Tuesday, December 9, 2014

ஒரு சாதி ஆய்ட்டேன்!


நாவலாசிரியர், சிறுகதையாளர், கவிஞர், நாடக எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்ட எனது மனதுக்கினிய நண்பர் ஆர்.எம். நௌஷாத் அவர்களிடமிருந்து நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அந்த மின்னஞ்சலைப் பொதுவில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மின்னஞ்சல்
-----------------
ஒரு வண்ணத்துப் பூச்சி பல வண்ணத்துப் புள்ளிகளுடன்  இறகு விரித்து  உங்கள் முகம்  நோக்கி வருகிற பாங்கில்  விரிந்துள்ள உங்கள் முகப் புத்தகம் கண்டு மகிழ்ந்தேன்

முகப்பும் ஒரு படைப்புத்தான்

முகப் பூவும் ஒரு படைப் பூதான்

படைப்பை நேர்த்தியாக்கும் திறன் சிலருக்குத்தான் வரும்.
யாத்ரா வின்  அதே அழகான வடிவமைப்பு  பேஸ்புக் கிலும்  படிந்துள்ளது


ஓய்வானத்தின் பின் ஒரு சிலரின் முகப் புக்குகளை சும்மா திறந்து பார்த்தேன் ...
அதுதான் நான் செய்த மிகப் பெரும் ..தவறு இவ் வருடத்தில்..

ஒருவரின் முகப் புக்கை திறக்கவே மனசு பக் பக் என்கிறது
இன்னொருவரின் புக்கினுள் பீ நாத்தம் சகிக்கல்ல.
மற்றுமொருவர்  முக நூல் என்ற பெயரில் மூக்குப் பீ தோண்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் எழுத்தாளர் இன்னொரு பெண்ணியல் கவிஞரோடு பின்னிக் கிடக்கிறார்.

இவையாவது  பரவாய் இல்லை.. ஐயா

ஆனால் ... நேற்று ஒரு சிரேஷ்ட எழுத்தாளரின் முக நூல் திறந்தேன் .. பாருங்கள். ... அதாவது 2014 ஜூன் மாதம் எழுத ஆரம்பித்து  ஜூலை மாதமே  கவிதை தொகுதி போட்டுவிட்ட   அந்த சிரேஸ்ட  மூத்த எழுத்தாளர்   தனது முக நூலில் எழுதி வருகிற சுய சரிதையில் வளரும் இளைய எழுத்தாளருக்கு சொல்லும்  அறிவுரைகளை வாசித்து நமது குண்டியிலிருந்து  குண்டிக்காய்  வரை குலுங்கிச் சிரிக்கையில் .... போதாதென்று  கீழே அவரது முதல் படைப்பாம் .....ன்னிப்  ப (பு) டைப்பையும் காட்சிப் படுத்தி இருந்தார் பாருங்கள்... அடடா

என் பிறசரும் சீனியும் ஹாட்டும் எகிறிப்  போய் ஆளே  ஒரு சாதி ஆய்ட்டேன் ....

இனி பேஸ்புக் பக்கமே  மௌஸ் வைக்கக் கூடாது என முடிவு கட்டினேன் ...

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கருத்துச் செறிவும் கனதியும் கண்ணுக்கு அழகாகவும்  கண்ட உங்கள்  நட்ட விழி  முகநூல் ஒரு  நிவாரண மாத்திரையாக இருந்தது.. அருந்திக் குணம் அடைந்தேன்.... அன்பான வாழ்த்துக்கள் ...   இனி   தொடர்வேன் ...

தீரன் ஆர் எம்  நௌஷாத்
09.12.2014

Saturday, November 22, 2014

தெற்கே உதித்த சூரியன்!


 - 07 -

 மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த  அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.

20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆசிரியராக, கவிஞனாக, கலைஞனாக, சிறுகதையாளராக, நாவலாசிரியராக, பாடலாசிரியராக, பாடகராக, பத்திரிகை ஆரிசியராக, சமூகப்போராளியாக என்று ஏகப்பட்ட பக்கங்களுடன் ஓயாமல் உறங்காமல் உழைத்த சகலகலா விற்பன்னர்தான் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள்.



ஒரு தனிமனித இயக்கமாக நின்று சமூகத்தளத்திலும் இலக்கியத் தளத்திலும் இவரைப் போன்று இயங்கிய ஒருவரைக் கடந்த காலமும் கண்டிருக்கவில்லை, நிகழ்காலமும் காணவில்லை. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் இன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து குழு ரீதியான முறைமையிலேயே பதில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்ந்த காலம் முழுவதும் இதை அவர் தனியொருவனாய்த் தைரியமாய்ச் செய்து வந்தார்.

அவர் ஈடுபட்ட துறைகள் எல்லாவற்றிலும் துலங்கினார். அவர் எழுதிய 'வெண்புறாவே' பாடல் அதற்கு அழியா வரம்பெற்றது. தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாத ஆக்கங்களை அவர் தனது 'அஷ்ஷூரா' பத்திரிகையில் பிரசுரித்து என்னைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தினார். தினகரன் பத்திரிகையில் 'புதுப் புனல்' என்ற பக்கத்தின் மூலம் நூற்றுக்கணக்கான இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வளர்த்தெடுத்தார்.

சமூகத்தை ஏமாற்றிப் பிழைத்தல், மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்தல், ஆஷாடபூதித் தனம், பெண் கல்வி மறுப்பு, சிந்திக்காத மூடப் போக்குகள் போன்றவற்றை நேரடியாகச் சாடினார். ஒரு சமூகத்தின் அடையாளம் மார்க்கத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை, அதன் கலை, கலாசார அம்சங்களில் தங்கியிருக்கிறது என்பதை மிக உறுதியாக அவர் நம்பினார். அதற்காகச் செயல்பட்டார். மரணத்துக்குப் பிறகும் கலை, இலக்கியத்தோடு சார்ந்த சமூகாபிமானிகளுக்கு ஓர் சிறந்த முன்னோடியாகவும் கையிலெடுக்கத் தக்க ஆயுதமாகவும் அவரை நினைக்கத் தோன்றுவது இதனால்தான். சமூகத்தில் குழப்பத்தையும் பிரச்சகைளையும் ஏற்படுத்தியவர்களைச் சாடியதால் அவரையே ஒரு குழப்பவாதி என்று சித்தரிக்க முயன்றது பெரிய வேடிக்கை!

ஓர் அறைக்குள் இடது புறம் பத்திரிகைக் குவியல், வலது புறம் புத்தகக் குவியல், மேசையில் விரித்தபடி இருக்கும் வெள்ளைத்தாள்களும் பேனைகளுமாய் அமர்ந்திருந்து ஷம்ஸ் அவர்கள் சமூகத்தில் கலை, இலக்கியத்தைப் பயன்படுத்தி, அதிர்வுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தினார். எல்லாவற்றையும் விட சிந்தனை மாற்றத்தை நோக்கிச் சமூகத்தை அழைத்துச் செல்ல அவர் மிகவும் பிரயாசைப் பட்டார். மனிதாபிமானத்தையும் சகோதரத்துவத்தையும் சக வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு கலையும், இலக்கியமும் பெரும் பங்களிப்புச் செய்யக் கூடியவை என்று நம்பினார். அப்படியே இயங்கினார்.

புதிய தலைமுறைக்கு எம்.எச்.எம்.ஷம்ஸ் என்ற ஆளுமையையும் அவர் ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றிப் பெரிய அளவில் தெரியாது. அவரது 'கிராமத்துக் கனவுகள்' நாவல் மற்றும் தற்போது வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்புமே அன்னாரின் இலக்கியச் சொத்துக்களாகச் சமூகத்துக்குக் கிடைத்திருக்கின்றன. பல நூல்களை வெளியிடும் அளவு எழுத்தும் பல இயக்கங்களின் செயற்பாடும் தன்னகத்தே கொண்ட அவரை முழுமையாக சமூகத்துக்கு முன் கொண்டு வர வேண்டுமானால் அவரது அனைத்துப் படைப்புகளும் (முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக எழுதியோருக்கு அவர் கொடுத்த மறுப்புக் கட்டுரைகள் உட்பட) வெளிக்கொண்டு வரப்படல் வேண்டும். அவற்றை வெனிக் கொண்டு வரும் கடமை அவரது பிறந்த ஊருக்கும் சமூகத்துக்கும் உரியது என்று அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

மர்ஹூம் ஷம்ஸை அறியாதவர்கள் மற்றும் அவருடன் பழகாதவர்கள் அவரது செயற்பாடுகளையும் இயங்கியலையும் பார்த்து, அவரைக் கடும் கோபக்காரனாக, இடைவெளி வைத்துத் தன்னைத் தனித்துவப்படுத்தும் ஒரு கனவானாகக் கற்பனை செய்யக் கூடும். அப்படியெனில் அந்தக் கற்பனை மிகவும் பிழையானது.

அவரது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் அவர் சொல்வதைப் பாருங்கள்...

'நான் என் மனுஷியின் பெயரிலேயே சிறுகதை எழுதினேன். நான் பாஹிராவைக் கைப்பிடித்த புதிதில்தான் 'இன்ஸான்' வெளிவந்தது. கல்யாணப் பரிசு படத்தில் தங்கவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே மனுஷியின் பிரார்த்தனை!'

(மீள்பார்வை இதழ் - 306)

Tuesday, November 11, 2014

வற்றாத கடலில் ஓயாத அலைகள்!


 - 06 -

ரிஹாம் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி வழங்குனர். பழுப்புத் தலைமுடி கொண்ட  இளம் எகிப்தியப் பெண். மணிக்கட்டு வரை மறைக்கும் ஒரு கருப்பு நிற டீஷேர்ட் மாதிரியான மேலுடை அணிந்து ஒரே பார்வையில் அழகிய நாகரிகப் பெண்ணாகத் தோற்றமளிக்கிறார்.

அன்றையத் தொலைக் காட்சி  நிகழ்ச்சிக்கு நேர்காணலுக்காக வந்திருப்பவர் மிகவும் வில்லங்கமான ஒரு பெண்மணி. நோஹா முகம்மத் சலீம் என்ற 53 வயதான அந்தப் பெண்  பழுப்பு நிறமான துணியினால் முகத்தையும் தலையையும் மறைத்திருக்கிறார்.

பேட்டி ஆரம்பமாகிறது.

ரிஹாம் வினாவை விடுகிறார். ' நீங்கள் வழமையாக ஹிஜாப் அணிவதில்லை என்று நினைக்கிறேன்.' பதில் 'ஆம், அணிவதில்லை!' என்று வருகிறது. 'அப்படியயானால் இப்போது ஏன் அணிந்திருக்கிறீர்கள்?' என்ற மறுவினாவுக்கு 'நான்என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ என்னைக் கொல்வதற்கான வாயப்பளிக்கவோ நான் விரும்பவில்லை. மார்க்கப்பற்று மிக்க எனது குடும்பத்தினரைச் சங்கடப்படுத்தவோ காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை' என்று பதில் வருகிறது.

'முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மேதை! ஒரு சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கட்டளையாளர் மற்றும் சிறந்த மனிதராக இருந்தவர். குர்ஆனை அவரே எழுதினார். தூது இறங்கியதும் கிடையாது. ஜிப்ரஈல் என்று யாருமில்லை' என்கிறார் நோஹா. மிகவும் தெளிவாகவும் சாமார்த்தியத்தோடும் வினாத் தொடுக்கும் ரிஹாமுக்குள் கோபம் பரவுகிறது. 'முகம்மத் (ஸல்) அவர்கள் இறைதூதர் இல்லையென்றும்  பரிசுத்தத் தூது இறங்காத போது அவர் எப்படித் தூதராக முடியும்?என்றும் ஜிப்ரஈல் ஒரு கற்பனைப் பாத்திரம்' நோஹா சொல்லும் போது ரிஹாம் கோபத்தின் உச்ச நிலைக்குச் செல்கிறார்.

நோஹாவின் கதை விசித்திரமானது. 24 வயதில் திருமணம் செய்த அவருக்கு 30 வயது வரை எல்லாம் சுபமாகவே இருந்தது. 30 வயதில் இஸ்லாம் பற்றிய விநோதமான சிந்தனைகள் அவரில் தோன்றவே கணவருடன்  சென்று வைத்தியரைப் பார்த்தார். அவ்வாறான சிந்தனை குறைந்தது. ஆனால் மருந்து மூளையைச் சிதைத்து விடுமோ என்ற பயத்தில் மருந்தை நிறுத்தினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறியது. உனக்கும் எனக்கும் சரிவராது என்று கணவன் பிரிந்து போய் விட்டார். நோஹாவின் இரண்டு மகன்களும் கூட அவரது கருத்துக்களை ஏற்கவில்லை. தனது மனோ நிலை சரியாகவே இருக்கிறது என்பதை நிரூபிக்க நோஹா ஒரு வைத்திய சான்றிதழைப் பெற்று வைத்திருக்கிறார். ஆனால் குடும்பத்தவரோ 'டாக்டர் பிழையாக உனக்கு அதை எழுதித் தந்திருக்கிறார்' என்கிறார்கள்.

இந்த நோஹாவுடன்தான் ரிஹாம் சூடுபறக்க விவாதித்துக் கொண்டிருந்தார். 'கை வெட்டுவது மனிதாபிமானமற்றது' என்கிறார் நோஹா. 'ஷரீஆ சட்டம் அமுல் செய்யப்பட்டு மதுச்சாலைகளையும் காபரே கிளப்புகளையும் உடைத்தெறிய வேண்டும் அப்போதுதான் யாவும் உருப்படும்' என்று கோபத்தோடு பதில் சொல்கிறார் ரிஹாம். தலை மூடாத ரிஹாம்!

'ஏன் நீ தொழுவதில்லை?' என்ற ரிஹாமின் கேள்விக்கு 'நான் கடந்த காலத்தில் தொழுதேன், ஆனால் எனக்கு இறைவன் பதிலளிக்கவில்லை' என்று பதில் வர 'இப்படிப் பேசும் உனக்கு எப்படிப் பதில் வரும்?' என்று மறுவினாவைத் தொடுக்கிறார் ரிஹாம். வார்த்தைகள் சூடேறக் கடும் கோபம் கொண்ட ரிஹாம் 'நீ இங்கிருந்து போய் விடு!' என்று சொல்லிக் கலையகத்திலிருந்து நோஹாவைத் துரத்தி விடுகிறார்.

மற்றொரு காட்சி. தலை மூடாத அதே ரிஹாம். இம்முறை மார்க்க அறிஞர் யூஸூப் பத்ரி.

நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன் ஷெய்க் யூஸூப் பத்ரி, தலையை மூடிக்கொள்ளுமாறு ரிஹாமிடம் கோருகிறார். 'கலையகத்துக்கு வெளியே உங்களுடைய அன்றாட வாழ்வில் தினமும் தலையை மூடாத ஆயிரக் கணக்கான பெண்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள். தொலைக் காட்சியில் உங்களை நேர்முகம் செய்வதற்காக மட்டும் நான் தலையை மூட வேண்டுமா?' என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார் ரிஹாம்.

ஆனாலும் ரிஹாம் தலையை மூடியபடி பேட்டியை ஆரம்பிக்கிறார். மந்திரித்தல், பேயோட்டுதல் என்ற பெயரில் சில ஆண்கள் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதைப் பற்றிக் கேட்ட போது, 'தலைப்பை மாற்று' என்கிறார் ஷெய்க் பத்ரி. 'பொதுமக்கள் விடயத்தைத்தான் நான் பேசுகிறேன், பதில் சொல்லுங்கள்' என்று கேட்க, பத்ரி கோபம் கொண்டு பேசுகிறார். 'நீங்கள் கோபம் கொண்டு எனக்கு ஏசுவதற்காகவா  எங்களிடம் 1000 பவுண்கள் வாங்கிக் கொண்டு நேர்முகத்துக்கு வந்தீர்கள்?' என்று ரிஹாம் கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லாமல் கோபத்தில் 'தொலைக் காட்சி நிலையத்தையே மூடிவிடும் வேலையைச் செய்வேன்' என்று பயங்காட்டுகிறார் ஷெய்க் பத்ரி. 'எங்கள் பணத்தையும் வாங்கிக் கொண்டு எங்கள் அலைவரிசையை மூடிவிடுவேன் என்கிறீர்களே.. இதென்ன நியாயம்?' என்று கேட்டபடி தலைத் துணியை நீக்குகிறார் ரிஹாம்.

ஷெய்க் பத்ரி, 'முதலில் தலையை மூடு. இல்லாவிட்டால் நான் போய் விடுவேன்' என்கிறார். 'நான் மூடமாட்டேன், நீங்கள் இருங்கள். நானே போகிறேன்' என்று கலையகத்திலிருந்து வெளியேறுகிறார் ரிஹாம்.

இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த போது எனக்குள் பல பல்புகள் ஒளிர்ந்தன. பிரதான பல்பு வெளிச்சத்தில் எனக்கு விளங்கியது என்னவென்றால் -

 இரண்டு கோடி முஜத்திதுகள் தோன்றினாலும்  ஈஸா (அலை) இறங்கும் வரை இவ்வாறான பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பிருக்காது என்பதுதான்!

Monday, November 10, 2014

அவனும் அவளும்!


மராம் அல் மஸ்ரி
(சிரியா)


ஒரு வீடு
பிள்ளைகள்
அவனுக்கு அன்பு செலுத்தும்
ஒரு மனைவி;..
இதற்கு மேல்
அவனுக்கு எதுவும் வேண்டியதில்லை

ஆனால்
ஒருநாள் 
அவன் கண்விழித்த போது
அவனுடைய ஆன்மா
வயதாகி விட்டதை
அறிந்து கொண்டான்!

ஒரு வீடு
பிள்ளைகள்
அவளுக்கு அன்பு செலுத்தும்
ஒரு கணவன்..
இதற்கு மேல்
அவளுக்கு எதுவும் வேண்டியதில்லை

ஆனால்
ஒருநாள் 
அவன் கண்விழித்த போது
அவளுடைய ஆன்மா
ஒரு யன்னலைத் திறந்தது
பின்னர்
பறந்து விட்டது!


தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Monday, November 3, 2014

வளவையின் மடியிலே...


பன்முகக் கலைஞரும் எழுத்தாளரும் கவிஞருமான மறைந்த எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு “வளவையின் மடியிலே”  நேற்று ஞாயிறு (02.11.2014) அன்று கொழும்பு - 6, பெண்கள் ஆய்வு மையக் கேட்போர் கூடத்தில் கவிஞர், எழுத்தாளர் அல் - அஸூமத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


பிரபல எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத் அவர்கள்


நூல் குறித்த கருத்துரை - திருமதி வசந்தி தயாபரன் அவர்கள்


எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களது இலக்கியப் பட்டறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான இளையநிலா பஸ்மினா அன்ஸார் கவிதை படித்தார்.


கருத்துரை - அஷ்ரஃப் சிஹாப்தீன்


கருத்துரை - ஜவாத் மரைக்கார்


சிறப்புரை - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்

முதற்பிரதி கொடகே நிறுவனர் சரிசுமண கொடகே அவர்களால் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Wednesday, October 29, 2014

அழுகுரல்!


 - Lahja Kauluvi -
Namibia

தமிழில்
அஷ்ரஃப் சிஹாப்தீன்


அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
தெருவில் நிற்கும் ஒரு பெண்ணின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுப்பார்களா?
யாராவது சென்று பார்ப்பார்களா?
கலகக் கும்பலொன்று அவளைத் தாக்கிச்
சாக விட்டிருக்கிறது...
அவள்
வீட்டிலேயே இருந்திருக்கலாம்!

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
எனக்கருகே இருக்கும்
ஒரு பெண்ணின் அழுகுரல்
யார் அதைச் செவிமடுப்பார்?
யார் வந்து பார்ப்பார்?
அவளுடைய உதடுகள்  கிழிக்கப்பட்டுள்ளன
அவளுடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது
அவளுடைய கணவன் சொன்னதை
அவள் ஏற்றுக் கொண்டிருக்கலாம்!

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
எனது நெருங்கிய நண்பியின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுக்க வேண்டுமென
விரும்புகிறேன்
யாராவது போய்ப் பார்க்க வேண்டுமென
விரும்புகிறேன்
அவமானத்தால் போர்த்தப்பட்டிருக்கிறாள்
துளித்துளியாய்ச் சேரும் சோகங்களுடனிருக்கிறாள்
அவளுடைய கண்களை எதிர்கொள்ள
என் கண்களுக்கு முடியாதிருக்கிறது
அவளது நோவுகள் கூர்மையாளவை
என்னுடையவற்றைப் போலவே 
உணர வைப்பவை

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
அது எனது பெண்; குழந்தையின்
அழுகுரல்
யாராலும் அதைக் கேட்க முடிகிறதா?
யாராவது வந்து பார்ப்பார்களா?
அவளது நம்பிக்கைக்குத் துரோகமிழைக்கப்பட்டது
ஒரு வார்த்தையும் சொல்ல முடியவி;ல்லை
அமைதியாயிரு மகளே 
அமைதியாயிரு இப்போது
உனது கனவுகளோடு அமைதியாயிரு

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
இது எனது சொந்த அழுகுரல்
யாராவது எனக்குச் செவிமடுங்கள்
யாராவது வந்து பாருங்கள்
எனது உடல் முழுக்கத் தழும்புகள்
இதற்கு மேலும்
நான் அமைதியாக இருக்க முடியாது

இதற்கான அடையாளங்கள் தெரிந்த போதே
நான் பேசியிருக்க வேண்டும்!


கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்!


 - 05 -

மிகக் குறைந்த நபர்களே வாசிக்கும் நூல்களில் இருந்த 'இஸ்லாமிய அரசியல்' என்ற பதத்தை நடைமுறை அரசியலில் முதன் முதலில் பேச விழைந்தவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.

அக்காலப் பகுதியில் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த அந்தப் பதம் ஒரு குறிப்பிட்ட வீதம்; பயன்பாடுடையதாக இருந்தது. இஸ்லாமிய அரசியல் என்பது என்ன என்பது பற்றிய பொதுவான தெளிவு இன்னும் சரியாக ஏற்படாத நிலையிலும் இன்னும் சிலர் அதே வார்த்தையை முன் வைத்து தமது அரசியலை முன் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

நேர்மையானதும் மக்களை மையப்படுத்தியதும் தன்முனைப்பற்றதுமான ஓர் அரசியலை முன்னெடுப்பது என்பதை எப்படி வியாக்கியானப்படுத்தினாலும் கூட, மர்ஹூம் அஷ்ரப் போய் நின்ற 'முஸ்லிம் அரசியல்' என்ற எல்லைக்குள்தான் நின்றாக வேண்டியேற்படும். இஸ்லாமிய அரசியல் என்று சொல்லி ஓர் அரசியலை முன் கொண்டு செல்பவர்கள் - அவர்கள் நேர்மையானவர்களாக, இறையச்சம் கொண்டவர்களாக, மக்களை மையப்படுத்தியவர்களாக இருந்த போதும் கூட, சாக்கடையாகிக் கிடக்கும் பொது அரசியல் நீரோட்டத்தோடு இணைந்தே செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

பன்மைத்துவ சமூக அமைப்பில் இஸ்லாமிய அரசியலை முன்கொண்டு செல்வது குறித்து மார்க்கத்தையும்; சர்வதேச அறிஞர்களையும் படித்த ஒரு சில இளைஞர்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளார்கள் என்பதை  உணர முடிகிறது. அவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு சமூகத்துக்கு முன்னால் புரிகின்ற பாஷையில் வைக்கப்படுவதற்கு இன்னும் காலம் செல்லக் கூடும்.

ஒரு காலப்பிரிவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தமக்குரிய அரசியல் பிரதிநிதி இல்லாமலே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரை கால்கள் இல்லாத ஒரு பிச்சைக்காரனின் நிலையில் இந்த சமூகத்தின் நிலை இருந்து வந்துள்ளது. அநேகமாகவும் பெரும்பான்மைச் சிங்கள, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்கள். அப்போதும் கூடச் சமூகம் பிரதான இரண்டு கட்சிகளாகப் பிளவு பட்டுக் கிடந்தது.

முஸ்லிம்களுக்கான அரசியல் என்று அஷ்ரப் அவர்கள் களத்தில் இறங்கிய போது ஒரே நாளில் அவரை மக்கள் தோள்களில் சுமந்து விடவில்லை. ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளில் பிளவு பட்டுக் கிடந்தோரும் அவர்களின் எஜமானர்களும் அவரைத் தூஷித்தனர். துரத்தித் துரத்திச் சண்டித்தனங்கள் புரிந்தனர். ஆனால் தமிழ்ச் சமூகத்தின் துப்பாக்கி ஏந்திய விடுதலை வீரர்களது அழுத்தத்தின் காரணமாக நொந்து நூலாகிக் கிடந்த முஸ்லிம்களுக்குத் தமது எதிர்ப்பை அவர்களுக்குக் காண்பிக்க அஷ்ரப் ஒரு வடிகாலாக இருந்தார். ஆக அந்த உணர்வு, முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய அரசியல் என்ற பதம் யாவும் சேர்ந்து ஓர்அரசியல் எழுச்சியாக  ஏற்பட்டதைப் பார்க்கிறோம்.

பெருந்தொகை முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சியில் இணைந்த போதும் ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளோடு இருந்த முக்கியஸ்தர்கள் அதே இடத்தில் இருந்து அசைந்து கொடுக்கவில்லை. அவர்கள் சொற்பத் தொகையினராகக் குறுகிய போதும் 'கிழிந்த பட்டுத்துணி' என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால் சமூகம் அரசியலைப் பொறுத்தவரை மூன்று பிரிவாகப் பிளவு பட்டிருந்தது.

அஷ்ரப் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் கட்சி அவ்வப்போது பிளவுண்டு பல பிரிவுகளாக மாறியது. அவ்வப்போது அமீபாக்களைப் போலக் குட்டிவிடும்  ஜமாஅத்துக்களைக் கொண்டு சமூகம் பிளவு பட்டது போல முஸ்லிம் அரசியலும் சமூகத்தைக் கூறு போட்டு வைத்திருக்கிறது.

அரசியல் புள்ளிகளில் சமூகமும் உரிமையும் பேசிக் கொண்டு சுகவாழ்வு வாழும் நபர்களுக்கு அப்பால் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு சில அரசியல்வாதிகள் பௌதீக வழங்களைப் பெற்றுக் கொடுத்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். ஒரு சில தஃவா இயக்கங்களும் அவற்றையே செய்து வருகின்றன. சமூகத்தின் அரசியலும் தஃவா இயக்கங்கள் ஒரு சிலவும் ஒரே புள்ளியில் இணையும் முதற் கட்டம் இது.

இரண்டாவது கட்டம்தான் மிகவும் இழிவானது. அது சகோதரத்துவ சன்மார்க்க சமூகத்தை முஸ்லிம் அரசியலாலும் இஸ்லாமிய தஃவாவின பெயராலும் பிரித்து வைத்திருப்பதுடன் நின்று விடாமல் தீராத சண்டையையும் ஓயாத சச்சரவையும் சமூகத்துக்குள் விதைத்து விட்டிருக்கின்றன. ஒரு தேர்தல் முடிந்த பிறகாவது எதிரணியைச் சேர்ந்த ஒரு சகோதருக்கு ஸலாம் சொல்லிக் கொள்ளும் நிலை இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் இல்லை. ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வழி என்று முழக்கமிடும் அமைப்புசார் சகோதரர்கள் வௌ;வேறு வீடுகளுக்குள் இருந்த போதும் பொது இடத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறார்கள்.

அரசியல் பிளவுகளாலும் இயக்கப் பிளவுகளாலும் சகோதரத்துவத்தைத் தொலைத்து விட்டுச் சண்டை பிடித்துக் கொண்டு பொலிஸ் நிலையங்களில் நியாயம் கோரி நிற்கிறார்கள்.

 நாம் முஸ்லிம்கள் என்று பெருமைப்படுகிறோம்... எங்களுடள் இணைந்து கொள்ளுங்கள், மனிதனுக்குரிய கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறோம் என்று பேசுகிறோம், எழுதுகிறோம்... நபிகளதும் ஸஹாபாக்களினதும் முன்மாதிரிகளை முன் வைத்துப் பேசுகிறோம். தோளோடு தோள் நின்று சகோதரத்துவம் வளர்க்கும் சமூகத்தின் பிரதிநிதிகளான நாம் பள்ளிவாசலுக்குள் கூட எதிரணி முஸ்லிமைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒதுங்கிப் போய் நின்று தொழுகிறோம்...

புத்திசுவாதீனமுள்ள, ஓர் உண்மையான முஸ்லிமுக்கு இதை நினைத்துப் பார்க்கையில் வெட்கம் வரவேண்டும்!

(மீள்பார்வை - இதழ் - 304)

Friday, October 17, 2014

ஒரு நாடகமன்றோ நடக்குது!


- 4 -

ஒரு நாடகம் அன்றோ நடக்குது!

நான் சிறுவனாக இருந்த காலத்தில் பெருநாள் என்பது உணவிலோ பலகாரங்களிலோ இருந்திருக்கவில்லை.

காலையில் கிணற்றுக் குளிர் நீரில் குளிப்பாட்டப்பட்டுப் புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு அனுப்பப்படுவோம். அங்கு அமர்ந்திருந்து கோரஸாக தக்பீர் முழங்குவது முதற் கட்டம். இரண்டாம் கட்டமாக காலையிலேயே திரும்பிய பக்கமெல்லாம் ஊர் முழுக்க  நாகூர் ஈ.எம். ஹனிபாவின் தீனிசை முழங்க ஓடாவிமார் போட்டிருக்கும் தொட்டில் ஊஞ்சல் அல்லது சுழலூஞ்சலில் பத்துச் சதம் கொடுத்து ஆடுவது. தொட்டில் போல் அமைந்திருக்கும் ஒரு பெட்டிக்குள் இருவர் அமரலாம். நான்கு பெட்டிகளில் எண்மரை அமர்ந்தி ஓடாவியார் தனியொருவராய் ஊஞ்சலை இயக்கத் தொடங்குவார். அது இப்போது உள்ளது போல் மின்சார இயந்திரங்களால் இயக்கப்படுவது அல்ல, ஒரு வலிமையான மரப் பிடியினால் அமைக்கப்பட்ட பெரிய தடியை முன்னுக்கும் பின்னுக்குமாகத் தள்ளவும் இழுக்கவுமான தொழில் நுட்பத்தில்  ஊஞ்சல் சுழலத் தொடங்கும். அதைத் தனியொருவராக ஓடாவியார் இயக்குவார். இயக்கும் போது அவரது கைத் தசைகள் பொங்கி நரம்புகள் முறுக்கேறுவதை நான் பார்த்து வியப்பதுண்டு.

இதுதான் பெருநாள். மாலை நேரம் அந்த இடம் களைகட்டும். சிறார்கள் அங்கும் இங்கும் ஓடித் திரிவதில் புழுதி பறக்கும். அங்கு ஒலித்துக் கொண்டிருக்கும் ஸ்பீக்கரில் உள்ளுர் அறிவிப்பாளர்கள் முழங்குவார்கள். பாடத் தெரிந்தவர்கள் தம்மை ஈ.எம். ஹனீபா, ரீ.எம். சவுந்தரராஜன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது பிளிறுவார்கள், சிலர் கிராஅத் ஓதுவார்கள். யாருக்கும் கொடுப்பனவு கிடையாது. தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு அது. அதைக் கூட ஒரு கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்.

அன்றைய முஸ்லிம் கிராமங்கள் இப்போது போன்று அடர்த்தியாக இருந்திருக்கவில்லை. வருடத்தில் மூன்று முறை கொண்டாட்டங்கள் வரும். முகம்மது (ஸல்) பிறந்த தினம் அதில் ஒன்று. குர்ஆன் மத்ரஸாவில் ஆலிம் தரும் பச்சைப் பிறை பதித்த, ஈர்க்கில் ஒட்டப்பட்ட வெள்ளைக் கொடியை ஏந்தியபடி வெள்ளுடை, தொப்பியணிந்த சிறுவர்கள் ஸலவாத்துச் சொல்லியபடி ஊர்வலம் போவார்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டுமே நான் மேற்சொன்னவாறு ஊஞ்சல் களேபரத்தோடு நடக்கும். அதிலும் நோன்புப் பெருநாளில் 'ஃபித்றா' வேறு கிடைப்பதால் கையில் சில்லறை நிறையும். சில வேளை இக் கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் தொடர்வதும் உண்டு.

பெரும் செலவில் ஊஞ்சல் அமைக்கும் ஓடாவிமாரின் வசந்த காலம் இது. சிறுவர்களது பெருநாள் மற்றும் சந்தோஷ காலத்தைத் தீர்மானிப்பவராக அவர்களே விளங்கினர்.

பெரும்பாலும் இரவில்தான் ஊஞ்சல் வெளியானது களைகட்டும். கிராமத்து ஆண்களும் பெண்களுமாக நிறைந்து காணப்படுவர். அதற்குக் காரணம் நாடகங்கள். இரண்டு ட்ரக்டர் பெட்டிகளை இணைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு மேடையில் இரவில் நாடகங்கள் நடக்கும். பெண்கள் ஒரு புறமும் ஆண்கள் ஒரு புறமுமாக நின்று நாடகங்களை ரசிப்பார்கள். மறுபுறம் ஊஞ்சல் ஆடிக் கொண்டேயிருக்கும்.

அக்காலத்தில் ஓரளவு வசதியுள்ள வீடுகளிலேயே வானொலிப் பெட்டி இருந்தது. தொழிலுக்கு உழைத்தல் தவிர அன்றைய மனிதருக்குத் தமது ரசனைப் பசிக்கு எதுவும் இருந்திருக்கவில்லை. எனவேதான் பெருநாள் தீனிசையிலும் நாடகங்களிலும் மக்கள் வருடத்துக்கு இருமுறை மனதைப் பறி கொடுத்து மயங்கி நின்றார்கள்.

நாடகத்திலிருந்தே சினிமா வந்தது. சினிமா வந்த பிறகும் கூட நாடகத்தின் மவுசு குறையவில்லை. ட்ரான்சிஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நாடகங்களில் கட்டுண்டு கிடந்தவர்கள் ஏராளம்.

கிராமங்களில் முன்னரைப் போன்று பெருநாள்கள் இப்போது களைகட்டுவதில்லை. ஊஞ்சல் அமைப்பதற்கு நிலமில்லை. ஓடாவிகளின் மர வேலைத் தொழில் நிறுவனமயப் பட்டுவிட்டது. மரத் தளபாடங்களின் இடத்தை பிளாஸ்டிக், இரும்பு, அலுமினியம் ஆகியன பிடித்துக் கொண்டன. நாடகங்களைத் தொலைக்காட்சிகள் எடுத்துக் கொண்டன. வீட்டுக்குள்ளே குறுந்திரைகளில் வருடக் கணக்காக 'சீரியல்' ஓடுகின்றது. 'சீரியல்' நாடகங்கள் மனோ வக்கிரத்தை ஏற்படுத்தி மனச் சிதைவை ஏற்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறார் உளவியல் பேராசிரியரான மறைந்த பெரியார்தாசன் அப்துல்லாஹ்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கான ஒரு கலாசார மகிழ்வை நாம் இழந்து விட்டு நிற்கிறோம். இஸ்லாத்தினது நல்லம்சங்களை, குர்ஆன் போதனைகளை, நபிகளாரினதும் ஸஹாபாக்களினதும் வாழ்வியலை, மக்கள் கொள்ளவேண்டிய தெளிவை, தமது சமூகத்துக்கெதிரான சதிகளை எல்லாம் மக்கள் முன் இலகுவாக எடுத்துச் சொல்லக் கூடிய அற்புத சாதனம்தான் நாடகம். ஆனால் அது பற்றி யாரும் அக்கறைப் படுவதில்லை.

இந்த அற்புத ஊடகத்தின் வல்லமையை அறிந்த அமைப்பு ரீதியான தாஈக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  தான் பேச வேண்டும், மக்கள் முன் எனது பேச்சு தெளிவை ஏற்படுத்தும் என்ற 'நான்' என்ற எண்ணமும் தன்னை முற்படுத்தும் 'நஃப்ஸூ'ம் அவர்களை இதன்பால் திரும்ப விடுவதில்லை. ஏனெனில் நாடகத்தை மக்கள் முன் கொண்டு செல்பவர்கள் கலைஞர்களே தவிர பயான்கள் என்று 'பைலா' அடிப்பவர்கள் அல்லர். எனவே தாங்கள் இரண்டாம் பட்சமாகி விடுவோம் என்ற உள்ளார்ந்த அச்சம் இந்த ஊடகத்தைப் பயன் படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. தெருநாடகங்கள் நடத்தப்படுவது பற்றியும் அவை ஏன் நடத்தப்படுகின்றன என்பது பற்றியும் இவர்கள் அறியாமலுமில்லை.

இதைப் பற்றியும் இவர்களைப் பற்றியும் சிந்திக்கும் போதெல்லாம் நான் பழைய நாட்களுக்குத் திரும்புகிறேன். ஓடாவிமாரின் ஊஞ்சல் வெளி நாடகங்கள் பற்றி அறிவிப்பாளர் காலையிலிருந்து நாடகம் ஆரம்பமாகும் வரை அறிவித்துக் கொண்டேயிருப்பார்...

'..... வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களே! வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நாடகம்! ........... குழுவினர் வழங்கும்   'ஓடிப்போனவள்' என்ற நாடகத்தை இன்றிரவு 10.00 மணிக்குக் காணத் தவறாதீர்கள்....!'

(மீள்பார்வை இதழ் 303)

Thursday, October 16, 2014

தியாகத் திருநாள் வானொலிக் கவிதை

01
பேதம் என்ற சொல் இல்லை 
பெரியோன் சிறியோன் என்றில்லை
மோதும் தேச முரணில்லை 
மொழியால் வேறு பாடில்லை
போதம் ஒன்றே கலிமாவால்
போர்த்திக் கொள்ளும் யாவர்க்கும்
சேதம் இல்லை என்றோதும் 
சிறப்பை ஓதும் திருநாளாம்!

02
ஆசியன் என்ற தாழ்வில்லை 
அறபிக் கென்றொரு இடமில்லை 
பேர்சியன் என்று பிரிப்பில்லை 
பெருங்கரு நிறத்துக் கிழிவில்லை
நேசங் கூட்டும் நெஞ்சோடு 
நெருங்கி ஒன்றாய்க் கூடுவதில்
பாசங்கொண்டால் ஒளி கூட்டும் 
பண்பார் ஹஜ்ஜூப் பெருநாளாம்!

03
கண்டம் என்ற கணிப்பில்லை 
கல்வி கொண்டோர் தனியில்லை
விண்ட வேந்தர்க் குயர்வில்லை 
வலியார் என்று வரம்பில்லை
அண்டி நின்று அல்லாஹ்வின் 
அணிசேர் மாந்தர் யாவருமே
கண்டார் நேசம் என்றாலே 
களிகூர்ந் திடுமிப் பெருளாம்!

04
கண்ணின் நிறங்கொள் கணிப்பில்லை 
கட்டை நெட்டை விதியில்லை
மண்ணைக் கொண்டு மதிப்பில்லை 
மாற்றணி அரசியல் மறுப்பில்லை
எண்ணம் எல்லாம் மானுடமே 
என்று கொள்ளும் மனம் வாய்க்கும்
திண்ணம் ஆகும் திற னோர்ந்தால் 
தித்திக் கும்இப் பெருநாளாம்!

05
அன்பு தவிர வேறில்லை 
அருகே நிற்போன் எதிரியில்லை
தன்னை மட்டும் நினைப்பதில்லை 
தாழ்ந்தோர் என்றோர் பிரிவுமில்லை
உன்னை மட்டும் நாடிவந்தேன் 
உள்ளம் கழுவத் தேடி நின்றேன்
என்பது மட்டும் எண்ணமெனில் 
ஏற்றம் இந்தப் பெருநாளாம்!

06
பெருமை கொள்வதில் பெருமையில்லை 
பேதமை கொண்டு பிரிவதில்லை
வெறுமையிவ் வாழ்வு சதமில்லை 
வேகும் நரகில் விருப்பில்லை
அருமை நபிகள் ஆணையிட்ட 
அன்பும் கருணையும் ஆளுவதில்
ஒருமைப் பட்டு உயர்வதெனில் 
ஒளிரும் இந்தப் பெருநாளாம்!

07
விட்டுக் கொடுப்பதில் வலியில்லை 
விருப்பைத் துறப்பதில் இழப்பில்லை
கட்டி ஆள்வதில் களிப்பில்லை 
கபுருவரை அவை வருவதில்லை
தொட்டுக் கொள்ள இப்றாஹீம் 
தூய நபிகள் காட்டியதைத்
விட்டுவிடாது வழிதொடரின் 
வெளிச்சம் இந்தப் பெருநாளாம்!

08
இன்னுயி ரெனினும் பெரிதில்லை 
இகத்தில் எதுவும் உயர்வில்லை
பின்னைய வாழ்வில் குறையில்லை 
பெருந்தியா கத்துக் கழிவில்லை
தன்னை இழக்க முன்னின்ற 
தகையோர் இஸ்மா யீல் நபிகள்
பண்ணிச் சென்ற முன்வழியைப் 
பழகின் பனிக்கும் பெருநாளாம்!

Monday, October 13, 2014

சிறப்புரை - “தோழியர்“ நூல் வெளியீடு



கடந்த 11.10.2014 சனிக்கிழமை பிற்பகல் அக்குறணை மத்திய கல்லூரி மண்டபத்தில் நடந்த சகோதரர் நூருத்தீன் எழுதிய “தோழியர்” நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை இது.

நிகழ்வுக்குப் பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் தலைமை வகித்தார். அஷ்ஷெய்க் உஸதாத் எம்.ஏ.எம். மன்ஸூர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

எழுத்தாளரும் கவிஞருமான லறீனா அப்துல் ஹக் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அவரது முயற்சியிலும் லஃபீஸ் ஷஹீத், ஒமர் ஷரீப் ஹஸன் மற்றும் அஸன்பே வாசகர் வட்டத்தின் உதவியுடனும் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.