Showing posts with label ashfaqullah khan - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label ashfaqullah khan - ashroff shihabdeen. Show all posts

Monday, April 25, 2011

அஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 1

ஆங்கிலத்தில்:
என்.பி. சங்கரநாராயண ராவ்
 
  ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஏழாம் ஆண்டு டிஸம்பர் 19ம் திகதி. குளிர் காலமாதலால் சூரியன் தாமதமாகவே கிழக்கு வானில் எழுந்தான். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அவன் பொன்னிறக் கதிர்கள் வெது வெதுப்பையும் சந்தோஷத்தையும் அளித்தன.

அன்றைய சூரியோதயத்தின் போது பைஸாபாத் மாவட்டச் சிறைச்சாலை அதிகாரிகள் ஒரு மனிதனின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். அம்மனிதர் ஒரு புரட்சிகரப் போராளி.

சிறைச்சாலையின் மேலதிகாரிகளும் கீழ் நிலை அதிகாரிகளும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். பிரதான சிறையதிகாரி சுருக்குக் கயிற்றையும் மணல் மூட்டைகளையும் மற்றும் அவசியம் எனக் கருதப்பட்ட அனைத்தையும் மிகக் கவனமாகப் பரிசோதித்துப் பார்த்தார். ஏற்பாடுகளில் பூரண திருப்தியடைந்த அவர் உதவியாளரை அழைத்துக் குற்றவாளியைக் கொண்டுவரப் பணித்தார். உதவியாளர் பத்து ராணுவ வீரர்களுடன் அங்கிருந்து நகர்ந்தார். மரண தண்டனைக்குரிய மனிதன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கதவு எரிச்சலூட்டும் சத்தம் எழுப்பியபடி திறந்தது. அதுதான் அம்மனிதனுக்காக கதவு திறக்கப்பட்ட கடைசிச் சந்தர்ப்பமாகும்.

அந்த அறைக்குள் வீரம் மிக்க தேசாபிமானி அந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார். அவர் உற்சாகத் தொனியில் கேட்டார், “எல்லாம் தாயாரா?”

ஓர் ஆண் சிங்கம்

அவரது உறுதியான குரல் அவர் இறப்பதற்குத் தயாராக இருப்பதை எடுத்துக் காட்டியது. எனவே அவரை அழைத்துச் செல்ல வந்தவர்களுக்கு எவ்விதத் தயக்க உணர்வையும் அச்சூழ்நிலை ஏற்படுத்தவில்லை. எனினும் அந்த அதிகாரி இறுக்கமான மன நிலையுடன் ‘ஆம்’ என்று பதிலளித்தார். அம்மாவீரர் அதுவரை ஓதிக் கொண்டிருந்த குர்ஆனை மூடினார். அதனைத் தனது கைகளில் பற்றிக் கொண்டவராக எழுந்து நின்று சொன்னார், “நாம் போகலாம்.”

அவர் அகன்ற நெஞ்சும் ஆறடி உயரமும் கொண்டவர். எஃகு போன்ற உறுதியும் சிங்கத்தின் இதயமும் உடையவர். அவரது தாடி அவரது முகத்துக்கு மேலதிக கவர்ச்சியைத் தந்தது. எப்போதும் அவரது உதடுகளில்; படிந்திருக்கும் உறுதி மிகுந்த புன்னகை இந்த நிலையிலும் கூடப் பிரகாசித்தது.