Thursday, April 28, 2011

அஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 2

ஆங்கிலத்தில்
என்.பி.சங்கரநாராய ராவ்

இதோ பணம்!

அந்த ரயில் கடந்து சென்றதும் தங்களது பணியை மீண்டும் அவர்கள் ஆரம்பித்தார்கள். உலோகச் சத்தம் மீண்டும் அப்பிரதேசத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. இரும்புப் பெட்டி பிளக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணப் பைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த வேளையில் அனைத்துப் பயணிகளும் மௌனம் காத்திருந்தனர். அந்த ரயிலில் இருந்த பிரயாணிகளுள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் இருந்தனர். அவர்களிடம் கைத்துப்பாக்கிகள் இருந்தன. பெருந்தொகைக் கொள்ளையர்கள் இந்தக் கொள்ளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்களும் அமைதி காத்தார்கள்.

ஆண்களுக்கான ஒரு ரயில் பெட்டியில் புதிதாகத் திருமணம் செய்த ஓர் இளைஞனும் இருந்தான். அவன் திருமணம் செய்திருந்த மணப்பெண் பெண்களுக்கான பெட்டியில் இருந்தாள். அவளை நினைத்துக் கவலைப்பட்ட அந்த இளைஞன் தனது தலையை வெளியே நீட்டினான். புரட்சிக்கார இளைஞர்களில் ஒருவன் தனது துப்பாக்கியால் அவனைச் சுட அவன் ஸ்தலத்திலேயே இறந்துபோனான்.

ஏனையவர்கள் வேறு எந்த விடயங்களிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை. பெட்டி உடைக்கப்பட்டுப் பணப் பொதிகள் வெளியிலெடுக்கப்பட்டு அவை பெரிய ஜமுக்காள்களில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சிலர் அவற்றைத் தங்களது தலைகளில் சுமந்த வண்ணம் லக்னோ நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.

வெறும் பத்தே பத்து இளைஞர்கள் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் ஒழுங்குடனும் இந்தக் கடினமான காரியத்தில் ஈடுபட்டிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தின் மீதுள்ள காதல் அவர்களை இந்த அபாயமான காரியத்தில் ஈடுபடுத்திற்று. இந்தியத் தேசத்தின் சுதந்திரத்தை நோக்கிய போராட்டப் பாதையின் அழிக்கமுடியாத ஒரு அத்தியாயத்தை அவர்கள் எழுதினார்கள். ராம்பிரஸாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி, தாகுர் ரோஷான் சிங், சச்சீந்திர பக்ஷி, சந்ரசேகர அஸாத், கேஸாப் சக்ரவர்த்தி, பன்வாரி லால், முகுந்தி லால், மன்மதநாத் குப்தா, அஷ்பகுல்லாஹ் கான் ஆகியோரே அந்தப் பத்துப் பேருமாவர்.

சிங்கம் தப்பியது..!

காகோரி கொள்ளை நடைபெற்று ஒரு மாதம் கழிந்த பிறகும் யாரும் அகப்படவில்லை. ஆனால் அரசு மிகப் பரந்த அளவில் தனது வலையை விரித்து வைத்திருந்தது.

1925ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி ராம்பிரஸாத் கைது செய்யப்பட்டார். அஷ்பகுல்லாஹ் தனது வீட்டிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ள கரும்புச் சோலைக்குள் மறைந்திருந்தார். பொலிஸாரின் கண்களில் மண் தூவி விட்டு இரவில் மாத்திரம் அஷ்பக்குல்லாஹ்வுக்கு அவரது நண்பர்கள் உணவு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. பொலிஸ் அஷ்பகுல்லாஹ்வை தேடித் தேடி அலுத்தது. அஷ்பகுல்லாஹ்வின் சகோதரருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி அனுமதியை ரத்துச் செய்து அவரது துப்பாக்கியையும் பொலிஸார் பிடுங்கிக் கொண்டனர். அஷ்பாக்கைத் தவிர அனைவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். எனவே ஷாஜஹான்பூர் அருகே மறைந்திருப்பது ஆபத்தானது என்ற முடிவுக்கு அஷ்பாக் வர நேர்ந்தது. தனது வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

காசிக்குச் செல்லும் முடிவை அவர் எடுத்தார். தப்பிச் சென்ற சில புரட்சியாள நண்பர்கள் காசியில் இருந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று நினைத்தார். மிகவும் சிக்கலான ஒரு பயணத்தின் பின்னர் அவர் காசியை அடைந்தார். சில நண்பர்களை பனாரஸ் சர்வகலாசாலையில் சந்தித்தார். சில காலங்களுக்கு எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக வாழுமாறு அவர்கள் யோசனை சொன்னார்கள். இந்த நண்பர்களின் துணையுடன் அவர் பிகார் மாநித்தை அடைந்தார். அங்கு பலாமு மாவட்டத்தின் டால்டன்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பொறியியல் நிறுவனம் ஒன்றில் எழுதுவினைஞராக வேலையில் அமர்ந்தார். மதுராவில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தன்னை அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த நிறுவனத்தில் அவர் பத்து மாதங்கள் வேலை செய்தார்.

 
காட்டிக் கொடுத்த நண்பன்

அஷ்பாக் இயல்பிலேயே கவிஞனாக இருந்தார். உருதுவில் கவிதை எழுதும் வழக்கம் அவருக்கிருந்தது. கவிஞர்கள் உருதுவில் செய்யுள்களை இயற்றி அவற்றை முஷாயிராக்களில் பாடுவது வழக்கம். முஷாயிராக்கள் கவிஞர்களின் மேடை. அஷ்பாக் வேலை செய்த பொறியியல் நிறுவனர் கவிதைப் பித்துக் கொண்டவர். அஷ்பாக் செய்யுள்களை இயற்றிப் பாடுவதை அறிய வந்ததும் அஷ்பாக் குறித்துப் பெருமைப்பட்டார். அங்கு முஷாயிரா ஏற்பாடுபாடு செய்யப்பட்ட போது அஷ்பாக் தான் இயற்றிய கவிதைகளை அதில் பாடியும் காட்டினார். அந்தக் கவிதைகளைச் செவிமடுத்த மக்கள் மகிழ்ச்சியுற்று ஆரவாரம் செய்து தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். பொறியியல் நிறுவனர் அஷ்பாக்கின் சம்பளத்தை மேலும் அதிகரித்து வழங்கினார்.

இவ்வாறான ஊக்கம் தருகின்ற ஒரு சூழலில் அஷ்பாக் தனது ஹிந்தி மொழி அறிவை மேம்படுத்திக் கொண்டார். அத்துடன் பெங்காலி மொழியையும் கற்றுக் கொண்டார். ஹிந்தி மற்றும் உருதுப் பாடல்களை மட்டுமன்றி பெங்காலிப் பாடல்களையும் பாடக் கூடியவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார். தான் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டால் போதும், மீதி வாழ்வையும் டால்டன்கஞ்சிலேயே கழித்து விடலாம் என்று எண்ணினார். ஆனால் திணிக்கப்பட்ட இந்த ஓய்வும் வாழ்வும் அவரைச் சலிப்புக்குள்ளாக்கியது. கொஞ்சக் காலத்துக்கு வேறு ஏதாவது நாட்டில் வாழ்ந்தால் நல்லது என்று அவருக்குத் தோன்றியது. அவ்வாறு சென்று பொறியியல் துறையில் கற்றுத் திரும்பினால் நாட்டுக்கும் தனக்கும் நல்லது என்று நினைத்தார்.

வெளிநாட்டுக்குச் செல்வதற்கான வழிவகைகளையும் ஏற்பாடுகளையும் செய்வதற்காக டெல்லிக்குச் சென்றார். அங்கு ஷாஜஹான்பூரைச் சேர்ந்த பத்தான் நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அந்த நண்பர் அஷ்பாக்கின் பாடசாலைத் தோழர்களில் ஒருவர். அஷ்பாக்கை நீண்ட காலத்துக்குப் பின்னர் சந்தித்தில் நண்பர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அஷ்பாக்கைத் தனது தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நண்பர் அஷ்பாக்குக்கு ஒரு விருந்தும் வழங்கினார். இரவு பதினொரு மணிவரைத் தங்களது கடந்த கால நினைவுகளை அவர்கள் மீட்டி மகிழ்ந்தார்கள். அதன் பின்னர் அஷ்பாக் தான் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பினார்.

அடுத்த நாட் காலை அஷ்பாக் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார். திடீரென அவர் தங்கியிருந்த அறையின் கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. அரைகுறை நித்திரை மயக்கத்துடன் கதவைத் திறந்தார். பொலிஸ் நின்றிருந்தது. பணத்தின் மீது பேராசை பிடித்த நண்பனின் நட்பு அவரை பொலிஸ் வலைக்குள் வீழ்த்தியது. அன்புடன் விருந்து வழங்கியவன், கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அந்த நண்பன் பொலிஸாருக்கு தன்னைக் காட்டிக் கொடுத்திருப்பதை உணர்ந்தார் அஷ்பாக்.

அஷ்பாக்கிடமிருந்து மேலும் தகவல்களைப் பெறுவதற்கு பொலீஸார் எண்ணினார்கள். அதற்காகப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டார்கள். பொலிஸில் இராணுவ அதிகாரி ஒருவர் இருந்தார். அவரது பெயர் தசாத்ருக் கான். முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷாரின் ஏஜன்டாக அரேபியாவில் செயல்பட்டவர் அவர். பொலிஸ் சுப்ரின்டன்ட் பதவி வழங்கப்பட்ட மிகச் சில இந்தியர்களில் அவரும் ஒருவர். சிறையில் அஷ்பகுல்லாஹ்வைச் சந்தித்து அவரை இணக்கத்துக்குக் கொண்டு வர அவர் முயற்சிகள் செய்தார். “இந்துக்கள் அவர்களது இழந்த சாம்ராஜ்யத்துக்காகப் போராடுகிறார்கள் இந்த விடயத்தில் ஏன் முஸ்லிம்கள் ஈடுபடவேண்டும்? நமக்கு எந்த விதத்திலும் லாபமற்ற ஒரு விடயத்துக்காக எதற்காக அபாயமான காரியங்களில் ஈடுபட வேண்டும்? இந்த விடயங்களில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டிய அவசியமே கிடையாது. இப்போது கூட நீ எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை விளங்கிக் கொண்டால் நான் உனக்கு உதவி செய்யலாம்.” இவ்வாறு அந்த இராணுவ அதிகாரி அஷ்பாக்கை வேறு வழிக்குத் திருப்ப எத்தனித்தார்.

ஆனால் அஷ்பாக் அவரது புத்திமதியை விரும்பவில்லை. அந்தப் புத்திமதியைச் கெட்ட நோக்கம் கொண்ட புத்திமதியாகக் கருதினார். தசாத்ருக் கான் பேசி முடிந்த பிறகு அஷ்பாக் சொன்னார்:- “கான் சாஹிப்! பிரிட்டிஷ் இந்தியாவை விட ஹிந்து இந்தியா சிறப்பானதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!”

பிரிட்டிஷ் நீதி மன்றம்

இவ்வாறு பல வழிகளிலும் அஷ்பாக்கைத் திசை திருப்ப பொலிஸ் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன. எனவே நீதி மன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார்கள். இதே வேளை காகோரி கொள்ளை குறித்து முன்னேற்றம் காணப்பட்டது. அஷ்பாக்கின் வழக்கையும் இந்தக் கொள்ளையுடன் இணைத்தார்கள். பிரதான வழக்கிலிருந்து குற்றம் சுமத்தப்பட்டவர்களைப் பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் தந்தையான் பண்டிதர் மோதிலால் நேரு இக்குழுவுக்குத் தலைமை வகித்தார். மிக முக்கியமான பிரமுகர்கள் இக்குழுவில் அங்கம் வகித்தார்கள். ஜவஙர்லால், சிறிப்ரகாஷ, ஆச்சார்ய நரேந்திர தேவா, கோவிந்த பல்லப் பாண்ட், சந்ரபானு குப்தா போன்ற முக்கியஸ்தர்களே அவர்களாவர்.

அஷ்பக்குல்லாஹ்வின் வழக்கில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட வேளையில் பகல்பூரில் சச்சீந்திர பக்ஷி கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுப் பின்னர் அஷ்பக்குல்லாஹ்வுடன் இணைத்து ஒரு வழக்காக செஷன் நீதி மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இருவரும் ஒருவரையொருவர் அறியாதவர் போல் நடந்து கொள்ள முயற்சித்தார்கள். ஆனால் இருவரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி மிக நெருங்கிய நண்பர்களுமாவர். இருவரையும் ஒரே வழக்கின் கீழ் கொண்டு வந்ததால் இருவரும் நீதி மன்றில் சந்திக்க வேண்டியிருந்தது. இருவருக்குமே ஆளையாள் அறியாதவர் போல் பாசாங்கு பண்ண முடியவில்லை. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருவரும் அணைத்துத் தழுவிக் கொண்டார்கள்.

சிறையில் மிகுந்த மார்க்க பக்தியுள்ள மனிதனாக வாழ்ந்தார் அஷ்பாக். தாடி வளர்த்தார். தவறாமல் தொழுகையில் ஈடுபட்டு வந்தார். ரமளான் மாதத்தில் தவறாமல் நோன்பு நோற்றார். அவ்வப்போது நண்பருடன் இறைபக்தி குறித்துக் கருத்துப் பரிமாறினார். சச்சீந்ர பக்ஷி கடவுள் நம்பிக்கையற்றவர். ‘கண்ணுக்குத் தெரியாத அதியுச்ச வல்லமை என்ற ஒண்டு உண்டு. இந்த உலகத்தை விடப் பெரிய அந்த சக்தி நமக்கு மேல் உள்ளது. இது எனது நம்பிக்கை. நீ என்னுடன் உடன்படமாட்டாய் என்று எனக்குத் தெரியும். மதம் என்பது மூழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட உரிமை’ என்று அடிக்கடி சொல்பவராக இருந்தார் அஷ்பாக். மத நம்பிக்கை என்பது இறைவனையும் மனிதனையும் இணைக்கும் பாலம் என்று அஷ்பாக் எண்ணினார். இந்த விடயங்கள் வெறுமனே தெருவில் கதைப்பதைப் போன்ற சமாச்சாரம் இல்லை என்றும் கருதினார்.

காகோரி ரயில் கொள்ளை வழக்கும் அதனோடிணைந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் அதிபத்தியத்தின் கீழ் செயற்பட்ட நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கியது. ராம்பிரஸாத் பிஸ்மில், அஷ்பகுல்லாஹ் கான், ராஜேந்திர லஹிரி, ரோஷான் சிங் ஆகியோருக்கு மரண தண்டனையும் ஏனையோருக்கு ஆயுள் தண்டனையும் தீர்ப்பாக வழங்கப்பட்டது.

மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக முழு நாடும் கொதித்தெழுந்தது. மத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று வைஸ்ராயிடம் வேண்டுகோள் விடுத்தனர். பிரிவியூ கவுன்ஸில் என்று அழைக்கப்பட்ட அந்நாளைய உச்ச நீதிமன்றுக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் இரத்தத்தைக் குடிக்கும் தாகத்துடன் இருந்தது.

‘மரணம் ஒரு முறையே வருகிறது. அதற்காக ஏன் பயப்பட வேண்டும்?’

அஷ்பகுல்லாஹ் அவரது பாடல்களில் ஒனறில்; பாடினார். இதுவே எல்லாப் புரட்சியாளர்களதும் நம்பிக்கையாக இருந்தது. மரண தண்டனை வழங்கப்பட்ட நால்வரும் உதடுகளில் புன்னனை மிளிர மரணத்தைத் தழுவினார்கள். அவர்களிடம் இருந்ததெல்லாம் ஒரேயொரு ஆசைதான். மீண்டும் இந்தியாவில் பிறந்து அதன் சுதந்திரத்துக்காகப் போரிட வேண்டும் என்பதுதான்!
இவ்வாறுதான் அவர்கள் தேசத் தியாகிகளானார்கள்!
 
  கவிதை ஏற்படுத்திய சுதந்திர வேட்கை

அஷ்பாக்கும் ராம்பிரஸாத்தும் புரட்சியாளர்களாக இருந்தது போலவே கவிஞர்களாகவும் இருந்தார்கள். அஷ்பாக் தனது கவிதைகளை அதிகமாக உர்துப் பாஷையிலும் சிலவற்றை ஹிந்தியிலும் எழுதினார். அவருக்கு ‘வரஸி’, ‘ஹஸ்ரத்’ என்று இரண்டு புனைப் பெயர்கள் இருந்தன. ஒரு கவிதையில் அவர் முறையிடுகிறார்:- ‘ஐயோ... எங்களையே நாங்கள் அடக்கி நசுக்குகிறோம்... நம்மை அடக்கியாள்வோர் ஆங்கிலேயரோ ஜேர்மனியரோ ரஷ்யரோ அல்லது துருக்கியரோ அல்லர். இந்தியர்கள் தம்மைத்தாமே நசுக்கிக் கொள்கிறார்கள்.’ மற்றொரு கவிதையில், ‘ஓ... எனது தாய்நாடே... நான் உனக்குச் சேவகம் புரிவதற்காகவே வாழ்கிறேன்... ஆயுள் தண்டனையானால் என்ன... மரண தண்டனையானால் என்ன... கைகளைப் பிணைத்துள்ள விலங்குகளுடன் பெருமிதத்தைப் பாடுவேன்...’ என்று சொல்கிறார்.
ஒரு நெடுங் கவிதையில் அஷ்பாக் பின்வருமாறு பாடுகிறார்:-

‘யுத்த களத்தில் வாழ்வும் மரணமும் அநித்தியமானவை என்று கிருஷ்ணன் அர்ஜூனனிடம் சொல்லவில்லையா..? ஒரு மனிதன் இறப்பதற்கென இருக்கும் போது பேரறிவு எங்கே போய் விடுகிறது. எனவே இறப்பதற்கு எதற்காக மனிதன் பயப்பட வேண்டும்? நமது தாய் நாட்டை விடுவித்து யுகம் யுகமாய்ச் சுதந்திரத்தை நுகரவும் அதை ஒளிரச் செய்யவும் வழிசெய்வோம். இதற்காக நாம் வாழ்ந்தால் என்ன... இறந்தால் என்ன?’

அவரது கவிதைகள் அனைத்திலும் தனது தேசத்தின் மீதான காதலையும் அதன் சுதந்திரத்தையுமே நம்மால் காண முடிகிறது. தனது தேசத்து மனிதர்கள் சுதந்திர வேட்கையற்றவர்களாக இருப்பதையிட்டு வருத்தம் கொள்கிறார்.

இன்னொரு கவிதையில், ‘பிரிட்டிஷ் கொடுங்கோன்மையின் வருத்தத்தினால் பைஸாபாத் சிறையிலிருந்து நாம் சுவர்க்கத்தை நோக்கிச் செல்வோம்!’ என்கிறார் அஷ்பாக்.

மரண இருளின் நிழலில்...

ராம்பிரஸாத் பிஸ்மில் சிறையில் இருந்தபடி தனது வாழ்க்கைக் குறிப்புக்களை இரகசியமாக எழுதினார். காவலர்களுக்குத் தெரியாமல் அக்குறிப்புகள் வெளியில் கொண்டு வரப்பட்டன. அந்தக் குறிப்புகளில் அஷ்பக்குல்லாஹ் பற்றி அவர் எழுதிய குறிப்புக்கள் உள்ளத்தைத் தொடுபவை. அவர் எழுதுகிறார்:-

“முதன் முதலாக உன்னை ஷாஜஹான்பூர் பாடசாலையில் நான் சந்தித்தது எனக்குத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. பிரிட்டிஷார் தமது இந்தியக் கொள்கை பற்றித் தெரிவித்த பின்னர் நாம் சந்தித்தோம். என்னைச் சந்திப்பதற்காக விசுவாசத்துடன் நீ முயன்றாய். மெயின்பூரி விடயம் சம்பந்தமாக என்னுடன் கதைப்பதற்கு நீ முயன்றாய். நீ ஒரு முஸ்லிமாக இருந்தபடியால் உனது நோக்கத்தை நான் சந்தேகித்தேன். உன்னை அவமானப்படுத்தும் விதத்தில் உன்னுடன் நான் பேசினேன். அதனால் நீ மிகவும் மனவருத்தம் கொண்டாய். உனது நேர்மையையும் உண்மையான ஆர்வத்தையும் பாசாங்கற்ற தன்மையையும் நண்பர்கள் மூலம் என்கு உணர்த்த நீ முயன்றாய். தேசத்தின் நலனுக்காக உழைக்க நீ திடசங்கற்பம் பூண்டிருந்தாய். கடைசியில் அந்த நாளை நீ வென்றெடுத்தாய். உனது இடையறாத முயற்சிகளால் எனது மனதில் இடம்பிடித்தாய்.

சில நாள் நட்பின் பின்னர் நீ எனது சகோதரனாக மாறினாய். எனது சகோதரனாய் இருப்பதில் நீ மனநிறைவு கொள்ளவில்லை. நீ எனது நண்பர்களில் ஒருவனாக சம அந்தஸ்தை எதிர்பார்த்தாய். உனது முயற்சிகளில் நீ வெற்றி பெற்றாய். அதனால் எனது கண்ணியத்துக்குரிய நண்பர்களில் ஒருவனானாய். எல்லோரும் அதிசயப்பட்டார்கள். நான் பற்றுமிக்க ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவன். நீயோ பற்றுமிக்க முஸ்லிமாக இருந்தாய். நாம் எப்படி நண்பர்களாயிருக்கிறோம் என்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் முஸ்லிம்களை இந்து மதத்துக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தேன். ஆர்ய சமாஜத்துக்குச் சொந்தமான விடுதியில் வேறு நான் வசித்து வந்தேன். நீ ஒரு போதும் அதைப்பற்றி எந்தக் குழுப்பமும் அடைந்ததில்லை. எனது நண்பர்கள் உன்னைச் சந்தேகித்த போதும் நீ எப்போதும் நேரான பாதையில் உறுதியாக நடந்தாய். ஆர்ய சமாஜத்தின் விடுதிக்கு நீ அடிக்கடி வருவாய். அவ்வப்போது முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமிடையில் சண்டை நடந்து கொண்டிருந்தது. பல முஸ்லிம்கள் உன்னை காபிர் என்று அழைத்தார்கள். ஆனால் அதற்காக நீ அவர்களுடன் இணங்கிப் போகவில்லை. நீ எப்போதும் இந்து - முஸ்லிம் உறவைப் பேணுவதில் கருத்தாயிருந்தாய். அவர்களும் நாட்டுக்கான சுதந்திரப் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று நீ விரும்பினாய். நீ ஓர் உண்மையான முஸ்லிமாகவும் பெரும் போராட்ட வீரனாகவும் இருந்தாய்.

 நீ எப்போதாவது கவலைப்படும் ஒரு விடயம் இருக்குமா இருந்தால் அது இந்து - முஸ்லிம் உறவு பற்றியதாகவேயிருந்தது. நான் ஒரு கட்டுரையையோ அல்லது ஒரு நூலையோ ஹிந்தியில் எழுதும் போதெல்லாம் ஏன் உர்துவிலும் எழுதக் கூடாது என்று என்னைக் கேட்பாய். நான் எழுதுவதை முஸ்லிம்களும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் அதற்குக் காரணமாக இருந்தது. உனது வீட்டிலும் கூட ஹிந்தியில் நீ உரையாடுவாய். அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

நீ சிலவேளை இஸ்லாத்தைத் துறந்து விடுவாயோ என்று உனது இனத்தவர்கள் பயந்தனர். உனது மனதில் அழுக்குகள் இல்லாத போது இந்தக் கேள்விகள் உன்னை எப்படிச் சுத்தப்படுத்தும்? உனது நோக்கத்தின் தூய்மையை நான் அறிவேன். அதன் காரணமாக நான் வெற்றி கொள்ளப்பட்டேன். முஸ்லிம்களை நம்பக் கூடாது என்றும் நான் ஏமாற்றப்படுவேன் என்றும் எனது நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள்.

ஆனால் வெற்றி உன்னுடையதாகவேயிருந்தது. நம்மிருவருக்கும் இடையில் எந்தத் தடைகளும் இருக்கவில்லை. அநேகமாக எப்போதும் ஒரே பீங்கானிலேயே நாம் சாப்பிட்டோம். இந்துவுக்கும் முஸ்லிமுக்குமிடையில் வித்தியாசம் உண்டு என்ற உணர்விலிருந்து நான் விடுபட்டேன். என்னில் பேரன்பும் பெருநம்பிக்கையும் கொண்டவனாக நீ இருந்தாய். எனது முழுப் பெயரைச் சொல்லி அழைப்பதை நீ விட்டு விட்டாய். நான் எப்போதும் உனக்கு ‘ராம்’தான்! ஒரு முறை நீ மயங்கி விழுந்த போது நீ ‘ராம்... ராம்...’ என்று அரற்றியிருக்கிறாய். கடைசித் தறுவாயில் ‘ராம்... ராம்..’ என்று ஒரு முஸ்லிமான நீ இந்துத் தெய்வத்தின் பெயரைச் சொல்வது கண்டு உன்னைச் சூழ இருந்த முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக நீ என்ன சொல்கிறாய் என்பதைப் புரிந்து கொண்ட ஒரு நண்பர் எனக்குத் தகவல் தந்தார். மயக்கம் தெளிந்த நீ என்னைக் கண்டதும்தான் அமைதியடைந்தாய்.

இந்த நட்பின் முடிவு கடைசியில் என்ன ஆயிற்று? உனது எண்ணங்கள் யாவும் என்னால் பட்டை தீட்டப்பட்டன. நீ ஒரு உன்னதமான புரட்சியாளனானாய். அதனால் உன்னிடம் ஒரே ஒரு குறிக்கோள் மாத்திரமே இருந்தது. முஸ்லிம் இளைஞர்களிடையே உனது எண்ணங்களைச் சொல்லி அவர்களையும் போராட்டத்தின்பால் திசை திருப்ப வேண்டும் என்று விரும்பினாய். உனது நண்பர்களிடமும் உனது உறவினர்களுக்குள்ளும் செல்வாக்குச் செலுத்த முயன்றாய். நீ ஒரு போதும் எனது சொற் கேளாதவனாய் இருந்ததில்லை. ஒரு பணிவுடைய மாணாக்கனைப் போல எனது எந்தச் செய்தியையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல நீ தயாராக இருந்தாய்.
இந்த உலகத்தில் என்னை வெளிச்சத்தில் இருக்கச்செய்த உன்னால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை அஷ்பகுல்லாஹ் கான் முன்னெடுத்தான் என்பது இந்தியச் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். உன்னைச் சிறையில் அடைத்து வைத்திருந்த போதும் கூட உன் எண்ணங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீ எப்போதும் மனதாலும் உடலாலும் உறுதி கொண்டவனாக இருந்தாய். ஒரு கண்ணியவானுக்குரிய ஆத்மா உனக்கிருந்தது. இவ்வாறான உயர்ந்த பண்புகளை நீ கொண்டிருந்ததால்தான் நீதிபதி உன்னை ‘எனது வலது கரம்’ என்று வர்ணித்திருக்கிறார். அவர் உனக்குரிய தீர்ப்பினை வாசித்த போது தூக்குக் கயிற்றிலிருந்து வெற்றிக்கான மாலையை உனக்குத் தந்ந்தார்.

என் அன்புக்குரிய சகோதரனே... நமது தேசத்துக்காக முன்னோரின் சொத்துக்களை இழந்தவர்களைப் போல நீ மகிழ்ச்சியை உணர்வாய் என்று நம்புகிறேன். நமது தாய்நாட்டின் நலனுக்காக பெற்றோரை வறுமைப்படுத்தியவனைப் போல நாட்டின் சுதந்திரத்துக்காக தனது உயிரையும் வாழ்வையும் இழந்தவனைப் போல தாய் மண்ணுக்காக இவன் தனது அன்புக்குரிய நண்பனைத் தியாகம் செய்துவிட்டான்.

இவ்வாறு ராம்பிரஸாத் பிஸ்மில் தனது நண்பனைப் பற்றி அவர் எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிறைவு.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: