Friday, April 29, 2011

ஏரோப்பிளேன் பறக்குது பார் மேலே.... (இஸ்லாமிய தமிழ் இலக்கிய மலேசிய மாநாடு)

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 05

எனது ‘எக்ஸ்குளுஸிவ்’ கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கு முன்னர் வெளியிடப்பட்டாக வேண்டிய தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. எனவே ஐந்தாவது கட்டுரையில் அவற்றைக் குறிப்பிட்டு விட்டு ஆறாவது கட்டுரையை ‘எக்ஸ்குளுஸிவ்’ கட்டுரையாக மாற்றலாம் என்று எண்ணுகிறேன். அதையும் எழுதி முடிப்பதற்குள் வேறும் குறிப்பிட்டாக வேண்டிய விடயங்கள் கிடைக்குமாயின் அது ஏழாவது கட்டுரையாக மாற்றம் பெறவும் நேரலாம்.

முகமறியா நண்பர்கள் சிலர் கட்டுரைகள் மிகவும் நீண்டவையாக இருக்கின்றன. ஒரு கட்டுரையை இரண்டாகப் பிரித்துத் தந்தால் படிப்பதற்கும் படி எடுப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்று பேசுவதாகத் தகவல் ஒன்று காதுக்கு எட்டியது. அது என்னமோ தெரியவில்லை, குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் மாநாடு பற்றி எழுத ஆரம்பித்தால் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே செல்கிறது. இருந்த போதும் இனிமேல் எழுதப்படவுள்ள கட்டுரைகளில் ‘எக்ஸ்கு@ஸிவ்’ கட்டுரை தவிர்ந்த ஏயைவற்றுக்கு நண்பர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஏரோப் பிளேன் பறக்குது பார் மேலே...

குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் மாநாட்டுக்கான நாள் நெருங்க நெருங்க அதற்காக இலங்கையிலிருந்து செல்லவிருப்பவர்கள் போவதா, இல்லையா என்ற மனப் போராட்டத்தில் இருப்பதை உணர முடிகிறது. இந்த நிலை ஏற்பட முதல் காரணம் விமானச் சீட்டின் விலை.

29.03.2011 அன்றைய திகதியிடப்பட்ட இ.குழு, பேராளர்களாகக் கலந்து கொள்ள விரும்புவோருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் 29,500 ரூபாய் முதல் 34,000 ரூபாய் வரை குறிப்பிட்டிருந்ததையும் வேறு ஒரு நபர் 85 பேருக்கு மேல் பயணம் செய்வதாயின் 19,000 ரூபாய்க்கு விமானச் சீட்டுப் பெறலாம் என்று குழுச் செயலாளரிடம் சொன்னதையும் அதை அவர் கணக்கெடுக்கவில்லை என்று அந்நபர் தெரிவித்ததையும் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் அது பற்றி ஆராய்வதாகவும் 19,000 ரூபாயக்குப் பயணம் செய்யும் வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கதைகள் உலாவின.

இந்த 34,000 ரூபாய் ஓர் இலக்கியவாதியிடம் இருக்குமானால் அவரால் ஒரு நூலை வெளிக் கொண்டு வந்து விட முடியும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்தப் பணத்தொகை மட்டுமே பயணத்துக்குப் போதாது. வெளிநாடு ஒன்றுக்குப் போவதானால் அங்கிருந்து நாலு பொருட்களை வாங்கி வர வேண்டாமா... அதற்கு ஆகக் குறைந்தது 25,000 ரூபாயாவது தேவைதானே. எவ்வளவுதான் சிக்கனம் பிடித்தாலும் 60,000 ரூபாய் செலவாகப் போகிறது. இந்தத் தொகை செலவளித்து மலேசியா சென்று குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் மலேசியப் பிரதமருக்கு அருகில் உட்கார்ந்து போஸ் கொடுப்பதைக் கண்ணாரக் கண்டு களிக்கும் தேவை நிதானமாகச் சிந்திக்கும் விபரமும் விளக்கமும் உள்ள இலக்கியவாதி எவருக்கும் வராது என்பதே எனது கணிப்பு. எனவே அந்தத் தொகையைப் பயன்படுத்தித் தனது நூல் ஒன்றை வெளியிடவே ஓர் இலக்கியவாதி விரும்புவார்.

இது ஒரு புறமிருக்க, மேற்படி கடிதத்துடன் சம்பந்தப்பட்டது எனக் கூறி மற்றொரு கடிதம் 11.04.2011 அன்று கையெழுத்திடப்பட்டு பேராளர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பித்தோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது இவ்வாறு சொல்கிறது:-

“குறித்த கடிதத்தில் குறிப்பிட்டவாறு எயார் ஏசியாவினதும் வேறு விமான சேவைகளினதும் விமானப் பயணச் சீட்டு ஓரளவு குறைந்த தொகையில் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிகின்றோம். இது தொடர்பான மேலதிக விபரங்களை அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எமது பிரயாண முகவரான ஹமாட் இன்டர் நெஷனல் பி.லிட். ல் பெற்றுக் கொள்ளலாம்.

குறித்த கடிதம் எனக் குறிப்பிடப்படும் 29.03.2001 அன்றைய கடிதத்தில் அப்படி என்னதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பார்த்தோம். அது இவ்வாறு சொல்கிறது...

மலேசியன் எயார் லைன் - 34,000.00
ஸ்ரீலங்கன் எயார் லைன் - 32,500.00
எயார் ஏசியா - 29,500.00

எனினும் இக்கட்டணங்ளைக் குறைத்துப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை வேறு விமான நிறுவனங்களுடனும் தற்போது மேற்கொண்டு வருகிறோம். இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்தால் கட்டணங்கள் ஓரளவு குறைய வாய்ப்புண்டு”

இந்தக் கடிதமும் அந்தக் கடிதமும் பேசுவது ஒரு விடயமே என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். கடிதத்தின் படி விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது ஏற்பாட்டுக் குழுவினர் என்பது புரிகிறது. ஆனால் பயண விபரத்தைப் பேராளர்கள் ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ள முகவரிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். அதாவது பேராளர்களின் பயண மொத்தக் குத்தகையையும் ஹமாட் நிறுவனத்துக்குக் கொடுத்து விட்டார்கள். அவ்வாறாயின் இந்தக் குழுவினருக்கு என்ன வேலை?

பயணச் சீட்டுக்கான முழுப் பொறுப்பையும் ஒரு நிறுவனத்திடம் கொடுத்து விட்டு வேறு நிறுவனங்களுடன் குழு எப்படிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும். இதற்கிடையில் குறிப்பிட்ட முகவரிடம் முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாம். எப்படிச் சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் எந்த நிறுவனத்தோடு பேசியதாக யார் சொன்னாலும் அது இறுதியாக வந்து முடிவடைவது ‘ஹமாட்’ இன்டர் நெஷனல் நிறுவனத்தில்தான். ஏனென்றால் அந்த நிறுவனத்து முக்கியத்துவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினராம். எல்லோருக்கும் ஒரே விலையில் விமானச் சீட்டை இந்நிறுவனம் விநியோகிக்கும் என்றால் இதில் நமக்கு எந்த வித ஆட்சேபனையும் கிடையாது.

உண்மையில் குழு என்ன செய்திருக்க வேண்டுமென்றால் பயணம் செய்வோரின் தொகையைக் குத்துமதிப்பாகத் தீர்மானித்து விட்டு எல்லா நிறுவனங்களுடனும் நேரடிப் பேச்சுவார்த்தை செய்திருக்க வேண்டும். எந்த விமானத்தில் செல்வது என்பதைத் தீர்மானித்து விட்டு ஹமாட் நிறுவனம் ஊடாகப் பயணச் சீட்டுக்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் குழுவினர் அப்படிச் செய்யமாட்டார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஏனெனில் சிலரை இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் குழுவினர் இருக்கிறார்கள். இந்த விடயத்தை ஒரு சாதாரணமாக எடுத்துச் செயல்பட்டிருந்தால் இத்தனை வில்லங்கங்களை எதிர் கொள்ள வேண்டி வந்திருக்காது. குப்பப் பிச்சை முகம்மது இக்பாலுக்குப் பெரிதாகப் படங் காட்டுவதற்காகப் பெரிய குழுவைப் போட்டுக் கும்மியடித்ததால் வந்த வினை இது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மேற்குறிப்பிடப்பட்ட இந்த இரண்டு கடிதங்களின் அடிப்படையிலும் நாம் புரிவது என்னவெனில் பயணச் சீட்டுக்கான சரியான தொகை இன்னுமே தீர்மானிக்கப்படவில்லை என்பதுதான். இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறதா... சமாளிக்க இயலாமல் நடைபெறுகிறதா என்பதை நாம் பின்னால் அறியவரலாம்.

இந்த இடத்தில் நம்மை ஒரு வினா இடறச் செய்கிறது. 350 பேர் பயணம் செய்ய விண்ணப்பித்ததாகவும் அதில் 250 பேரளவில் தாம் தேர்வு செய்திருப்பதாகவும் குழுவின் செயலாளர் சிரேட்ட எழுத்தாளர் முத்து மீரானிடம் சொன்னதாக முத்துமீரான் அவர்கள் தெரிவித்ததைக் கடந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளேன். செயலாளர் குறிப்பிட்டிருப்பது நம்பக் கூடிய தகவல் அல்ல என்றும் சொல்லியிருந்தேன். அதே வேளை 24.04.2011 ஞாயிறு வீரகேசரியில் வெளியான செய்தியின் படி பேராளர்கள் 150 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சரி, எத்தனை பேர் வேண்டுமானாலும் தெரிவாகட்டும். ஆனால் அவர்கள் பேராளர்களாகத் தெரிவு செய்யப்பட்டதாக ஏன் இதுவரை அவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்படவில்லை என்ற கேள்விதான் நம்மைக் குடைகிறது. தெரிவு நடத்துகிறோம் என்பவர்கள் அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டாமா?

விமானப் பயணத்துக்கு முற்பணத்தைக் கட்டுங்கள் என்றுதான் கடிதங்கள் சொல்லுகின்றன. அப்படியானால் முற்பணங் கட்டுபவர்கள் கொண்டே பேராளர் தொகை தீர்மானிக்கப்படவுள்ளது. எனவே சரியான தொகை பயணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான் தெரிய வரும் என்று தோன்றுகிறது. இப்படியிருக்கும் போது 350 பேர் விண்ணப்பித்தார்கள், மூன்று விமானங்களில் போவோம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?


நமக்கு நம்பகமான வட்டாரங்களிலிருந்து மிக அண்மையில் கிடைத்த செய்திதான் முக்கியமானது. அதைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.

பேராளர்களாகச் செல்வதற்கு எண்பது பேரளவில் விமானச் சீட்டுக்கான முற்பணத்தை (தலா - 10,000 ரூபாய்) ஹமாட் நிறுவனத்துக்குச் செலுத்தியிருந்ததாக சில நாட்களுக்கு முன்னர் அறியக் கிடைத்தது. இதன்படி எண்பது அல்லது எண்பத்தைந்து பேருக்கு ஹமாட் நிறுவனத்தின் மூலம் விமானச் சீட்டுக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்.

இதில் 40 பேருக்கு 19,000 ரூபாய்ப்படி பயணம் செய்வதற்கும் ஏனையோர் இன்றைய விமானச் சீட்டு விலை என்னவோ அதன் படி பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுவதாக ஒரு தகவல் உலாவுகிறது. முதல் நாற்பது பேரையும் பிரிவு ‘ஏ’ என்றும் ஏனையோரை பிரிவு ‘பி’ என்றும் ஒரு வசதிக்காக நாம் அழைக்கலாம்.

இந்த முதற் பிரிவில் யாரைச் சேர்ப்பது என்பது முழுக்கவும் கௌரவ. ஹஸன் அலி அவர்களின் தீர்மானத்துக்குரியது என்றும் அந்த விலைக்கு கிழக்கைச் சேர்ந்ந்தவர்களுக்கு - குறிப்பாக அவரது சொந்த ஊரான நிந்தவூரைச் சேர்ந்தவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் குழுவில் உள்ள ‘குறிப்பிட்ட’ சிலருக்கும் என்று ஒதுக்கிக் கொண்டாராம் என்று எமக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அக்கட்சியில் உள்ளவர்களில் சற்று நிதானமாகவும் எல்லோருடனும் திறந்த மனதுடனும் எளிமையாகப் பழகக் கூடிய நபர் அவர். அரசியலுக்காக சில வேளை ஏதாவது தமாஷ் பண்ணக் கூடும். உதாரணமாக அரசுடன் சேர்வதற்கு முன்னர் பொத்துவிலில் 500 ஏக்கர் முஸ்லிம் காணி பெரும்பான்மை வசம் இருப்பதாகவும் அது நியாயத்துக்கு அப்பாற்பட்டது, அதற்காகப் போராடுவோம் என்ற அர்த்தத்தில் அவர் அறிக்கை விட்டுக் கொண்டிருந்ததைப் பத்திரிகையில் படித்த ஞாபகம் உண்டு. அரசுடன் சேர்ந்த பிறகு இது பற்றிய எந்த அறிக்கையும் அவர் விடவுமில்லை. அது பற்றிக் கதைப்பதுமில்லை. சில வேளை அதைப் பெற்று உரியவர்களுக்குக் கொடுத்து விட்டார்களோ தெரியவில்லை. அப்படியில்லையெனில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இரண்டாவது வாசிப்புக்குப் பின்னர் எதிர்க் கட்சிக்குத் தாவினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்தானே என்றிருக்கிறார்களோ தெரியவில்லை. அப்படி ஏதாவது அரசியல் அறிக்கை விடுவாரே தவிர, இவ்வாறான செயலில் அவர் ஈடுபட நியாயமில்லை என்றே எமக்குத் தோன்றுகிறது.

பிரிவு ‘பி’ யில் செல்பவர்கள் திரும்பி வரும்போது ஒன்றாக வர முடியாது. அவர்கள் சென்னை வந்துதான் இலங்கை வரவேண்டுமாம். சென்னையில் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் அல்லது பன்னிரண்டு மணி நேரம் காத்திருந்துதான் அடுத்த விமானம் பிடித்து இலங்கை வரவேண்டுமாம்.

இதனை ஒரு நியாய மீறலாகச் சொல்லுவோர் தெரிவிப்பது என்னவெனில் அரசியல்வாதிகளுக்குத் தேவையானவர்களும் தெரிந்தவர்களும் சுகமாகக் குறைந்த விலையில் போய்வர இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் அதிக பணம் கொடுத்துப் பயணம் செய்து சீரழிய வேண்டுமா என்பதுதான்.

இந்தத் தகவல் உண்மையா இல்லையா என்பதை பேராளர்கள் பின்னர் தெரிந்து கொள்வார்கள். ஏன் மொத்தமாக எல்லோரும் ஒரே விலையில் ஒரே விமானத்தில் பயணிக்கும் ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் போனது என்று ஒரு கேள்வி இந்தத் தகவல் உண்மையாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எல்லோரும் உன்றாகச் செல்வது என்றுதான் ஏற்கனவே இந்தக் குழு அறிவித்துக் கொண்டிருந்தது.

“எண்பது பேருக்கும் 19,000.00 ரூபாய்ப் படிதான் விமானச் சீட்டுப் பேசப்பட்டுள்ளது. ‘அந்த’ குறிப்பிட்ட சில நபர்கள் தவிர ஏனையோரிடம் 23,000 ரூபாய் முதல் 26,800 ரூபாய் வரை திட்டமிட்டே அறவிடப்படுகிறது. இந்தத் தொகை நாள் நெருங்க நெருங்க 30,000க்கு மேலும் போகலாம். 19,000 ரூபாவுக்கு அதிகமாக அறவிடப்படும் தொகையைக் கொண்டுதான் கட்சி தீர்மானிக்கும் ‘இலவசங்கள்’ வழங்கப்படும் போல் தெரிவதாக ஒரு நண்பர் நம்மிடம் தெரிவித்தார்.

இனி, இந்த இலவசங்களுக்காக யார் யார் மோதியடிக்கப் போகிறார்கள் என்பதைத்தான் இன்னும் சில நாட்களில் நாம் பார்க்கப் போகிறோம். இது உண்மையான தகவலாக இருந்தால் இலவசத்தை எதிர்பார்த்திருக்கும் ‘சில’ காக்காய்கள் தவிர்க்கப்பட்டு கட்சிக்கு வேண்டியவர்கள் அதில் சென்று வரவும் இடமுண்டு.

மிக அண்மையில் ஏசியன் எயார் இணையத் தளத்துக்குச் சென்று விபரம் பார்த்த ஒரு நண்பர் மலேசியாவுக்கான விமானச் சீட்டுக்கான தொகை 21,300 ரூபாய் எனவும் இந்தப் பயணத்தில் ஏழு கிலோ பொருட்கள் கொண்டு செல்லலாம் என்றும் இன்னும் 1500 ரூபாய் செலுத்தினால் 15 கிலோ பொருட்கள் கொண்டு செல்லலாம் என்றும் தெரிவித்தார்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு பெரும் சுத்துமாத்து நடக்கிறதோ என்று ஒரு சந்தேகம் வரத்தான் செய்கிறது. 80 பேர் பயணம் செய்வதற்கு 19,000 ரூபாய்ப்படி விமானச் சீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் ஒரு நபரிடம் 26,800 ரூபாய் அறவிடப்படுவதாக இருந்தால் மேலதிகமாக ஒருவரிடம் 7,800 ரூபாய் அறவிடப்படுகிறது. (இந்த இடத்தில் ஏற்பாட்டுக்குழு அனுப்பிய கடிதங்களில் 34,000 ரூபாய் 32,500 ரூபாய், 29,500 ருபாய் ஆகிய தொகைகளில் ‘ஓரளவு’ குறைய வாய்ப்புண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவனம் செலுத்த வேண்டும்)

நாற்பது பேரிடம் தலைக்கு 7800 ரூபாய் மேலதிகமாக அறிவிடப்படும் பட்சத்தில் எவ்வளவு வரும் என்பதை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அதன்படி 16 அல்லது 17 பேரை இலவசமாக அழைத்துச் செல்ல முடியும் என்பதை மட்டும் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அப்படிப் பார்த்தால் எல்லாக் காக்கைகளும் சந்தோஷமாகப் பறக்க முடியும்.

பிரிவு ‘பி’யில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும்தான் பாவப்பட்டவர்களாக மாறுவார்கள். இவர்கள்தாம் பன்னிரண்டு மணித்தியாலம் சென்னை விமான நிலையத்தில் ‘இஃதிகாப்’ இருக்க வேண்டியிருக்கும். நாமறிய நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் சென்னை விமான நிலையத்தில் இப்படிக் காய்ந்தது கிடையாது. குப்பப்பிச்சை முகம்மது இக்பால் மாநாட்டின் பெயரால் நிகழ்த்தப்படும் சாதனைகளில் ஒன்றாக இதையும் பதிவு செய்ய வேண்டும். முடியுமானால் ‘பி’ பிரிவில் செல்பவர்கள் அங்கே ‘ட்ரான்சிற்’ ஏரியாவில் ஒரு குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அது வரலாற்றுப் புகழ் மிக்கதாக மாறும் வரம் கிடைக்கும்.

ட்ரான்சிற்றின் போது உணவு தருவார்களா என்பதை ‘பி’ பிரிவில் செல்பவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏஷியன் எயார் விமான சேவை குறைந்த விலையில் நடத்தப்படுவதால் விமானத்திலேயே உணவு வழங்கப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். எதற்கும் இங்கிருந்து போகும் போது ஒரு கிலோ கச்சான் கொட்டை அல்லது கடலைக் கொட்டை வறுத்தோ பொரித்தோ எடுத்துச் செல்லுங்கள். அல்லது பொரிவிளாங்காய், பணியாரம், அல்வா, சோகி போன்ற பழுதடையாத தின்பண்டங்களை எடுத்துச் செல்லுங்கள்.

இவற்றை மலேசியா போய் அங்கு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். அங்கே ஒரு தேநீர் குடிப்பதாக இருந்தால் கூட ஒரு ரிங்கிட் வேண்டும். ஒரு ரிங்கிட் இலங்கை விலையில் ஏறக்குறைய 35 ருபாய். அத்துடன் இந்திய ரூபாய்களில் கொஞ்சம் பணம் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சென்னை விமான நிலையத்தில் ஒரு பால் கோப்பியாவது குடிக்கலாம். இல்லையென்றால் குழாய்த் தண்ணீரைக் குடித்து விட்டு குப்பைப் பிச்சை முகம்மது இக்பாலுக்கும் இலங்கை ஏற்பாட்டுக் குழுவுக்கும் சாபம் இட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.

இதற்கிடையில் ஏற்கனவே முற்பணம் செலுத்தியோர் தற்போதைய விமானச் சீட்டு விலையைக் கேட்டு விக்கித்துப் போயிருப்பதாகத் தெரிகிறது. பயண எண்ணத்தைக் கைவிட்ட சிலருடன் நாம் பேசினோம். இப்போது அவர்களது பிரச்சினை கட்டிய முற்பணத்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதானாம்.

விமானப் பயணத்துக்குப் பயணச் சீட்டு எடுத்துப் போகாமல் விட்டால் அதில் ஒரு பகுதியைக் கழித்துக் கொண்டுதான் விமானச் சீட்டு விற்பனை நிறுவனம் பணம் கொடுக்கும். அதுவும் உடனே கிடைக்காது. நிறைய நாட்கள் அலைந்துதான் பெற வேண்டும். இது முகவரின் பிழை அல்ல. விமான நிறுவனங்களின் நடை முறை அதுதான்.

இங்கே முற்பணம் மட்டுமே கட்டப்பட்டுப் பயணம் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. அந்தப் பணமும் கழிவுகளுக்குப் பின்னர்தான் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டு அப்பாவிகள் சீரழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது குழுவின் தலையாய கடைமையாகும்.


முகவர் நிலையத்தில்தானே பணம் கட்டினீர்கள் அவர்களுடன் பார்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் குழுவினர் கழன்று கொள்ள முடியாது. ஏனெனில் குறிப்பிட்ட முகவரிடம் பணம் கட்டும்படி எழுத்து மூல அறிவித்தல் கொடுத்ததே ஏற்பாட்டுக் குழுதான். இந்த விடயத்தில் முகவர் நிலையத்தை நாம் குற்றம் சொல்ல முடியாது. கட்சிக்கு அப்பால் ஒரு வியாபார நிறுவனமாகவே அதை நாம் பார்க்க வேண்டும். அந்த நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்தவர்கள் யாரோ அவர்களே பயணம் செய்பவர்களது நலனையும் முற்பணம் செலுத்தி முழுப்பணம் செலுத்த முடியாமல் தவிப்போரது நலனையும் கவனிக்க வேண்டும்.

பயண ஏற்பாடுகளைக் கவனிப்போர் என்று குழுவில் இருவரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவர் கௌரவ. ஹஸன் அலி அவர்கள். மற்றவர் ஹாஜி ஹாஷிம் உமர் அவர்கள். இந்த ஏற்பாடுகள் பற்றி இந்த இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். கௌரவ. ஹஸன் அலி 40 பேருக்கு விசேட வரம் கொடுக்கிறார் என்றால் ஹாஜி ஹாஷிம் உமர் அவர்களுக்கு இது தெரியாதா? அரசியல்வாதிகள்தாம் பக்கம் சார்வார்கள். ஹாஜி ஹாஷிம் உமர் அவர்கள் பொதுவான நடுநிலையான நபர். இது பற்றிய தெளிவை அவராவது பத்திரிகை மூலம் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் உண்மை இல்லையென்றால் கௌரவ. ஹஸன் அலி அவர்களும் இது பற்றிய ஓர் அறிக்கையை விடலாம் அல்லவா? அல்லது பொதுவில் குழுவின் செயலாளர் நாயகம் பத்திரிகையில் தெளிவு படுத்துவது கடமையாகும்.

குழுவுக்குள்ளேயே உடன்பாடு இல்லாமல் சிலர் இருப்பது போலவும் ஒரு தோற்றம் தெரிவது மாதிரி இருக்கிறது.

24.04.2011 அன்று மாநாடு சம்பந்தமான செய்திகள் தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. ஆனால் குழுவில் ஊடக இணைப்பாளராக இயங்கும் நண்பர் நிலாம் கடமை புரியும் அன்றைய தினக்குரல் பத்திரிகையில் இந்தச் செய்தி வரவில்லை. அப்படியென்றால் அவரது ஊடகப் பங்களிப்பின் நிலை என்ன? குழுவில் இருக்கும் அதுவும் ஊடகத்துக்கென இருக்கும் ஒருவர் தனது பத்திரிகையில் செய்தி தராதது ஏன்? இந்த அடிப்படையில் பார்க்கும் போது சும்மா போடுகாய்களாக இவர்கள் இருக்கிறார்களா அல்லது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கையறு நிலையில் இருக்கிறார்களா என்ற சந்தேகம் நமக்கு வருவது சாத்தியம்தானே!

இந்தக் கட்டுரையின் இறுதியில் நாம் சுட்டிக் காட்டுவது ஒரு விடயத்தைத்தான். இலக்கியத்தைச் சில இலக்கியவாதிகள் தமது அற்ப நோக்கங்களுக்காக அரசியலுடன் முற்று முழுதாகக் கரைத்து விட்டிருக்கிறார்கள். அது போகட்டும். அவர்கள் அதன் மூலம் எந்த லாபத்தை வேண்டுமானாலும் அடைந்து விட்டுப் போகட்டும். ஆனால் முற்பணம் செலுத்தியவர்களது பணத்தை முகவரிடமிருந்து குழுவினர் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும். உண்மையான ஆர்வம் உள்ள இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்த கொள்ளும் நிலை இந்த விழாவில் இல்லையென்றாகி விட்டது போல் தோன்றகிறது. அவ்வாறான ஆர்வலர்கள் பெருந் தொகை கொடுத்துப் பயணம் செய்யும் வாய்ப்பு அற்றவர்கள். வசதியற்றவர்கள். எனவே அவர்களது அந்தப் பணம் அவர்களது இரத்தமும் வியர்வையுமாகும்.

இதனை மீள அளிக்க நடவடிக்கை எடுக்காமல் நீங்கள் மலேசியாவில் நின்று குப்பைப் பிச்சை இக்பாலுக்குக் கைதட்டிக் கொண்டிருந்தீர்களானால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடப்போவதில்லை!

பின் குறிப்பு -
கடந்த கட்டுரையில் நாம் சுட்டிக் காட்டியது போல தொழில் நிமித்தம் மலேசிய வீஸா பெறுவதற்காகத் தம்மைப் பலர் பேராளர்களாக இணைத்துக் கொண்டுள்ளதாக ஊர்ஜிதமான தகவலொன்றை நமது இலக்கிய நண்பர் ஒருவர் சொன்னார். எப்படியாவது அதிகம் பேரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தமக்கு வேண்டியோரை இலவசமாக அழைத்துச் செல்லும் நிலைப்பாட்டிலும் உள்ள குழுவினர் பேராளராக வருவது யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று கருதுகிறார்களோ தெரியவில்லை. மலேசிய வீசா ஒன்றைப் பெறுவதற்காக என்ன விலை கொடுப்பதற்கும் இளைஞர்கள் முண்டியடிப்பதால் விமானப் பயணச் சீட்டு விலையையும் உயர்த்தி அதன் மூலம் கிடைக்கும் பணம் கொண்டு விரும்பியோரை இலவசமாக அழைத்துச் செல்லும் முயற்சிகளும் நடைபெறுகின்றனவா என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

அடடா !!!!! கலக்கல் சேர் சும்மா பின்னி எடுத்துட்டீங்க..
சுடச்சுட செய்தி சும்மா ஆவி பற்க்குது ! சங்கதி இப்பழயா இருக்கா..?
சுத்து மாத்து, தில்லு முள்ளு இங்கேயுமா..?எப்போ தான் உருப்படும் நம்ம சமூகம்.?
சுயநலவாதிகள், புகழ்விரும்பிகள் இருக்கும் வரை நம்ம சமூகம் உருப்பட
வாய்ப்பில்லை.
இப்போ எல்லாம் மனசாட்சிக்கு யாரும் பயம் இல்லை, உண்மை இல்லை. நேர்மை
இல்லை.
19.000 என்பது ஒரு சாதாரண வருமானம் பெறும் மனிதனுக்கு பெரிய தொகை.
அப்படி இருக்கும் போது இலக்கியவாதிகள் கடன் வாங்கியா மாநாடு போவாங்க..?
ஒரு இலக்கியவாதிக்கு கொடுக்கும் கௌரவமாக இதை யாரும்
இலவசமாக செய்ய மாட்டார்களா,,? சேர் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் போகிறவர்கள்
நட்டாற்றில் நின்று தவிப்பது Confirmed,
”எதற்கும் இங்கிருந்து போகும் போது ஒரு கிலோ கச்சான் கொட்டை அல்லது கடலைக் கொட்டை வறுத்தோ பொரித்தோ எடுத்துச் செல்லுங்கள். அல்லது பொரிவிளாங்கால்லது பணியாரம், அல்வா, சோகி போன்ற பழுதடையாத தின்பண்டங்களை எடுத்துச் செல்லுங்கள்”
ஆண்டவா சிரிக்க கூட முடியவில்லை. எப்படி சேர் உண்மையை பளிச்சென்று சொல்கிறீர்கள்?
(அதைவிட பெரிய ஆச்சரியம் இவ்வளவு திண்படங்களையும் நீங்கள் போகிறவர்களுக்கு Recommend
பண்றதுதான் )

ஆரம்பமே இடியப்பச் சிக்கலாக தெரிகிறது.
என்னைக் கேட்டால் இப்படி ஒரு பயணம் தேவைதானா ..? என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு நிலைப்பாட்டில் யாரும் இல்லை போல் தெரிகிறது.என்ன தான் நடக்கபோகிறது என்று
தான் பார்ப்போமே! என்னுடைய பிரார்த்தனை என்னவென்றால், காசு என்ற ஒன்றுக்காக
இலக்கியவாதிகள் பின்தள்ளி விடப்படக்கூடாது என்பதுதான்.
நல்லவை நடக்க பிரார்த்திப்போம்.......