Showing posts with label yaal azeem - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label yaal azeem - ashroff shihabdeen. Show all posts

Thursday, November 25, 2010

ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை





பயனுள்ளவை என்று கருதுபவற்றை ஏனையவர்களும் பயனடையும் வகையில் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தின் விளைவாகவே இலக்கியங்களும் பிற நூல்களும் தோன்றுகின்றன. புதிதாக அறிந்ததை, அனுபவித்ததை, சிந்தையைக் கவர்ந்ததை எழுத்தாற்றல் படைத்தவர்கள் ஏனையவர்களுடன் சுவைபடப் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் நாடறிந்த கவிஞரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன், தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதிய ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை’ என்ற தொடர் பயணக் கட்டுரையை தொகுத்து நூலுருவில் எமது கரங்களுக்குச் சமர்ப்பித்துள்ளார். சிறுகதை, கவிதை, பத்தி எழுத்து என பல துறைகளிலும் முத்திரை பதித்த அஷ்ரஃப் சிஹாப்தீன் பயண இலக்கியத்திலும் ஆளுமையுள்ள எழுத்தாளர் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

அண்மையில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘தீர்க்க வர்ணம்’, ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவின் போது கவிதாயினி லுணுகல ஸ்ரீ பாடிய கவி வாழ்த்து அஷ்ரஃப் சிஹாப்தீனின் எழுத்தாற்றலைக் கூறும் அழகிய கவி வரிகளாகும்.

இரை மீட்டும் பசுவாய்
இருந்து அசை போட
ஆறு மாதம் வேண்டும்
ஆகக் குறைந்தது...
ஊமையான சொற்கள் கூட
தேனீயாய்ப் பறக்குமே அந்த
சூட்சுமத்தைக் கொஞ்சம்
சொல்லித் தருவாயா?