Saturday, June 18, 2016

பட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை!


பட்டாம் பூச்சிக் கனவுகள் 
************************** 
றிஜான் முஹம்மது


பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி. வாசிப்புக் காலம் : 05-04-2016 – 07-04-2016 (அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்துக் காலங்கள்) ^_^

வாசித்த ஏனைய நூல்களைவிட “பட்டாம் பூச்சிக் கனவுகள்” தொகுதி தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. நூல் வெளியீட்டில் அடியேன் பங்கேற்ற நிகழ்வையும் எண்ணி இன்புறக் கூடிய சுவையை வாழ்வில் புகைப்படங்கள் மூலமாக ஊட்டிக் கொண்டே இருக்கிறதை நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.

பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் எனும் ஆளுமை, எனக்கு காலம் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னிலையில் வகிப்பவர், என் பேரன்புக்கும், தனி மதிப்புக்கும் பொருத்தமானவர். நூலானது கையில் தவண்ட பொழுதினில் உச்சி நுகராமல் விட்டேனே என சிறு வருத்தம் இருந்ததை தற்போது மறைக்க மனம் இடம் விடுவதாயில்லை. வாசகனுக்கு அதிருப்தியற்ற மனநிலை, அமைதியற்ற சூழல் இவ்விரண்டுமே திறந்துவிட்டிருக்க வேண்டும் என கருதும் நிலைப்பாட்டிலே இருந்தேன்.

 அலுவலகத்தில் இன்டெர்னல் ஒடிட்டினால் ஹெட் லொக்ட் ஆகியிருந்த சமயம் எனக்கு டிராபிக் சிவப்புச் சமிக்ஞையைப் போல் என் உளஅலைவுகளை குறுகிய விட்டத்துக்குள் நிறுத்தி நூலின் எட்டுச் சிறுகதைகளின் சொல்லலங்காரங்கள், சீன் செட்டிங்க்ஸ் எனும் தகைமைகளால் தளர்ந்த மனத் தெவிட்டலின் சீரமைப்புக் காரணிகளாக திகழ்ந்தது மட்டுமில்லாமல் என் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்ய நேர்ந்தது.

பெரும்பாலும் உள்ளடங்கிய எட்டுச் சிறுகதைகளும் குத்துச்சண்டை பிடித்துப் பிறகே நூலினுள் ஏறி சாவகாசமாக நிமிர்ந்திருக்க வேண்டும். காரணம் ஏராளமான போற்றத்தக்க சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல இலக்கியப் பிரசவம் நாளுக்குநாள் எம்மை நெருங்கிக்கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை, தாய்த் தமிழிலும் சரி ஏனைய நம் புழக்கத்தில் உள்ள மொழிகளிலும் சரி. ஏதோ லாபாயில் கிடைத்தது போலில்லாமல், போலி இல்லாமல், (இப்படியானவைகள்தான் குறுகிய காலத்துக்குள் செம்மை இழந்துவிடுவது) மனக்கோட்பாடுகளுடன் ஊன்றி தெரிவுக்குழு நியமித்தே எட்டுத் தரமான சிறுகதைகள் மூலமாக எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதியை நிலை நிறுத்தியிருக்கிறார்.

 றிஜான் முஹம்மது

மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பற்றி ஓய்வுபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழக உப பதிவாளர்-மன்சூர் ஏ. காதர் அவர்களின் முன்னுரையில் கூறி இருப்பார்: “இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேகமான மண்வளத்தையும் காலநிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண்வளத்தையும் வேறொரு காலநிலையையும் கொண்ட இன்னொரு சுற்றாடலுக்கு கொண்டு போய் மீள்நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும்.”

இதனைக்கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக சிந்திக்கும் போது வெற்றிகரமான ஓர் இலக்கிய ஆக்கம் பொழிபெயர்க்கப்படுமாயின் பரவலான சிந்தனைத் திறன் அனுபவத்தோடு குழாமிட்டிருக்க வேண்டும், சர்வதேச நடப்புகளில் ஒத்துப்போகும் வண்ணம் வார்த்தையை முன்நிறுத்த வேண்டும். கதைத் தெரிவைப் போலவே நேருக்கு நேரான காட்சிப் பிணைப்புகளும் மிகைப்படுத்தலில்லாத பாத்திரக் கையாளல்களும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவைகளை என் கணிப்பில் கனகச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது “பட்டாம் பூச்சிக் கனவுகள்”.

“மரணம் பிறக்கும், மற்றதில் இறக்கும் மீண்டும் மிரட்டும்” போன்றதொரு அலைவரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போதும் ஒன்றோடு ஒன்று கைலாகு ஆகும் சம்பவமும் இதில் இல்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். சொற்றொடரின் உச்சரிப்பில் பிரதிபலிக்கும் காட்சி பிம்பங்கள் குறித்த நேர வரையரையைத் தாண்டி மற்றதையும் வாசித்து விட்டு ஆடிட்டிக்கு திட்டமிடுவோம் எனும் மனப்பாங்கை இத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் தந்திருந்தது. அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்து நேரங்களில் என்னைச்சுற்றி இருப்பவர்கள் ஏதோவொரு (உறுதியான உண்மை முகநூல்) சொடுக்குகளை இயக்கிக்கொண்டிருக்கும் சமவெளியிலேயே “பட்டாம் பூச்சிக் கனவுகள்” நூலைப் படிக்கக் கிடைத்தது.

- எ கோண்ஸா புக் ஹே ரெஜான் பாய்..?

- பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர், பச்சோந்திக் குடியிருப்பு எனும் சிறைச்சாலை, நிலப்பகுதி முழுவதும் முதுகுகளில் பல் வர்ணம் காட்டும் பச்சைப்புள்ளிகளுடனான பச்சோந்திக் கூட்டங்கள். இதனை ஸெய்னப் கடப்பதைப் பற்றி யூகிக்கும் வேளையிலேயே எங்கள் டிரைவரின் வினவுதல் காதில் விழுந்தது.

ஒரு சிறு புன்னகைத்ததும்பலுடன், அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் பொறுக்கிய ஹிந்தியில் ஓரிரு சொல்லில் பதில். மீண்டும் முந்தி முறைத்தோடும் வேக வரையறையை மீறிய வாகனங்களின் போக்குவரத்து சப்தத்தில் நிசப்தம் என நகர்கிறது.

நூலின் தாய்த்திரையான உகண்டா பெண் எழுத்தாளர் பீட்ரைஸ் லம்வகாவின் பட்டாம் பூச்சிக் கனவுகள்; சூடான் கிளர்ச்சியாளர்களின் சிறார் வேட்டையிலிருந்து இரானுவத்தினால் மீட்கப்பட்ட பத்து வயதை ஒத்த சிறுமி லாமுனுவின் துயர் நிலைப்பாட்டை கனவில் அம்மாவோடு நட்புறவாடும் பட்டாம் பூச்சி. நர்றேஷன் பாங்கிலான கதையமர்வு வாசகனின் காதை அடைக்கும் அளவுக்கு மௌனம் குதிரையோடிருக்கிறது.

 எக்காரணத்துக்காகவும் இக்கதைகளை முடிக்காமல் நகரவே கூடாதுடா எனும் மனஉறுதிபூண்ட சிறுகதைகளாகவும் “என் பெற்றோரின் படுக்கையறை“ எழுத்தாளர் உவெம் அக்பானின், எதிர் காலம்” ஈராக்கிய பெண் எழுத்தாளடெய்ஸி அல் அமீருடையது, “பச்சோந்திக் குடியிருப்பு” மஹ்மூத் சயீதின். இவைகளின் தாக்கத்திலிருந்து மீள கவிஞர் சோலைக்கிளியின் கவிதைகள் உறுதுணையாக இருந்ததை மறுக்க விரும்பவில்லை.

 கதைக்கருவினால் தாக்கப்பட்டேனா இல்ல மொழிபெயர்ப்பாளரின் சொல்லாட்டங்களில் ஈர்க்கப்பட்டேனா எனும் ஆய்வொன்றிக்காக அதன் மூலக்கரு தேடி இணையத்தில் நாற்காலி போட்ட சம்பவமும் நடந்தேறியது.
 
ஒரு சிறுகதையின் முடிவு பிரட்டியதும் மண்டையில் தட்டிவிடுவது எட்டி விடுவது கூடாத துர்ப்பண்பு பெரும் இலக்கிய குற்றம். வாசகனின் முக்கியமாக வாசகனின் உவெம் அக்பானின் “என் பெற்றோரின் படுக்கையறை“ ஒரு சில கேள்விகளுக்கு மத்தியிலே ஓரிரு பக்கங்கள் இழுத்தடிக்கப்பட்டு மீள் வாசிப்பின் பின் இணைந்த சிறுகதை எனலாம். இத்தகைய கதையை  அஷ்ரப் ஷிஹாப்தீன் எந்த அடிப்படையில், ஏன் தேர்வு செய்தார்! எனும் கேள்விகளே அவை. மேலும் கதையின் கருவூலம் ஒரு சூனிய சூழ்ச்சியா?, குடும்ப குளறுபடியா?, சென்ஜேயின் அப்பாவின் கொடுக்கல் வாங்கல் தகராறா?, அல்ல சென்ஜேயின் அம்மாவின் தரங்கெட்ட ஏதும் செயலா? என விருவிருப்புகளை எள்ளி நகையாடியிருக்கும் கருவுக்கு ஒரு நுனியும் பின்வாங்கிடாமல் அழகிய மொழி செறிவை நுணுக்கமாக கையாண்டுள்ள விதமும் முடிவு வரை கதையின் கருவூலத்தை படி மேல் படியாக இட்டுச் சென்று எழுந்த கேள்விகளையல்லாம் சுக்குநூறாக்கி விட்டு இதான் இறுதி அசைவின் நிலையான உண்மைத் தொனி இந்தக் கேள்வியின் முடிவில் தாங்கிய படி முடித்திருப்பது போற்றத்தக்கது.

மனதை விட்டுத் தாளாத சிறுகதையாகவும் , ஒரே வசனத்தில் முழுக்கதையும் நிழலாடி புண்படுத்திவிட்டு போகும் சிறுகதையாகவும் பச்சோந்திக் குடியிருப்பை நோக்கலாம். நேரடியான சோதனை, இன்னல்கள், துன்புறுத்தல்கள் எதார்த்தத்தில் விளைந்த வினை என பல்வேறு பட்ட காரணிகளை கதை கொண்டுணர்த்தும் படிப்பினையினை முடிவில் ஜூம்
அவுட் செய்து பார்க்கும் போது உணரலாம். காம இச்சையின் சூழ்ச்சியால் சூழ்நிலைக்கு நிர்பந்தமான மொழிபெயர்ப்பாளர் ஸெய்னப், ஜமுக்காள ஏற்றுமதி செய்யும் குடும்பஸ்தன் தொழில் ரீதியான பயணத்தில் அசம்பாவிதத்தினால் சிக்குண்ட சூழ்நிலைக்கைதி அஹமட், இவ்விரண்டு பேர்களின் நிலையை விலைக்கு வாங்கிய ஜெனரல் இனது கோட்டைதான் பச்சோந்திக் குடியிருப்பு.

 “ஆ.. லல்லா.. அல் ஈராக்கியா, அஷ்ஷால் மின் திர்ரி மஅக் ?” கதையமர்வைப் பற்றி க் கூற ஜூம் அவுட் வித்தை அவசியம், கூட சீன் லிங்கிங் செய்தாலே கண்டுபிடிக்க முடியும். அதனடிப்படியில்; தொடக்கமும் , முடிவும் ஒன்றை மற்றொன்றின் கையில் ஒப்படைத்து விட்டு நகர்ந்துகொண்டே செல்கிறது ஆனால் இவ்விரண்டும் நடுப்பகுதியில் குந்திக்கொண்டு பலதை உணர்த்துகிறது.

நாகரிகம் உருவாகிக்கொண்டு இருப்பதனை சித்தரிக்கும் சிறுகதையாக ஈராக்கிய பெண் எழுத்தாளர் டெய்ஸி அல் அமீருடையது எதிர் காலம் சிந்திக்க வைக்கிறது. ...வரும் சில நாட்களுக்கு எப்படி உணவைப் பெற்றுக்கொள்வது என்று ஒரு நிமிடத்திற்கு முன்னர் சிந்தித்து கொண்டிருந்த அவள் எப்படி ஒரு புதிய உடையை வாங்கலாம்? எதிர்வரும் நாட்கள் உண்மையில் வருமேயாக இருந்தால் வீட்டில் இருக்கும் எரிவாயு சமையலுக்கு போதுமானதா? இரவுகள் பசியினால் துன்புறாதவைகளாக அமையுமா? நூற்றுக் கணக்கானவர்கள் பிணங்களாகி கொண்டிருக்கும் போது, நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு ரொட்டித்துண்டுக்காக அலையும் போது, நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு தங்குமிடம் இன்றித் தவித்தலையும் போது அவள் ஒரு புதிய உடையை வாங்கியிரிக்கிறாளா?.. போர்ச்சூழலலை தோலுரித்துக் காட்டும் ஒரு நிமிடக் கரு கொண்ட சிறுகதை. துயரம் நிறைந்த இக்கதையை என்னால் புணர்ந்த கதையாக பார்க்க என் மனமும், மதியும் இடம்கொடுக்கவில்லை. இப்படியே நீடிக்குமாயின் கதையில் ஓடோடித்திரிந்த லெபனான் வாசியின் முழு உளக்காட்சியின் பயம் பிறிதொரு காலத்தில் நாகரிகம் என பெயர்சூட்டப் படலாம், தற்போது எப்படி எதிர்காலம் என சூட்டப்பட்ட படி.

நேரடியாகவே அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழியாளும் திறனை மதிப்பிட சக்தியற்ற ஒரு வாசகனால் முடிந்த விமர்சனத்துக்கு நான், ஒரு அங்குலம் நிமிர்ந்து வேணும் என்றால் சொல்லிக்கொள்வேன் 174 பக்கங்களைக் கொண்ட பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதி எச்சர்ந்தப்பத்திலும் முட்டி போடாது என்பதில் எனக்கு நூறு சதவீதம் ஐயமில்லை.

18062016

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: