Friday, April 15, 2011

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - 2011

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 04

மலேசிய இலக்கிய விழா பற்றிய ஏராளமான சுவையான தகவல்கள் அவ்வப்போது கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்லி விடாமல் அவ்வப்போது சொல்லுவதே நன்றாக இருக்கும் என்பதால் சிலவற்றைத் தவிர்த்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது வலைத் தளம் ஆரம்பித்து இரண்டு வருடங்களாக என்னை இணையத்தில் தேடும் சிலரும் வலைத் தளம் வைத்திருக்கிறேன் என்று அறிந்த சிலருமே வந்து போனார்கள். மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா பற்றிய கட்டுரை பதிவு செய்யப்பட்டதிலிருந்து தினம் சராசரி 40க்கும் 60க்கும் இடைப்பட்ட தொகையினர் உலகம் பூராகவுமிருந்து வந்து படித்துச் செல்கிறார்கள். எனது மூன்றாவது கட்டுரை வெளியாகியதிலிருந்து மூன்று வாரங்கள் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகளில் விழா பற்றிய கட்டுரை இரண்டாம் இடத்தில் இருந்தமை அதற்குச் சான்றாகும். அக்கட்டுரை இன்னும் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரையாகவே தொடர்கிறது. நான்காவது கட்டுரை வருகிறது என்று இடப்பட்ட முன்னறிவித்தலைக் கூட இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 57 பேர் படித்திருக்கிறார்கள்.

மௌன ஓட்டம்

எனது கட்டுரைகள் பதிவிடப்பட்டதிலிருந்து இலங்கைக் குழுவினருக்குள் ளேயிருந்து எனக்கு யாரோ ஒருவர் தகவல் தருவதாக ஆளுக்காள் சந்தேகிக்கத் தொடங்கி விட்டது போல் தோன்றுகிறது. மூன்றாவது கட்டுரைக்குப் பின்னர் இந்த இறுக்கம் இன்னும் கூடி விட்டதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இவ்விழாவுக்குச் செல்லும் பேரார்வத்துடன் இருப்பவர்களும் கூட எதுவும் புரியாத நிலையில் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதே தங்களுக்குத் தெரியவில்லை என்றும் குறித்த நபர்களுக்குத் தொலைபேசியில் அழைத்தாலும் கூடப் பதில் தருகிறார்களில்லை என்று சிலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.

இந்த விழா சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு புதிய கைப்பேசி இலக்கம் பத்திரிகைகளில் தரப்பட்டிருந்தது. அந்த இலக்கத்துக்கோ தனிப்பட்ட இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டாலும் கூட பதில் கிடைப்பதாயில்லை என்று மூத்த எழுத்தாளர் எஸ்முத்துமீரான் ஒருமுறை குறிப்பிட்டார்.

அப்படி ஏன் இவ்விடயங்களை இரும்புக் கோட்டைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நமக்குக் கேள்வி எழுவது நியாம்தானே! இதில் ஒளிப்பதற்கு எதுவுமே இல்லை. மூன்று கட்டுரைகளுக்கும் இரண்டு கவிதைகளுக்கும் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி விமானக் கட்டணத்தை அறிவிப்பது. இவற்றை ஒளித்து மறைக்க வேண்டிய அவசியம் என்ன? மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும். அப்படியானால் பொதுவாகக் கோரப்பட்ட கவிதைகளையும் கட்டுரைகளையும் ஒதுக்கி விட்டுத் தாங்களாகவே குறித்த நபர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்களா என்ற சந்தேகம் கட்டுரை, கவிதை எழுதியனுப்பியவர்களுக்கும் நமக்கும் வருவது தவிர்க்க முடியாததுதான்.

கவிஞர் அல் அஸ_மத் கவிதைகளைத் தேர்ந்தெடுக்க மறுத்த பிறகு மூவர் கொண்ட குழுவிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கவிதையைப் பொறுத்த வரை மேடைக் கவிதைக்கும் எழுத்துக் கவிதைக்கும் வித்தியாசம் உண்டு. சிலர் அருமையாக எழுதுவார்கள். மேடையில் சோபிக்க மாட்டார்கள். சிலர் மேடையில் வித்தை காட்டுவார்கள், கவிதையில் ஏதும் இருக்காது.

நேற்றைய தகவலின் படி கவிதை படிப்பதற்காக சகோதரர்கள் என். நஜ்முல் ஹ_ஸைன் மற்றும் பொத்துவில் அஸ்மின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்களாம். பொத்துவில் அஸ்மின் மரபுக் கவிஞர். நஜ்முல் ஹ_ஸைன் புதுக் கவிஞர். இருவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

கட்டுரைகள் தேர்வுக்காக கலாநிதி அனஸ் அவர்களிடம் வழங்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. மிக அண்மையில் கிடைத்த தகவல்படி கலாநிதி அனஸ், கலாநிதி வ.மகேஸ்வரன், விரிவுரையாளர் ரகுபரன் ஆகியோர் கட்டுரை படிக்கும் படி குழுவினரால் கேட்டுக் கொள்ளப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மாநாட்டுக்கெனக் கட்டுரை எழுதி அனுப்பியவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.

  இலக்கியத்துள் பேராசிரியர்கள் நுழைந்து விடுவதால் படைப்பாளிகளுக்கு இடம் கிடைப்பது அரிதாகிவிட்;டது. இவ்வாறான வெளிநாட்டுச் சந்தர்ப்பங்கள் படைப்பாளிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது பொதுவாகப் படைப்பாளிகளின் கருத்தாக இருக்கிறது. பேராசிரியர்கள் வெளிநாட்டுக் கருத்தரங்குகளுக்குச் செல்வதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான வாய்ப்புகள் படைப்பாளிகளுக்குக் கிடைப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போதைக்குக் கட்டுரை படிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பல்கலைக் கழக சமூகத்தினருக்கும்கூட இடை நடுவிலேயே கட்டுரைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அறிய முடிந்தது. இதையே படைப்பாளிகளுக்கும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு பல்கலைக் கழகம் சார் அறிஞரும் இரண்டு படைப்பாளிகளும் தேர்வாகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். திறமை மிக்க படைப்பாளிகள் நாட்டில் இல்லை என்று குழுவினர் கூற முடியாது. அவ்வாறான நபர்களைக் கண்டறிந்து தேர்வு செய்தால் தம்மை விடவும் திறமைசாலிகளான இலக்கியவாதிகள் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று குழுவில் உள்ள இலக்கிய ஜாம்பவான்கள் என எண்ணுவோர் கருதியிருக்க வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

எமக்குக் கிடைத்த தகவலின் படி நண்பர் ரமீஸ் அப்துல்லாஹ் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிக்க விருப்பம் கொண்டிருந்ததாக அறிய முடிந்தது. ஆனால் குழுவில் அவர் அங்கத்துவம் பெற்றிருப்பதால் கட்டுரை சமர்ப்பிக்க முடியாது போனது. அவர் குழுவிலிருந்த விலகி கட்டுரையை சமர்ப்பித்திருக்கலாம். அதனை அவர் விரும்பவில்லையா அல்லது குழுவில் இருந்து அவரால் கழன்று போக முடியாமல் நெருக்கடிக்குள்ளானாரா தெரியவில்லை. எனவே தனக்குப் பதிலாக திரு. ரகுபரனை அவர் சிபார்சு செய்ததாக அறிய வருகிறது.

தவிர இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு என்பது ஒரு கட்டுரையிலோ அல்லது இரண்டு கட்டுரைகளிலோ பேசி முடிக்கும் தலைப்பு அல்ல. இது ஒரு நூலுக்குரிய தலைப்பு. குறுகிய கால அவகாசத்துள் எழுத நேர்ந்த கட்டுரையாளர்கள் இதை எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதைக் கட்டுரைகள் வெளிவந்தால்தான் நாம் பார்க்க முடியும். இருந்த போதும் பல்கலைச் சமூகத்தின் அதை இயலுமான அளவுக்குத் திறம்படச் செய்வார்கள். கட்டுரைகள் ஓரளவுக்கு இலங்கை இஸ்லாமிய இலக்கிய வரலாறு எழுதப்படுவதற்கான நேர்மையான திறவு கோல்களாக அமைந்திருக்கும் என்பது எனது நம்பிக்கையாக இருக்கிறது.

விமானப் பயணம்

மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக 350க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்ததாகவும் அதில் தாங்கள் 250 பேரளவில் தேர்ந்து எடுத்திருப்பதாகவும் குழுவின் செயலாளர் குறிப்பிட்டதாக ஜனாப் முத்து மீரான் என்னிடம் தெரிவித்தார். இதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் குழுவில் உள்ள சிலர் தேர்தலுக்கு வாக்குக் கேட்பதைப் போல பலரிடமும் மலேசியா போக வாருங்கள் என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.

செயலாளர் சொல்வது உண்மையாக இருந்தால் தேர்வு செய்யப்பட்ட வர்கள் அனைவரும் இலக்கியவாதிகளாக இருக்க வேண்டும். பயணம் நெருங்கும் போது இலக்கியவாதிகள் எத்தனைபேர், சுற்றுலாச் செல்வோர் எத்தனை பேர், அரசியல்வாதிகள் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரிந்து விடும்.

மலேசிய வீசா நிராகரிக்கப்பட்டவர்களும் கூட இந்தக் குழுவில் இணைந்து செல்ல முயற்சிக்கலாம். இதனைக் குழுவினர் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அரசியல் கூட்டத்துக்கு லாரியில் சனங்களை ஏற்றிச் செல்வது போல் வருவோரையெல்லாம் ஏற்றுக் கொண்டால் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிய கதியாகிவிடும்.

29 மார்ச் 2011 திகதியிடப்பட்டு ஒரு கடிதம் மலேசியா செல்ல விண்ணப் பித்தவர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் அனுப்பப்பட்டுள்ளது. இரு வழி விமானப் போக்குவரத்துக் கட்டணங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மலேசியன் எயார் லைன் - 34,000.00

ஸ்ரீலங்கன் எயார் லைன் - 32,500.00

எயார் ஏசியா - 29,500.00

என்று குறிப்பிடப்பட்டு கட்டணங்கள் ஓரளவு குறைய வாய்ப்புண்டு என்றும் ஏப்ரல் மாத நடுப்பகுதி நீண்ட விடுமுறை காலமாக இருப்பதால் விமானப் பதிவுகள் நேரகாலத்தோடு செய்யப்படுதல் வேண்டும் என்றும் எனவே உங்கள் பெயர்களை ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளல் அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10,000.00 முற்பணம் செலுத்தி விட்டு அதன் பற்றுச் சீட்டின் புகைப்படப் பிரதியை அனுப்ப வேண்டும் என்றும் கிடைக்க வேண்டிய கடைசித் திகதி 10ம் திகதியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 10ம் திகதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாகும். ஞாயிற்றுக் கிழமையும் தபால் சேவை இப்போது நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் அப்படி எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. கடிதத்தில் கையெழுத்து வைத்திருக்கும் குழுவின் தலைவர் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர். ஒரு நிர்வாகி. செயலாளர் ஒரு வைத்தியர். கையெழுத்திடாவிட்டாலும் இவ்வேற்பாடுகளை முன்னிற்று கவனிக்கும் மருதூர் ஏ மஜீத் முன்னாள் கல்வி அதிகாரி. சில வேளை முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் இருந்த கிழிக்காத கலண்டரைப் பார்த்துத் திகதி குறித்தார்களோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

இயல்பாகவே கடைசி நாள்வரை பொறுத்திருந்து விட்டுத்தான் நமது மக்கள் அவசர அவசரமாகச் செயற்படுவார்கள். அவர்கள் கதி என்னவாயிற்றோ தெரியவில்லை.

இவ்வாறு அறிவித்தல் வந்த பிறகு மலேசியா செல்லும் எண்ணத்தைப் பலர் கைவிட்டார்கள். இந்தளவு தொகை கொடுத்து மலேசியா சென்று அடையப் பெறப் போவது எதுவுமேயில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம். ஓர் இலக்கியவாதிக்கு 30,000.00 இருந்தால் அவன் தைரியமாக தனது ஒரு நூலை வெளியிட்டு விட்டு வெளியீட்டு விழா மற்றும் விற்பனையின் பின் மீதியைச் செலுத்திக் கொள்ளலாம். மலேசியா சென்றால் குப்பப் பிச்சை முகம்மது இக்பால் பொன்னடைகள் போர்த்துவதைப் பார்த்து விட்டு வரலாம்.

இது இப்படியிருக்க மலேசிய பயணத்துக்கு ஆவல் கொண்டிருந்த ஒரு நபர் விமானப் பயணச் சீட்டுக் குறித்து விசாரிக்க ஆரம்பித்ததில் 80 பேருக்கு மேல் பயணம் செய்வதாக இருந்தால் 17,000.00 முதல் 19,000.00 வரையான ரூபாவுக்கு விமானச் சீட்டுப் பெற முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்தத் தகவலைத் தான் உடனடியாகக் குழுவின் செயலாளருக்கு அறிவித்ததாகவும் அவர் அதில் அக்கறை காண்பிக்கவில்லை என்றும் எனக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே குழுவினர் தீர்மானித்திருந்த படியான தொகைக்கு விமானச் சீட்டுப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே இலவச விமானச் சீட்டுக்கள் சில கிடைக்கும் சாத்தியம் உண்டு. குறைந்த விலைப் பயணச் சீட்டில் இந்த வாய்ப்புக் கிடைக்காது. செயலாளர் ஜனாப் முத்து மீரானுக்குச் சொன்ன கணக்கின் படி பார்த்தால் 250 பேர் பயணம் செய்யப் பணம் செலுத்தினால் ஏறக்குறைய பத்து இலவச விமானச் சீட்டுக்குக் குறையாமல் கிடைக்கலாம். அதில் இவ்விடயத்தில் மும்முரமாக நேரங் காலஞ் செலவழித்துச் செயற்படுபவர்கள் சிலர் பயணம் செய்ய முடியும். அது நியாயமும்தான். பத்து விமானச் சீட்டுக்கள் இலவசமாகக் கிடைத்தால் ஹஜ்ஜூக்கு ஆள் சேர்த்துக் கொடுப்போருக்குப் போல் பயணத்துக்கு ஆள் சேர்த்தவர்களையும் அழைத்துச் செல்ல முடியும்.

ஆனால் இவ்விடயம் குழுவின் ஏனைய அங்கத்தவர்களின் கவனத்துக்குத் தற்போது வந்ததைத் தொடர்ந்து மிகக் குறைந்த விலையில் பயணம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். அவ்வாறு நடந்தால் இலவசப் பயணம் செய்ய நினைத்தோர் நினைப்பில் மண் விழுந்ததாகி விடும்.

மாநாட்டு விபரங்கள், விண்ணப்பம் ஆகியவை அனுப்பப்பட்ட போது இணைப்பு ஒன்று என்று அனுப்பப்பட்ட கடிதத்தில் தலைவரும் செயலாளரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதே போல 29 மார்ச் 2011 திகதியிடப்பட்ட விமானப் பயண லிபரமடங்கிய கடிதத்திலும் இருவரும் கையெடுத்திட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு கடிதங்களிலும் செயலாளர் கையெழுத்து ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது. இரண்டும் உண்மையா அல்லது ஒன்று போலியா என்ற ஒரு மயக்கம் ஏற்படுகிறது. கடிதங்கள் புகைப்படப் பிரதியாக இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. உரியவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

மாநாட்டுக் குழு

இந்த விழாவுக்கான மாநாட்டுக் குழு என 30 பேர் கொண்ட குழு இவ்விழாவுக்கான இணையத் தளத்தில் இடப்பட்டிருக்கிறது. இந்த 30 பேரையும் கொண்ட சட்டகத்துக்குக் கீழே இடைக் கோடுகளுக்கு நடுவில் சீனி நைனார், மைதீ சுல்தான், பிதாவுல்லாஹ் கான், நஸ்ருல்லாஹ் கான், ஹாஜி சுபைதீன் பின் காதர் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களள் இடம் பெற்றுள்ள பட்டியலுக்கு மேல் எந்தத் தலைப்பும் இடப்படவில்லை. சட்டகத்துக்குள்ளும் இவர்கள் இல்லை. ஆனால் செயலகம் என்ற தலைப்பின் கீழ் இப்பக்கத்தின் ஆரம்பத்திலேயே பிதாவுல்லாஹ் கான், மைதீ சுல்தான் ஆகியோரது பெயர்களும் இலக்கியத் தொடர்பு என்ற தலைப்பின் கீழ் சீனி நைனாரும் மேலதிகத் தொடர்புகள் என்ற தலைப்பில் புலவர் ப.மு. அன்வர், சையத் பீர் முகம்மது ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆக சை. பீர் முகம்மது இக்குழுவுக்குள் ஓரிடத்தில் இடம்பெற்றிருக்கிறார். அவரை மேலதிகமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது சற்று உறுத்துகிறது.

இதற்கு அப்பால் மலேசிய பிராந்திய இணைப்பாளர்களாக பதினெட்டுப் பேர் சட்டகமிடப்பட்ட கட்டங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். நாடுகளின் இணைப்பாளர்களாக பின்வருவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் - அல்ஹாஜ். எம்.ஏ. முஸதபா, இந்தியா - திரு உஸ்மான், இலங்கை - அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜமீல், டாக்டர் தாஸிம், தாய்லாந்து அல்ஹாஜ் வாவூ சம்சுதீன், டாக்டர் ஐயூப், மியன்மார் - எஸ்.எஸ். கான், பிரான்ஸ் - ஆதம் ஷா, ஐக்கிய ராஜ்யம் - அல்hஜ் மங்மூத், டாக்டர் ரிபாய், புருனை - ஷெய்க் முக்தார், மத்திய கிழக்கு - முதுவை ஹிதாயத் ஆகியோர்.

எனக்குத் தெரிந்த வரை ஆகக் கூடுதலான நபர்களைக் குழுவில் கொண்டு இயங்கும் ஒரே நாடு இலங்கைதான். ஆனானப்பட்ட இந்தியாவிலேயே ஒரே ஒருவர்தான் செயற்படுகிறார். மீதியைத்தான் கவிக்கோ பார்த்துக் கொள்வாரே.

இது இப்படியிருக்க மாநாட்டுக்குச் செயலாளர் என்று யாரும் கிடையாது. செயலகத்துக்கு என்று இருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, செயலாளர் என்று யாரும் இல்லை. உலக மாநாடு என்று பிரகடனப் படுத்தப்பட்டு செயலாளர் இல்லாமல் நடக்கும் முதல் மாநாடு இதுவாகவே இருக்கும். ஆனால் மாநாட்டுக்குழுவின் முதல் பெயராக குப்பப்பிச்சை முகம்மது இக்பால் பெயர் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நான் புரிந்து கொள்வது என்னவெனில் மாநாட்டின் எல்லாப் புகழும் தன்னை விட்டு வேறு யாருக்கும் போய் விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் குப்பப் பிச்சை முகம்மது இக்பால் என்று தோன்றுகிறது. ஒரு செயலாளரை அறிவித்தால் புகழில் பாதி அவருக்குச் சென்று விடுமல்லவா?

செயலாளரே இல்லாத ஒரு மாநாட்டின் இணைப்புக் குழுவுக்கு ஒரு செயலாளரை நியமித்துப் புகழ் பரப்புகிறது இலங்கைக் குழு. அவர் செயலாளர் என்று றப்பர் முத்திரையெல்லாம் வெட்டிக் குத்துகிறார்.

அச்சகங்களில் விசிற்றிங் கார்ட் ஓடர்கள் குவிந்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். மலேசியாவுக்குப் போகும் பலர் தமது பழைய புத்தகங்களின் பெயர்களை விசி;ற்றிங் கார்ட்டில் போடுவதா தமது இலக்கியப் பட்டங்களைப் போடுவதா அல்லது இரண்டையும் போட்டு மடிக்கும் கார்ட்டாக அச்சடிப்பதா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது. அப்போதுதான் மலேசியாவில் இருநூறு பொன் மொழிகள் தொகுத்தவருக்கு அதைக் கொடுத்து அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். பழைய புதிய ‘நம்பிக்கை’ இதழ்களும் கிடைக்கும்!

மலேசியாவில் இலக்கிய ஈடுபாடு பெருமட்டில் இல்லை என்று இலங்கையில் கவிஞர் சீனி நைனார் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். எனவே குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் குழு மலேசியாவில் பிராந்தியம் பிராந்தியமாகச் சென்று மக்களை விழாவுக்கு அழைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறதாம். ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேரைக் கூட்டுவது குழுவின் நோக்கமாக இருக்கிறது. கௌரவ அமைச்சர் சொன்னபடி இலங்கையில் இருந்து மூன்று விமானங்களில் ஆயிரம் பேர் வருவார்கள் என்று மலேசியக் குழுவினர் நம்பியிருக்கிறார்களோ தெரியாது.

எப்படியாக இருந்த போதும் ஆயிரத்து ஐநூறு பேர் வருவார்களாக இருந்தால் மலேசியப் பிரதமருடனான விருந்து பேருவளைக் கந்தூரி போல்தான் நடைபெறும் போல் தெரிகிறது. இங்கிருந்து போகும் நோயாளிகள் நசுங்குப் படாமல் கொஞ்சம் பத்திரமாக நடந்து கொண்டால் உடம்புக்குக் குணமாக இருக்கும். மலேசியப் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆசையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். குப்பப்பிச்சை முகம்மது இக்பால் படம் எடுத்துக் கொண்ட பின்னர் மாநாட்டுக் குழுவினர் அதற்கு ஏற்பாடு செய்து தருவார்கள்.

அந்தோ பரிதாபம் - மானா மக்கீன்!

இலங்கையின் ஏற்பாட்டுக் குழுவில் உள்ள இரண்டு முக்கியஸ்தர்கள் வெறும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இருவரும் இலக்கியத்துடன் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். ஒருவர் மானா மக்கீன். மற்றவர் ரமீஸ் அப்துல்லாஹ். ஏனைய எல்லோருக்கும் ஏதோ ஒரு பதவி குழுவுக்குள் உண்டு. இந்தப் பட்டியலைப் பார்க்கும் போது இவர்கள் இருவரையும் நினைத்துப் பரிதாபம் ஏற்படுவதுடன் பட்டியலைப் பார்த்துச் சிரிப்பும் வரும்.

குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு இலங்கை வந்து கூட்டம் நடத்திய அன்று காலை கௌரவ அமைச்சர் மானா மக்கீனை அழைத்துத் தனியே உரையாடியுள்ளார். அதற்குக் காரணம் உண்டு. மானா எதையும் ஒளித்து மறைக்காமல் வளவளா என்று அவிழ்த்து விடுவார். எனவே மானாவைக் கொஞ்சம் அடக்கி வைக்கும் முயற்சிதான் அது என்று நான் கணிக்கிறேன். ஆனால் மானா அடங்காதவர். அக்கூட்டத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். நியாயத்தை, மனதில் பட்டதை எதைப் பற்றியும் கவலைப் படாமல் பட்டெனச் சொல்லும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

என்னை முதன் முதல் ஒரு மேடை நடிகனாக்கிப் பார்த்தவர் மானாதான். எம்.எச். பௌஸ_ல் அமீர் எழுதி மானா நெறிப்படுத்திய ‘தோட்டத்து ராணி’ நாடகத்தில் கதாநாயகனே நான்தான். நான்கு முறை அவரால் நான் மேடை ஏறி நடித்துள்ளேன். இது தவிர அவரது அனுபவங்கள் அதிகம். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களும் அவரிடம் பல இருக்கின்றன. இதற்கெல்லாம் அப்பால் அவரில் மதிப்பை ஏற்படுத்திய விடயம் ஒன்று உள்ளது. ஒரு முறை வானொலி நாடகத் தயாரிப்பாளரும் நாடக எழுத்தாளரும் நடிகருமான சகோதரர் அஷ்ரப் கான் ஒரு முறை, “உங்களுக்குத் தெரியுமா... மக்கீன் டைப் ரைட்டரிலேயே ஒரு நாடகத்தை உருவாக்கித் தந்துவிடக் கூடிய வல்லமை கொண்டவன்...” என்று எனக்குச் சொல்லியிருக்கிறார். வேறு யாரும் சொல்லியிருந்தால் அதைக் கவனத்தில் கொண்டிருக்க மாட்டேன். சொன்னவர் அஷ்ரப் கான். அதாவது ஒரு முறை உட்கார்ந்தால் டைப் ரைட்டரிலேயே ஒரு நாடகத்தை உருவாக்கித் தருவார் என்பது கௌரவிக்கத் தகுந்த திறமைதானே!

இப்படிப் பட்ட மானா மக்கீன் தனது கட்டுரையை ஏற்றுக் கொள்ளாமல் சீனி நைனார் புறக்கணித்த போதும் - விலகி நின்று ஒரு கட்டுரையை எழுதித்தாருங்கள் என்று குழுவினர் கேட்காத நிலையிலும் - ஏன் இந்தக் குழுவில் இருக்கிறார் என்பதுதான் எனக்கு இன்னும் புதிராக இருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகு முழுக்கவும் அறியப்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களில் மானா மக்கீன் முதல்வர். அவர் எதற்காக இக்குழவில் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை.

அண்மையில் நண்பர் நிலாம் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணையக் கட்டுரைகளை எனக்குத் தபாலில் அனுப்பினாயா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். எனது கருத்துக்களை எனது வலைப் பூவில் எழுதிவருகிறேன். இதை ஊர் முழுக்க தபாலில் அனுப்பும் எந்த ஒரு அவசியமும் எனக்கு இல்லை என்று சொன்னேன். இக் கட்டுரைகள் பலருக்கும் செல்லுமாக இருந்தால் மலேசியப் பயணத்தில் அது ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் ஒரு விமர்சன அலையை உண்டு பண்ணும் என்பதையும் நான் அறிவேன். எனது நோக்கம் அதுவல்ல.

குப்பப்பிச்சை முகம்மது இக்பாலோ அல்லது அவரைப் போல் வரும் வெளி நாட்டவர் ஒருவரோ இலங்கையில் உள்ள எல்லா எழுத்தாளர்களையும் விமானச் சீட்டுக்கு வாங்கவோ ஒரு பொன்னாடையில் அல்லது புகைப்பட ஆசையில் மயக்கவோ முடியாது என்பதைத் தெரிவிப்பதும் இலங்கையில் சிறந்த படைப்பாளிகள் ஒதுக்கப்பட்டு வெத்து வேட்டுக்கள் மேடையேறுவதைத் தடுப்பதுமே எனது நோக்கம் என்று அவருக்குத் தெரிவித்தேன்.

எனது கட்டுரைகள் நிலாமுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. அவரது பேச்சில் அவர் மானாவைச் சந்தேகிப்பது போல் தெரிந்தது. மானாதான் எனது பின்னணியில் இருப்பது போல் கதைத்தார். யாருடையவும் உந்துதலில் இயங்ககும் அளவு முட்டாள்தனமானவன் அல்லன். ஒரே ஒரு முறை தனது கட்டுரையை சீனி நைனார் நிராகரித்ததை எனக்குச் சொன்ன மானா மக்கீன் இதே தலைப்பில் இப்போது ஜே.எம். சாலி கட்டுரை படிக்கிறார் என்று சொன்னதோடு நிற்காமல் என்னை விட அவர் நன்றாகச் செய்வார் என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். இந்தத் தகவல் கட்டுரையில் வெளியான பிறகுதான் குழுவுக்குள் ஆளுக்காள் சந்தேகம் தட்டத் தொடங்கியிருக்கிறது.

இவ்வளவெல்லாம் நடந்த பிறகும் மானாவுக்குச் சூடு வராமல் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதை விட ஆச்சரியம் என்னவெனில் அவரும் மலேசியா போக ஆயத்தமாவதுதான். நான் என்னதான் சொல்ல, அந்தோ பரிதாபம் மானா மக்கீன் என்பதைத் தவிர?

கவிக்கோ கலாட்டா!

இந்தியாவிலிருந்து ஏறக்குறைய பன்னிரண்டு பேர் விமானச் சீட்டுக் கொடுத்து அழைக்கப்பட்டவர்கள். ஏற்கனவே இருவர், பின்னர் பத்துப் பேராசிரியர்கள். மொத்தம் பன்னிரண்டு என்றுதான் நம்பகமான வட்டாரச் செய்தி.

ஒரு மாநாடு என்றால் இலக்கிய வட்டாரத்துள் எந்நேரமும் பேசப்படும் சூடான செய்தியாக இது இருக்கும். ஆனால் இம்முறை தமிழ் நாட்டில் அப்படி எதுவும் கிடையாதாம். ஏனென்று தெரியவில்லை. குப்பப்பிச்சை முகம்மது இக்பால் இயக்கங்களைப் பிரித்து விளையாடிவிட்டுப் போனது காரணமாக இருக்குமோ என்னவோ!

நேற்றுக் காலை இந்தியாவிலிருந்து எனக்குக் கிடைத்த தகவல் ஒன்றைத்தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். துரை மலிராயன் என்று ஒரு கவிஞர் புதுச்சேரியில் இருக்கிறார். இந்தியாவின் சார்பில் மலேசிய விழாவில் கவிதை படிப்பதற்குப் பெயரிடப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். நபிகள் நாயக அருட் காவியம் என்ற பெயரில் முகம்மது நபி அவர்களைப் பற்றி ஒரு காவியம் எழுதியவர் இவர். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்திய நாயக காவியம் அரங்கில் இவரது நூலும் ஆய்வுக்குள்ளானது.

கவிக்கோ வக்பு வாரியத்தில் பதவியேற்றுக் கொண்டதும் அதன் ‘பிஸ்மி’ என்ற இதழின் ஆசிரியர் கவிஞர் பதுருத்தீன் வெளியே தூக்கி வீசப்பட்டார் என்று எனது முன்றாவது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அவரைக் கவிக்கோ அப்துல் ரகுமான் தொடர்பு கொண்டு “இதென்ன தமிழர் ஒருவரைக் கவிதை பாடப் போட்டிருக்கி றார்கள்... அவருக்குப் பதிலாக நீங்கள் வாருங்கள்... நான் அங்கு சொல்லிக் கொள்கிறேன்...” என்றிருக்கிறார். திகைத்துப் போன கவிஞர் பதுருத்தீன் தாமரை இலைத் தண்ணீர் போல் தத்தளித்த படி ஒரு முக்கியஸ்தரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.

அவரோ, “மலேசியாவிலிருந்து அழைப்பு வராமல் எந்த முடிவுக்கும் நீங்கள் வந்து விட வேண்டாம்” என்றிருக்கிறார். அத்தோடு நின்று விடாமல் இப்படி கவிக்கோ சொல்லியிருக்கிறார் என்ற தகவலை மலேசியாவுக்குத் தெரிவித்த போது “அவரு எப்படிங்க அதைச் சொல்லலாம்... நாங்கதான் ஏற்கனவே முடிவு செய்திட்டோமே...” என்றிருக்கின்றனர். இந்தத் தகவலும் கவிஞர் பதுருத்தீனுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

இப்போதே கவிக்கோ தனது கை வரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டார். இன்னும் என்னென்ன குழுப்பங்கள் ஏற்படுமோ தெரியவில்லை! ஆரம்பிச்சிட்டாரய்யா...!

பொன்னாடை மாநாடா... இலக்கிய மாநாடா...?

மலேசியா மாநாட்டு இணையத் தளத்தின் ‘கலரி’யில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தேசியக் கொடியைச் சொடுக்கினால் கடந்த 5.2.2011 கொழும்பில் நடந்த மலேசிய இலக்கிய விழா பற்றிய கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் உள்ளன.

ஒன்றில் டத்தோ குப்பப் பிச்சை முகம்மது இக்பாலுக்கு புரவலர் ஹாஷிம் உமர் பொன்னாடை போர்த்துகிறர். மற்றொன்றில் கௌரவ அமைச்சருக்குக் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் பொன்னாடை போர்த்துகிறார். இன்னொன்றில் புரவலருக்கு மலேசிய நபர் பொன்னாடை போர்த்துகிறார். மற்றொன்றில் பொன்னாடையுடன் எஸ்எச்.எம். ஜமீல் புகாங்கிதத்துடன் நின்றிருக்க வேறு ஒன்றில் ஹஸன் அலி எம்.பிக்கு பிதாவுல்லாஹ் பொன்னாடை போர்த்துகிறார். (தயவு செய்து இந்தத் தளத்தக்குச் சென்று ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.)

ஆளுக்காள் மாநி மாறிப் பொன்னாடைகளைப் போர்த்துவதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஒரு இலக்கியவாதிக்காவது பொன்னாடை போர்த்தப்பட்டதா என்றால் கிடையாது. இலக்கியத்தின் பெயரால் யார் யாரோ பொன்னாடை போர்த்திக் கொள்கிறார்கள். மாநாடு பற்றிய கூட்டத்திலேயே இவ்வளவு பொன்னாடைகள் என்றால் மாநாடு எப்படி இருக்கப் போகிறதோ... வியாபார நிமித்தம் இலங்கையிலிருந்து செல்பவர்கள் ஐநூறு பொன்னாடைகளைக் கொண்டு சென்றால் நன்றாகக் கல்லாக் கட்டலாம். சிலர் என்ன விலை கொடுத்தும் வாங்குவார்கள்.

மற்றைய புகைப்படங்களில் அன்று கூட்டத்துக்கு வந்து மேடையில் அமர்ந்திருந்த முக்கியஸ்தர்கள் காணப்படுகிறார்கள். இவர்களில் எழுந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட போது மானா மக்கீனும் எஸ்.எச்.எம். ஜமீலும் இணைந்து கொண்டார்கள். மற்றப்படி இவர்கள் இருவரும் சபையோருக்குள்தான் அமர்ந்திருந்தார்கள். மலேசிய முக்கியஸ்தர்கள் தவிர அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், ஒரு முன்னாள் நீதிபதி, ஒரு முன்னாள் பொலீஸ் அதிகாரி, கட்சி முக்கியஸ்தர் ஒருவர்.... இலக்கியவாதிகள் யாரும் மேடையில் இடம் பெறாமல் போனது ஏன்? எனவே இந்தக் கூட்டத்தின் நோக்கமும் பின்னணியும் என்ன? உங்களுக்குப் புரிகிறதா மலேசியா வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களே...

டாக்டர் ஜின்னாஹ் சரிபுத்தீன் உரையாற்றுவது ஒரு புகைப்படத்தில் உள்ளது. அதில் அவர் தனது அதிருப்தியைத் தெரிவித்து உரையாற்றுகிறார். இணையத் தளத்தில் பார்ப்பவருக்கு அதிருப்தியைத் தெரிவிக்கிறார் என்றா தெரியப் போகிறது. டாக்டர் ஜின்னாஹ்வும் நம்முடன்தான் இருக்கிறார் என்பதைக் காட்டும் செப்படி வித்தை இது.

உங்களுக்குப் பரிசினைப் பெற்றுத் தரும் ஓர் உப கதை!

பொதுவாக ஓர் இடத்தில் தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அந்த இடத்தில் முதலாம் நிலையில் உள்ள நபரை அணுகுவதில்லை. இரண்டாம் நிலை நபரையோ சிற்றூழியனையோ மடக்கி காரியவாதிகள் விடயத்தை வென்று விட்டு வந்து விடுவார்கள். பொதுவாக நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் காரியம் சாதிப்பவர்கள்தாம் இவ்வாறு முயற்சி மேற் கொள்வது வழக்கம்.

கடந்த 5.2.2011 அன்று இலங்கையில் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவினர் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னர் காலையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலும் பின்னர் கூட்டம் முடிந்து அவ்வப்போது கிடைத்த இடைவெளியின் போதும் ஒரு முக்கியஸ்தர் தனது எழுத்துப் பிரதாபங்களையும் வகித்த பதவிகளையும் சொல்லி கவிஞர் சீனி நைனாரை அறு அறுவென்று அறுத்துக் கொண்டேயிருந்திருக்கிறார். முக்கியஸ்தரின் நோக்கம் என்னவெனில் தான் இலங்கையில் அதிசிறந்த இலக்கிய ஜாம்பவான் என்பதை சீனி நைனாருக்கு உணர்த்துவது. ஆனால் சீனி நைனார் முக்கியஸ்தரின் அலைவரிசையைச் சட்டெனப் புரிந்து கொண்டார் போலும்.

ஒரு திறமை வாய்ந்த படைப்பாளியைப் பற்றி மற்றவர் சொல்ல வேண்டுமே தவிர, தன்னைத் தானே புகழ்ந்தால் ஒரு பாடசாலைச் சிறுவனும் அவரது நோக்கத்தைப் புரிந்து கொள்வான். சீனி வெறுத்துப் போய் உட்கார்ந்த வேறு ஒரு இளவலுடன் தனது மனக்குறையைப் பகிந்து கொண்டிருக்கிறார். “உங்கள் நாட்டில் எல்லாரும் தன்னைப் பற்றியே பேசுகிறார்களே... இதென்ன இது... தங்களது பிரதாபங்களைத்தான் எல்லாரும் கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்....” என்று நொந்து கொண்டிருந்த அந்தப் பொழுதில் மீண்டும் அந்த முக்கியஸ்தர் வந்து ஏற்கனவே சீனியிடம் சொன்ன விடயத்தையே திருப்பிச் சொல்ல ஆரம்பிக்க “ஆமா.. அத நீங்க சொல்லிட்டீங்களே...” என்று அறுத்து விட்டார். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நண்பர் இத்கவலை நம்மிடம் சொல்லி “நினைக்கவே வெட்கமாயிருக்கிறது” என்று முடித்தார்.

இந்த இடத்தில் கவிஞர் சீனி நைனாருக்கு நான் சொல்ல வேட்டியது என்னவென்றால்... நீங்கள் சரியான இடத்துக்கு வந்த சேரவில்லை என்பதைத்தான். குப்பப்பிச்சை முகம்மது இக்பாலின் தேவைக்காக உண்டான ஏற்பாடு என்றால் அப்படியான நபர்களைத்தான் நீங்கள் எதிர் கொள்ள நேரும் என்பதைத்தான். அரசியல்வாதிகளின் பின்னால் அலைந்தால் அல்லக்கைகளைத்தான் சந்திக்க நேரும்.

சரி.. இப்போது விடயத்துக்கு வருவோம். இந்த முக்கியஸ்தர் யார் என்று உங்களுக்குத் தெரியுமாக இருந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். அடுத்த கடடுரை எழுதப்படுவதற்கு முன்னர் பதிலளித்தவர்களில் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார். அவர் வெளிநாட்டவராயின் ஒரு அழி ரப்பர் அல்லது ஒரு பென்சில் பரிசாகக் கூரியரில் அனுப்பப்படும்.

பரிசுக்குரியவர் இலங்கையராக இருந்தால் இரண்டு கோழிக் கூட்டு வாழைப்பழங்கள் அல்லது 50 ரூபாவுக்கும் 60 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையில் வாங்கப்படும் தேங்காயொன்று உடைக்கப்பட்டுப் பாதித் தேங்காய் பரிசாக வழங்கப்படும்.

வெளிநாட்டவர் பதிலுடன் அழிரப்பர் அல்லது பென்சில் ஆகிய இரண்டில் ஒன்றையும் இலங்கையர் தமது பதிலுடன் வாழைப்பழங்கள் அல்லது தேங்காய்ப் பாதி என்றும் குறிப்பிட வேண்டும்

இதற்கு மேல் பரிசு வழங்குவதற்கு இந்த விடயம் தகுதியற்றது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: