Tuesday, June 28, 2011

ஆனா பொன்னாடை போர்த்திக்குவோம்ல!


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 12

மலேசிய மாநாட்டு அனுபவங்கள்

கடந்த மே மாதத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளையும் சேர்ந்தோர்
மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தியாவைவிட இலங்கையைச் சேர்ந்த பேராளர்களே அதிகமாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், இலங்கையிலிருந்து கலந்து கொண்டோரில் ஏறத்தாழ இருபத்தைந்து வீதமானோரே கலை, இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். பெரும்பாலானோர் வர்தக நோக்குக் கொண்டவர்களாகவே தென்பட்டனர்.

இம் மாநாடு தொடர்பாக இலங்கைக்கென ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கைக் குழுவின் தலைவருக்கும் செயலாளருக்கும் முதுகெலும்பு என்பது இல்லை என்பதுதான். எதிர்காலத்திலாவது இவர்கள் இருவரும் முதுகெலும்புகளைத் தங்களுக்குப் பொருத்திக்கொள்வது நல்லது. இப்படியொரு இலங்கைக் குழு இருந்ததைவிட இல்லாமல் இருந்திருக்கலாம். எந்த விடயமும் உருப்படியாக நடக்கவில்லை.


மாநாட்டு மலரில் இலங்கை ஆய்வாளர்கள் சிலரது கட்டுரைகள் பிரசுரிக்கப்படவில்லை. தலைவரும், செயலாளரும் தத்தம் குடும்பத்தினரோடு மலேசியாவுக்கு உல்லாசப் பயணம் செய்து தமது “இலக்கியப் பணியை” நிறைவேற்றிக் கொண்டனர். இவர்கள் இருவரோடும், குழுவில் இடம் பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சேர்ந்து பகற்கொள்ளைக்காரர் ஒருவரைப் பயண முகவராக ஏற்பாடு செய்திருந்தனர். அந்தப் பயண முகவர், மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படியொரு மோசடிக்கார பயணமுகவரை, இலங்கைக் குழுவைச் சேர்ந்த மேற்கண்ட மூவரும் பேராளர்களுக்கு அறிமுகம் செய்து, தாங்கள் சுயலாபம் பெற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட பயணமுகவரைத் திட்டாத இலங்கைப் பேராளர்கள் யாரும்இல்லை எனலாம்.


Sunday, June 26, 2011

ஏன் எனக்கு இப்படி...?

ஆர்த்தர் ஆஷே ஆபிரிக்க வழி அமெரிக்கர். உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர். மூன்று முறை கிரான்ட் ஸ்லாம் விருது வென்றவர்.

1943ம் ஆண்டு ஜூலை பத்தாம் திகதி வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரிச்மன்ட் என்ற இடத்தில் பிறந்தார். தனது டென்னிஸ் விளையாட்டுத் திறமையாலும் சமூக ஈடுபாட்டுச் சேவைகளாலும் பெரும் புகழ் ஈட்டியிருந்தார். இவரது பெயரில் நிவ்யோர்க்கில் உலகின் மிகப் பெரிய டென்னில் விளையாட்டரங்கு உள்ளது என்றால் அவர் எத்தகைய புகழ் கொண்டவராகவும் திறமையாளராகவும் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆஷே, எய்ட்ஸ் நோயினால் 1993ல் இறந்து போனார். அந்த நோய் அவருக்கு வந்தது அவரது கெட்ட நடத்தையினால் அல்ல என்பதுதான் சோகத்துக்குரிய விடயம். இதயத் தாக்கு ஏற்பட்ட பிறகு 1983ம் ஆண்டு இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இந்தச் சிகிச்சையின் போது அவரது உடலுக்குள் செலுத்தபட்ட இரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் இருந்துள்ளன. இதனாலேயே அவர் எய்ட்ஸ் நோயாளியானார்.

உலகம் முழுவதுமிருந்து அவருக்கு அவரது விசிறிகளிடமிருந்தும் விளையாட்டு ரசியர்களிடமிருந்தும் ஆயிரமாயிரம் கடிதங்கள் வந்து குவிந்தன. அவற்றில் ஒரு கடிதம் ஒரு கேள்வியுடன் வந்திருந்தது. இதுதான் அந்தக் கேள்வி. “இந்த மோசமான வியாதியைக் கடவுள் உங்களுக்குத் தந்தது ஏன்?”

ஆஷே அக்கடிதத்துக்குப் பின்வருமாறு பதில் எழுதினார்.

Friday, June 24, 2011

யதார்த்தம்


“முதலாளித்துவ அரசு மட்டுமல்ல, சோஷலிஸ அரசாக இருந்தாலும் சரி, ஜனநாயக அரசாக இருந்தாலும் சரி, அதற்கு எதிராக எழுதப்படுவதைப் பொறுத்துக் கொள்ளாது என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?

“ஆம்!”

“அப்படியானால் அரசுக்கு எதிராக எழுதியது ஏன்?”

“...............!”

“பதில் சொல்லு!”

“நாங்கள் படைப்பிலக்கியம் செய்கிறோம்
எழுதுவது மாத்திரம் தான் எங்கள் தொழில். எழுதிய பிறகு அது மக்களுக்கானதாகி விடும்!”

“அப்ப என்ன மயிருக்குடா பெயர் போடுறீங்க!”

“அப்படி நான் சொல்லவில்லை! மூத்த எழுத்தாளர்கள் சொல்லுகிறார்கள்!”

“அவர்கள் பெயர்களைச் சொல்ல முடியுமா?”

“ஞாபகம் இல்லை!”

“முயற்சி செய்! உன்னோடு சேர்த்து அவர்களுக்கும் லாடம் கட்டிவிடலாம்!”

Tuesday, June 21, 2011

“நம்பிக்கை"யும் வம்புக் “கை"யும்!



இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 11

இது வரை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் பல நடந்துள்ளன. அவை பற்றிய பாராட்டுக்கள், விமர்சனங்கள் யாவும் அம்மாநாடுகள் முடிவடைந்த பின்னரேயே வெளிவந்திருக்கின்றன. ஆரம்பிப்பதற்கு முன்னரே விமர்சனத்துக்குள்ளான ஒரே மாநாடாக குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவினர் மலேசியாவில் நடத்திய இலக்கிய விழா அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

இந்த விழா பற்றிய இதே போன்ற மேலும் சிறப்புகளை ஒட்டு மொத்தமாகத் தொகுத்து நாம் இக்கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரையில் பார்க்கலாம்.

குப்பப்பிச்சை ராவுத்தர் முகம்மது இக்பால் “நம்பிக்கை” என்றொரு சஞ்சிகையை நடத்தி வருகிறார் என்பதை நமது கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நபர்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த இதழின் ஜூன் மாத இதழில் குப்பப் பிச்சை இக்பாலின் சகபாடிகளில் ஒருவரான கவிஞர் மைதீ சுல்தான் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தமது பரிசுத்தத்தை நிரூபிப்பதற்காக சிலரைக் குறை கண்டிருக்கிறார். அவர்களில் ஒருவர் ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்கள். மற்றவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள்.

இந்தக் கட்டுரைக்கு இவர்கள் இருவரும் பதில் எழுதி - உரியவருக்கும் கட்டுரை பிரசுரமான சஞ்சிகைக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அவற்றில்  பிரதிகள நமக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. (இவ்விழா துவங்கிய போது பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினர் நமக்கும் அனுப்பியிருந்தனர்.)

இதுவரை பலரும் அறியாதிருந்த ஒரு சஞ்சிகைக்கு நமது வலைப்புவின் மூலம் சர்வதேச ரீதியில் பெரிய விளம்பரம் கிடைக்கிறதே என்ற கவலை இருந்த போதும் மலேசியா இலக்கிய விழா பற்றிய தொடர் கட்டுரை வருவதாலும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் சம்பந்தப்படுவதாலும் அவற்றை இங்கு தரவேண்டியிருக்கிறது. முதலில் திருவாளர். மைதீ சுல்தான் அவர்களது கட்டுரை.

கட்டுரைப் பக்கம் - 1


கட்டுரைப் பக்கம் - 2
 

Monday, June 20, 2011

நம்முடைய வாழ்வியலைத்தான் நாம் பேச வேண்டும்!


நேர்முகம்…


தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக்கொண்டவர் அஷ்ரப் சிஹாப்தீன். எந்த ஒரு விடயத்தையும் தன் எழுத்தாற்றல் மூலம் மக்களை சிந்திக்க வைப்பதில் இவர் கைதேர்ந்தவர். ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருடைய தந்தை ஒரு மார்க்க அறிஞர். இவரது பாட்டனார் ஒரு தமிழ்ப்புலவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய ஒட்டுமொத்த அறிவும் இவருக்கு கிடைக்கப்பெற்றிருப்பது இறைவன் அருளிய கொடை என்றும் சொல்லாம்.

வந்தாறுமூலை மத்திய கல்லூரியில்தான் தன் கல்வியை தொடர்ந்தார். இப்போது அது கிழக்குப் பல்கலைக்கழகமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடசாலையில் கல்வி கற்ற இவருக்க ஏராளமான தமிழ் நண்பர்கள். இப்படி திரும்பும் இடமெல்லாம் தமிழையே கண்டு வளர்ந்ததும் தமிழ் மீதான இவரது காதலை அதிகரிக்க காரணமாயிருந்தது.

 ஒலி,ஒளி பரப்புத்துறையிலும் நீண்ட காலம் தனக்கென ஒரு; இடத்தை உருவாக்கி நேயர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் அஷ்ரப் சிஹாப்தீன். இவர் மேடையில் பேசும்போது கேட்போரைக் கட்டிப்போடும் அளவுக்கு பேச்சுவன்மை கொண்டவர்.

கவிதை இலக்கியம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, கவிதைத் தொகுப்பு என இதுவரை 9 நூல்களை வெளியிட்டிருக்கிறார். யாத்ரா சஞ்சிகையின் ஆசிரியரான இவரது ஸெய்த்தூன் என்ற கவிதை சர்வதேச புகழ்பெற்று பலரால் விமர்சிக்கப்பட்டது. அதனால் அவருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டது. இவருடைய படைப்புகள் இன்று பரவலாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

அண்மையில் உள்ளத்தை உறைய வைக்கும் உண்மைக் கதைகளைக் கொண்டமைந்த ‘ஒரு குடம் கண்ணீர்’ என்ற பதிப்பை வெளியிட்ட திருப்தியில் திளைத்திருந்த பல்துறை சார்ந்த, பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவரை எமது அலவலகத்தில் சந்தித்தோம். இப்படிப்பட்ட ஒரு கலைஞர் எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி வந்தமர்ந்தார். அவருடைய தமிழ் மீதான ஆழ்ந்த ஈடுபாடு பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

‘சின்ன வயசில இருந்தே வாசிப்புப்பழக்கம் இருந்தது எனக்கு. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் என் பாட்டனார் ஆர்வம் மிக்கவர். அவர்கூட நிறையப் புத்தகங்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், ஏன் காவியங்கள் கூட எழுதியிருக்கார். இதெல்லாம் படிச்சுக்காட்டினால் அவர் எனக்கு பரிசு தருவார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேரமும் நான் அவருக்கு அதைப் படிச்சுக்காட்டுவன். ஒரு பக்கத்தை படிச்சுக்கட்டினன் எண்டு சொன்னால் எனக்கு 25 சதம் காசு தருவார். பிற்காலத்தில எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம்.

இரண்டாவது எனது தாயார் நல்லா தாலாட்டுப்பாடுவா. அந்த நாள்ல எல்லா வீடுகளிலும் ஊஞ்சல்கள் இருந்தன. இண்டைக்கும் காத்தான்குடில போய்ப்பாத்தீங்க எண்டால் ஊஞ்சல் இருக்குது. எங்கட ஊர்லதான் இல்லாமப் போயிட்டுது. அந்த ஊஞ்சல்ல பிள்ளைகளை வைத்துக்கொண்டு தம்பி தங்கைகளை நித்திரையாக்கிற நேரம் அவங்க அழகான தமிழ் தாலாட்டு பாடல்கள பாடுவாங்க. அவையும் கூட இரத்தத்தோட சேர்ந்த விசயம் இல்லையா? அப்படித்தான தமிழ் மீதான காதல் இருந்தது’ என்று சிரித்துக்கொண்டே கூறிய இவர் 80 வரையான காலப்பகுதிகளில் மரபுக் கவிதைகளையே எழுதிவந்தார். புதுக்கவிதையில் இலங்கையிலும் ஒரு எழுச்சி ஏற்பட்ட காலப்பகுதியில் இவரும் புதுக்கவிதைக்குள் பிரவேசித்து இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.

Sunday, June 19, 2011

எல்லாமே அவர்தானாம்... (மலேசிய இஸ்லாமிய தமிழ் இல. மாநாடு)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 10.06


ஒரு பேராளரின் பார்வையில்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான அனுபவங்கள், கருத்துக்கள் கடந்த பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. இவற்றை ஆமோதிக்கும் அதே வேளை சில கருத்துக்களை முன் வைப்பது எதிர்கால் ஏற்பாட்டாளர்களுக்கு பயன் தரலாம் என நினைக்கிறேன்.

மலேசியாவில் நடைபெற்ற இ;த மாநாட்டை ஏற்பாட்டாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் என்பதை எம்மால் மறுக்க முடியாது.

இலங்கையிலிருந்து 200 பேராளர்கள் மட்டில் கலந்து கொண்டதாக இறுதி விழாவில் அறிவிக்கப்பட்டது. இது மற்றைய நாடுகளை விட மிக அதிகம். பெருந் தொகை முஸ்லிம்கள் வாழும் இந்தியாவிலிருந்தாவது இவ்வளவு தொகையினர் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறு பெருந்தொகையினர் கலந்து கொண்ட போதும் அவர்களை அன்புடன் வரவேற்று தங்குவதற்கு வசதியான இடம் தந்து பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்த மலேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேபோன்று அவர்களுக்கு உதவியாக இருந்த பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்களின் தியாக சிந்தையும் பாராட்டுக்குரியது.

எனினும் இவர்களது கட்டுப்பாட்டுக்கு உடபடாத சில நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

இது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடக இருந்த போதிலும் முஸ்லிம்கள் அல்லாதோரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயவுரை சமர்ப்பித்தனர். இவர்களில் அநேகர் கல்விமான்கள், இலக்கியவாதிகள். இந்து, கிறிஸ்தவ பெருமக்களை அமர வைத்துக் கொண்டு எம்மவர் சிலர் ஆற்றிய உரைகள், வழங்கிய விளக்கங்கள் சற்றுக் கசப்பானவை. நாம் இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிக்கத்தான் வேண்டும். எமக்கு அதுதான் உயர்வு. அதற்காக மற்றைய மதங்களை, மற்றைய இனங்களை அவர்களது மனம் நோகும்படி பேசக் கூடாது. இதை இஸ்லாமும் அனுமதித்ததாகத் தெரியவில்லை.

ஓர் ஆய்வரங்கிலே தமிழ் சகோதரர்களும் இருந்தார்கள். அங்கு பேசிய எமது இஸ்லாமிய ஆய்வாளர் இந்துக்களுக்கு உண்ணக் கற்பித்தவர்கள் முஸ்லிம்கள். உடை அணியாத அவர்களுக்கு உடையணியக் கற்பித்தவர்கள் நாங்கள் என அடுக்கிக் கொண்டே போனார். அவர்கள் நாகரிகம் இல்லாது இருந்தார்கள். முஸ்லிம்களே அவர்களுக்கு நாகரிகம் கற்பித்தார்கள். அதாவது முறையாக உண்ண, உடுக்கக் கற்பித்தவர்கள் நாமே என்று கூறினால் அவர்களது மனம் புண்படாதிருக்குமா? இதில் நாம் என்ன இன்பத்தைத்தான் அனுபவிக்கிறோமோ நானறியேன்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என வேறாக பிரித்து எடுத்ததன் நோக்கமே இஸ்லாத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே. உனவே அது இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது இஸ்லாமிய இலக்கியமாகும். இஸ்லாமியக் கொள்கைகளுக்கு, அதன் போதனைகளுக்கு மாற்றமானவைக்கு இஸ்லாமிய இலக்கியம் என்று கூற முடியாது.

Friday, June 17, 2011

சின்னச் சூரியன் - அறபுச் சிறுகதை

எழுதியவர் - ஸகரிய்யா தாமிர்

அபூ ஃபஹத் கொஞ்சம் தடுமாற்றத்துடன் கூடிய மெதுவான நடையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அந்த ஒடுக்கமான நடைப்பகுதியில் மஞ்சள் நிற மின் விளக்கின் அடர்த்தியற்ற ஒளி சிதறிக்கிடந்தது.

அந்தப் பாதையில் நிறைந்திருந்த கனத்த அமைதியினால் அவனுக்கு அசௌகரியம் போல் இருந்தது. எனவே அவன் உரத்த குரலில் பாட ஆரம்பித்தான்.

“நான் ஓர் ஏழை... எதுவுமற்றவன்...”

அவனது கர்ண கடூரக்குரல் மிகவும் இனிமையானது என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான். அதே உரத்த குரலில் “நான் ஒரு பாடகன்” என்று உரத்துச் சொல்லிக் கொண்டான். மக்கள் வாய்திறந்தபடி மெய்ம்மறந்திருப்பது போலவும் அவனை நோக்கிக் கையசைப்பது போலவும் கரகோஷம் செய்வது போலவும் கற்பனை செய்து கொண்டான். எனவே சத்தமிட்டுச் சிரித்தான். தனது சிகப்பு நிற சால்வையை நுனியில் பிடித்துப் பின்புறமாக இழுத்து விட்டுக் கொண்டு பாட ஆரம்பித்தான். “நான் ஓர் ஏழை... எதுவுமற்றவன்...”

அவன் அணிந்திருந்த சாம்பல் நிறக் காற்சட்டையை மஞ்சள் நிறத்திலான பழைய இடுப்புப் பட்டி கொண்டு கட்டியிருந்தான். அந்தப் பாதையில் அவன் நுழைந்த போது மின் விளக்கின் ஒளியை விட இருட்டு அதீதமாக இருந்தது. சுவரோரத்தில் ஒரு கறுப்பு நிற ஆட்டைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. திகைப்பில் அவன் தன்னையறியாமல் வாயைத் திறந்தபடி பார்த்தான்.

‘நான் குடிக்கவில்லை. என்னால் சரியாகப் பார்க்க முடிகிறது. அட மனிதா... எதைப் பார்க்கிறாய்... இது ஓர் ஆடு. இதன் சொந்தக்காரன் எங்கே?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். அந்த ஒடுக்க வழிப்பாதை வெறிச்சோடிப்போயிருந்தது. அந்த ஆட்டைப் பார்த்துக் கொண்டே ‘நான் குடித்தா இருக்கிறேன்’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். “இறைவன் கருணையுள்ளவன். நான் அபூ ஃபஹத் என்பது எனக்குத் தெரியும். அப+ ஃபஹத் ஒரு வாரமாக இறைச்சி சாப்பிடவில்லை!”

அபூ ஃபஹத் ஆட்டின் மீது பரவி அதை முன்புறமாக இழுத்தான். ஆனால் அது நகர மறுத்தது. அதன் கொம்புகளைப் பற்றி மீண்டும் இழுத்தான். ஆனால் சுவருடன் உறைந்து போனது போல் ஆடு அசைய மறுத்தது. அவன் ஆட்டை முறைத்துப் பார்த்தான். பின்பு சொன்னான்:- “நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். உன்னுடைய தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்கிறேன்.”

அபூஃபஹத் ஆட்டை அலாக்காகத் தூக்கித் தோளில் வைத்தான். அதன் கால்களிரண்டையும் தனது கைகளால் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடனும் உற்காகத்துடனும் பாடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். சில கணங்களில் அவன் பாட்டை நிறுத்தினான். அந்த ஆட்டின் நீளமும் பாரமும் திடீரென அதிகரித்து விட்டது போல அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணத்தில் “என்னை விட்டு விடு” என்று ஒரு குரல் அவனது காதில் விழுந்தது. நெற்றியைச் சுருக்கியபடி, “மது அருந்துவது இறைவனின் சாபக்கேட்டுக்குரியது” என்று சொன்னான்.

Thursday, June 16, 2011

இது வேறு கமரா!


கடந்த 28.05.2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற “ஒரு குடம் கண்ணீர்” என்ற எனது நூலின் வெளியீட்டு விழாவின் மற்றொரு கமராவின் பார்வை.

தலைமையுரை - ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன்


கருத்துரை - 1
என்.கே. அஷோக்பரன்


கருத்துரை - 11
மர்சூம் மௌலானா



சிறப்பதிதி உரை
கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்



பிரதம அதிதி உரை
சிங்கப்புருக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் அமைச்சருமான திருமதி ஃபேரியல் அஷ்ரப் அவர்கள்

Sunday, June 12, 2011

ஒற்றைத் துவாரமும் ஓராயிரம் தரிசனங்களும்


முதலில் பிள்ளையின் சோற்றுப் பாத்திரத்தை நாங்கள் எடுத்தோம்.


சோமாலியாவில் பட்டினி. உணவு உண்ணாமலேயே உயிர் வாழ இப்போதே படிக்க வேண்டாமா?

பிறகு பிள்ளையின் விளையாட்டுக்களை நாங்கள் கவர்ந்தோம். வளரும்போதே இந்தக் களியாட்டங்களை ஆயுதமாக்குவார்கள் என்றனர் உளவியலாளர்கள்.

அவனுடைய அப்பாவையும் அம்மாவையும் நாங்கள் கொன்றோம். சொந்தக்காலில் நிற்க அவன் கற்க வேண்டாமா?

பிறகு அவன் வாய்விட்டுக் கத்திய போது உறக்கம் கலைந்ததற்காக அவனுக்கெதிராக வழக்குத் தொடுத்தோம்.

மேலே நீங்கள் வாசித்தது ஒரு சிறிய கதை. அதாவது சிறு கதை. அது சிறிய கதைதானே தவிர சிறுகதையில்லை என்பவர்களுடன் நான் டூ விடுவேன்.

பி.கே.பாறக்கடவு என்ற பிரபல மலையாள எழுத்தாளர் தனது நவீன கதைகளை இவ்வாறுதான் எழுதுகிறார். காலத்துக்கு ஏற்ற முறை என்பது எனது கருத்து. தவிர அது பேசும் விடயம் எத்தனை ஆழமா னது பாருங்கள். வல்லரசுகளின் வக்கிரப் போக்கை நாசூக்காக அது எடுத்துச் சொல்லும் லாவகம் ஒரு நல்ல கவிதையைப் படிப்பது போல் அல்லவா இருக்கிறது. வெறும் எட்டே வரிகளில் இந்தக் கதை ஒரு நூலில் அடங்கும் விடயங்களைப் பேசி விடுகிறது. இந்தக் கதையின் தலைப்பு ‘நீதி.’

இந்தமாதிரிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தமிழில் இந்த முயற்சிகள் மிகக்குறைவு. வெகுஜன சஞ்சிகைகளில் ஒரு பக்கக் கதைகள் சில வரத்தான் செய்கின்றன. ஆனால் மேலே நான் எடுத்தாண்டுள்ள கதையின் உள்ளுரம் அவற்றில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

Friday, June 10, 2011

ஃபொட்டோ ஃபோபியா


டாக்டர் உள்ளே வந்த தம்பதியரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தபடி தiiயை அசைத்து அமரும்படி சைகை செய்தார். டாக்டருக்கு அருகில் நோயாளி அமரும் கதிரையில் கணவர் அமர சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த கதிரையில் மனைவி அமர்ந்தார்.

டாக்டர்: என்ன பிரச்சினை?

நோயாளி: ......... .............

நோயாளியின் மனைவி:. நான் சொல்கிறேன் டாக்டர்

டாக்: சொல்லுங்கள்

நோ - ம: இரண்டு வாரங்களாக தொடர்ந்து பழைய பத்திரிகைகளைப் புரட்டி வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் டாக்டர். இரவில் படுக்ககையிலிருந்து திடீரென எழுந்தும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

டாக்: வாசிப்பது நல்ல பழக்கம்தானே... நிறைய வாசிப்பாரோ?

நோ - ம: என்ன டொக்டர்... ஒரே பத்திரிகையை எத்தனை நாளைக்குப் படிப்பது? கடந்த இரண்டு வாரங்களாக இரண்டே இரண்டு பத்திரிகைகளைப் புரட்டிப் புரட்டி வெறித்துப் பார்க்கிறார்.

Thursday, June 9, 2011

... மற்றப்படி சபாஷ்! (உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு 2011)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 10.05

மலேசியாவிலிருந்து பஷீர் அலி


கோலாகல நிகழ்வுகளுக்கென்றே இந்த ஊரை யாரோ செதுக்கி வைத்திருக்கின்றனர் போலும்! அல்லது ஆயிரம் கலியாணங்களுக்காகப் போடப்பட்ட தோரணங்கள் இன்னும் அவிழ்க்கப்படாமல் தொங்குகின்றதோ?

அதிசயத்திலிருந்து மீள முடியா இந்த அழகிய கோலாலம்ப+ர் நகரில் இஸ்லாமிய தமிழிலக்கியம் ஒரு மாநாடு காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். வரிசையில் நின்று சாப்பாட்டுக்கு சண்டைபோட்ட ஏழாவது மாநாட்டை சென்னையில் கண்ட எனக்கு இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

திட்டமிட்டபடி மே 20,21,22 ஆகிய திகதிகளில் உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டை கோலாகலமாக நடத்த மலேசிய கோலாலம்ப+ர் நகரம் தயாராக இருந்தது.

18,19,20ஆம் திகதிகளில் இலங்கை, இந்தியா, சிங்கப்ப+ர், மியன்மார், ஓமான், டுபாய், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்த 800இற்கு மேற்பட்ட இலக்கியப் பேராளர்கள் கோலாலம்ப+ரை வந்தடைகின்றனர். வந்தோரையெல்லாம் வரவேற்று உபசரித்து தங்குமிடம் கொடுத்து உபசரிப்பின் உச்சத்தில் வைக்கிறது. ~மலாயா பல்கலைக்கழக
வளாகம்!

~~பச்சைப் பசேலெனும் காட்சி.

எங்கு பார்த்தாலும் இதந்தரும் குளுமையின் ஆட்சி.

எச்சிறு வரட்சியும் இல்லை நல்ல

எழிலினில் காணலாம் இன்பத்தின் எல்லை.

மலேசியாவைப் பற்றிய கவிதையை களத்தில் அனுபவிக்கிறேன்.

விரிந்து பரந்து கிடக்கும் அறிவுக் கருவ+லம் மலாயா பல்கலைக்கழக வளாகங்கள் தோறும் இலக்கிய நெஞ்சங்களின் மணம் வீசுகிறது.

மே 20 வெள்ளிக்கிழமை மாலை தொடக்க விழா துவங்கப் போகிறது. மலாயா பல்கலைக்கழக முதல் கல்லூரி வளாகம், ரூமா வளாகம் என்பவற்றில் தங்கியிருந்த பேராளர்களை சுமந்து கொண்டு பேருந்துகள் நகர்கின்றன.

ராஜகோட்டையாய் உயர்ந்து நிற்கும் புத்ரா உலக வாணிப மைய மெர்டேகா மண்டபம் மணப்பெண்ணாய் அலங்காரமிட்டு வரவேற்கிறது.

~இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்
மாநாட்டு கருப்பொருள் சுமந்த பதாகை ஜொலிக்க, பரந்த விரிந்த மெர்டேகா மண்டப ஆசனங்கள் பேராளர்களை இழுத்து அமர்த்துகின்றன.

மாயின் அப+பக்கர் பரக்கத் அரங்கமாக அறிமுக விழா தொடங்குகிறது. நம்நாட்டு மதுரக்குரல் பீ.எச். அப்துல் ஹமீதின் கம்பீரத் தொனியால் மண்டபம் அதிர, நிகழ்சிகள் தொடங்குகின்றன.

இலட்சிய வாழ்வு பற்றி பேசப் புறப்பட்ட இலக்கிய மாநாடு மஃரிப் தொழுகையை மறந்து விடுமா என்ன? 7.15க்கு நிறுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் 8.00 மணிக்கு தொடக்க விழாவாய் மீண்டும் தொடர்கின்றன.

மலேசிய மண்ணில் ஓர் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்த வேண்டும் என்ற சிந்தனை வித்தை 1989ல் தூவிய மர்ஹ_ம் எஸ்.ஓ.கே. உபைதுள்ளா அரங்காக மெர்டேகா மண்டபம் மீண்டும் களைகட்டுகிறது.

மலேசிய பிரதமர்துறை அமைச்சர் மாண்புமிகு டான்ஸ்ரீ நூர் முஹம்மது யாக்கூப் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இலங்கை நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் கௌரவ விருந்தினராகவும் பங்கெடுக்க விழா தொடங்கிற்று.

~~வேறுபாடுகளை நாம் சகித்துக் கொள்வதில்லை அந்த வேறுபாடுகளை நாம் கொண்டாடுகிறோம்

கொக்கரக் கோ... கோ.....


இத்தால் கோழி இறைச்சி விரும்பிச் சாப்பிடும் அனைத்து முஸ்லிம்களுக்கும்....

பின்வரும் அறிவித்தலை சகோதரர் ரிஷான் ஷெரீப் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். இந்த அறிவித்தலில் உள்ள ஜம்இய்யத்துல் உலமாவின் இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு - இது ஜம்இய்யாவின் அறிவித்தல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.


இதற்கான சட்ட நடவடிக்கையை ஜம்இய்யத்துல் உலமா எடுக்கும் என்று நம்புகிறேன்.

Monday, June 6, 2011

மலேசியா போக ஒரு போர்ஜரி ரிக்கற்? (மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 10

வெளிநாடு ஒன்றில் நடக்கும் நடக்கும் பெரு விழா ஒன்றில் கலந்து கொள்ள நீங்கள் மிக ஆர்வத்துடன் விமானப் பயணம் செய்ய முடிவெடுக்கிறீர்கள். உங்களது அனைத்து வேலைகளையும் பின் போட்டு, உரிய பணம் செலுத்தி விமானச் சீட்டுப் பெற்றுக் கொள்கிறீர்கள். குடும்பத்தார், நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லி விட்டு விமான நிலையம் செல்கிறீர்கள். ஆர்வமிகுதியால் உங்களுடன் ஒரு நண்பரையும் உங்களது செலவிலேயே உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள். விமான நிலையத்தில் உள்ள அலுவல்கள் யாவும் முடிவடைந்த பின்னர் கடைசிக் கட்டம் வரும் போது ஒரு நிம்மதி வரும்.

அந்த நிம்மதியை நீங்கள் உணரும் போது அந்த விமான நிறுவன ஊழியர் உங்களிடம் வந்து “நீங்கள் வைத்திருப்பது போலி விமானச் சீட்டு. எனவே நீங்கள் பயணம் செய்ய முடியாது” என்று சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? உங்களுக்கு எவ்வளவு அவமானமாயிருக்கும்?

மலேசிய இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்று இவை அத்தனையையும் பட்டிருக்கிறார் ஒருவர். அவர்தான் சென். ஜோன்ஸ் அம்பிலன்ஸ் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் பிரபல வர்த்தகருமான சகோதரர் ஏ.எல்.மீராசாகிபு.

அவர் அழைத்துச் சென்ற சகோதரர் துவான் பாரூக் ஜாயா அவர்களைச் சந்தித்த போது அவர் விலாவாரியாக நடந்தவற்றை நமக்குச் சொன்னார்.



ஜனாப். துவான் பாரூக் ஜாயா

இனி துவான் பாரூக் ஜாயா பேசட்டும்....


“மலேசியாவுல நடக்கிற மாநாட்டுக்கு என்னையும் ஸ்பொன்ஸர் பண்ணினது மீராசாஹிப்தான். அவருதான் எனக்கும் சேர்த்து பணம் கட்டினாரு. முதல்ல ஹமாட் நிறுவனத்துக்கு 20,000 ரூபா கட்டினோம். பிறகு இன்னும் 35,000 ரூபா கட்டச் சொன்னாங்க. அதையும் கட்டினோம். வீசாவுக்கு தலைக்கு 1030 ரூபா. அதையும் கட்டினோம். பிறகு 19ம் திகதி அதிகாலை பயணம் செய்கிற மாதிரி விமானச் சீட்டுகளைத் தந்தாங்க..

நாங்க 18ம் திகதி இரவு விமான நிலையத்துக்குப் போனோம். எங்கட லக்கேஜ்ல பாரம் கொஞ்சம் அதிகமா இருந்திச்சு. எங்களோட இன்னொரு காத்தானகுடி நண்பரும் இருந்தாரு. மூன்று பேரும் 2000 வீதம் கட்டுறதை விட இரண்டு பேர்ட லக்கேஜ்களில் சரியான அளவும் ஒரு லக்கேஜில் மீதியையும் போட்டு சமாளித்து ஒருவரே 2000 கட்டி முடிச்சிக்கிட்டம்.

போடிங் பாஸ் எடுத்து எல்லாம் கிளியர் பண்ணி உள்ளே போய்க் காத்திருந்தம். போடிங் பண்ணும் போது கடைசிச் செக்கிங்கில் நான் தாண்டிய பிறகு, மீராசாஹிபு போக முடியாது என்று தடுத்து விட்டார்கள். அந்தச் செக்கிங் நடக்கும் இடம் விமானத்திலிருந்து சில அடிகள் தூரம்தான். மீராசாஹிப் என்று ஒரு ஆள் லிஸ்டில் இருக்காரு. அவரு உள்ளே போய்ட்டாரு. உங்க பெயர் லிஸ்டில் இல்லை. நீங்கள் போக முடியாது என்று சொன்னார்கள். இதே நேரம் எங்களது லக்கேஜ் எல்லாம் விமானத்தில ஏற்றியாகி விட்டது. அந்த இடத்தில் பிரச்சினையாகி விட்டது.

Sunday, June 5, 2011

இது கொஞ்சம் வித்தியாசமான சீரியல்


நாவலாசிரியர் தோப்பில் மீரான் அவர்கள் ஒரு முறை எனது இல்லத்துக்கு வருகை தந்த போது அவருடன் நானும் எனது புதல்வர்களும்
------------------------------------------------------------------------------------------------------------

பொதுவாக எழுத்தாளர்கள் மற்றொரு எழுத்தாளரை சிலாகிப்பது மிகவும் குறைவு. மற்றொரு எழுத்தாளரை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்துவதும் அபுர்வம். எழுத்துலகில் வளர்ந்து வருவோரில் அநேகர் மூத்தோரைக் கண்டு கொள்வதில்லை.

சகோதரர் பொத்துவில் அஸ்மின் தனது வலைப்புவில் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் பணியைச் செய்து வருகிறார். அந்த வரிசையில் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

பத்திரிகையொன்றில் ஒரு குறிப்பு எழுதுவதைவிட இணைத்தில் இடப்படும் குறிப்பு பலருக்குப் பலவிதத்தில் தகவலுக்கு உதவுகிறது. இவரது முயற்சி அறியப்பட்ட படைப்பாளிகளை மேலும் அறியப்படுத்தவும் அறியப்படாதோரை அறிமுகப்படுத்தவும் உதவும். அவருக்கு படைப்பாளிகள் சார்பிலும் எனது சார்பிலும் நன்றிகள்!

நீங்களும் அவரது வலைத்தளத்துக்கு ஒரு விசிட் அடிங்க....  தேடி எங்கும ்போக வேண்டியதில்லை. கீழே லைட்டா ஒரு முறை சொடுக்குங்க... போதும்!

Saturday, June 4, 2011

ஒசாமாவுக்குக் கடலை விற்றவர்


ஒசாமா பின் லேடனுக்கு குங்பூ கற்பித்ததாக தாய்வானைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ள செய்தி பரவலாகப் பேசப்படுகிறது. அச் செய்தி உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கக் கூடும்.


யாராவது ஒரு பிரபலம் மறைந்து விட்டால் அப்பிரபலத்தின் பெயரால் சில பரபரப்புத் தகவல்களை எடுத்து விட்டுப் பிரபலம் பெறுவது அவ்வப்போது உலகம் முழுக்க நடந்து வருகிறது.

இதற்கென்று சிலர் பாயைப் போட்டு உட்கார்ந்து வெற்றிலை சப்பிக் கொண்டு காத்திருப்பது போல் எனக்குப் பிரமை தட்டுகிறது. எதிர் காலத்தில் எத்தனையோ விதமாகக் கதைகளை விடுவதற்கு இப்போதே ரூம் போட்டு சிலர் யோசிக்கக் கூடும்.

ஒசாமாவை வைத்தே சும்மா ஒரு கற்பனை செய்து பார்த்தால் என்ன என்று நமக்கும் ஒரு யோசனை வந்தது.



ஒசாமாவுக்குக் கடலை விற்றாராம்
- நாச்சிமுத்து பரபரப்புத் தகவல்

ஒசாமா பின்லேடன் தன்னிடம் கடனுக்குக் கடலை வாங்கிச் சாப்பிட்டதாக சென்னை மண்ணடித் தெருவைச் சேர்ந்த கடலை வியாபாரி நாச்சி முத்து தெரிவித்துள்ளார்.

ஒசாமா சிறுவனாக இருந்த போது அவர் தன் தகப்பனாருடன் சென்னைக்கு வந்து தங்கியிருந்ததாவும் அப்போது தங்கியிருந்த லாட்ஜிலிருந்து தகப்பனாருக்குத் தெரியாமல் ஓடி வந்து தன்னிடம் அடிக்கடி கடலை வாங்கிச் சாப்பிட்டதாகவும் நாச்சி முத்து நமது ‘குடலுருவி’ க்குத் தெரிவித்தார்.

மண்ணடித் தெருவில் கடலை விற்கும் நாச்சி முத்து இது பற்றி மேலும் தெரிவித்ததாவது:

ஒசாமாவின் தகப்பனார் தமது பிள்ளைகளுடன் ஓய்வூக்காக வருடா வருடம் சென்னை வந்து மண்ணடியிலுள்ள லாட்ஜில் தங்குவது வழக்கம். அவர்கள் சென்னை வந்தால் ஒசாமா மட்டும் என்னிடம் தினமும் வந்து கடலை வாங்குவது உண்டு. சில வேளைகளில் அவர் கடனுக்கும் கடலை வாங்கியுள்ளார். அவருக்குத் தமிழ் தெரியாது. எனவே சைகையில்தான் என்னுடன் பேசுவார்.

சின்னப் பையன் என்பதாலும் வசதியயுள்ள நாட்டில் இருந்து வருபவர்கள் என்பதாலும் அவர் கேட்கும் போது பணத்தை எதிர்பாராமலே கடலை கொடுத்து வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் ஒசாமாதான் என்று உங்களுக்கு எப்படித் தெரியயும் என்று நமது நிருபர் நாச்சி முத்துவிடம் கேட்டார். அதற்கு நாச்சி முத்த, ஒரு முறை அவர் தனது தந்தையாருடன் கடலை வண்டிக்கருகில் செல்லும் போது அவரது தந்தை அவரைப் பார்த்து ‘ஒசாமா’ என்று அழைத்ததாகக் குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------

ஒசாமாவுக்குச் சுடப் பழக்கியவர் கைது!

Thursday, June 2, 2011

மாட்டுக்கு மாலை போடு….


சகோதரர் பொத்துவில் அஸ்மின் ஒரு சிறந்த மரபுக் கவிஞர். புதுக் கவிதையிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. இன்று எனது மின்னஞ்சலுக்கு அவர் அனுப்பியிருந்த மரபுக் கவிதை என்னை மிகவும் கவர்தது. உங்களையும் கவரும் என்பதால் அதை இங்கு தருகிறேன்.


மாட்டுக்கு மாலை போடு….



காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!

வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட

தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்

காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு…

மூலைக்கு மூலை கூடி
“முதுகினை சொறிந்து” எங்கும்

“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை’’ கொடுத்து பின்னர்

எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு…?

என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது

அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே

ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசை யில்லை

காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

மாண்டுநாம் மடிந்த பின்தான்
மனதினால் மாலை இடுவர்

ஈண்டிவர் போடும் மாலை
இதயத்த லல்ல வேசம்..

மாலையில் மாலை போட்டு
மாலைதான் மறையுமுன்னே

கூழையன் நாங்கள் போட்ட
“கூழுக்கு” ஆடிப் போனான…

ஆளினைப் பிடித்து வைத்தால்
ஆளலாம் என்பீர் உங்கள்

காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள்நாய் வாலை ஆட்டும்

பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்

ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!

எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!