Showing posts with label சமநிலைச் சமுதாயம். Show all posts
Showing posts with label சமநிலைச் சமுதாயம். Show all posts

Thursday, January 29, 2015

மனத்தால் செழித்த மாண்பாளர்!


பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக நிறுவனரும் “சமநிலைச் சமுதாயம்” சஞ்சிகையின் நிறுவனரும் எழுத்தாளரும் கொடை வள்ளலும் வணிகருமான ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்களது நினைவாக அவரது வாரிசுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட “மனத்தால் செழித்த மாண்பாளர்” என்ற நினைவு மலர் வெளியீட்டு விழா பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினால் நடத்தப்பட்டது. 24.01.2015 அன்று காலை 10.00 மணிக்கு தி.நகர், ஜி.என். செட்டித் தெருவில் அமைந்துள்ள தி அக்கார்ட் மெட்ரோபோலிட்டன் ஙோட்டல் மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு முனைவர் சே.மு.மு. முகமதலி (பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செயலாரும்) தலைமை வகித்தார்.

அழைப்பிதழ் பக்கம் - 01

அழைப்பிதழ் பக்கம் - 02

அழைப்பிதழ் பக்கம் - 03

அழைப்பிதழ் பக்கம் - 04


மிக அழகிய முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த நினைவு மலர் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜியாரின் முழுமையான வாழ்வின் சிறப்பை எடுத்துக் கூறக் கூடியதாக அமைந்துள்ளது. அதியுச்ச சிறப்புப் பதிப்பாகவும் கையில் எடுத்ததும் படிக்கத் தூண்டும் விதத்திலும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மலரை முனைவர் சேமுமு. முகமதலி, முனைவர் ஹ.மு. நத்தர்ஷா, முனைவர் அகமது மரைக்காயர், கவிஞர் சடையன் அமானுல்லாஹ், சட்டத்தரணி ஷேக்தாவூத் ஆகியோர் தொகுத்துள்ளனர்.


மலரை வெளியிட்டு வைத்துச் சிறப்புரை நிகழ்த்தினார் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

ராஸிக் பரீத் ஜாபர்தீன், காஸிம் பரீத் ஜாபர்தீன், டாக்டர்  ஷபீக்கா பானு ஆகியோர் தமது தந்தையாரின் நினைவுகளை இம்மலரில் பகிர்ந்து கொண்டுள்ளனர் அன்னாரின் சகோதரர்களான ஏவி.எம். ஹாஜா மைதீன், அகமது கபீர் ஆகியோர் சகோதரர் பற்றிய நினைவுகளை மீட்டுள்ளனர்.

கவிஞர் தமிழன்பன்

திரு. வீரபாண்டியன்
எழுத்தாளர் ஜே.எம். சாலி, டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மத் இக்பால் ஆகியோர்  முறையே முன்னோடி ஏவி.எம்.ஜாபர்தீன், வர்த்தக ஆளுமைக்கு ஒரு முன்னோடி எனும் தலைப்பில் நினைவுகளை மீட்டியுள்ளனர்.

அப்துல் அஸீஸ் பாக்கவி

Thursday, June 12, 2014

ஜாபர்தீன் என்றொரு மாமனிதன்!


ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீனுடன் நான்

அன்பின் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜி,

முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

அல்லாஹ் உங்களை அழைத்துக் கொண்டான் என்ற தகவல் கிடைத்ததும் இங்கிருந்து புறப்பட்டு வந்து உங்கள் முகம் பார்த்து ஸலாம் சொல்ல முடியாமல் போனமைக்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

தாயும் சேயுமாக அண்மித்த தேசங்களாக இருந்த போதும் எட்டிக் கடக்கும் எல்லைகளில் இருந்த போதும் நினைத்தவுடன் புறப்பட்டு வரும் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழ்க்கை அமைந்ததானது நமக்கு வாழ்வில் நேர்ந்திருக்கும் துரதிர்ஷ்டங்கள்தாம்!

தங்களது வபாத் செய்தி பேராசிரியர் சேமுமு - ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழியாகக் காதை எட்டிய போது காலை ஒன்பதரை மணியிருக்கும். உங்களது அறிமுகம் கிடைத்ததற்கும் உங்களது வபாத்துக்குமிடையிலான பதினைந்து வருடகால உறவின் ஒவ்வொரு கணமும் எனக்குள் சுழல ஆரம்பித்தது. நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

தங்களது மறைவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் ஓரு பிராந்திய இலக்கிய மாநாடு சம்பந்தமாக அனுராதபுரம் சென்று திரும்பியிருந்தோம். அந்தப் பயணத்துக்கு நான் புறப்பட்ட போது அணிவதற்கென எடுத்துச் செல்லத் தெரிவு செய்த ஷேர்ட்களில் ஒன்று நீங்கள் எனக்கு அன்பளித்தது. விமானப் பயணங்களுக்கும் சிறப்பு விழாக்களுக்கும் மாத்திரம் அணியும் அந்த ஷேர்ட்டை பயணத்துக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே வைத்து விட்டேன். இதோ மடிப்புக் கலையாமல் அப்படியே அது என் கண் முன்னால் இருக்கிறது, உங்களது நினைவுகளைப் போலவே!


நான், ஜே.எம்.சாலி, ஹாஜி ஏவி.எம், அல் அஸூமத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது (சமநிலைச் சமுதாயம் காரியாலயத்தில்)

1999ம் ஆண்டு சென்னைப் பிரசிடன்ட் ஹோட்டலில் உங்களை முதன் முதலாகப் பார்த்தேன். ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை வாழ்நாளில் இரண்டாவது முறையாகவும் இலங்கைக்கு வெளியே முதலாவது முறையாகவும் நான் கண்ட சந்தர்ப்பம் அது. மூன்றாவது தினம் இறுதி நிகழ்வுகளுக்கு முன்னர் மேடை ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் உங்கள் மீது எனது கவனம் வெகுவாக ஈர்க்கப்படுகிறது. கீழே இறங்கி வந்த உங்களை நானும் ஜின்னாஹ்வும் எதிர் கொண்ட போது எங்களைப் பார்த்துத் தரித்து மலர்ந்து புன்னகைக்கிறீர்கள். ஆர்வமேலீட்டால் உங்களை அறிமுகப்படுத்துமாறு டாக்டர் ஜின்னாஹ்விடம் கேட்கிறேன். நீங்கள் புன்னகை மாறாமல் அப்படியே தரித்து நிற்க ஜின்னாஹ் என்னைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டார்:- 'ஹாஜி ஜாபர்தீன்...! இவரைத் தெரிந்து கொள்ளாமலா மூன்று தினங்களாக இங்கிருக்கிறீர்கள்..? இந்த மாநாட்டை நடத்தும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளர்!'

அந்த மாநாட்டில் நீங்கள் எல்லாமாக இருந்தீர்கள் என்பதைப் பின்னாளில் நான் அறிந்து கொண்டேன். அம்மாநாட்டைப் பொறுத்தவரை நீங்களும் சேமுமுவும் செய்த நிர்வாகம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. ஆனால் உங்களது செயற்பாடுகள்; பின்னாளில் நடந்த மாநாடுகள் சிலவற்றில் போல துருத்திக் கொண்டோ இடறிக் கொண்டோ உங்களையே பிரேமுக்குள் வைத்துக் கொண்டோ அமைந்திருக்கவில்லை என்பதுதான் என்னை இன்னும் இன்னும் உங்களருகே இழுத்து வந்து சேர்த்தது என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் நடத்திக் காட்டிய அந்த மாநாடுதான் அடுத்த மூன்றாவது வருடத்தில் இலங்கையில் கோலாகலமாக ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தும் எண்ணத்தையும் ஆர்வத்தையும் எனக்குள் விதைத்தது. உங்களுடன் இலக்கிய மாநாடுகள் பற்றிப் பேசும் போதெல்லாம் இதைச் சொல்லியிருக்கிறேன். அதற்கும் உங்களிடமிருந்து வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததில்லை, அந்த... அதே புன்னகைதான்!

இலங்கைக்கு வருகை தந்து விட்டால் எம்மீது அளவு கடந்த பாசமும் நேசமும்காட்டும் சில படைப்பாளிகளும் படிப்பாளிகளும் இரண்டுங்கலந்த சிலரும் நாம் தமிழகத்துக்கு வருந்தோறெல்லாம் கண்டு கொள்ளாமல் போய்க்கொண்டேயிருப்பார்கள். ஆனால் வருந்தோறெல்லாம் வரவேற்று உபசரித்துக் கண்ணியமும் மரியாதையும் வழங்கும் ஒரு சிலரில் நீங்கள் முதன்மையானவராக இருந்தீர்கள். இந்த அரிய பண்புதான் உங்களை எனது மனதில் அழிக்க முடியாத ஓர் இடத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது.

2002ம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய மாநாடு பற்றிய அறிவிப்பு விடுவதற்காகவும் கலந்துரையாடுவதற்காகவும் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தோம். வந்த அடுத்த தினமே முக்கியஸ்தர்கள் அனைவரையும் உங்களது இல்லத்துக்கு அழைத்து எங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தந்துவிட்டீர்கள். செய்யிது முகம்மது ஹஸன், கவிக்கோ, பேரா. சேமுமு, பேரா. அகமது மரைக்காயர், பேரா. நஸீமா அகமது என்று அழைத்து எங்களையும் இணைத்து ஒரு மாலைப் பொழுதிலேயே எங்கள் பணியை இலகுவாக்கித் தந்துவிட்டீர்கள். அடுத்த தினமே பிரசிடன்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து தந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினீர்கள். மாநாடு முடியும் வரை பெரும் பக்கபலமாக இருந்து எங்களுக்கு வழிகாட்டினீர்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்ல முடியாமல் நாங்கள் திக்குமுக்காடினோம்.

2002 கொழும்பு மாநாட்டின் இரண்டாம் ஓர் இடைவெளியில் சந்தித்துக் கொண்டோம். 'சமநிலைச் சமுதாயம்' என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிடப்போவது பற்றி அந்த வேளை பேசினீர்கள். 'நம்ம சஞ்சிககைகள் ஒன்று பூமிக்குக் கீழே உள்ளவற்றைப் பேசுகின்றன அல்லது வானத்துக்கு மேலே உள்ளவற்றைப் பேசுகின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட உலகில் நமது கதியென்ன, நிலையென்ன என்று யார் பேசுவது? எப்போது பேசுவது? அதைத்தான் இந்தச் சஞ்சிகை செய்யும்!' என்று நீங்கள் சொன்ன போது நமது சமூகம் பற்றிய தெளிவான உங்கள் சிந்தனையை எனக்குள் ஓர் ஒளியைப் பாய்ச்சியது.

Saturday, February 2, 2013

சினிமாவும் முஸ்லிம்களும்...!



முஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா என்ற தலைப்பில் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி உரையாடல்கள் என முடுக்கிவிடப்பட்டிருந்த எதிர்ப்பியக்கம் தீவிரத் தன்மை பெற்றுள்ளது.

'துப்பாக்கி' திரைப்படம் வெளியான உடன் இதுபோன்ற சர்ச்சைகளும், எதிர்க்குரல்களும் ஓங்கி ஒலித்ததன் விளைவாக, அப்படக்குழுவினர் முஸ்லிம் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமரசப்பேச்சுக்கு முன்வந்ததோடு, மன்னிப்பும் கேட்டனர். ‘இனி இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் படம் எடுக்க மாட்டோம்’ என உறுதியும் அளித்தனர். அந்த வெற்றிதந்த உற்சாகமே, தற்போது விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பைத் திருப்பியுள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அண்மையில் நடிகர் கமல்ஹாசனை இருமுறை சந்தித்துள்ளனர். விஸ்வரூபம் வெளியிடப்படும் முன் தங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, படம் வெளியாவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக திரையிட்டுக் காட்டுகிறேன் என உறுதியளித்தார் கமல். அதன்படி கடந்த 21-01-2013 அன்று மாலை படத்தைப்போட்டுக் காட்டினார். படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு அதன் காட்சி அமைப்பு இருந்தது. உடனே களமிறங்கிய கூட்டமைப்பினர் விஸ்வரூபத்தைத் தடைசெய்ய வேண்டும் என முழங்கினர். சட்டம் ஒழுங்கிற்கும், சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் விஸ்வரூபம் இருப்பதால் தமிழகத்தில் அப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஒட்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

திரைப்படங்களில் முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கும் போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து செய்யப்படும் இவ்வாறான எதிர்வினைகள் வரவேற்கத்தக்கதே என்றாலும், பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்வைக் காண்பதற்கு யாருமே முயலவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிப்பது என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நோய் ஆகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகளால் செய்யப்படும் பரப்புரைகள். இன்னொன்று, முஸ்லிம்கள் குறித்த சரியான புரிதலின்மை. ஊடகங்கள் எதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனவோ, அதையே உண்மையென நம்பும் பொதுப்புத்தியும் இத்தகைய நிலைக்கு மற்றுமோர் காரணமாகும்.

ஒருமுறை விஜயகாந்தைச் சந்தித்து விரிவான உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ’உங்கள் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், ‘பேப்பர்ல அப்படித்தானே வருது’ என்று பதில் கூறினார். எங்களுக்கு விஜயகாந்தின் மீது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது.

இதுதான் மணிரத்னம், கமல் போன்றவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான வேறுபாடு.

மணிரத்னம், கமல் போன்றவர்கள் அமெரிக்காவைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைத் திட்டமிட்டு செய்பவர்கள். விஜயகாந்த் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி அதன் அடிப்படையில் செயல்படுபவர். இதில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசுவதன் மூலமும், முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை அவருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் நிலைமையை சரிசெய்து விடமுடியும். ஆனால், மணிரத்னத்தையும், கமலையும் அவ்வாறு செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அஞ்சி நேரடியான காட்சிகளை வைப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கினாலும், ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் வெறுப்பை அவர்கள் ஊடகத்தின் வழியே விதைத்துக் கொண்டேதான் இருப்பர். அவர்கள் போன்ற சிந்தனை உடையவர்கள் பல நூறுபேர் சினிமாவில் உள்ளனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் கொடி தூக்கிக் கொண்டே இருக்கவும் முடியாது.

அப்படியெனில் என்னதான் செய்வது? இதற்கு என்னதான் தீர்வு?