Showing posts with label பலஸ்தீனக் கவிதை. Show all posts
Showing posts with label பலஸ்தீனக் கவிதை. Show all posts

Thursday, July 10, 2014

பலஸ்தீனம் விடுதலையாகும்!



மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

பலஸ்தீன் விடுதலையாகும்
இஸ்ரவேலர்கள் எவ்வளவு முயன்றாலும்
பலஸ்தீனத்தை அவர்களால்
வெல்ல முடியாது
நாம் அதனுடன் ஒன்றியிருக்கிறோம்
கற்கள் கொண்டே போராடுவோம்
ஒரு போதும் பலஸ்தீனைக் 
கைநழுவ விடமாட்டோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

யுத்தம், வருத்தம் மற்றும்
சோதனைச் சாவடிகளற்று
அது விடுதலையாகும்!
இஸ்ரவேல் எழுப்பிய மதில்
ஒரு நாள் விழும்
நொறுங்கித் தூசாகும்
துயரமோ, 
இழந்த வீடகள் பற்றிய கவலையோ
இருக்காது!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எமது நிலத்தை மீளப் பெறுவோம்
ஒலிவ் மரங்கள், மலைகள் மற்றும்
எவற்றைக் கொண்டிருந்தோமோ
அவையனைத்தையும் மீளப்பெறுவோம்!
எமதுகடலை, நகரங்களை
மீள அடைவோம்
இஸ்ரவேலியர் எதைச் செய்தாலும்
பரவாயில்லை
நாங்கள் ஒன்றிணைந்து
அமைதியை மீண்டும் கொணர்வோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

அழுத்தம், தலைவலி,
இன்னும் இதுபோன்ற எல்லாச்
சிக்கல்களிலிருந்தும் விடுதலையாவோம்
என்னனால் புரிந்து கொள்ள முடியாதிருப்பது
இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதையே
உள்ளதைப் பகிர்ந்து
நாம் ஏன் ஒன்றாக வாழ முடியாது?
எப்படிப் பகிர்வதென்று
சிலர் புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள்
புரிந்து கொண்டால்
ஒரு யுத்தம் இருக்காது என்பதை
அவர்கள் அறிவார்கள்

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எவ்வளவுதான் கொடுமைப் படுத்தினாலும்
விலக்கி நடந்தாலும்
நாங்கள் வெல்வோம்! விடுதலையாவோம்!!

ஒரேயொரு பலஸ்தீன்!

நீங்கள் நிகழ்த்தவுள்ள
மிகப் பெரும் படுகொலைகளுக்கு முன்பு
சிறவர்கள் பாடலிசைப்பர் -
‘சுதந்திர பலஸ்தீன்” பற்றி
காலத்தைப் பின்னோக்கிச் சென்று
ய+தர்களாகிய உங்களுக்கு  
நடந்தது என்ன என்று பாருங்கள்!

பலஸ்தீனை விடுதலையாக்குவோம்
நீங்கள் விரும்பினாலும் சரி,
விரும்பாவிட்டாலும் சரியே!

- JEANINE SWALIM

Saturday, April 27, 2013

“வாக்குமூலம்“ - மஹ்மூத் தர்வேஷ்



புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர் மறைந்த மஹ்மூத் தர்வேஷ் எழுதிய “அடையாள அட்டை” என்ற கவிதை உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது. இந்தக் கவிதையை பலஸ்தீன பெண் கல்வியியலாளர் படிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அரபியிலும் ஆங்கிலத்திலும் அக்கவிதை படிக்கப்படுகிறது. அரபியில் படிக்கும் போது அவர் தன் சொந்த நிலம் குறித்துக் கலங்குவதை அவதானிக்கலாம். இது கவிதைக்கும் கவிஞனுக்கும் கிடைத்த வெற்றி.



இக்கவிதையை “வாக்குமூலம்” என்ற தலைப்பில் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கே தரப்படுகிறது. பலஸ்தீனக் கவிதைகள் என்ற எம்.நுஃமானின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.

வாக்குமூலம்

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
எனது அட்டையின் இலக்கம் 50,000
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன்
கற்களை உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும்
ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ்
முழந்தாழ் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
யுகங்களுக்கப்பால்
காலத்துக்கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன

உழவர் குலத்தின் எளிய மகன் நான்
வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான்
எனது தலைமுடி மிகவும் கறுப்பு
எனது கண்கள் மண் நிறமானவை
எனது அரபுத் தலைஅணி
ஆக்கிரமிப்பாளரின் கைகளைப் பிறாண்டும்

அனைத்துக்கும் மேலே
தயவு செய்து இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்

கவனம்!
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்!
எனது சினத்தை அஞ்சிக்
கவனமாயிருங்கள்!



மஹ்மூத் தர்வேஷ் குரலில் அவரது கவிதை


இக்கவிதை George Qurmuz குரலில் இனிமையான ஒரு பாடலாக...