Tuesday, April 5, 2011

வாயால் கெடும்!

ஒரு வேட்டைக்காரன் காடு முழுக்க அலைந்து திரிந்து விட்டு ஒரு பெரும் மர நிழலில் ஒதுங்கினான். அந்தப் பெரிய மரத்தின் அடிவாரத்தில் ஒரு மண்டையோட்டை அவன் கண்டான். அந்த மண்டையோடு வேட்டைக்காரனுடன் பேசியது.


“இதோ பார்... உனக்கு முன்னால் தெரியும் மலைக்கு அப்பால் ஏராளமான சுரைக்காய்கள் காய்த்துக் கிடக்கின்றன. உனது கிராமத்தவரை அழைத்து வந்து அவற்றைப் பிடுங்கி உங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் இதை எப்படி நீ கண்டுபிடித்தாய் என்று கேட்டால் அதைச் சொல்லி விடாதே” என்றது.

“நீ இந்த இடத்தில் ஏன் கிடக்கிறாய்?” என்று வேட்டைக்காரன் மண்டையோட்டிடம் கேட்டான்.

“எனது வாய் என்னைக் கொன்று விட்டது” என்று மட்டும் மண்டையோடு சொன்னது.

வேட்டைக்காரன் மலை கடந்தான். ஏராளமான சுரைக்காய்களுடன் கிராமத்தையடைந்து கிராமத்தவர்களிடம் விடயத்தைச் சொன்னான். “பேசும் மண்டையோடு எனக்கு இவை இருக்குமிடத்தைச் சொன்னது” என்றான். கிராமத் தலைவன் வேட்டைக்காரனைப் பொய்யன் என்று சொன்னான்.

“அப்படியானால் என்னுடன் வாருங்கள். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கிராமத்தவரை மண்டையோடு கிடக்குமிடத்துக்கு அழைத்து வந்தான். மண்டையோட்டைப் பார்த்து அவன் பேசினான். ஆனால் மண்டையோட்டிடமிருந்து எந்தச் சலனமும் இருக்கவில்லை. கோபமடைந்த கிராமத்தவர்கள் வேட்டைக்காரனை அந்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட்டனர்.

இப்போது அந்த இடத்தில் இரண்டு மண்டையோடுகள் கிடந்தன.

முதலாவது மண்டையோடு மற்றதைப் பார்த்து “பார்த்தாயா மரணத்தில் நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம்” என்றது.

“வாய்தான் இதற்குக் காரணம் என்பது உண்மை” என்றது இரண்டாவது மண்டையோடு,

(மேற்காபிரிக்க நாட்டார் கதை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Mohamed Faaique said...

கருத்துள்ள சுவையான கதை....

Word varification'ஐ எடுத்து விடுங்கள்... கருத்துரை சொல்ல இலகுவாக இருக்கும்