Thursday, September 11, 2014

எழுத்துச் சேவை


அங்கம் - 2

ஓர் எழுத்தாளராக இருப்பதில் பல அசௌகரியங்கள் உள்ளன.

விடிந்தால் இன்ன இன்ன வேலைகளை முடித்தாக வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளை இரவு எட்டு மணிக்குப்பிறகு ஓர் அழைப்பு வரும். நண்பரோ உறவினரோ ஆரம்ப வகுப்புகளில் கற்கும் தமது பிள்ளைகளுக்கு நாளையன்று நடக்கும் பேச்சுப் போட்டிக்கு ஒரு மூன்று நிமிடப் பேச்சு எழுதித் தர வேண்டும் என்ற வேண்டு கோள் அதிலிருக்கும். பெரியவர்களுக்குக் காரணம் சொல்லி மளுப்பி விடுவோம் என்பதால் அநேகமாகப் பிள்ளைகளே அழைப்பை எடுத்து 'அங்கள்....!' என்று ஆரம்பிக்கும். நாம் மடிந்து விடுவோம்.

நேர்த்தியாக விடயத்தைக் கோத்து எழுதுவதற்கு ஓர் எழுத்தாளராலோ ஊடகத்துறை சார்ந்த ஒருவராலோதான் முடியும் என்பதைச் சமூகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. இதனால் பொதுநலக் கோரிக்கைகள், தன்னிலை விளக்கம் போன்றவற்றை எழுதுவதற்கு எழுத்தார்களை மக்கள் நாடுகிறார்கள். ஒரு விடயத்தை எழுத்தாளன் உரிய வார்த்தையில் சரியாகச் சொல்லுவான் என்பதைச் சமூகம் தெரிந்து வைத்திருந்தாலும் அவனைப் பயன்படுத்துவது அநேகமாகவும் நான் மேற்சொன்னவை போன்ற விடயங்களுக்கு மாத்திரம்தான். கிட்டத்தட்ட பார்த்துக் குரைக்கும் ஒரு நாய்க்கு எறிவதற்கு தெருவில் சட்டென ஒரு கல்லைத் தேடுவோமே.. அந்தக் கல்லின் கதிதான் எழுத்தாளரின் கதி!

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு முதியவர் வந்தார். காதி நீதிமன்றுக்கு தனது பேரன் சார்பில் ஒரு முறைப்பாடு எழுதித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான்கைந்து ஆவணங்கள், சில வெள்ளைத் தாள்கள் கையில் இருந்தன. அவரை அதற்கு முன்னர் நான் கண்டதே கிடையாது.

அவரை அமர வைத்து விட்டு, 'என்னை உங்களுக்கு எப்டித் தெரியும்? என்று கேட்டேன். அவர் வேறு ஒரு நபரிடம் சென்றதாகவும் அவர் இன்னொரு நபரிடம் செல்லக் கேட்டதாகவும் அந்த நபர் தன்னால் சிங்களத்திலேயே எழுத முடியும் என்று சொல்லித் தமிழில் எழுதுவதானால் இன்னாரைச் சந்தியுங்கள் என்று என்னைச் சொல்லியிருக்கிறார்.

விபரத்தைக் கேட்கப் பெரியவர் சொல்லத் தொடங்கினார். நான் குறிப்பெடுத்துக் கொண்டேன். அடுத்த தினம் பிற்பகல் பெரியவருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதால் காலையில் அமர்ந்து எழுதத் தொடங்கினேன்.

' .............................. என்ற முகவரியில் வசிக்கும் ஜோன் ஆசீர்வாதம் என்ற முகம்மது ஷாமில் (அ.அட் இல.....) ஆகிய நானும் ....................... என்ற முகவரியில் வசித்த பாத்திமா ருக்ஷானா (அ.அட்டை இல ........) என்பவரும் ஒருவரை ஒருவர் விரும்பியிருந்த காரணத்தால் பெரியோர் முன்னிலையில் நான் புனித இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி எனது பெயரை முகம்மது ஷாமில் என்று மாற்றிக் கொண்டேன். இரண்டு குடும்பத்தினரதும் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி ..........ம் திகதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் .......... என்ற மணப்பெண் வசித்த முகவரியில் வாழ்ந்து வந்தோம்.

மூன்று வருடங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி என்னுடன் வாழ்ந்து வந்த எனது மனைவி திடீரென ........ம் திகதியிலிருந்து காணாமல் போய்விட்டார். அவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவருடன் சென்று வாழ்வதாகப் பின்னர் தெரிய வந்ததையடுத்து ................ம் திகதி .......... பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கிறேன். முறைப்பாட்டு இல.....................

கடந்த மூன்று வருடங்களான எனது மனைவி வேறு ஒருவருடன் சென்று வாழ்தனால் இனிமேல் அவருடன் எனது வாழ்க்கை இல்லை என்பதாலும் எனது எதிர்காலம் பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் எனது மனைவியிடமிருந்து விவாக ரத்துப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.'

இந்தமாதிரியான காரணம் பற்றியோ வேறு காரணங்களை வைத்தோ விவாக ரத்துப் பெற்றுத் தரக் கோரும் கடிதம் எழுத என்னிடம் யாரும் வரவேண்டாம் என்று இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: