Tuesday, July 14, 2015

நோன்புக் குழந்தைகள்!


 - 23 -

எனது மகளின் பிறந்த தினம் இம்முறை ரமளானுக்குள் வந்தது.

ரமளானுக்குள் வந்திருக்கா விட்டாலும் கூட ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. வீட்டிலே சமைக்கப்படும் விசேட உணவோடு அல்லது அன்றைய இரவு ஒரு மத்திய தர உணவுச்சாலை உணவுடன் அது முடிந்து விடும். இம்முறை எனது மகள் இரண்டு நண்பிகளை அன்றைய தினம் இஃப்தாருக்கு அழைத்திருந்தாள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது உறவுகளான சிறு பெண் பிள்ளையுடன் வந்திருந்தார்கள்.

அப் பெண்பிள்ளைகளுள் ஒருத்திக்கு வயது பத்து. மற்றையவளுக்கு வயது ஐந்து. இருவரும் நோன்பு நோற்றிருந்தார்கள். இரண்டும் நடைபாதையில் காலுக்குள் அகப்பட்டு விட்டால் நசுங்கி விடும் ரகம். பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் முகங்கள், உலர்ந்து போயிருந்த போதும் கூட. கட்டைக் கவுண் உடுத்தி தலையில் அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஸ்கார்ஃப் அணிந்திருந்தார்கள்.

அழகான பூக்களைப் பார்க்கும் பரவசத்துடனும் நெகிழ்ந்து உருகியபடி பதைபதைக்கும் நெஞ்சுடனும் அவர்கள் இருவரையும் கொஞ்ச நேரம் உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

தென்னிலங்கையின் கால நிலை இம்முறை பரவாயில்லை. அடிக்கடி மழை பெய்கிறது. கர்ணகடூர வெய்யில் சென்று விட்டது. ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெய்யில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கச்சான் வெப்பக் காற்று வேறு வீசி உடலில் உள்ள நீர்த்தன்மையை உறிஞ்சி இழுத்துச் செல்லும் நிலையில் அந்தப் பகுதிகளில் நோன்பு நோற்க வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுகளைப் பற்றி எனது சிந்தனை நகர்ந்தது.

பிஞ்சுக் குழந்தைகளுக்கு மதிய உணவும் தேநீரும் கொடுப்பது சிரமம் என்பதற்காக எந்தப் பெற்றோரும் அவர்களை நோன்பு நோற்க நிர்ப்பந்திப்பதில்லை. மார்க்கக் கடமை, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை வேண்டிச் செய்யப்படும் கடமை என்பதால் அதைப் பழக்கப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் நோன்பு நோர்க்க வைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 30 வீதமான முஸ்லிம் குடும்பங்களின் வறுமை பிள்ளைகள், குஞ்சு குருமான்களை நோன்பு நோர்க்கத் தள்ளி விடுகிறது என்பது பேச விரும்பாத விடயமாக இருந்த போதும் உண்மை என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

'ஓடி... எங்கட ரிஸானா நோம்பு புடிக்கோணுமென்டு சவருக்கெழும்பி சண்டையல்லியா.. இனிப் புடிக்க விட்டய்தான்...' என்று உம்மாமார் நண்பிகளுடன் பேசிக் கொள்ளவும் 'அவருக்கு நாலு வயசுதான் ஆஜி.. நோம்பு புடிக்கிறான்டு கேட்டன்.. ஓன்டாரு.. சரி பிடிங்கன்னு உட்டுட்டன்..' என்று தந்தைமார் நண்பர்களுடன் கலந்துரையாடவும் பிஞ்சுகளின் நோன்பு முக்கியத்துவம் பெற்றும் விடுகிறது.

எல்லாமே சிறப்பு, எல்லாமே பக்தி பூர்வமானவையாகி விட்ட நமது ரமளான் சிறப்புத்தான். அதில் என்ன சந்தேகம் இருக்கிறது!

குழந்தைகளின் உலகத்தில் நின்று பார்க்கப்படாத பல விடயங்கள் இருக்கின்றன. இன்றைய கல்வி அத்தகைய ஒன்றே. குறிப்பாக 5ம் தர ஸ்கொலர்ஷிப் பரீட்சை பிள்ளைகளுக்கானது அல்ல, தாய்மாரின் கௌரவத்துக்கானது என்ற கருத்துப் பரவலாக இருக்கிறது. பிஞ்சுகளின் நோன்பும் அப்படியான ஒரு கட்டத்துக்கு நகர்கிறதா என்பதைப் பற்றியும் அதிகமாக அல்லாமல் கொஞ்சமாகச் சிந்தித்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

ஒரே நோய் தாக்கிய இருவர். அந்த நோய்க்குரிய மருந்து ஒருவருக்குச் சுகப்படுத்தக் கூடியதாகவும் மற்றவருக்கு வேறொரு நோய்க்குத் திருப்பக் கூடியதாகவும் அமைந்து விடுவதுண்டு. இது ஒவ்வொருவரின் உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்தது. வைத்தியர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இது அல்லாஹ் ஏற்படுத்தியது.

நோன்பு என்பது பொதுவானதுதான். வறுமைக்கோட்டுக்கு மேலேயுள்ள குடும்பங்களின் குழந்தைகளின் உணவுக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பத்தின் உணவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நமது குழந்தைகள் வாழும் சூழல், அவர்களது உணவு, அவர்களது உடற்பலம் ஆகியன முழுநாளும் பசித்தும் தாகித்தும் இருப்பதற்கு சக்தி பெற்றவையா என்பதிலும் அவர்கள் நோன்பு நோற்று விட்டார்கள் எனின் அவர்களது நடத்தையை, போக்கை அவதானித்துக் கொள்வதிலும் நமது கவனம் இருந்தாக வேண்டும்.

நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ரமளான் மாதத்தில் ஸஹருக்கு எழும்பி நோன்பு நோற்க ஆர்ப்பாட்டம் பண்ணிய எனது மூத்த தங்கைக்கு அப்போது வயது பத்து. சாப்பிட்டு விட்டுப் படுத்த ஒரு மணி நேரத்தில் அனுங்கத் தொடங்கினாள். உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற தந்தையார் பெரிய வைத்தியசாலை மாறி அடுத்த நாட்காலை தங்கையின் உயிரிழந்த உடலோடு வந்து சேர்ந்தார். நாங்கள் உண்ட அதே உணவு தங்கைக்கு அவ்வேளை ஒத்துக் கொண்டிருக்கவில்லை.

கடந்த வருடம் நமது நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் நோன்பு நோற்ற ஒரு குழந்தை பிற்பகலில் நீர் அருந்தக் கேட்டதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நோன்பு துறந்து விடலாம் அது வரை தூங்கு எனப் பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டதாம். அக்குழந்தை நோன்பு நோற்க எழுந்திருக்கவில்லை என்ற ஒரு காது வழிச் செய்தி எனக்குக் கிடைத்திருக்கிறது.

குழந்தைகளை நோன்பு நோற்கப் பழக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நோன்பு நோற்க வைக்கப்பட்டால் அவர்களது உலகத்தில் நின்று அவர்களைக் கவனியுங்கள் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

நன்றி - மீள்பார்வை

Saturday, June 27, 2015

தெரிந்திருப்பதும் தெரிவிப்பதும் - சில அவதானங்கள்1



Ash. Affan Abdul Haleem (Naleemi)

இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை நோக்கங்களை மிகச் சுருக்கமாகச் சொல்லும் முழுமையான சட்ட விதியொன்றிருக்கின்றதுஇ நலவுகள் அடையப்பெறுவதை உறுதி செய்வதும் அவற்றைப் பூரணப்படுத்துவதும் கெடுதிகள் களையப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவற்றை முடியுமான அளவு குறைப்பதும் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இரண்டு நலவுகளில் மிகச் சிறந்த நலவை அடைந்து கொள்வதும் இரண்டு கெடுதிகளில் மிகப் பாரதூரமான கெடுதியைத் தவிர்ந்து கொள்வதும் இந்த விதியோடு சம்பந்தப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். அதே போன்று ஒரு நலவை அடைந்து கொள்வதை விட ஒரு கெடுதியை தவிர்ப்பது ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் முன்னுரிமைப்படுத்தப்படுகின்ற அம்சம் என்பதும் இவற்றோடு சம்பந்தப்பட்ட ஒரு விதியாகும்.

தஃவாக் களத்தில் இருக்கின்ற தாஇகள் அனைவரும் இந்த விதிகளுக்குட்பட்டு தமது பணியை முன்னெடுக்கின்ற போது தஃவா களம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த அடிப்படை விதிகள் மீறப்படுகின்ற போது களமும் மனிதர்களும் மானங்களும் சீரழிக்கப்படும் என்பதில் சந்தேகங்கள் கிடையாது.

அந்த வகையில் தாஇகள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஓர் அம்சம்தான் மக்களிடம் தாம் எத்திவைக்கும் விடயங்கள் பற்றியதாகும். ஒரு தாஇ மார்க்கம் சார்ந்தஇ ஏனைய துறைகள் சார்ந்த சகல விடயங்களைப் பற்றிய அறிவையும் பெற்றிருப்பது மிகச் சிறந்ததும் கட்டாயமானதுமாகும். ஆனாலும் தனக்குத் தெரிந்த அனைத்தையும் மக்களுக்கு எத்திவைக்க வேண்டிய தேவை இருக்கின்றதா என்று பார்க்கின்ற போது அங்கு மேற்கூறிய விதிகள் பற்றிய தெளிவுடனேயே எத்திவைத்தல் என்ற பணியை ஒரு தாஇ செய்ய வேண்டியிருக்கின்றது.

தஃவா களம் என்பது எத்திவைப்பவர்களுக்கிடையிலான போட்டியல்லஇ மாற்றமாக மிகச் சரியானதை மிகச் சரியான முறையில் மிகப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் யாருக்கு எத்திவைக்க வேண்டுமோ அவர்களுக்கு எத்திவைப்பதாகும். அதனைத்தான் அல்குர்ஆன் ''மிகத் தெளிவான எத்திவைத்தல்'' என்று வர்ணிக்கின்றது.

எனவே தாஇகள் தாம் வைத்திருக்கும் சகல விதமான அறிவுகளிலும்இ தகவல்களிலும்இ கருத்துக்களிலும் எதனை சமூகத்துக்குச் சொல்வது என்பதை மேற்சொன்ன விதிகளின் ஒளியில் நின்று சிந்தித்து முடிவெடுத்தே சொல்ல வேண்டும்.

இல்லாத போது நலவுகள் தவிர்க்கப்பட்டு கெடுதிகள் அடையப்படுவது தஃவா களத்தில் சர்வசாதாரணமாகி விடும். அத்தகைய நிலையை தஃவா களத்தில் பல போது அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.

🔹அறிந்திருந்தால் சொல்லத்தான் வேண்டுமா?!

ஒருவன் ஒரு விடயத்தை அறிந்து வைத்திருந்தால் கட்டாயம் அதனை சொல்லியே ஆக வேண்டும் என்ற கடப்பாடு மார்க்கத்தில் கிடையாது. அதனை சொல்வதற்கு முன்னர் குறித்த விடயம் உண்மையா பொய்யா?இ சரியா பிழையா?இ இதனை சொல்வதால் ஏற்படும் விளைவு அதிகம் நன்மையைத் தரக் கூடியதா அல்லது தீமையைத் தரக் கூடியதா?இ இதனை சொல்லாமல் விடுவதனூடாக ஏற்படும் தீமை சொல்வதால் ஏற்படும் தீமையை விடக் கூடியதா குறைந்ததா?இ இதனை சொல்வதால் ஏற்கனவே இருக்கின்ற ஒரு நலவு இல்லாமல் போய் விடுமா? அல்லது இன்னுமொரு நன்மை தரக்கூடிய விடயம் உருவாக்கப்படுமா?இ இதனை சொல்வதால் ஏற்கனவே இருக்கின்ற தீமை இன்னும் அதிகரித்து விடுமா அல்லது குறைந்து விடுமா?... என்பன போன்ற இன்னோரன்ன கேள்விகள் கேட்கப்பட்டு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும். அப்போதுதான் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கத்துக்கு மாறுபடாத வகையில் அந்த எத்திவைத்தல் இருக்கும்.

அது மாத்திரமல்ல குறித்த விடயத்தைச் சொல்வதால் நன்மை ஏற்படுமா தீமை ஏற்படுமா என்ற விடயம் மார்க்கத்தின் அளவுகோல்களுக்கேற்பவே தீர்மானிக்கப்படவும் வேண்டும்இ மாற்றமாக தனிநபர்களின் மனோ இச்சைக்கும் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கும் ஏதுவானதாக அந்தத் தீர்மானம் அமையவும் கூடாது.

🔹தூதரின் வாழ்விலிருந்து சில ஆதாரங்கள்

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ''அடியார்கள் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை யாதெனில் அவனை இபாதத் செய்வதும் அவனுக்கு யாதொன்றையும் இணை கற்பிக்காதிருப்பதுமாகும். அல்லாஹுத் தஆலா அடியார்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை யாதெனில் தனக்கு எதிலும் இணை வைக்காத யாரையும் தண்டிக்காமலிருப்பதாகும்'' என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த முஆத் (ரழி) அவர்கள் ''நான் மக்களுக்கு இந்த நன்மாராயத்தை எத்திவைக்கட்டுமா?'' என்று கேட்டார்கள்இ அதற்கு நபியவர்கள் ''வேண்டாம் அவ்வாறு எத்திவைத்தால் அவர்கள் சோர்வடைந்து சோம்பேறிகளாகி விடுவார்கள்'' என்று கூறினார்கள். (புகாரிஇ முஸ்லிம்).

இங்கே மிக மிக முக்கியமான விடயமொன்றை பகிரங்கமாக எத்திவைக்க வேண்டாம் என்று நபியவர்கள் சொல்வதற்கான காரணம் என்ன?. இந்த செய்தி மக்களை சென்று சேர்வதனூடாக மனிதர்கள் அமல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டு ஈமான் மட்டும் போதுமானது என்று முடிவெடுத்துக் கொண்டு சோம்பேறிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தைத் தவிர நிச்சயமாக வேறெந்தக் காரணமும் கிடையாது.

கஃபாவை உடைத்து மீண்டும் இப்றாஹிம் (அலை) அவர்கள் கட்டிய அத்திவாரத்தின் மீது அதனைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தும் அதனால் சமூகத்தில் ஏற்படக்கூடும் என்று நபியவர்கள் கருதிய பாரதூரமான விளைவுகளின் காரணமாக அந்த ஆசையைக் கூட தன் மனைவி ஆயிஷா (ரழி) அவர்களிடம் மாத்திரமே பகிர்ந்து கொண்டார்கள் நபியவர்கள்.

🔹தோழர்களின் வாழ்விலிருந்து

நபியவர்களிடமிருந்து மிக அதிகமான ஹதீஸ்களை மனனமிட்டுக் கொண்ட ஸஹாபிதான் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள். ஆனால் அவர்கள் இப்படிச் சொல்கின்ற ஒரு செய்தியை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். ''நான் நபியவர்களிடமிருந்து இரண்டு பாத்திரங்கள் நிறைய அறிவைப் பெற்றுப் பாதுகாத்திருக்கிறேன். அவற்றில் ஒன்றைப் பொறுத்த வரையில் அதனை நான் பரப்பியிருக்கிறேன்இ அடுத்ததைப் பொறுத்தவரையில் அதனை நான் பரப்பினால் இந்தக் கழுத்து துண்டாடப்பட்டு விடும்'' என்பதே அந்த செய்தியாகும்.

நபியவர்களுக்குப் பிந்திய காலத்தில் ஏற்படக்கூடிய பித்னாக்கள் பற்றிய அறிவிப்புக்களையே அவர்கள் எத்திவைப்பதிலிருந்தும் தவிர்ந்துகொண்டார்கள். ஏனெனில் நேரடியாக அமல் செய்வதற்கு வழிகாட்டல்கள் இல்லாத நிகழ்வுகளைப் பற்றிய அந்த அறிவிப்புக்களை எத்திவைப்பதனூடாக தனக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் தான் நபியவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்களினதும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டல்கள் அடங்கிய ஹதீஸ்களை எத்திவைக்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சமே அத்தகைய ஒரு முடிவுக்கு அவர்களை வரச்செய்தது.

நபியவர்களின் ஹதீஸ்களை ரிவாயத் செய்தல் என்ற நன்மையையும்இ அந்த ரிவாயத்களின் உள்ளடக்கம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான விளைவுகளால் ஏற்படும் பாதகங்களையும் நிறுத்துப் பார்த்து தனக்குத் தெரிந்த பல ஹதீஸ்களை அறிவிக்காமல் அந்த ஸஹாபி தவிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

''என்னுடைய இந்த இரண்டு செருப்புக்களையும் எடுத்துச் செல்லும் அபூ ஹுரைராவேஇ இந்த சுவருக்குப் பின்னால் உறுதியான உள்ளத்தோடு லா இலாஹ இல்லல்லாஹ் என்று சான்று பகர்பவருக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லும்'' என்று நபியவர்களால் அனுப்பப்பட்ட அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு நபியவர்களிடம் திரும்பிச் செல்கிறார். நபியவர்கள் உமரிடம் காரணம் கேட்ட போதுஇ இதனைச் சொன்னால் மனிதர்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள்இ எனவே சொல்லாமலிருப்பது சிறந்தது என்று உமர் (ரழி) அவர்கள் கூற நபியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இது முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

🔹தாபிஈன்களிடமிருந்து

இடையர்களைக் கொலை செய்த உரைனா வாசிகளை கொலை செய்யுமாறு நபியவர்கள் சொன்ன செய்தியை ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபிடம் அறிவித்த அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களை இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் கண்டிக்கிறார்கள். ஏற்கனவே ஹஜ்ஜாஜ் கொலை செய்வதில் பிரபலமானவன்இ அவனுக்கு இந்த ஹதீஸை சொல்வதனூடான அவன் தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொள்ள வழி செய்து விட்டீர்கள் இந்த ஹதீஸை ஹஜ்ஜாஜுக்கு அறிவிக்காமலிருப்பது வாஜிபாகும்இ என்று இமாம் ஹஸனுல் பஸரீ அவர்கள் அனஸ் (ரழி) அவர்களுக்கு சொன்னவுடன் தான் செய்த செயலையிட்டு அனஸ் (ரழி) அவர்கள் மிகுந்த கைசேதப்பட்டார்கள்.

🔹அற்புதமான கருத்துக்கள்

''மனிதர்களுடன் அவர்களது அறிவுத் தரத்துக்கேற்ப பேசுங்கள்இ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொய்ப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று அலீ (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

''நீங்கள் ஒரு சமூகத்தில் அவர்களது அறிவுத் தரத்துக்கு எட்டாத விடயங்களைப் பேசும் போது ஃபித்னாக்கள் தான் உருவாகும்'' என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

''ஒரு சிறந்த தாஇ என்பவன் ஒரு கைதேர்ந்த சமையற்காரனைப் போன்றவன்இ அவன் எப்படி யார் யாருக்கு என்ன வகையான ருசியுள்ள உணவு பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து சமைப்பானோ அதே போன்றுதான் ஒரு தாஇ எந்தெந்த சமூகத்துக்கு என்னென்ன விடயங்களை எப்படி எப்படி எத்திவைக்க வேண்டும் என்ற அறிவுள்ளவனாக இருப்பான்'' என்று வஹப் இப்னு முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

🔹இறுதியாக...

தஃவா என்பது மின்பர்களில் நின்று கொண்டு தெரிந்த அனைத்தையும் உச்சஸ்தாயில் கொட்டுவதல்லஇ கண்ட அனைத்தையும் கேட்ட அனைத்தையும் அப்படி அப்படியே பச்சையாகச் சொல்வதுமல்லஇ அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சுவதில்லை என்ற கோஷத்தோடு சமுதாய நலன்கள் பற்றிய எவ்வித அக்கறையுமின்றி வீராப்புப் பேசுவதுமல்லஇ முன்முடிவுகளையும்இ வெறுப்புக்களையும்இ காழ்ப்புணர்வுகளையும்இ சொந்தக் கோபதாபங்களையும் கீபோர்டில் விரலோடி இணையத்தில் காட்சிப்படுத்துவதுமல்ல.

இவற்றுக்கெல்லாம் பின்னால் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கங்கள் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன. மஸ்லஹாஇ மகாஸித் என்ற சொற்களைக் கொண்டே மஸ்லஹாக்களும் மகாஸித்களும் துண்டு துண்டாய் சிதைக்கப்படுகின்றன. சத்தியமான வார்த்தைகள் முழங்கப்படுகின்றனஇ ஆனால் அசத்தியமான விளைவுகள் நாடப்படுகின்றன.

விளைவு அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதாக பெயர் போடப்பட்டு மார்க்கத்துக்கும் மனிதர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.


எதுவெல்லாம் பெரும்பாலானவர்களுக்குப் புரியாதோ அவை பேசப்படுகின்றனஇ எழுதப்படுகின்றன. அவற்றைப் பேசாதவர்கள் எழுதாதவர்கள் படு பயங்கரமான ஆளுமைக் கொலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒரு செய்தி சமூகத்துக்குப் பிரயோசனமானதா இல்லையா என்று பார்க்கப்படுவதற்குப் பதிலாக தன்னுடைய மேதாவித் தனத்தை படம் போட்டுக் காட்டி விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு தாஇக்கு என்னென்ன தெரியும் என்பது அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடைப்பட்ட விடயம்இ ஏனெனில் அறிவை அல்லாஹ்வுக்காக மட்டுமே தேட வேண்டும். எனக்குத் தெரியும் என்று தம்பட்டம் அடிப்பதற்குத்தான் ஒருவனுக்கு அறிவு பயன்படுகின்றது எனின் அவன் ''அல்லாஹ்வுக்காக மாத்திரம் கற்கப்பட வேண்டிய கல்வியை உலக நோக்கம் ஒன்றுக்காகக் கற்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான்'' என்ற ஹதீஸை மனதில் இருத்திக் கொள்ளட்டும்.

ஒரு தாஇ தனக்குத் தெரிந்ததிலிருந்து தான் அறிந்ததிலிருந்து எதனை எத்திவைக்க வேண்டும் யாருக்கு எத்திவைக்க வேண்டும் எப்படி எத்திவைக்க வேண்டும் என்பது பற்றிய அறிவு தஃவாவின் ஆரம்ப அரிச்சுவடி. அதனை அறியாதவர்கள் குட்டையைக் குழப்பும் வேலையைச் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அவர்களுக்கும் சமூகத்துக்கும் தஃவா களத்துக்கும் செய்கின்ற மிகப் பெரும் சேவையாகும்.

ஒவ்வொரு விடயத்தையும் சொல்வதற்கு ஓரிடமிருக்கின்றதுஇ ஒரு நேரமிருக்கின்றதுஇ யாரிடம் சொல்ல வேண்டும் என்ற வரையறை இருக்கின்றது. அதனை அறிந்து புரிந்து பணி செய்கின்றவர்களாக அல்லாஹுத் தஆலா எம்மனைவரையும் ஆக்கியருள்வானாக!

ஆமீன்

2015.06.08

(நளீமிக்களுக்கிடையிலான வட்ஸ்அப் குறூப்பில் பகிரப்பட்டது. சகோதரருக்கு நன்றி)

Tuesday, June 23, 2015

நாட்டார் கதைக்குள் நடக்கும் அரசியல்!

 - 22 -


பத்திரிகை ஆசிரியர்:- 'உங்கள் கதையில் பல இடங்களில் சாலை வளைவுகள் வருகின்றனவே?'
எழுத்தாளர்:- 'நீங்கதானே சார் கதையில் நிறையத் திருப்பம் இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்?'

இது ஒரு பழைய நகைச்சுவை. ஆனால் கதை என்ற அம்சத்துக்குத் திருப்பங்கள் வாசகனுக்கு சுவாரஸ்யத்தை வழங்குவன. கதை என்ற அம்சத்தை உள்ளீடாகக் கொண்டிருக்கும் நாடகம், சினிமா இரண்டுக்குமே அதி முக்கியமான அம்சம் இது.

அண்மையில் இணையத்தில்  வாய்வழிப் பழங்கதையொன்றைப் படித்த போது அதன் இறுதித் திருப்பம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இன்று பல்வேறு பெயர்களில் இந்தத் திருப்பங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டார் கதைகளில் நிலவி வந்திருக்கின்றன என்பதும் இன்று சிறுகதையும் கதை சார் கலை, இலக்கியமும் எந்த உயரத்துக்குப் போயிருந்தாலும் அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவை இவ்வாறான நாட்டார் கதைகள்தாம் என்பதை மறுக்க முடியாது.

அரேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த ஓர் அரசன் தன் அழகிய மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான். அருகேயுள்ள சிற்றரசுகளிலிருந்து மூன்று இளவரசர்கள் அவளைத் திருமணம் செய்யும் நோக்குடன் வந்திருந்தனர். முதலாமவன் அதிகார தோரணை கொண்டவனாகவும் இரண்டாமவன் பழக்கவழங்கங்களில் சுத்தமற்றவனாகவும் மூன்றாமவன் கிறுக்கு மாதிரியும் இளவரசியின் பார்வைக்குத் தோற்றினார்கள். 'இவர்களில் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை' என்று தந்தையிடம் முறையிட்டாள் அவள். அரசர் சாமார்த்தியமாக மூவரையும் அடுத்த தினம் வரும்படி கூறியனுப்பினார்.

அடுத்த தினம் மூவரும் வந்து சேர்ந்ததும் அரசன் சொன்னான்:- 'நீங்கள் மூவரும் எனது மகளுக்குப் பொருத்தமானவர்கள்தாம். ஆனால் ஒருவரைத்தான் திருமணம் செய்து வைக்க முடியும். எனவே நீங்கள் மூவரும் உலகத்தில் எந்த மூலைக்காவது செல்லுங்கள். ஓர் அதிசயமான பொருளுடன் யார் திரும்பி வருகிறீர்களோ அவருக்கு மகளைத் திருமணம் செய்து தருவேன். ஒரு வருடமும் ஒரு நாளும் உங்களுக்கு அவகாசம் உள்ளது!'

மூவரும் கிளம்பி ஒரு பாழ் கிணற்றருகே வந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவகாச நாள் முடிவதற்கு ஒரு வாரம் இருப்பதற்குள் இதே மூவரும் சந்தித்துத் தாம் தேடியடைந்த பொருளை ஒருவருக்கொருவர் பார்த்து விட்டு அரசனைச் சந்திப்பது அந்த ஒப்பந்தம். அதே இடத்தில் மூன்று பாதைகளில் மூவரும் பிரிந்து சென்றார்கள்.

குறித்த தினத்தில் மூவரும் வந்து சேர்ந்தார்கள். முதலாமவன் கையில் ஒரு பளிங்கு உருண்டை இருந்தது. 'உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இதில் பார்க்க முடியும்' என்றான் அவன். இரண்டாமவனிடம் ஒரு பறக்கும் விரிப்பு இருந்தது. 'இதில் அமர்ந்தால் உலகத்தின் எந்த மூலைக்கும் போய்ச் சேரலாம்' என்றான் அவன். மூன்றாமவனிடம் ஒரு டப்பாவில் களிம்பு வகையொன்றிருந்தது. அவன் சொன்னான்:- 'நோயுள்ளவர்களுக்கு இதைத் தேய்த்தால் உடனே குணமாகும். விரும்பியவர்களுக்கு உண்மையான அன்புடன் இதைத் தேய்த்தால் அவர்கள் இளமைக்குத் திரும்புவார்கள்!'

மூவரும் இரண்டாமவனின் விரிப்பில் ஏறியமர்ந்து அரசலைக்குள் சென்றிறங்கித் தமது பொருட்பளை அரசனிடம் காட்டி விபரம் சொன்னார்கள். அரசனுக்குப் பெருங்குழப்பம். அவர்களை அடுத்த தினம் வருமாறு கேட்டுக் கொண்டான். அன்றிரவு இப்பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்று பிரதம மந்திரியுடன் ஆலோவனை செய்தான். 'நமது நாட்டில் ரஷ்யா என்று சொல்லப்படுகின்ற தேசத்தில் இருந்து வந்து நீண்ட காலமா வாழும் ஞானி ஒருவர் இருக்கிறார். அவரை அழைத்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்' என்று அவர் ஆலோசனை சொன்னார்.

அடுத்த நாள் மன்று கூடிற்று. இளவரசர்கள், ரஷ்ய மூதறிஞர், மந்திரிப் பிரதானிகள், தோழியர் புடை சூழ இளவரசி, நாட்டு முக்கியஸ்ர்கள் குழுமியிருக்க பிரச்சனை மூதறிஞரிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு அவர் சொன்னார்:- 'மூவரும் சரிசமமான பாத்தியதையுடையவர்கள். இந்த விடயத்தில் இளவரசிதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே சரியானது, நியாயமானது.

அமைதி குலைத்து இளவரசி தன் அரசணையிலிருந்து கீழே இறங்கினாள். நேரே மூதறிஞர் அருகே சென்று 'நான் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்றாள். அவை மௌனத்தில் உறைந்திருக்க தோழியர்கள் மயங்கி விழும் சப்தம் மட்மே மண்டபத்தில் எதிரொலித்தது.

'இளவரசி... நீ என்ன சொல்கிறாய்?' - அதிர்ந்தார் அரசர்.

இளவரசி எதையும் சட்டை செய்யாது மூன்றாவது இளவரசன் கையில் இருந்த களிம்பு டப்பாவை எடுத்து கிழவனான அறிஞனின் கையில் தேய்த்தாள். ஒரு நிமிடத்தில் கிழவன் அழகான இளைஞனாக மாறினான். இளவரசியை நோக்கி ஒரு காதல் புன்னகை சிந்தினான்.

இது ஒரு நாட்டார் கதைதான். ஆயினும் ஒரு சிறுகதை போன்று வர்ணனை, உரையாடல் என்று எழுதப்பட்டிருந்த கதையின் சுருக்கதையே இங்கு தந்திருக்கிறேன்.

இக்கதை அக்காலத்தின் அறபுத் தீபகற்ப அரசியலைப் பேசுகிறது என்று நான் நம்புகிறேன்.

நன்றி - மீள்பார்வை

Tuesday, June 9, 2015

அவளுக்கும் அழுகை என்று பெயர்!


 - 21 -

ராபியா வழமையைப் போல உரிய நேரத்துக்கு ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அவளது முகம் வியர்த்திருந்ததை ஆசிரியை அவதானித்தார். ஆசிரியையின் வீட்டுக்கும் அவளது வீட்டுக்கும் வெறும் இருபது யார் தூரம்தான். இப்படி வியர்க்க விருவிருக்க அவள் வரவேண்டிய அவசியம் கிடையாது. இதற்கு முன்னர் அப்படி நிகழ்ந்ததும் இல்லை.

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறாள் ராபியா. குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை. படிப்பில் 70 வீதத்துக்கு மேல். பொது அறிவு - சமூக அறிவு 90 வீதத்துக்கும் மேல். தேசத்தின் பெருந்தலைநகருக்கு வெளியே புறநகரொன்றின் 'ஏனோதானோ' முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவி.

இன்று அவளுக்கும் ஆசிரியையிடம் 'எலொகேஷன்' கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பரீட்சை தினம். பரீட்சை 9.30க்கு ஆரம்பமாகி விடும். ஆசிரியையின் வீட்டிலிருந்து கணக்கிட்டால் ஏறக்குறைய 25 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பிரபல அரச பாடசாலையில்தான் பரீட்சை நடக்கிறது.

பல பெற்றோர் தமது பிள்ளைகளைத் தாமே பரீட்சைக்கு அழைத்துச் செல்லப் பொறுப்பேற்றுக் கொள்ள எஞ்சியது ராபியாவும் ஆசிரியையின் சகோதரியும் மாத்திரமே. அன்றைய வேறு தவிர்க்கவே முடியாத குடும்பச் சிக்கல் காரணமான ஆசிரியைக்குப் பரீட்சை நிலையம் வரை செல்ல முடியவில்லை. எனவே ஒரு முச்சக்கர வண்டியொன்றைப் பேசி இருவரையும் அனுப்பிப் பரீட்சை முடிவடைந்ததும் மீளக் கொண்டு வர ஆசிரியை தீர்மானித்தார்.

முதல் நாளிரவு ஆசிரியையினால் முச்சக்கர வண்டி பேசித் தீர்மானிக்கப்பட்டது. அந்த முச்சக்கர வண்டிக்குரியவர் ராபியாவின் தந்தை. காலை மகள் பரீட்சைக்குப் புறப்படும் மகளைக் கண்ட பிறகுதான் ஆசிரியையால் பேசப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணம் செய்ய இருக்கும் மாணவிகளில் ஒருத்தி தனது மகள் என்பது தெரிய வந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை, காலை ஏழு மணிக்கெல்லாம் முச்சக்கர வண்டி வராது என்று ஆசிரியைக்குத் தகவல் தரப்பட்டது.

முச்சக்கர வண்டிக்காரரின் முடிவு ஆசிரியைச் சிக்கலில் மாட்டி விட்டது. பரீட்சை மண்டபத்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுக்கும். இன்னும் அரை மணி நேரத்தில் வேறு ஒரு முச்சக்கர வண்டி ஒன்றைத் தேடும் அவசரத்தில் பலருக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் நின்றிருந்த வேளையில்தான் ராபியா வியர்த்து விருவிருக்க ஆசிரியை வீட்டுக்குள் நுழைந்திருந்தான். அவள் எந்த வழியிலாவது பரீட்சைக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்திருந்ததை அந்த இக்கட்டான நிலைமைக்குள்ளும் ஆசிரியையால் உணர முடிந்திருந்தது.

ஆசிரியையைப் பொறுத்த வரை ஒரு நல்ல சிநேகிதியைப் போல் பழகுபவள் ராபியா. கற்க வேண்டும் என்ந பேரவா கொண்டவள். பாடசாலையின் புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பெரும் அர்ப்பணம் கொண்டவள். எந்த ஒரு விடயத்தையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் சின்னப் பெண்.

ராபியா ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து விருட்டென காரியாலய அறைக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே வேறு ஒரு நம்பிக்கையான நபரின் முச்சக்கர வண்டி தேடும் முயற்சியில் ஆசிரியை ஈடுபட்டுக் கொண்டிருந்து தோல்வியடைந்து மனம் சலித்த நிலையில் காரியாலய அறைக்குள் நுழைந்த போது 'திக்' என்றது. ஆம் ராபியா பிழியப் பிழிய அழுது கொண்டிருந்தாள். தனது தந்தையார் செல்ல மறுத்த காரணத்தால் இவ்வளவு அழ வேண்டியதில்லை என்று நினைத்த ஆசிரியை அவளைச் சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால் அழுகை நிற்கவில்லை. ராபியா அழுது ஆசிரியை பார்த்ததில்லை. புன்னகையும் சிரிப்புமாக ஒரு பட்டாம்பூச்சி போல் வளைய வரும் சின்னப் பெண் அவள். பரபரப்பும் உற்சாகமுமாகவே கண்டு பழகிய ராபியா தேம்பித் தேம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை ஆசிரியைக்கு. மிகுந்த போராட்டத்துக்குப் பின்  அவளது அழுகை தணிந்ததே தவிர முடிவடையவில்லை. எதுக்காக இப்படி அழுகிறாய்? என்று ஆசிரியை கேட்ட போது அவள் தேம்பிய படியே சொன்னாள்:-

'வாப்பா... வாப்பா... சோதினையும் தேவல்ல.. படிப்பும் தேவல்ல என்டு சொல்லுறாரு... பொம்புளைகள் படிச்சி என்னத்த செய்யப் போறீங்க என்டு சத்தம் போட்டாரு... என்னத்தப் படிச்சாலும் குசினிக்குள்ளதானே இருக்கப் போறாயென்டு சொன்னாரு...' என்றவள் மீண்டும் உரக்க அழ ஆரம்பித்தாள்.

அதைக் கேட்ட ஆசிரியைக்குக் கோபம் வந்தது. பஸ்ஸின் இலக்கங்களைச் சொல்லிக் கொடுத்து 'போங்க.. இரண்டு பேரும் பஸ்ஸில் போய் நல்லா சோதினைய எழுதிட்டுத் தைரியாமாத் திரும்பி வாங்க..' என்று அனுப்பி வைத்தார்.

இறுகிய உறுதியான முகத்துடன் ராபியாவும் மற்றைய மாணவியும் படியிறங்கினார்கள்.

'கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் இருவருக்கும் கட்டாயக் கடமையாகும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்' - என்று மௌலவியான ராபியாவின் தந்தை எங்கோ ஒரு பள்ளிவாசலில் உபந்நியாசம் செய்யும் காட்சி ஒரு நிமிடம் ஆசிரியையின் மனக்கண்ணில் விஸ்தாரமாக விரிந்து மறைந்தது.

நன்றி - மீள்பார்வை

Sunday, May 31, 2015

நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்... தலையைக் குனி!


- அகமட் புவாட் நஜ்ம் -
எகிப்து (1929 - 2013)

தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்
தலை குனிந்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன்
நாம் உமக்கு சுதந்திரத்தை அருளினோம்

முழுமையான எண்ணத்துடன் செயல்படுவதெனில்
சமூக நலனுக்காக அர்ப்பணிப்பு இருக்குமெனில்
உனது செயல்கள் சல்லடை போன்று பயனற்றது
பணிவுள்ளவர் மாத்திரமே நிமிர முடியும்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

பாதுகாப்பவர்களே அதைத் திருடுவோராக இருக்கையில்
தமது தேசத்தை முதுக்குப் பின்னால் வீசுகையில்
அதிகாரிகளின் சீருடைகளால் பாதுகாகக்ப்படும் அவர்கள்
அதை முழுமையாக விழுங்கி விடுகிறார்கள்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

சிரமப்பட்டுச் சம்பாதித்த எதுவும் உன்னுடையதல்ல
எல்லாப் பாதைகளிலும் பட்டினி உன்னைத் தடுக்கிறது
திரும்பி எல்லாப் புறங்களையும் பார்
திருடர்களையும் அநீதக்காரரையுமே காண்பாய்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

வேறொரு நிலத்தை நீ காண்பாயெனில்
அந்த மனிதர்கள் வேறொரு ரகம்
சங்கிலியில் பிணைக்கப்பட்ட குரங்கைப் போல
அல்லது ஒரு வெளவாலைப்போல
நீ தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவன்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

உனக்கு முன்னால் அல்லது உனக்குமேலே 
புறக்கணிப்பு உள்ளதெனில்
அது உன்னைக் கயிற்றில் கட்டியிருக்கிறதெனில்
அது உன்னை அழிவுக்கு இட்டுச் செல்கிறதெனில்
நீ நஞ்சிலிருந்து அருந்திக் கொண்டிருக்கிறாயெனில்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

ஒரேயொரு சொல் உன்னைக் குற்றஞ் சுமத்துகிறதெனில்
உனது நெஞ்சுக்குள் உனது நம்பிக்கையை 
மறைத்து வைத்திருப்பாயெனில்
உன்னுடைய கண்களில் நான் அவமதிப்பைக் காணும்போது
உன்னுடைய இழப்புக்களையெல்லாம்
என்னுடைய இழப்புக்களுடன் இணைத்து விடு!

தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Tuesday, May 26, 2015

வேர்கள் இறக்கும் விதம்!

எனக்குள் நகரும் நதி - 20 

'தாம் செய்வது தப்பு என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்!'

அண்மையில் என்னை நட்புக் கருதிச் சந்திக்க வந்த சகோதரர் தொடர்ந்தார்.

'பாவமான காரியத்தைச் செய்கிறோம் என்பதையும் உணர்ந்தேயிருக்கிறார்கள். தாம் செய்வற்றை மிகவும் அவதானமானவும் நுணுக்கமாகவும் மேற்கொள்கிறார்கள். ஹலால் ஹராம் விடயத்தில் அவர்கள் எல்லோருமே மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் என்று தெரிந்தும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறீர்களே? என்று கேட்டால் 'எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் சோறு போடுவீர்களா?' என்று ஒற்றைக் கேள்வியை நம்முன்னால் வீசுகிறார்கள்!'

சகோதரர் அரச ஊழியர். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த அவதானங்களை மேற்கொள்ளும் அரச ஊழியர். ஒரு பிராந்தியத்தின் மூன்று குக்கிராமப் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத, மார்க்க விரேத விடயங்களைப் பற்றிய தகவல்களை என்னுடன் கவலை தோய்ந்த முகத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

கஞ்சா, போதை லேகியம் மற்றும் விபசாரம் ஆகியன வியாபார மயமாகி அமோகமாக நடந்து கொண்டிருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். போதைதரும் வஸ்துக்களின் வியாபாரத்தில் பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமான விசயம். ஆபத்தான வியாபாரமாக இருந்தாலும் அவர்கள் தைரியத்துடனும் கெட்டித் தனத்துடன் ஈடுபடுவதையும் அது குறுகிய ஈடுபாட்டில் நிறையப் பணத்தை ஈட்டிக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது என்பதையும் அந்தச் சகோதரர் குறிப்பிட்டார்.

குற்றம் உறுத்தாத மனோநிலை வளர்ந்த பிறகு அதிலிருந்தும் கிடைக்கும் மேலதிக பணத்திலிருந்தும் மேலும் மேலும் தீங்குகள் பரவ ஆரம்பிக்கின்றன. பின்னர் பணம் என்ற ஒன்றுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்குரிய தயார் நிலைக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். குறிப்பாக அவர்களது பிள்ளைகள் இவற்றைப் பார்த்தும் கேட்டும்தான் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவோ சமூகத்துக்கு உரமானவர்கவோ எப்படி வளர முடியும்? இவ்வாறான சூழலுக்குள் வளரும் ஒரு நல்ல பிள்ளையும் கூட சந்தேகத்துக்குரிய பிள்ளையாகவே நோக்கப்படும் அபாயம் உண்டு.

சமூகத்தின் வறிய நிலை பற்றிய தொட்டுக் காட்டல்கள் மேற்கொள்ளப்படும்ம் போதெல்லாம் 'முற்றாக வறுமையை ஒழித்து விட முடியாது' என்றும் 'எல்லாக் காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் ஒரு சாராரிடம் வறுமை நிலவிக் கொண்டேயிருந்திருக்கிறது' என்றும் படிப்பாளிகள் சிலர் கணக்குக் காட்டி விட்டு நழுவி விடுகின்றனர். அது சரியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அப்படியானால் வாழ்வின் சகல துறைகளிலும் தெளிவும் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும் சூழலில் சக மனிதன் வாழ்வு குறித்த அக்கறை வளர்ச்சியடையவில்லை என்றல்லவா அர்த்தமாகி விடுகிறது. வாழ்வின் நவீன முன்னேற்றங்களால் மனிதாபிமானம் மட்டும் பின் தங்கி இருக்கிறது என்றால் அது பூரணத்துவமான வளர்ச்சி அல்ல என்றல்லவா அர்த்தப்படும்?

சிறப்புற்ற நடுநிலமைச் சமுதாயம் என்று பெயர் பெற்ற இஸ்லாம் என்ற வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தில் இவ்வாறான இழிநிலை அடியோடு அழிந்து விடாதிருந்தாலும் பெரிய அளவில் நிலவுவதற்கு இடமில்லை அல்லவா?  அப்படியாயின் தவறு எங்கேயிருக்கிறது? அதைக் கண்டு பிடிப்பவர்கள் யார்? அதற்கான மாற்றுத் திட்டங்களை வகுப்பது யார்? செயல்படுத்துவது யார்? நான் என்னளவில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக இருக்கிறேன் என்ற நமது அளவுகோல் முடிவுடன் வாழும்  நாம் அனைவரும் இந்த நிலைக்கு ஜவாப்தாரிகள் இல்லையா?

லட்சக் கணக்கான புத்தகங்கள் வருகின்றன, பத்திரிகைகள் வருகின்றன, நடந்தும், எழுதியும், பேசியும் தஃவா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்க்கப்பணி, அடிப்படை மனிதப் பணி என்ற பெயரால் கோடிக் கணக்கான அறபுப் பணம் பல பகுதிகளிலும் இறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய நிலையில் மேம்பட்டிருக்கும் தஃவாப் பணி இடம் பெறாத, அடிப்படை மனித உதவி என்ற பெயரால் பணம் இறைக்கப்படாத ஒரு கால கட்டத்தில் இத்தகைய பெருமளவிலான இழி நிலை முஸ்லிம் சமூகத்தில் இருந்தது கிடையாது.

அரசியல் விவகாரமாகட்டும், மார்க்க விவகாரமாகட்டும்... ஒவ்வொருவரும் தம்மை முற்படுத்திக் கொள்ளவும் தமது அணியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தமது குழுவுக்கு வெள்ளையடிக்கவும் விவாதம் நடத்தவுமே நமக்குக் காலம் சரியாக இருக்கிறது. அற்பமான ஒற்றை வசனத்துக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரம் பேர் கூடி ஆளுக்கொரு அர்த்தம் கொடுத்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதுமுக்கியம், எது முக்கியமல்ல என்ற தெளிநிலைக்கு அப்பால் நின்று 'நீ சொல்வது பிழை - நான் சொல்வது சரி' என்பதில் தொங்கிக் கொண்டு அடிபிடிப்படுகிறோம்.

இவற்றையெல்லாம் கடந்து சமூக ரீதியான விடயங்களை முற்படுத்தி ஒன்று படுவதன் மூலமே இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்க முடியும்.

முஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்று வந்து விட்டாலே உனது இஸ்லாம், எனது இஸ்லாம் என்று பாகுபாடு துவங்கி விடும் சூழலில் இதுவெல்லாம் என்று சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை.  

நன்றி - மீள்பார்வை

Sunday, May 17, 2015

வில்பத்து - மறிச்சிக்கட்டி


வில்பத்து!... முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கான வில்லங்கமும்
மரிச்சிகட்டிக்கு மடித்துக் கட்டிச் சென்ற தென்னிலங்கை இனவாதமும்
-----------------------------------------------------------------------------------------------------
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வில்பத்து என்ற இந்த இரு விடயங்களையும் ஒன்றாக முடிச்சுப் போட்டு வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை போடுவதற்கு இன்று தென்னிலங்கை சிங்கள சக்திகள் ஒன்றுபட்டுள்ளன. தேசிய வனத்தை அழித்து முஸ்லிம் பிரதேசம் ஒன்றினை வடக்கில் உருவாக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் திட்டமிட்டுள்ளார் என்ற சோடிக்கப்பட்ட அபாண்டங்கள் இன்று சிங்கள இனவாதிகள் மத்தியில் நிதர்சனமாக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குற்றசாட்டுகளுக்கு, அனைத்துக்கும் ஒரு கை ஓசையாக நின்று பதிலளித்து, நியாயத்தை எவ்வளவுதான் விளக்க அமைச்சர் ரிஷாத் முயன்றாலும் அது தென்னிலங்கையில் தோற்கடிக்கப்பட்ட ஒன்றாகவும் காதுக்கு எட்டாத கணக்கெடுக்கப்படாத விடயமாகவும் மாறியுள்ளது.
அமைசச்ர் ரிஷாத் பதியுதீனுக்கு இந்த அரசாங்கம் பயந்து செயற்படுகிறது என பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார தேரர் பகிரங்கமாகவே கூறி இந்த விடயத்தில் அரசாங்கத்தை சூடேற்ற முயற்சித்துள்ளார்.

முஸ்லிம்களின் சிறிதான மீள்குடியேற்றம் வில்பத்து சரணாலய பகுதிக்கு வெளியில் வில்பத்து சரணாலயத்தின் எல்லையாக மோதரகம ஆற்றுக்கு அப்பாற்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது. மாறாக, வில்பத்துவின் எல்லைக்குள் சட்டவிரோதமாக யாரும் மீள்குடியேற்றப்படவில்லை என அரசாங்க அதிபரான சிங்களவர் ஒருவர் தெரிவித்தும் கூட நம்பாமல் விடாப்பிடியில் நிற்கும் இவர்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுவதனைக் கேட்டு, ஏற்று ஆறுதல் அடைவர் என்று நம்புவதற்கும் நியாமும் இல்லைதான்.

அத்துடன் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சரான பஷில் ராஜபக்ஷவும் இது தொடர்பில் சில விடயங்களை தெரிவித்துள்ளார். வில்பத்து மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டது. வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கப்பட்டது, இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை. தற்போது சிலர் தமது இனவாதச் செயற்பாட்டுக்காக இவ்விவகாரத்தை தூக்கிப் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கு வாழ்கின்ற மக்களுக்கு தலா அரை ஏக்கர் காணி வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அது தனியே முஸ்ஸிம்களுக்கு மாத்திரமல்ல. தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையும் மறைக்கப்பட்டு விட்டது.
இதற்கு மேலாக தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளும் பெளத்த பிக்குகளும் வில்பத்து பிரதேசத்துக்குச் சென்று அங்கு ஒன்றிரண்டாக காணப்படும் முஸ்லிம் குடும்பங்களை வெறுப்போடு பார்வையிட்டு வருகின்றனர். அவர்களது பார்வை காட்டுவாசிகளைக் கண்டு நோக்குவது போன்று கடுப்பாக உள்ளது.

வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு போன்ற பகுதிகளுக்கு சிஹல உறுமய, ராவணபலய, ஜே.வி.பி கட்சிகளைச் சேர்ந்தோர் மட்டுமின்றி பிக்குமாரும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்வையிடுகின்றனர். வன ஜீவிராசிகளை அல்ல.. முஸ்லிம்களைத்தான்.அங்கு செல்வோர் மக்களிடம் உரையாடாமல் புத்தர் சிலை ஒன்றை எங்கு வைப்பதென தங்களுக்குள்ளேயே கலந்தாலோசித்து வருவதாகவம் கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தெரிவித்திருந்தார். அதாவது, தான் ஜனாதிபதியாக பதவியேற்று இதுவரையும் தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தை ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தியதாக கூறியிருந்தார். அதுவும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பிலேயே தான் இவ்வாறு தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்தாக கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வில்பத்து தொடர்பில் அவரது கவனத்துக்குக் கொண்டு வந்து உடனேயே அதனைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட பின்னரே ஜனாதிபதியினால் இவ்வாறானதொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காகவே இன்றைய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதே இதன் மறைபொருள். இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம்தான்.

ஆனால், இந்த நாட்டு முஸ்லிம்கள் காட்டுவாசிகள் அல்லர். காட்டில் வாழும் தேவை அவர்களுக்கு இல்லை. வடபுல முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மிகவும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வசதி வாய்ப்புடனும் வாழ்ந்தவர்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் எதனையும் அடாத்தாகப் பிடித்து வாழவில்லை என்பதனை ஜனாதிபதி அவர்களும் எதிர்பபுச் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் வடமாகாண செயலணியினாலேயே வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு வாழ்விடம் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசத்துக்குள் உட்பட்டவை அல்ல. அந்தப் பணிகளே இன்று வரை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்கப் போவதாகவும் வெளிநாட்டு முஸ்லிம்களையும் அங்கு குடியமர்த்த முயற்சிப்பதாகவும் கூறுவது இட்டுக்கட்டப்பட்ட அபாண்டம்.

இது ஒரு புறமிருக்க, வடபுல முஸ்லிம்கள் பிரச்சினை என்றால் அதனை ரிஷாத் பதியுதீனே பார்த்துக் கொள்ளட்டும் என்ற ஒரு மனப் போக்கு ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காணப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த விடயம் இப்போது பூதாகாரம் பெற்றுள்ள நிலையில் மற்றயை தரப்புகளால் மௌனம் சாதிக்கப்படுவதுதான் இந்தக் கேள்விக்கு காரணமாகிறது இந்தப் பிரச்சினை என்பது ரிஷாத்துடன் தொடர்பானது என மேலெழுந்தவாரியாக நோக்குவது தவறு. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையையும் தேசிய பிரச்சினையாகவே கருதி அனைவரும் செயற்பட வேண்டும்.

மலையக தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்க் கட்சிகளும் அவர்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றன. களத்துக்குச் சென்று காரியம் செய்கின்றன. அதேபோன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மலையக அரசியல் தலைமைகள் குரல் கொடுக்கின்றன. களத்தில் நிற்கின்றன. இதுதான் இன ஐக்கியம் என்பது.

சிங்களவர்களை எடுத்து நோக்குங்கள் அவர்களுக்குள் கட்சி, அரசியல் என பல பிரச்சினைகள், வேறுபாடுகள் உள்ளன. ஆனால், தங்கள் இனம், உரிமை என்று வரும்போது அனைவரும் ஒன்றாக ஐக்கியப்பட்டு விடுகிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, முஸ்லிம்கள் இவ்வாறானவர்களின் பேச்சுகளை நம்பி விடக் கூடாது. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையில் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து ஆக வேண்டிய காரியங்களை ஆற்றுவதே இன்றைய அவசரம்.

எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பங்களிப்பு மிக முக்கியம். இந்த விடயத்திலட அவர் தனது கவனத்தையும் செலுத்தி செயற்படுவாரானால் வடபுல முஸ்லிம்கள் வாழ்வில் நிச்சயம் நிம்மதி ஏற்படும் என்றே நம்பலாம்.

இதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது, வில்பத்துவில் குடியேற்றங்கள் எதுவும் இல்லை என்று. ஆம் அதுதான் உண்மை. ஆனால், சம்பிக்க ரணவக்க இவ்வாறானதொரு கருத்தைக் கூறியதற்காக ஏதோ அவரைப் பாராட்டலாமே தவிர உள்ளார்த்தமாக அவரைப் பாராட்ட முடியாது.

ஏனெனில் முஸ்லிம்களுக்கு அண்மைக் காலங்களில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான பிதா மகன் அவர்தான். பொதுபல சேனாவுக்கு முன்னரேயே இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நூல்களை, எழுதி நச்சுக் கருத்துகளை விதைத்தவர் சம்பிக்கதான. இவரது இனவாத நூல்களைப் படித்ததன் காரணமாககே சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைக்க ஆரம்பித்தனர். மர்ஹும் மாமனிதர் அஷ்ரஃபினையும் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் கடந்த காலங்களில் எவ்வாறு இந்த சம்பிக்க ரணவக்க விமர்சித்தார் என்பது தெரிந்த விடயம்.அக்கரைப்பற்று நுரைச்சோலை திட்டத்தை நிறுத்தியதன் சூத்திரதாரிகளில் இவரும் பிரதானமானவர்தானே?
நன்றி வீரகேசரி வாரவெளியீடு (17-05-2015)

Tuesday, May 12, 2015

மூன்று காட்சிகள்!

 - 19 -

காட்சி - 1

ரமளான் மாதம்! ஒரு நாள் மாலை 6.00 மணி. ஆமர் வீதி போலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சிக்னலைத் தாண்டி விடவேண்டும் என்று வந்த வண்டியால் கடக்க முடியவில்லை. சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்து விட்டது. வேகமாக வந்த அந்தக் கார், நிறுத்தியாக வேண்டிய கோட்டுக்குள் நிறுத்த முடியாமல் ஓர் அடி தூரம் தாண்டி நின்றது. வாகனம் நிறுத்த வேண்டிய கோட்டுக்கு அப்பால் பாதசாரிகள் கடவை!

வீதியின் மத்தியில் நின்று சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்ததும் பாதசாரிகள் கடவையில் இறங்கிய அந்த இரண்டு இளைஞர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டிக் கார் முன்னால் வருவதைக் கண்டு அதிர்ந்து பின் வாங்கினார்கள். இருவருக்கும் 16 அல்லது 17 வயது இருக்கும். அதற்குக் குறைவாக இருக்கலாமே தவிர கூடுதலாக இருக்க முடியாது. இருவர் தலைகளிலும் தொப்பி. அவர்கள் கிராண்பாஸ் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு நோன்பு துறக்கச் செல்வதற்காகப் பாதை கடக்க முற்பட்டவர்கள்.

பின்வாங்கிய இருவரும் காரின் அருகே வெகு இயல்பாக நெருங்கிக் காரின் சாரதியின் பக்கக் கண்ணாடியைக் கீழிறக்கச் சைகை செய்தார்கள். சாரதி கண்ணாடியைக் கீழிறக்கிறதும் அவர்களில் ஒருவன் சாரதியின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். கோடு தாண்டியது குற்றம் என்று சைகையால் சொல்லித் திட்டினான். சாரதி உறைந்து போயிருக்க அவர்கள் தெருவைக் கடந்து போனார்கள் வெகு சாதாரணமாக!

அந்த வாகனத்தைப் பினனால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த எனக்கு வாகனத்தின் ஏஸியையும் தாண்டி வியர்த்தது!

காட்சி - 2

தெமடகொட - பேஸலைன் வீதியில் ஆரம்பமாகி உள்ளே செல்லும் பாதைகளில் ஒன்று. நான் அந்தப் பாதைக்குள் காரைத் திருப்பிய போது இரவு 7.30 அளவில் இருக்கலாம். அந்தத் தெருவில் இரண்டு வாகனங்கள் செல்லவும் வரவுமான இடம் உண்டு. அதாவது ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால் மற்றொரு வாகனம் செல்லுமளவு மாத்திரம் செல்ல முடியும்.

தெருவுக்குள் நுழைந்து 25 யார் கூடச் சென்றிருக்க மாட்டேன். ஒரு வீட்டின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. ஒரு புறம் நான்கு வாகனங்கள். அடுத்த பக்கம் இரண்டு வாகனங்கள். நடந்து செல்பவர்கள் நெளிந்து புகுந்து சென்று கொண்டிருந்தார்கள். என்னால் தாண்டிச் செல்ல முடியவில்லை.

அது ஒரு முஸ்லிம் திருமண வீடு. உள்ளே பெருந்தொனியில் கஸீதா ஒலித்துக் கொண்டிருந்தது. நான் 'ஹோர்ன்' அடித்தேன். கொத்துக் கொத்தான நகைகளுடன் மினுக்கப்பட்ட முகங்களுடன் அவ்வீட்டுக்குள் பெண்கள் நுழைந்து கொண்டிருந்தனர். அவ்வப்போது கோட் ஷூட் போட்ட நபர்கள் தெருவுக்கு வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் வாகனம் ஒன்று தாண்டுவதற்குக் காத்து நிற்பது குறித்து எந்தக் கவனமும் இருக்கவில்லை.

நான் அமைதியாக, பொறுமையாகக் காத்திருந்தேன். பின்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்து நின்றது. மேலும் பத்து நிமிடங்கள் கழிந்ததும் முச்சக்கர வண்டிக்காரர் கோபத்துடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து வெளியில் வந்தார். அதற்குப் பிறகும் ஐந்து நிமிடங்கள் கழிந்து ஒருவர் வெளியே வந்து ஆர்வமில்லாத போக்கில் ஒரு புற வாகனங்களை ஒதுக்கித் தந்தார்.

காட்சி - 3

கிராண்பாஸ் வீதி முழு மொத்தமாக அந்த மதிய வேளை வாகனங்களால் நிரம்பி வழிந்தது. நான் சந்தி கடந்தால் அடுத்த தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அந்தத் தெருவிலேயே அரை மணி நேரம் கழிந்திருந்தது. சந்தியை நோக்கி மெது மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து நின்ற ஒரு முச்சக்கர வண்டி தொடர்ந்து 'ஹோர்ன்' சத்தம் எழுப்பிக் கொண்டேயிருந்தது.

எனது வாகனத்துக்கு இடது பக்கத்தால் புகுந்து செல்ல அவர் எத்தனிக்கிறார் என்று புரிந்தது. ஆனால் ஒதுங்கி இடம் கொடுக்க வசதியிருக்கவில்லை. அப்படி நகர்த்தினால் காரின் ஒரு பக்கத்தைத் தேய்த்துக் கொண்டு செல்ல ஒரு டிப்பர் வாகனம் தயாராக இருந்தது.

அந்த இடத்திலேயே பதினைந்து நிமிடம் கழிய வாகனங்கள் நகர நானும் நகர்த்தினேன். அந்த இடைவெளிக்குள் என்னை முந்திய முச்சக்கர வண்டிக்காரர் தமிழில் என் வம்சத்தை இழுத்துக் கொழும்புத் தமிழில் தூஷணத்தால் திட்டியது மொத்தமாக மூடியிருந்த வாகனத்துக்குள்ளும் தெளிவாகக் கேட்டது. நான் எதுவும் காதில் விழாதது போல் வாகனத்தை நகர்த்தினேன்.

முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்த முஸ்லிம் பெண்மணி அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் வெட்கத்தில் முகத்தை இரு கைகளாலும் மூடியபடி குனிந்து அமர்ந்திருந்தார். முச்சக்கர வண்டி எனது வண்டியைத் தாண்டியதும் பார்த்தேன்.

பின் கண்ணாடியில் 'லாஇலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர்ரஸூலுல்லாஹ்;' என்ற கலிமா ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது!

Tuesday, April 28, 2015

வினாக்களை விதைக்கும் நூல்


 - 18 -

ஆறுவயது அல்லது ஒன்பது வயதுச் சிறுமியை ரஸூலுல்லாஹ் திருமணம் செய்தார்கள் என்ற விடயத்தை மறுக்கும் ஒரு நூல் தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கிறது.

'அறபுகளின் நாயகி' என்ற தலைப்பில் அமைந்த இந்த 76 பக்க நூலை ஐரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது திருமணம் பற்றிய புனைவுகளும் உண்மைகளும் - என்ற உப தலைப்போடு அழகிய வடிவில் வெளிவந்திருக்கும் இந்நூலை எழுதியிருப்பவர் பயாஸ் அப்துர் ரஸ்ஸாக்.

மிகவும் தெளிந்த தமிழில் யாரால் வேண்டுமானாலும் படித்து உடனே புரிந்து கொள்ளும் விதத்தில் அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்கள் இரண்டினைப் படித்திருக்கிறேன். ஒன்று நூருத்தீன் எழுதிய ஸஹாபாப் பெண்மணிகள் பற்றிய 'தோழியர்' என்ற நூல். மற்றையது 'அறபுகளின் நாயகி.

'அபூதாலிப் அவர்களைப் பற்றிய ஒரு நூல 2009; ல் பயாஸ் அப்துல் ரஸ்ஸாக் எழுதினார். அதன் பிறகு ஆமினா - அப்துல்லாஹ் என்ற தலைப்பில் 2012ல் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். தெளிவான மொழி நடை கைவரப் பெற்ற இவரது நூல்கள் ஆரம்பித்தது முதல் அலுப்பு வராமல் படிக்கத் தூண்டுபவை. 'அறபுகளின் நாயகி' என்ற இந்த நூலும் இலக்கியச் சாமார்த்தியம் கொண்;ட ஒரு கலந்துரையாடல் கதை போலக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வது படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

ஆயிஷா நாயகி - றஸூலுல்லாஹ்வின் திருமணம் அன்னையின் ஆறு வயதில் நடந்தது என்பதைக் குறிக்கும் ஒற்றை ஆதாரத்தை நூலாசிரியர் கேள்விக்குட்படுத்துகிறார். அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் மற்றும் அன்னை அஸ்மா (ரலி) ஆகியோரின்  வயதுக் கணக்குகள் மற்றும் நபித்துவம் அருளப்பட்ட காலப் பிரிவையும் அன்னை ஆயிஷா அவர்களது பிறப்புப் பற்றிய தகவல்களையும்  மேலும் பல அம்சங்களையும் முன் வைத்து இத்திருமணம் அன்னையின் 12 முதல் 21 வயது வரையான காலப் பகுதியில் நடந்திருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இந்த நூலை வாசித்து முடித்த போது எனது மனதில் ஏகப்பட்ட வினாக்கள் எழுந்து நின்றன. அறபுத் தேசங்களின் பல்கலைக் கழகங்கள் ஒவ்வொரு துறையிலும் ஆய்வுகளை நடத்திக் கொண்டேயிருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படியெனின் முகம்மது (ஸல்) - அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் திருமணம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? ஓர் அஜமியான அப்துல் ரஸ்ஸாக் முன் வைக்கும் கேள்விகள் அறபிகளுக்கும் அறபு ஆய்வாளர்களுக்கும் இஸ்லாமிய சிந்தனையாளர்களுக்கும் எழாதது ஏன்? அவர் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்களை அவர்கள் எழுப்பி அது குறித்து ஆய்வு செய்துள்ளனரா? இல்லையாயின் ஏன்?

ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு மார்க்கத்தை மாற்றிக் கொள்ளத் தலையசைக்க மறுத்த பல இமாம்கள் சிறைகளில் இருந்திருக்கிறார்கள், சித்திரவதை அனுபவித்திருக்கிறார்கள், நாடுகளை விட்டே தப்பி ஓடியும் இருக்கிறார்கள். இந்த விடயம் ஆய்வுக்குட்படாததின் பின்னணி அங்கிருந்து தொடர்கிறதா? இளவயதுப் பெண்களைத் திருமணம் செய்யவும் அடிமைச் சேவகம் செய்யவும் அரசு கட்டில் முதல் அறிஞர் பெருமக்கள் வரை இதை வசதியாகக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா?  இவ்வாறு பல கேள்விகள் ஒரு சாதாரணனான எனக்கு இதைப் படிக்கும் போது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆலிம்கள் அல்லாத சிந்தனையாளர்களால் புத்திஜீவிகளால் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் மார்க்கம் மற்றும் வரலாறு பற்றிய விடயங்களைச் சிந்தனைக்கு எடுத்து அது பற்றிய சரியான தெளிவை வழங்குவதற்கு நமது மார்க்க அறிஞர் பெருமக்கள் முன்வர வேண்டும். இது குறித்த ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதை சமூகத்தின் முன் வைக்கப்பட வேண்டும்.

இந்த நூல் இலங்கையில் இஸ்லாமிய சிந்தனை குறித்து ஆழப் Nபுசும் பலருடைய கரங்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்று அறியக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இது குறித்து பொது வெளியில் முன்வைத்த எந்தக் கருத்தும் இதுவரை எனது கண்களில் படவில்லை.

யாரும் வினாக்களை முன்வைக்கும் போதெல்லாம் பத்வாக்களைக் கொடுப்பதிலும் பயங்காட்டுவதிலும் உனக்கு அறபு தெரியாது, மார்க்கம் தெரியாது என்று எள்ளி நகையாடுவதிலும் ஆர்வம் காட்டுவோர் இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டும் தொடர்வது நல்லது என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
---------------------------------------------------------------------------

குறிப்பு - இந்தப் பத்தி எழுதி அனுப்பப்பட்ட பின்னர் ஒரு சிலர் இந்நூல் குறித்துத் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்ததை முகநூல் மூலம் அறியக் கிடைத்தது.


Friday, April 24, 2015

தேவையற்றவை!


கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். குர்திஸ்தானி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் குர்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அவரது கவிதை இது!

எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
இணைவின் புதிய சகாப்தமோ
அது கலையும் புதிய உதயமோ தேவையில்லை

நானே அதிசயமான ஒரு பூவாயிருப்பதால்
எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
எனக்கு முத்தங்கள் தேவையில்லை

உண்மையான முஷ்டியுள்ளதால்
ஒரு பிடியை நான்; வைத்திருக்க வேண்டும்

திருமண சகாப்தமோ
விவாகரத்து உதயமோ தேவையில்லை
என்றைக்குமே விதவையாகத் தேவையில்லை

எனக்கு முத்தங்கள் தேவையில்லை
அன்போடு இணைந்திருப்பதால்
நான் ஒரு தியாகியாக மாறுவேன்

சவப் பெட்டி மீதோ
என் மீது - பிணத்தின் மீதோ
எனக்குக் கண்ணீர் தேவையில்லை

அனுதாபத்துக்காக செர்ரிச் செடியை
எனது புதைகுழி வரை இழுத்துவரத்தேவையில்லை
மலர்களோ முத்தங்கனோ தேவையில்லை
கண்ணீரோ துயரமோ தேவையில்லை

கொண்டு வந்தது எதுவுமில்லை
பற்றியிருந்ததும் எதுவுமில்லை
தேசியக் கொடியில்லாத தேசம் போல
ஒரு குரலற்ற தேசம் போல
நான் மரணித்து விடுகிறேன்

நான் நன்றியுடையவள்
எனக்கு எதுவும் தேவையில்லை
எதையும் ஏற்கப் போவதுமில்லை!