Friday, April 8, 2011

எலிப் புழுக்கைகள்

தமிழகத் தேர்தல் களம் சூடு பிடித்துப் போவதை கருணாநிதி மற்றும் ஜெ அன்கோக்களின் தொலைக்காட்சிகள் மூலம் அறியக் கிடக்கிறது.


தேர்தல்களில் படிப்பாளிகள் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. அது விலக்கப்பட்ட ஒரு சமாச்சாரமாகவோ அல்லது தனது கௌரவத்துக்குத் தகுந்த விடயமாகவோ அல்ல என்பது அவர்களது எண்ணங்களில் ஊறியுள்ள மிகத் தப்பான விடயம்.

இதைத் தனக்குச் சாதகமாக்கிய திமுக தேர்தலுக்கு முன்னரே சாதாரண மக்களுக்கு இலவச கலர் டீவி வழங்கியது. அதன் பின்னணியில் தமது பிடியிலுள்ள மீடியாவை மேலும் வலுப்படுத்துவதும் அதன் மூலம் விளம்பர வர்த்தகத்தில் கொடிகட்டுவதும் நோக்கங்களாகும். இந்த இலவசம் நன்றாக வேலை செய்கிறது என்பதைக் கண்டு கொண்டதன் பின் மேலும் சில இலவசங்கள் அறிவிக்கப்பட்டன. கள்ள வாக்கோ நல்ல வாக்கோ - வாக்களிக்கச் செல்பவர்கள் சாதாரண ஏழைகளே.

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அம்மாவும் ஒரு நீளமான இலவசப் பட்டியலை அறிவித்துள்ளார். இரண்டு பட்டியல்களையும் பார்த்த போது தற்காலிகமாகவாவது கொஞ்சக் காலம் தமிழ் நாட்டில் வாழ்ந்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது. இரண்டு பட்டியலையும் படித்தால் இனித் தமிழகம் சுவனபுரியாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது.

சினிமாவில் ஆதிக்கம், மீடியாவில் ஆதிக்கம், குடும்ப நலன்களுக்கான முன்னெடுப்புக்கள் என்று திமுக குடும்பம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படிப்பாளிகள் உலகப் புகழ் பெற்ற அலைக் கற்றை ஊழல் வெளியே வந்ததும் சற்று உணர்வு பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இணையங்களில் படிப்பாளிகள் குமுறுவதைப் பார்க்கும் போது பெருமளவில் தமது அக்கறையை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. ஆனால் இவர்களில் எத்தனை சதவீதம் பேர் வாக்களிக்கச் செல்வார்கள் என்பதுதான் சந்தேகம். கட்டாயம் வாக்களிக்குமாறு பல விளம்பரங்களையும் காண முடிகிறது.

தமிழக அரசியலில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. இந்த விடயத்தில் கருணாநிதி வெறும் அரசியலைச் செய்தாரே தவிர தமிழ் மக்களுக்கான தலைவராக அவர் இருக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. தமிழீழத்தை அவரால் வாங்கிக் கொடுக்க முடியாதுதான். ஆனால் ஒரு அச்சாணியாக இயங்கி பல விடயங்களில் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஆட்டுவிக்கும் சக்தியாகவும் அவரால் செயற்பட்டிருக்க முடியும். அவ்வாறு செயற்பட்டிருந்தால் தனது குடும்ப அரசியலுக்கு ஆபத்து என்பதை அவர் தெளிவாக விளங்கி வைத்திருந்தார். எனவே கடிதம் எழுதிக் காலம் கடத்திக் கொண்டிருந்தார்.

இன்று திமுக பற்றிய பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இவற்றில் அலைக் கற்றை தவிர ஏனையவை வெளிவரும் என்று திமுக தலைவர் எதிர்பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். அதை இலவசங்களின் மூலம் சமாளிக்கலாம் என்றுதான் கணக்குப் போட்டிருப்பார் போல் தெரிகிறது. அலைக் கற்றை ஊழல் உட்பட எல்லாமே வெளி;சத்துக்கு வந்த பிறகும் தனது தொலைக்காட்சியில் தோன்றி ‘நான் என்ன தவறு செய்து விட்டேன்’ என்று கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பெரும் வேடிக்கையாக இருந்தது.

இரண்டு கழகங்களினதும் ஆட்சிகளில் தமிழகப் படிப்பாளிகளுக்குத் திருப்தி இல்லை என்றே புரிய முடிகிறது. தமிழக மக்கள் முன் தற்போது தெரிவுக்காக உள்ள ஆட்சிகளில் மோசமான ஆட்சிகளில் பரவாயில்லை என்று தாங்கள் கணிக்கும் ரகக் கழகத்தைத் தேர்ந்து எடுப்பதுதான் ஒரே வழி. அம்மா ஆட்சியில் அம்மாவின் ஊழல் மட்டும்தான். ஐயா ஆட்சியில் எல்லாமே ஊழல்தான் என்று பலர் கருத்துத் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அம்மாவைப் பொறுத்தவரை அவருக்குப் பெரிய குடும்பம் கிடையாது. ஆனால் ஐயா குடும்பம் பெரு விருட்சம். இன்னும் கிளை விட்டுக் கொண்டிருக்கிறது.

நமது அண்டை வீடு என்ற ஆதங்கத்துடன் சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதே நல்லது. இப்போது திமுக ஆட்சி போகும் வேகத்தைப் பார்த்தால் இந்த ஆட்சி தொடருமாயின் திமுக தலைவர் குடும்பமும் கட்சியின் சில முக்கியஸ்தர்களின் குடும்பங்களையும் தவிர மற்றவர்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்து விடலாம் என்று தெரிகிறது.

வெளியே இருந்து பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்குத் தோன்றுவது என்னவெனில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சிறிய பெரும்பான்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அம்மாவின் பாஷையில் மைனாரிட்டி அரசு. இந்த இடத்தில் அம்மா பக்கம் சற்றுக் கதிப்பது விஜயகாந்த் ஆதரவு. இதனால்தான் விஜயகாந்தை எதிர் கொள்ள வடிவேல் இறக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்தை ஏகவசனத்தில் தொடர்ச்சியாகக் கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கிறார் வடிவேல். வெறும் தனிப்பட்ட கோபத்துக்காக மாத்திரமே இவ்வாறு அவர் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவரது குறி தனியே விஜயகாந்தாக மட்டுமே இருப்பதைப் பார்க்கும் போது அவரது நேர்மையில் சந்தேகம் எழுகிறது. படப்பிடிப்புக்களை விட்டு விட்டு மக்கள் நலனுக்காகத்தான் திமுகவுக்காக இயங்குகிறேன் என்று அவர் சொல்வாராக இருந்தால் அதைப் போன்ற தமாஷ் வேறு எதுவும் கிடையாது.

கழகங்களுக்கு ஆதரவு திரட்டுவதில் காமடிப் பீஸ_கள் உட்பட பல்வேறு நடிகர்களையும் காண முடிகிறது. கட்சித் தலைமைகளுக்கு அப்பால் நடிகர் பொன்னம்பலம் கூட வாக்குச் சேகரிக்கப் பிரசாரம் செய்வதைக் காண முடிகிறது. நடிகர்களும் நடிகைகளும் பெருந் தொகையாக அரசியலில் இறங்கி ஆரவாரம் பண்ணுவதைப் பார்க்கையில் மக்கள் நலனுக்காகத்தான் இவ்வாறு ஈடுபடுகிறார்களா என்பதில் சந்தேகம் தட்டுகிறது. தேர்தல் இன்னும் சூடேற அல்லது தேர்தல் முடிய பல கதைகள் வெளியே வரும் வாய்ப்பு உண்டு. இந்த நடிக நடிகைகள் சக நடிகர்களை அல்லது ஒரு குறிப்பிட்ட நபரைக் குறித்துத் தாக்குவதைக் காண முடிகிறது. வடிவேல் பாஷையில் சொல்வதானால் ‘எல்லாம் ப்ளான்தான்” போலிருக்கிறது.


ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பது வேறு. அதில் பூரணமாக இறங்கி மற்றவரை நேரடியாகத் தாக்குவது வேறு என்பது புரியாமல் வடிவேல் போன்ற நடிகர்கள் இறங்கியிருப்பது கவலை தருகிறது. அரசியல்வாதிகள் அதைச் செய்வது ஒரு வேளை சரியாக இருக்கலாம். ஏனெனில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள். அரசியலே வாழ்வாக இல்லாத கலைஞர்கள் இவ்வாறு ஆளை ஆள் நேராகவும் அவமானப்படுத்தும் விதத்திலும் தாக்கிப் பேசுவது ஆபத்தானது.

எள்ளுத்தான் எண்ணெய்க்காகக் காய வேண்டும். எலிப் புழுக்கைகள் எதற்குக் காய வேண்டும்?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: