முகம்மத் அல் அரீர் தனது குழந்தையுடன்
- ரீஃபாத் அல் அரீர் -
தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
-------------------------------------------
எனது சகோதரர் முகம்மத் அல் அரீர் தனது வீட்டில் இருக்கும் போது இஸ்ரேலிய வான்படைத் தாக்குதலால் உயிரிழந்தான். 31 வயதான அவன் இரண்டு பிள்ளைகளின் தந்தை.
மூன்று தினங்களாக இரத்தம் வெளியேறி இறந்தானா அல்லது வெடி குண்டின் அதிர்வினால் அல்லது அதன் சப்தத்தினால் இறந்தானா அல்லது இடிபாடுகளுள் சிக்கி இறந்தானா அல்லது இவையெல்லாம் சேர்ந்து அவன் மரணிக்கக் காரணமாய் அமைந்தனவா என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.
உண்மை என்னவெனில் நான் என் சகோதரன் முகம்மதை இழந்து விட்டேன்!
நான்கு வயதுடைய ரனீம், ஒரு வயது நிரம்பிய ஹம்ஸா ஆகிய அவனுடைய அழகழகான இரண்டு பிள்ளைகளும் தங்களது தந்தையை நிரந்தரமாகவே இழந்து விட்டனர். எங்களுடைய ஏழு வீடுகள் கொண்ட மாடி வீட்டையும் நாங்கள் இழந்து விட்டோம்.
நாலடுக்கு மாடிகள் என்ன... ஆயிரக் கணக்கான மாடிகள் இப்போது இங்கு அழிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் என்றைக்குமே கண்டிராத கொடூர ஆக்கிரமிப்பின் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்களது பெற்றோரின் பிள்ளைகளுக்குள் நான் இரண்டாவது நபர். ஒரு பெண், நான் ஆண்களுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்தவன் முகம்மத். எனது பழைய ஞாபகங்களுக்குள் முகம்மத் பிறந்த நிகழ்வு மறக்க முடியாதது. அப்போது எனக்கு நான்கு வயது.
எனது சகோதரனுக்கு முகம்மத் என்று பெயர் வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போது நான் அழுது ஆகாத்தியம் பண்ணி அதை மறுத்தேன். 'அவனுக்கு முகம்;மத் என்று பெயர் வைக்கக் கூடாது, ஹம்தா என்றுதான் பெயர் வைக்க விரும்புகிறேன்... ஆம் ஹம்தா!'
அவனை யாராவது முகம்மத் என்று அழைத்தால் எனது முழு மூச்சையும் பலத்தையும் ஒன்று திரட்டிக் கோபத்தில் சத்தமிடுவேன். எனது எதிர்ப்புக் கணக்கில் கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படும் வரை நான் அப்படித்தான் நடந்து கொண்டேன். பிறகு பலரும் அவனை ஹம்தா என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். இந்தச் சொல்லும் முகம்மத் என்ற பெயரைச் சார்ந்ததுதான்! எல்லோரும் அவனை ஹம்தா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் எனது கோபத்தைச் சட்டை செய்யாமல் எனது தந்தையார் மட்டும் அவனை முகம்மத் என்றே அழைத்து வந்தார்.
எப்போதும் ஹம்தாவின் நலனே எனது நோக்கமாக இருக்கும். அவன் எனக்கு மட்டும் சொந்தமானவன் போல... இன்னும் சொல்வதானால் அவனது பெயர் ஹம்தா என்று நிரந்தரமாக அழைக்கப்பட வேண்டும் என்றும் அவனை எனது மகனைப் போலவும் பார்த்துக் கொண்டேன்.
1983ல் பிறந்த ஹம்தா தயக்க சுபாவம் கொண்டவனாக இருந்த போதும் நகைச்சுவை உணர்வுள்ளவனாகவும் துணிவுள்ளவனாகவும் இருந்தான். அதிகமாகவும் அமைதியாக இருக்கும் ஹம்தா பேச ஆரம்பித்து விட்டால் அவனை மிஞ்ச முடியாது.
2000 ம் ஆண்டு உருவான இன்திபாதாவின் போது அவனுடைய வாழ்வில் உண்மையான ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவனது பாடசாலை நண்பர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட போது மரண ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் பிரதான பாத்திரத்தை அவன் வகித்தான்.
மக்கள் தொடர்பாடலில் பட்டம் பெற்ற ஹம்தாவுக்கு பொது மக்களை அணுகும் முறை கைவரப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்திபாதா நடந்து கொண்டிருந்த போது காஸாவில் எங்கு சென்றாலும் 'ஹம்தா உங்கள் சகோதரனா?' என்று என்னிடம் கேட்குமளவு அவன் பிரபல்யம் பெற்றிருந்தான்.
உள்ளார்ந்த ஆச்சரியத்துடனும் ஒரு புன்னகையுடனும் தலையசைப்பேன். இவனை இந்த அளவுக்கு வேகம் கொள்ளச் செய்தது எது என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். தயக்க சுபாவமுள்ள எனது சகோதரன் ஜெரூசலத்திலும் ஷூஜாஇய்யாவிலும் பலஸ்தீனின் எல்லாப் பகுதிகளிலும் நடக்கும் அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யவும் வழி நடத்தவும் உயிர்த்தியாகிகளின் மரண ஊர்வலங்களை ஏற்பாடு செய்யவும் கவிதை நடை ஆர்ப்பாட்ட வார்த்தைகளை உரத்து ஒலிக்கவும் துணிந்து விட்டான் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டேன்.
பதினான்கு சகோதர உறவுகளுக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்தவனாகவும் படைப்பூக்கம் கொண்டவனாகவும் ஹம்தா விளங்கினான். 20 வயதை அடைந்ததும் அவனில் பெரும் மாற்றங்களையும் இயங்காற்றலையும் நான் கண்டேன். பொதுமக்கள் முன் லாகவமாகப் பேசும் அவனது திறன் காஸாவின் அல் அக்;ஸா தொலைக்காட்சியினால் நடத்தப்படும் 'நாளைய தலைமுறையை நோக்கி' நிகழ்ச்சியில் வரும் 'கார்க்கோர்' என்ற குறும்பு மிக்க கோழியின் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.


