Tuesday, April 19, 2011

அமைதியான பெரிய வீடு

ஒரு மனிதன் தனது வீடு சிறியது என்றும் சத்தம் நிறைந்தது என்றும் எண்ணிக் கவலை கொண்டிருந்தான். நகரத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த அனுபவம் மிக்க மூதாட்டியொருத்தி யிடம் தனது கவலையைச் சொல்லி ஆலோசனை கேட்டான். “உனது பிரச்சினையை நான் தீர்த்து வைக்கி றேன். ஆனால் நான் சொல்வது போல் நீ கேட்டு நடக்க வேண்டும்” என்று சொன்னாள் மூதாட்டி. அம் மனிதனும் அதை ஏற்றுக் கொண்டான்.


“ஒரு கோழி, ஒரு குதிரை, ஒரு பசு, சில ஆடுகளை நீ உள் வீட்டுக்குள் வைத்து வளர்க்க வேண்டும்” என்றாள் மூதாட்டி.

 “இது சின்ன விசயம்தானே!” என்று சொல்லிச் சென்ற அம்மனிதன் அப்படியே செய்தான்.

சில நாட்களில் ஏற்கனவே அவனது சிறிய வீட்டுக்குள் இவற்றையும் வைத்துக் கட்டி மாள்வது அவனுக்குப் பெரும் துயராக மாறியது. அவை யாவற்றையும் வீட்டுக்குள் எடுத்ததும் நகரக் கூட இடமின்றித் தவித்தான். அவற்றின் சத்தங்களை அவனால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

சில வாரங்கள் பொறுத்துப் பார்த்த அவன் இனிமேல் பொறுக்க முடியாது என்று தீர்மானித்து நகருக்கு மூதாட்டியைச் சந்தித்துத் தனது நிலைமையைச் சொன்னான்.

 “அவை அனைத்தையும் வீட்டுக்குள்ளிருந்து அப்புறப்படுத்து” என்று அவனுக்குச் சொன்னாள் மூதாட்டி.

திரும்பிய அவன் அவசர அவசரமாக ஒரு தொழுவத்தை அமைத்தான். அனைத்து மிருகங்களையும் அதற்குள் கொண்டு வந்து விட்டான். மீண்டும் அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் ஆச்சரியமாக உணர்ந்தான்.

வீடு அமைதியாகவும் இடவசதியுள்ளதாகவும் இருந்தது.

(கிழக்கைரோப்பிய நாட்டார் கதை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: