Showing posts with label naip paasam - short story - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label naip paasam - short story - ashroff shihabdeen. Show all posts

Wednesday, April 20, 2011

நாய்ப் பாசம்

அந்நாய் எனது கவனத்தைக் கவர்ந்ததற்குக் காரணமிருந்தது.


அது ஒரு தெருநாய். அந்த நாயைப் போல சொறி பிடித்து உடம்பெல்லாம் வெள்ளைப் படை கொண்ட ஏராளமான நாய்களை நான் பலவிடங்களில் பலசந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். இதுவும் அவ்வாறான ஒரு நாய்தான். ஆனால் இதன் பின்னங்கால்கள் முன்னங் கால்களை விட நீளமாக இருந்தன. அதேவேளை அப்பின்னங்கால்கள் உட்புறமாக நீண்டிருந்ததால் குதியுயர்ந்த செருப்பு அணிந்து செல்லும் பெண்களுக்குப் போல் புட்டம் பின்பக்கமாக சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது. இதனால்தான் அந்த நாய் என் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்.

எனது வாகனத் திருத்த வேலைகளுக்காக அந்த இடத்துக்கு வந்திருந்தேன். ஒரு ‘ட’ வளைவில் வாகனத் திருத்தங்கள் மேற்கொள்ளும் ‘கராஜ்’ அமைந்திருந்தது. டானா வளைவின் மூலையில் மூன்று வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு அப்பால் நெருக்கடி மிகுந்த அந்தச் சந்துப் பகுதியின் அடுக்கு மாடி வீடுகளிலுள்ள குப்பை கூளங்கள் கொட்டப்பட்டிருந்தன. அம்மூலையில் நின்றால் இடது புறம் விளையாட்டு மைதானம். டானாவின் கிடைப் பகுதி முடியும் இடத்தில் தனியார் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் நெடுஞ்சாலை.

எனது வாகனத்தின் முன் சக்கரங்களைக் கழற்றி சத்தம் வருவதற்கான காரணத்தை அறிய காருக்குக் கீழே படுத்தபடி குடைந்து கொண்டிருந்தான் கராஜ் பையன். அது வரை நான் தெருப்புதினங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அந்த நாய் என் கண்ணில் பட்டது.

குதிகால் செருப்புப் பெண்களை ஞாபகப்படுத்துவதற்கு முன்னர் அந்த நாய் நடந்து சென்ற விதம் எனது அந்த நாளைய வாத்தியார் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் உதாரணங்காட்டுவதாக நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது. எனது ஆசான்களின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் குறிப்பிடும் வாத்தியார் ஒரு குதூகலப் பேர்வழி. இயல்பாகவே பெரிய புட்டம் கொண்ட அவர் சிவாஜி கணேசனைப் போல் ஸ்டைலாக நடக்க முற்பட்டதால் வந்தது வினை. சிவாஜி கணேசனைப் போல் நடப்பதாக நினைத்துக் கொண்டு முன்புறம் சற்றுக் கூனி தோள்களை அசைத்துக் கொண்டு அவர் நடந்து போனால் அவர் வேறாகவும் புட்டங்கள் வேறாகவும் தெரியும். பெரிய வகுப்பு மாணவர்கள் அவருக்கு ‘சிவாஜி’ என்று சிறப்புப் பட்டம் வைத்து அழைத்தனர்.

அந்த நாய் தெருவை அவ்வப்போது குறுக்கறுத்து நடந்து கொண்டிருந்தது. தெருவில் நடந்து சென்றவர்களின் அருகே அது நெருங்கியபோது முகச் சுழிப்புடன் விலகிச் சென்றார்கள். அதன் உடலைப் பார்க்க யாருக்கும் அருவருப்புத் தோன்றும். அந்த நாயின் அருவருக்கத்தக்க மேல் தோல் பெரிதாக என் கண்ணில் தெரியவில்லை. நான் அதன் நடையையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.