Showing posts with label ashfaqullah khan - 2 - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label ashfaqullah khan - 2 - ashroff shihabdeen. Show all posts

Thursday, April 28, 2011

அஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 2

ஆங்கிலத்தில்
என்.பி.சங்கரநாராய ராவ்

இதோ பணம்!

அந்த ரயில் கடந்து சென்றதும் தங்களது பணியை மீண்டும் அவர்கள் ஆரம்பித்தார்கள். உலோகச் சத்தம் மீண்டும் அப்பிரதேசத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. இரும்புப் பெட்டி பிளக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணப் பைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த வேளையில் அனைத்துப் பயணிகளும் மௌனம் காத்திருந்தனர். அந்த ரயிலில் இருந்த பிரயாணிகளுள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் இருந்தனர். அவர்களிடம் கைத்துப்பாக்கிகள் இருந்தன. பெருந்தொகைக் கொள்ளையர்கள் இந்தக் கொள்ளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்களும் அமைதி காத்தார்கள்.

ஆண்களுக்கான ஒரு ரயில் பெட்டியில் புதிதாகத் திருமணம் செய்த ஓர் இளைஞனும் இருந்தான். அவன் திருமணம் செய்திருந்த மணப்பெண் பெண்களுக்கான பெட்டியில் இருந்தாள். அவளை நினைத்துக் கவலைப்பட்ட அந்த இளைஞன் தனது தலையை வெளியே நீட்டினான். புரட்சிக்கார இளைஞர்களில் ஒருவன் தனது துப்பாக்கியால் அவனைச் சுட அவன் ஸ்தலத்திலேயே இறந்துபோனான்.

ஏனையவர்கள் வேறு எந்த விடயங்களிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை. பெட்டி உடைக்கப்பட்டுப் பணப் பொதிகள் வெளியிலெடுக்கப்பட்டு அவை பெரிய ஜமுக்காள்களில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சிலர் அவற்றைத் தங்களது தலைகளில் சுமந்த வண்ணம் லக்னோ நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.

வெறும் பத்தே பத்து இளைஞர்கள் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் ஒழுங்குடனும் இந்தக் கடினமான காரியத்தில் ஈடுபட்டிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தின் மீதுள்ள காதல் அவர்களை இந்த அபாயமான காரியத்தில் ஈடுபடுத்திற்று. இந்தியத் தேசத்தின் சுதந்திரத்தை நோக்கிய போராட்டப் பாதையின் அழிக்கமுடியாத ஒரு அத்தியாயத்தை அவர்கள் எழுதினார்கள். ராம்பிரஸாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி, தாகுர் ரோஷான் சிங், சச்சீந்திர பக்ஷி, சந்ரசேகர அஸாத், கேஸாப் சக்ரவர்த்தி, பன்வாரி லால், முகுந்தி லால், மன்மதநாத் குப்தா, அஷ்பகுல்லாஹ் கான் ஆகியோரே அந்தப் பத்துப் பேருமாவர்.

சிங்கம் தப்பியது..!

காகோரி கொள்ளை நடைபெற்று ஒரு மாதம் கழிந்த பிறகும் யாரும் அகப்படவில்லை. ஆனால் அரசு மிகப் பரந்த அளவில் தனது வலையை விரித்து வைத்திருந்தது.

1925ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி ராம்பிரஸாத் கைது செய்யப்பட்டார். அஷ்பகுல்லாஹ் தனது வீட்டிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ள கரும்புச் சோலைக்குள் மறைந்திருந்தார். பொலிஸாரின் கண்களில் மண் தூவி விட்டு இரவில் மாத்திரம் அஷ்பக்குல்லாஹ்வுக்கு அவரது நண்பர்கள் உணவு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. பொலிஸ் அஷ்பகுல்லாஹ்வை தேடித் தேடி அலுத்தது. அஷ்பகுல்லாஹ்வின் சகோதரருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி அனுமதியை ரத்துச் செய்து அவரது துப்பாக்கியையும் பொலிஸார் பிடுங்கிக் கொண்டனர். அஷ்பாக்கைத் தவிர அனைவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். எனவே ஷாஜஹான்பூர் அருகே மறைந்திருப்பது ஆபத்தானது என்ற முடிவுக்கு அஷ்பாக் வர நேர்ந்தது. தனது வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

காசிக்குச் செல்லும் முடிவை அவர் எடுத்தார். தப்பிச் சென்ற சில புரட்சியாள நண்பர்கள் காசியில் இருந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று நினைத்தார். மிகவும் சிக்கலான ஒரு பயணத்தின் பின்னர் அவர் காசியை அடைந்தார். சில நண்பர்களை பனாரஸ் சர்வகலாசாலையில் சந்தித்தார். சில காலங்களுக்கு எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக வாழுமாறு அவர்கள் யோசனை சொன்னார்கள். இந்த நண்பர்களின் துணையுடன் அவர் பிகார் மாநித்தை அடைந்தார். அங்கு பலாமு மாவட்டத்தின் டால்டன்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பொறியியல் நிறுவனம் ஒன்றில் எழுதுவினைஞராக வேலையில் அமர்ந்தார். மதுராவில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தன்னை அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த நிறுவனத்தில் அவர் பத்து மாதங்கள் வேலை செய்தார்.