September 1, 2015

ஹஜ் - காசாகி நிற்கும் கடமை!


 - 26 -

எனது ஹஜ் பயணம் அவ்வளவு சந்தோஷமானதாக இருக்கவில்லை!

கடமைகள் யாவற்றையும் திருப்திகரமாகச் செய்து கொள்ள முடிந்த போதும் அழைத்துச் சென்ற அணியினர் சரியாக நடந்து கொள்ளவில்லை.

'ஷீதேவிகளே... விமான நிலையம் ஏசி (குளிரூடட்டப்படது.) அதிலிருந்து விமானம் வரை ஏற்றிச் செல்லும் பஸ் ஏசி. விமானம் ஏசி. சவூதியில் விமான நிலையம் ஏசி. அங்கிருந்து அழைத்துச் செல்லும் பஸ் ஏசி. ஹரம் ஷரீப், மதீனா முனவ்வரா ஏசி. நமக்கு எந்தவிதச் சிரமங்களும் இல்லை. நாளை உயிருடன் இருப்போமோ இல்லையோ தெரியவில்லை. பயணத்துக்கு நிய்யத் வையுங்கள், முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்!' - இது நீண்ட காலத்துக்கு முன்னர் ஹஜ் முகவரான ஒரு ஆலிம் நிகழ்த்திய குத்பாப் பிரசங்கத்தின் சிறு பகுதி. கேட்டுக் கொண்டிருக்க மகிழ்ச்சியும் ஆர்வமும் வரத்தான் செய்யும். பெயரையும் கொடுத்து அட்வான்ஸையும் கொடுத்த பிறகுதான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பதட்டத்திலும் சந்தேகத்திலும் நாட்கள் நகர ஆரம்பிக்கின்றன.

சரியாக பணத்துக்குப் பத்துத் தினங்கள் இருக்கையில் திடீரென விமானக் கட்டணம் அதிகரித்து விட்டதாக மேலும் ஒரு தொகையை என்னிடம் கோரினார் நிறுவனத்தவர். அதுவும் பிரச்சனை இல்லை.

அழைத்துச் செல்லப்படுபவர்களில் பொருளாராத மற்றும் கல்வி ரீதியாக வித்தியாசமானவர்கள். கிராமத்து மனிதர்களை அழைத்துச் செல்வதில் நிறுவனங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. கொஞ்சம் விளக்கம் உள்ளவர்களைச் சமாளிப்பதில்தான் பிரச்சனை அவர்களுக்கு.

இலங்கையில் ஆள்சேர்க்கும் ஆலிம்ஷா முதற்கொண்டு சவூதியில் குர்பான் கொடுப்பதற்கு பிராணிகளைக் கொள்வளவு செய்வது வரை புறோக்கர்கள் இருக்கிறார்கள். ஹஜ் காலம் என்பது அவர்களுக்கு கொமிஷன் குவியும்; காலம். அறபாவில் தரிப்பதும் மினாவில் தரிப்பதும் சற்றுச் சிரமமானதுதான். ஆனால் அதற்குள்ளும் நடக்கும் விளையாட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்குள் தவிர்க்க முடியாத சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். அவற்றைப் பொறுத்தேயாக வேண்டும்.

25 முதல் 27 பேர் வரை தங்கவேண்டிய கொட்டிலுக்குள் 50 பேருக்கு மேல் செருகியதைக் கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை. அனைவரும் பெண்கள். அப்படி நெருக்கடிப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நிறுவனத்துக்குரிய கொட்டில்கள் சவூதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு விற்கப்படுகின்றன. அதன் பலனை நிறுவனம் அனுபவிக்க ஹாஜிகள் துன்பத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு நான்கு கொட்டில்கள் (டென்ட்) விற்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்து நடை வழியில் தர்ணா செய்தேன்.  இறுதியில் பெண்களுக்காக கொட்டிலின் மறுபகுதியை பலாத்காரமாகத் திறந்து விட்டோம்.

வழிகாட்டிகளாக வரும் ஒரு சில ஆலிம்கள் நடந்து கொள்ளும் முறை வருந்தத் தக்கது. நிறுவன உரிமையாளருக்குச் சார்பாக நடந்து கொள்வதற்காக ஹஜ்ஜாஜிகளை 'அச்சமூட்டி எச்சரிக்கும்' பணியை இவர்கள் மிக அழகாக முன்னெடுக்கின்றனர். இடைக்கிடை நடக்கும் உபந்நியாசங்களில் இந்த அம்சமே மிக முக்கியமானதாக இருக்கும். குழுவில் வரும் 'பசை' கொண்ட நபர்களை மையப்படுத்தியே சில முன்னேற்பாடுகள் நடப்பதும் உண்டு. ஹஜ் கடமை முடிந்து நாடு திரும்புவதற்காக இருந்த ஒரு பகல் பொழுதில் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த இரண்டு ஆலிம்கள் எனக்குப் புரியாது என்று எண்ணிக்கொண்ட அறபியில் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததை நான் வெகுவாக ரசித்தேன். இவர்களில் ஒருவர் மினாவின் கூடாரத்துக்குள் தனக்கு இடமில்லை என்று ஒரு ஹாஜி சொன்ன போது எல்லோரையும் கத்திப் பாட்டில் (ஒருக்களித்து) படுக்கும்படி உபதேசம் செய்தவர்.

30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சமாளிக்கும் விதமாக சவூதி அரசு ஏற்பாடுகளைச் செய்திருப்பதைக் காணும் போது, அரபிகள் எவ்வளவு நேர்த்தியாக இவற்றை மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு பிரம்மிப்பு வரும். எவ்வளவு கல்வியறிவு படைத்தவராக இருந்த போதும் வழி தவறினால் உரிய இடத்தை அடைவது சிரமம். ஆனாலும் உரியவரை உரிய இடத்தில் சேர்ப்பிக்கும் ஏற்பாடுகள் பாராட்டத் தக்கவை.

ஹஜ் என்பது மனித குலத்துக்கான ஒற்றுமை மாநாடு. ஓர் அற்புதத் திருவிழா. மனிதர்களுக்கிடையில் எந்த வேற்றுமையும் கிடையாது என்பதை வருடா வருடம் நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்தக் கடமை போல ஒரு கடமை வேறு எந்த மதத்திலும் கிடையாது. நாமெல்லாம் ஒரே உறவு என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு இறைவனின் வீட்டையும் தரிசித்தபடி நபிகளாரும் அவர்களின் தோழர் தோழியரும் நடந்து திரிந்த மண்ணில் குறைந்தது 25 நாட்கள் வாழக் கிடைப்பது பெரும் பாக்கியம்தான்.

ஹஜ்ஜூக்கு அழைத்துச் சென்று வழிகாட்டுவதும் ஹாஜிமாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் உதவுவதும் ஒரு மகத்தான பணி. இந்தப் பணியில் ஹாஜிகளை வருத்தாமல் சிறந்த முறையில் உதவும் நிறுவனங்களும் ஆலிம்களும் இருக்கவே செய்கின்றனர். ஒரு சிலர் மார்க்கத்தின் மீதான பொது மகனின் பற்றையும் பக்தியையும் தேவைக்கு மேல் உழைப்பதற்கான ஒரு வழியாக ஆக்கியிருப்பது பெரும் கவலை தருவதாகும்.

எனக்கு ஹஜ் அனுபவம் கிடைத்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இந்த நிலைமைகளில் தற்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற போதும் ஒரு வியாபாரப் போட்டியாகவே அது இன்னும் இருக்கிறது என்பதற்கு ஒரு சிலர் பொது பலசேனாவை உதவிக்கு அழைத்ததிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹஜ் முடிந்து வந்த பிறகு எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே விமானத்தில் வௌ;வேறு நிறுவனங்களினூடாக நானும் மற்றொரு ஒலிபரப்பாளரும் சொந்தப் பணத்திலேயே துணைவியர் சகிதம் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தோம். அவ்வப்போது பத்திரிகை வெளியிடும் ஒரு சிறு பத்திரிகையாளர் அன்றைய நிலையில் அவர் வெளியிட்ட ஒரு பத்திரிகையில் நானும் நண்பரும் அரச செலவில் ஹஜ் செய்ததாகசும் அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும் கட்டம் கட்டி ஒரு செய்தி போட்டிருந்தார்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: