Wednesday, March 27, 2013

சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு



கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில்  'சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு' எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான  நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

தற்போது இலங்கையில் பொதுபல சேனா மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்கள் இனவாத மதவாத அமைப்புகள் முஸ்லிம்களின் இந்நீண்ட வரலாறுகளை பகிரங்கமாகவே மறுத்துவருவதுடன் மார்க்க கிரிகைகளையும் கலாசார விழுமியங்களையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மனிதத்தன்மையுடனும் நடுநிலை தன்மையுடனும் நடந்து கொள்ளும் நல்லுள்ளம் படைத்த பௌத்த மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காலத்தின் நிலவரங்களை கவனத்தில் கொண்டு மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாற்று உண்மைகளை வெளிகொண்டுவரும் நோக்கில் சிரேஷ்ட விரிவுரையாளரான  நன்த தர்மரத்ன அவர்கள் இக்கட்டுறையை எழுதியுள்ளார். அவர்களுக்கு எமது நன்றிகள்.

-தமிழில் எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி-

சகோதரத்துவம் எனும் உறவு சிங்கள முஸ்லிம்களுக்கிடையில் மிகவும் பிணைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது.

முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்கையில் பழங்காலங்தொட்டே இலங்கையுடனும் இலங்கையின் ஆட்சியாளர்களுடனும் உறவுகளை பேணி நடந்தமைக்கான சாட்சி வரலாற்றில் காணப்படுகிறது. அந்த உறவு பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் என இருவகைப் படுகிறது. 7-8 நூற்றாண்டு ஆகுகையில் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் வர்த்தகத்தை மையமாக வைத்து இந்நாட்டுடன் மிக பலமான உறவை கட்டியெழுப்பியிருந்தனர். அதுமட்டு மன்றி அராபியர்கள் இலங்கை பற்றி எழுதிய நூற்களை பார்க்கையில் அவர்கள் இலங்கை சம்பந்தமாக மிகவும் கவனம் செலுத்தியுள்ளதாக சாட்சி காணப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கம் வருவதற்கு முன் நீண்ட காலம் தொட்டே அரபியர்கள் எனும் முஸ்லிம் இனத்தவர்கள் இலங்கைப் பற்றி அறிந்திருந்தனர். கிரேக்கர்களும் ரோமர்களும் இந்நாட்டின் விடயங்களை அராபி பயணிகள் மூலமே அறிந்து கொண்டனர். அப்படியிருந்தும் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் மூலம் எழுதப்பட்ட நூற்களில் இலங்கைபற்றிய செய்திகள் இஸ்லாம் தோன்றிய பின்பே எழுதப்பட்டுள்ளது. முதலில் சுலைமான் என்பவர் மூலமே இந்நாடு பற்றி எழுதப்பட்டது. கி:பி: 950ம் ஆண்டு ஸில்ஸிலா அல்கவாரி எனும் நூலில் இலங்கைப்பற்றிய செய்திகள் உள்ளடக்கபட்டது. அதன் பின் இலங்கைப்பற்றி மிக முக்கிய வர்ணனைகள் வழங்கியவர் இப்னு பதூதா என்ற எழுத்தாளர் ஆவார். இவ்வெல்லா விடயங்களையும் உள்ளடக்கி 10ம் நூற்றாண்டில் மஸ்கினர் எனும் எழுத்தாளர் இன்னுமொரு நூலை எழுதினார் அதன் பின் மக்தஸி எனும் எழுத்தாளரும்  இலங்கைப்பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிற்காலத்தில் அபுல்தீதா போன்ற புவியிலாளர்கள் கூட இலங்கைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மிகவும் முக்கியமானவர் 15ம் நூற்றாண்டில் இந்நாட்டில் பயணித்தவரான இப்னு பதூதாவுடைய செய்தியாகும். குறிப்பாக 7ம் நூற்றாண்டு ஆகையில் மேற்கு திசை கடற்மார்கங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். தென் இந்தியாவில் சோழ பாண்டிய ஆட்சி விழுந்ததுடன் அராபிய ஆட்சி வளம் பெற்றது.

அதன் பலனாக கி:பி: 949ம் ஆண்டு ஆகையில் அராபிய கப்பல் வர்த்தக நிமித்தம்  இலங்கைக்கு வந்தனர். 8ம் நூற்றண்டிலிருந்து பெறுமளவில் முஸ்லிம்கள் இலங்கையில் வளர்ச்சியடைந்தனர். இலங்கையில் இருந்த இம்முஸ்லிமகள்  இலங்கை முஸ்லிம்கள் என்றும் கடலோரப்பகுதி முஸ்லிம்கள் என்றும் அறியப்பட்டனர்.



அராபிய ஆட்சி தென் இந்தியாவில் வளர்ந்ததன் பின்  முஸ்லிம்கள் வர்த்தகம் நிமித்தம் இலங்கைக்கு வந்தனர். அராபிய வர்த்தகர்கள் கொழும்பில் தங்கினர். 1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு நீண்ட காலத்திழற்கு முன்பே அரபியர்கள் இலங்கையின் கடலோரப்பகுதிகளில் முழுஉரிமையை பெற்றிருந்த அதேவேளை சிங்கள மன்னர்கள் மற்றும் சிங்கள மக்கள் ஆகியோருடன் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்தனர்;. அவர்கள் இலங்கையை ஸரன்தீப் என அழைத்தனர்.

இக்காலபப்பகுதியில் அராபிக் கடலின் கிழக்குப் பகுதியில் பிரதான வர்த்தக சந்தையாக 'கொள்ளம்' எனும் இடம் விளங்கியது. இந்த இடத்திலிருந்து இரு பாதைகள் விரிந்து இருந்தன என 9-10 ம்நூற்றாண்டுகளில் அராபிய கப்பலோட்டிகள் எழுதிய குறிப்புகளில் உள்ளன. இவ்விரு பாதைகளில் ஒரு பாதை மன்னார் விரிகூடாவிலிருந்து கங்கை நதி கலக்கும் இடம் வரையாகும். மற்றப்பாதை நிகோபார் தீவினூடாக விரிந்து இருந்தது. வடக்கு பாதை பயணத்தில் முக்கிய இடமாக வடக்கின் எல்லையே காணப்பட்டது.

அதுமட்டுமன்றி இலங்கை மண்ணில் பிறந்த அனைத்து தமிழர்கள் குறித்தும் முஸ்லிம் இனத்தவர்கள் கவனம் செலுத்தினர். அவர்கள் வாசனை பொருட்கள் உற்பத்தியினை வெளி நாடகளுக்கு கொண்டு சென்றனர். முஸ்லிம் வர்த்தக சமூகம் இலங்கையில் உறுவானது இவ்வாறு தான்.

இச்சமூகத்தின் விதவைகள் மற்றும் அனாதை பிள்ளைகளை தங்களது தாய் நாட்டுக்கு அனுப்புவதற்காக இலங்கை மன்னர் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைப் பற்றி 8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்பு குறிப்பிடுகின்றது. இதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் வர்த்தக சமூகத்தை எந்தளவு பாதுகாத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

ஆராபிய முஸ்லிம்கள் இலங்கையில் மாணிக்ககல் சம்பந்தமாக எப்போதும் முக்கிய கவனம் செலுத்தினர். அன்று இலங்கை 'மாணிக்ககல் தீவு' என்றே அறிமுகப் படுத்தப்பட்டது. அப்பெயருக்கு சமமான பெயராகவே 'ஜஸீரதுல் யாகூத்' என முஸ்லிம்கள அறிமுகப்படுத்ததினர். அவர்கள் முத்து வைரம் மாணிக்கம் சங்கு மிளகு சாம்புரானி போன்ற பெறுமதியுள்ள பொருட்களை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த முஸ்லிம்கள் இலங்கையில் பலாத்காரமாகவோ அல்லது ஆயுத பலத்துடனோ வாழ்ந்தவர்கள் அல்லர். இந்நாட்டு மன்னர்களின் அனுசரனையுடனும்  தனிப்பட்ட வியாபராத்தின் பிரதிபலன் காரணமாகவுமே வாழ்ந்தனர்.

இவ்வாறாக கடலோரப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றுவதற்கு சிங்கள மன்னர்கள் மதரீதியான சினேக உறவை கண்ணியப்படுத்தி இடம் கொடுத்தனர் என்றும் மதரீதியான சினேக உறவு சிங்கள ஆட்சியாளர்களிடம் தெளிவாக காணப்பட்டது என்றும் அராபிய வரலாற்றாசிரியர்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் இலங்கையில் மேற்கு கடலோரப்பகுதிகளில் பொருத்தமான இடங்களில் குறிப்பாக கழிமுகத்திற்கு  அண்மையில் சிங்கள மக்களினதும் ஆட்சியாளர்களினதும் பாதுகாப்பு மற்றும் அன்பை பெற்று வாழ்ந்தனர்.

கடலோரப்பகுதியில் வாழ்ந்நத முஸ்லிம்கள் ஸ்ரீபாத மலைக்கு பக்கத்திலுள்ள பகுதிகளில் மாணிக்க கல் உள்ள இடம் தேடும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். அவ்வாறான காரியம் இலங்கை மன்னர்களின் சம்பிரதாய அனுமதியுடனும் நாட்டு மக்கள் அவர்களுக்கு கொடுத்த உதவி ஒத்தாசைகள் மூலமே நடந்தவையாகும். அக்கால மக்கள் மார்க்கரீதியாக சமூக ரீதியாக எப்பேதமுமின்றி முஸ்லிம்களை வரவேற்றுள்ளனர் என்று இந்த வரலாறு மூலம் தெளிவாகின்றது.

(மத்தியக் கிழக்கில்) முஸ்லிம் ஆட்சி பலம்  யாபகூவ இராசதானியத்தின் போது மேலும் வியாபித்து பலமடைந்திருந்தது. யாபகூவ ஆட்சியாளரான முதலாம் புவனேகபாகு மன்னர் முஸ்லிம் நாடான எகிப்துடன் 1283ம் ஆண்டு வர்த்தக உடன் படிக்கையொன்றை செய்து கொண்டார். அன்று எகிப்து மக்களுக்கு இலங்கை வர்த்தக குழுவொன்று சிங்கள மன்னரின் தூதுவொன்றை எடுத்துச் சென்றது. அத்தூதில் 'இலங்னை என்றால் எகிப்து. எகிப்து என்றால் இலங்கை. என் தூதர்கள் திரும்பி வரும்போது எகிப்தின் தூதுவர் ஒருவர் அவர்களுடன் வருவார். என்னிடம் அனைத்து வகையான முத்து மாணிக்கங்கள் பெருமளவில் உள்ளன. கப்பல்கல் யானைகள் துணிமனிகள் கருவா போன்ற அனைத்து வர்த்தக பண்டங்களையும் உங்களுக்கு அனுப்புவேன். (தோமர் என்று சிங்களத்தில் கூறப்படும்)பலகையினால் செய்யப்படும் ஆயுதத்திற்கு  பொருத்தமான பலகையின் மரம் என் தேசத்தில் வளர்கிறது. வருடாந்தம் 20 கப்பல்களை அனுப்புமாறு சுல்தான் மன்னர் என்னிடம் கூறுவாரானால் அவைகளை வழங்குவதற்கு என்னால் முடியும். மன்னரின் ஆட்சியின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு எனது இராஜியத்தில் வர்த்தகம் புரிவதற்கு பூரண சுதந்திரம் உண்டு. எனக்கு சொந்தமான 29 மாளிகைகள் உண்டு அதிலுள்ள களஞ்சியசாலைகள் அனைத்து வகையான மாணிக்கங்களால் நிரம்பியள்ளன. சிப்பிகள் உள்ளன. அதிலிருந்து பெறப்படும் முத்துக்கள் எனக்கு சொன்தமானவை' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தன் மூலம் எமது நாடு முஸ்லிம் நாடுகளுடன்  நற்புறவை  ஏற்பட்டிருந்தது என்பது தெளிவாக காட்டுகிறது. இது அதற்கான ஒரு உதாரணம் மட்டுமே.

மும்மொழிகளில் எழுதப்பட்ட ஆவனமொன்று காலியில் கண்டெடுக்கப்பட்டது. அது சீன தமிழ் மற்றும் பார்சி மொழியில் எழுதப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இப்னு பதூதா இலங்கையின் ஸ்ரீபாத யாத்திரிகைக்கு வந்தபோது இலங்கை ஆட்சியாளரின் இராசதானிய நகரமான 'கோனகர்' நகரத்தினுடாக போகையில் அவருக்கு கூடுதல் உதவி ஒத்தாசைகள் செய்யப்பட்டதாக  சொல்லப்படுகிறது. இவ்வாறாக அக்காலத்தில் முஸ்லிம்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் அதிகளவிலான உறவு ஏற்பட்டு இருந்தது.

மேலும் புவனேபாகு மற்றும் போர்த்தகேயருடனான போரின் போது சீதாவக்கை இராசதானியத்தின் மன்னரான மாயாதுன்னைக்கு முழுமையான ஓத்துழைப்பினை வழங்கியவர்கள் 'செடோரின்' எனும் வர்த்தக குழுவாகும். செடோரின் என்பது முஸ்லிம்களாவர். இந்த வர்த்தக குலம் சீதாவக்கை இராசதானியத்துடன் வர்த்தக மற்றும் நட்புறவுவை பேணிவந்தது.

ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து இந்நாட்டைமீட்கும் சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம் தலைவரான .டீ. பி. ஜாயா அவர்கள் பாரிய பங்களிப்பினை வழங்கினார்கள். அன்று இந்நாட்டில் சிங்கள் தமிழ் முஸ்லிம் என்று பேதம் இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பாரிய பங்களிப்பை செலுத்திய டீ. பி. ஜாயா   அவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக கொழும்பு நகரத்தின் வீதியொன்றுக்கு அன்னாரின் பெயர் சூட்டப்பட்டது. அன்று இந்நாட்டு சிங்கள தலைவர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றினார் டீ.பி. ஜாயா அவர்கள்.

சாந்தி சமாதானத்தை பரவச் செய்து

குலவாத பேதத்தை நீக்கச் செய்து

சம உபகாரத்தை மேம்படச் செய்து

நாம் வளர்வோம் உயர்வோம் ஒன்று பட்டு.

அன்று சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் ஒரே உணர்வுடன் சகோதரத்துடன் இணைந்து பணியாற்றினார்கள். அந்த உறவின் ஆரம்பத்தை தேடும் பயணத்தில் வரலாற்றின் மூலம் வெளிப்படும் உண்மை இது.
------------------------------------------------------------
நன்றி - காத்தான்குடி இன்போ.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: