Thursday, July 10, 2014

பலஸ்தீனம் விடுதலையாகும்!



மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

பலஸ்தீன் விடுதலையாகும்
இஸ்ரவேலர்கள் எவ்வளவு முயன்றாலும்
பலஸ்தீனத்தை அவர்களால்
வெல்ல முடியாது
நாம் அதனுடன் ஒன்றியிருக்கிறோம்
கற்கள் கொண்டே போராடுவோம்
ஒரு போதும் பலஸ்தீனைக் 
கைநழுவ விடமாட்டோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

யுத்தம், வருத்தம் மற்றும்
சோதனைச் சாவடிகளற்று
அது விடுதலையாகும்!
இஸ்ரவேல் எழுப்பிய மதில்
ஒரு நாள் விழும்
நொறுங்கித் தூசாகும்
துயரமோ, 
இழந்த வீடகள் பற்றிய கவலையோ
இருக்காது!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எமது நிலத்தை மீளப் பெறுவோம்
ஒலிவ் மரங்கள், மலைகள் மற்றும்
எவற்றைக் கொண்டிருந்தோமோ
அவையனைத்தையும் மீளப்பெறுவோம்!
எமதுகடலை, நகரங்களை
மீள அடைவோம்
இஸ்ரவேலியர் எதைச் செய்தாலும்
பரவாயில்லை
நாங்கள் ஒன்றிணைந்து
அமைதியை மீண்டும் கொணர்வோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

அழுத்தம், தலைவலி,
இன்னும் இதுபோன்ற எல்லாச்
சிக்கல்களிலிருந்தும் விடுதலையாவோம்
என்னனால் புரிந்து கொள்ள முடியாதிருப்பது
இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதையே
உள்ளதைப் பகிர்ந்து
நாம் ஏன் ஒன்றாக வாழ முடியாது?
எப்படிப் பகிர்வதென்று
சிலர் புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள்
புரிந்து கொண்டால்
ஒரு யுத்தம் இருக்காது என்பதை
அவர்கள் அறிவார்கள்

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எவ்வளவுதான் கொடுமைப் படுத்தினாலும்
விலக்கி நடந்தாலும்
நாங்கள் வெல்வோம்! விடுதலையாவோம்!!

ஒரேயொரு பலஸ்தீன்!

நீங்கள் நிகழ்த்தவுள்ள
மிகப் பெரும் படுகொலைகளுக்கு முன்பு
சிறவர்கள் பாடலிசைப்பர் -
‘சுதந்திர பலஸ்தீன்” பற்றி
காலத்தைப் பின்னோக்கிச் சென்று
ய+தர்களாகிய உங்களுக்கு  
நடந்தது என்ன என்று பாருங்கள்!

பலஸ்தீனை விடுதலையாக்குவோம்
நீங்கள் விரும்பினாலும் சரி,
விரும்பாவிட்டாலும் சரியே!

- JEANINE SWALIM

Sunday, June 15, 2014

ஆதலினால் காதல் செய்வீர்!


Sam Hamod

தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

அவள் சொன்னாள்:-
என்னால் முடியுமாக இருந்தால்
என் இதயத்தில்
உன்னைச் சித்திரத் தையல் செய்வேன்

அவன் பதில் சொன்னான்:-
ஆம்! அப்படியானால்
அதற்கான நூல் 
என்னிலிருந்து பெறப்பட்டதாய் இருக்கும்!

அவன் சொன்னாள்:-
என்னால் முடியுமாக இருந்தால்
என்னுடைய மூச்சில்
உன்னை இழைத்துக் கொள்வேன்!

அவன் சொன்னான்:-
ஆம்! ஏற்கனவே நீ
என்னுடைய மூச்சிலே கலந்திருக்கிறாய்
நீயின்றி என்னால் சுவாசிக்க முடியாது!

அவள் சொன்னாள்:-
என்னால் முடியுமாக இருந்தால்
என்னுடைய இரத்தத்தில்
உன்னை உள்வாங்குவேன்!

அவன் சொன்னான்:-
நான் ஏற்கனவே;
உன் இரத்தத்தில் இருக்கிறேன்
உன்னுடையதே என்னுடையது!

அவள் சொன்னாள்:-
அப்படியென்றால்
நீ என்னுடையவன்
நான் உன்னுடையவள்!

அவன் சொன்னான்:-
அதுதான் உண்மை
நாம் ஒருவரே
ஒரே இரத்தம்
ஒரே மூச்சு
ஒரே இதயம்!

Thursday, June 12, 2014

ஜாபர்தீன் என்றொரு மாமனிதன்!


ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீனுடன் நான்

அன்பின் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜி,

முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

அல்லாஹ் உங்களை அழைத்துக் கொண்டான் என்ற தகவல் கிடைத்ததும் இங்கிருந்து புறப்பட்டு வந்து உங்கள் முகம் பார்த்து ஸலாம் சொல்ல முடியாமல் போனமைக்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

தாயும் சேயுமாக அண்மித்த தேசங்களாக இருந்த போதும் எட்டிக் கடக்கும் எல்லைகளில் இருந்த போதும் நினைத்தவுடன் புறப்பட்டு வரும் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழ்க்கை அமைந்ததானது நமக்கு வாழ்வில் நேர்ந்திருக்கும் துரதிர்ஷ்டங்கள்தாம்!

தங்களது வபாத் செய்தி பேராசிரியர் சேமுமு - ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழியாகக் காதை எட்டிய போது காலை ஒன்பதரை மணியிருக்கும். உங்களது அறிமுகம் கிடைத்ததற்கும் உங்களது வபாத்துக்குமிடையிலான பதினைந்து வருடகால உறவின் ஒவ்வொரு கணமும் எனக்குள் சுழல ஆரம்பித்தது. நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

தங்களது மறைவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் ஓரு பிராந்திய இலக்கிய மாநாடு சம்பந்தமாக அனுராதபுரம் சென்று திரும்பியிருந்தோம். அந்தப் பயணத்துக்கு நான் புறப்பட்ட போது அணிவதற்கென எடுத்துச் செல்லத் தெரிவு செய்த ஷேர்ட்களில் ஒன்று நீங்கள் எனக்கு அன்பளித்தது. விமானப் பயணங்களுக்கும் சிறப்பு விழாக்களுக்கும் மாத்திரம் அணியும் அந்த ஷேர்ட்டை பயணத்துக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே வைத்து விட்டேன். இதோ மடிப்புக் கலையாமல் அப்படியே அது என் கண் முன்னால் இருக்கிறது, உங்களது நினைவுகளைப் போலவே!


நான், ஜே.எம்.சாலி, ஹாஜி ஏவி.எம், அல் அஸூமத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது (சமநிலைச் சமுதாயம் காரியாலயத்தில்)

1999ம் ஆண்டு சென்னைப் பிரசிடன்ட் ஹோட்டலில் உங்களை முதன் முதலாகப் பார்த்தேன். ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை வாழ்நாளில் இரண்டாவது முறையாகவும் இலங்கைக்கு வெளியே முதலாவது முறையாகவும் நான் கண்ட சந்தர்ப்பம் அது. மூன்றாவது தினம் இறுதி நிகழ்வுகளுக்கு முன்னர் மேடை ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் உங்கள் மீது எனது கவனம் வெகுவாக ஈர்க்கப்படுகிறது. கீழே இறங்கி வந்த உங்களை நானும் ஜின்னாஹ்வும் எதிர் கொண்ட போது எங்களைப் பார்த்துத் தரித்து மலர்ந்து புன்னகைக்கிறீர்கள். ஆர்வமேலீட்டால் உங்களை அறிமுகப்படுத்துமாறு டாக்டர் ஜின்னாஹ்விடம் கேட்கிறேன். நீங்கள் புன்னகை மாறாமல் அப்படியே தரித்து நிற்க ஜின்னாஹ் என்னைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டார்:- 'ஹாஜி ஜாபர்தீன்...! இவரைத் தெரிந்து கொள்ளாமலா மூன்று தினங்களாக இங்கிருக்கிறீர்கள்..? இந்த மாநாட்டை நடத்தும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளர்!'

அந்த மாநாட்டில் நீங்கள் எல்லாமாக இருந்தீர்கள் என்பதைப் பின்னாளில் நான் அறிந்து கொண்டேன். அம்மாநாட்டைப் பொறுத்தவரை நீங்களும் சேமுமுவும் செய்த நிர்வாகம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. ஆனால் உங்களது செயற்பாடுகள்; பின்னாளில் நடந்த மாநாடுகள் சிலவற்றில் போல துருத்திக் கொண்டோ இடறிக் கொண்டோ உங்களையே பிரேமுக்குள் வைத்துக் கொண்டோ அமைந்திருக்கவில்லை என்பதுதான் என்னை இன்னும் இன்னும் உங்களருகே இழுத்து வந்து சேர்த்தது என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் நடத்திக் காட்டிய அந்த மாநாடுதான் அடுத்த மூன்றாவது வருடத்தில் இலங்கையில் கோலாகலமாக ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தும் எண்ணத்தையும் ஆர்வத்தையும் எனக்குள் விதைத்தது. உங்களுடன் இலக்கிய மாநாடுகள் பற்றிப் பேசும் போதெல்லாம் இதைச் சொல்லியிருக்கிறேன். அதற்கும் உங்களிடமிருந்து வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததில்லை, அந்த... அதே புன்னகைதான்!

இலங்கைக்கு வருகை தந்து விட்டால் எம்மீது அளவு கடந்த பாசமும் நேசமும்காட்டும் சில படைப்பாளிகளும் படிப்பாளிகளும் இரண்டுங்கலந்த சிலரும் நாம் தமிழகத்துக்கு வருந்தோறெல்லாம் கண்டு கொள்ளாமல் போய்க்கொண்டேயிருப்பார்கள். ஆனால் வருந்தோறெல்லாம் வரவேற்று உபசரித்துக் கண்ணியமும் மரியாதையும் வழங்கும் ஒரு சிலரில் நீங்கள் முதன்மையானவராக இருந்தீர்கள். இந்த அரிய பண்புதான் உங்களை எனது மனதில் அழிக்க முடியாத ஓர் இடத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது.

2002ம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய மாநாடு பற்றிய அறிவிப்பு விடுவதற்காகவும் கலந்துரையாடுவதற்காகவும் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தோம். வந்த அடுத்த தினமே முக்கியஸ்தர்கள் அனைவரையும் உங்களது இல்லத்துக்கு அழைத்து எங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தந்துவிட்டீர்கள். செய்யிது முகம்மது ஹஸன், கவிக்கோ, பேரா. சேமுமு, பேரா. அகமது மரைக்காயர், பேரா. நஸீமா அகமது என்று அழைத்து எங்களையும் இணைத்து ஒரு மாலைப் பொழுதிலேயே எங்கள் பணியை இலகுவாக்கித் தந்துவிட்டீர்கள். அடுத்த தினமே பிரசிடன்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து தந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினீர்கள். மாநாடு முடியும் வரை பெரும் பக்கபலமாக இருந்து எங்களுக்கு வழிகாட்டினீர்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்ல முடியாமல் நாங்கள் திக்குமுக்காடினோம்.

2002 கொழும்பு மாநாட்டின் இரண்டாம் ஓர் இடைவெளியில் சந்தித்துக் கொண்டோம். 'சமநிலைச் சமுதாயம்' என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிடப்போவது பற்றி அந்த வேளை பேசினீர்கள். 'நம்ம சஞ்சிககைகள் ஒன்று பூமிக்குக் கீழே உள்ளவற்றைப் பேசுகின்றன அல்லது வானத்துக்கு மேலே உள்ளவற்றைப் பேசுகின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட உலகில் நமது கதியென்ன, நிலையென்ன என்று யார் பேசுவது? எப்போது பேசுவது? அதைத்தான் இந்தச் சஞ்சிகை செய்யும்!' என்று நீங்கள் சொன்ன போது நமது சமூகம் பற்றிய தெளிவான உங்கள் சிந்தனையை எனக்குள் ஓர் ஒளியைப் பாய்ச்சியது.

Monday, May 12, 2014

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பிராந்திய மாநாடு


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் அனுராதபுர கலை, இலக்கிய வட்டத்தினரும் இணைந்து அனுராதபுரத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பிராந்திய மாநாடு ஒன்றை நடத்துவது குறித்த முதலாவது கலந்துரையாடல்
கட்டுக்கெலியாவ முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று 11.05.2014 அன்று நடைபெற்றது.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத் தலைவர் “காப்பியக்கோ” டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையிலான குழுவில் ஆய்வகத்தின் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன், கவிஞர் அல் அஸூமத், சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


அனுராதபுரம் சார் இலக்கியவாதிகள் மூத்த எழுத்தாளரும் கவிஞரும் கல்வியியலாளருமான அன்பு ஜவஹர்ஷா தலைமையில் கலந்து கொண்டார்கள். கெகிராவ ஸஹானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், ஏ.ஏ. பஸான், மிஹிந்தலை பாரிஸ், எம்.பி. நவ்பர், எம்.எம்.ஏ. சுபஹான் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.


மாநாட்டில் அனுராதபுரம் சார் கடந்தகால, நிகழ்கால இலக்கியமுயற்சிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதுடன் ஏனைய பிரதேசங்கள் சார் இலக்கியவாதிகளது பங்களிப்பையும் பெற்றுக் கொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.



இவ்வாறான ஒரு முய்ற்சியை செயற்பாட்டுக்குள்ளாக்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தவர் நாச்சியாதீவு பர்வீன் ஆவார். இரு அணிகளுக்குமான இணைப்புப் பாலமாக தொடர்ந்தும் அவர் செயற்பட வேண்டும் என்ற கருத்து இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கலந்துரையாடல், எவ்வாறாயினும் எச்சிரமம் வரினும் கைவிடாமல் இந்நிகழ்வை நடத்தி முடிப்பது என்ற மூத்த படைப்பாளி அன்பு ஜவஹர் ஷா அவர்களது உறுதியான வார்த்தையுடன் கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது.

Thursday, March 13, 2014

பெருங்கடலில் தனித்தலையும் குருவி!


எஸ்.போஸ் (போஸ் நிஹாலே)

எனக்கு மிகவும் பிடித்த இந்தக் கவிதையைக்  கிழிந்து துண்டாகிக் கிடந்த வீரகேசரிப் பத்திரிகைத் தாள் ஒன்றிலிருந்து கண்டெடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். பின்பு “யாத்ரா - 20” வது இதழில் 10 மற்றும் 11ம் பக்கங்களில் இக்கவிதையை இடம்பெறச் செய்தேன்.

படுகொலையான கவிஞர் எஸ்.போஸ் அவர்களின் ஆக்கங்கள் தொகுக்கப்படுவதாக நண்பர் கருணாகரன் தனது முகநூல் பக்கத்தில் தகவல் தந்துள்ளார். கவிஞரது படமும் படமும் அவரது பக்கத்திலிருந்து நன்றியுடன் பெற்றுக் கொள்ளப்பட்டு எஸ்.போஸ் எழுதியிருந்த கவிதையுடன் சேர்த்து இடப்படுகிறது.

பெருங்கடலில் தனித்தலையும் குருவி!
------------------------------------------------------
அமரர்.எஸ்.போஸ்

இருள் சூழ்ந்த இந்த நாளை
உனது வாழ்வில் பாங்கொலிக்காத இந்த நாளை
வெடிகுண்டதிர்வில் மேற்கிளம்பிய தூசுப் படலத்தை
உனது சொந்த மண்ணை விட்டு
நீ வெளியேறிய துயரத்தை
கடவுளின் பெயரால் அதை
மறந்து விடாதே நண்பனே

நகரம் முழுவதும் விலங்குகளால் சூழப்பட்டு விட்டது
மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட எல்லா நகரங்களிலும்
மனிதர்கள் உறைந்து விட்டார்கள்

ரயர்கள் எரிக்கப்பட்ட தெருக்களில்
பிண வீச்சங் கமழும் தெருக்களில்
மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட எல்லா நகரங்களிலும்
தூசுப் படலமும் மரண ஓலமும்
புறாக்களின் அழுகையும் குழந்தையின் விசும்பலும்
வான்நோக்கி எழுகிறது

யுத்தம்
உனக்குள் ஏற்படுத்திய வலி
யுத்தம் உனக்குள் ஏற்படுத்திய கொடூரம்
சீமான்களின் வாழ்வைப் போலானது அல்ல அது
வீதிகளில் அலைந்து
காடுகளில் குடியேறி
மீண்டும் மீண்டும் அழிவுற்று
மீண்டும் மீண்டும் அழிவுற்று
காயங்களால் இருக்கும் என்னைப் போன்றது

குருதி ஒழுகும் உனது குழந்தையை
இறந்த குழந்தையை
கைகால் துண்டிக்கப்பட்ட குழந்தையை
தோளில் அணைத்தபடி
துப்பாக்கிகளில் சுருண்டொடுங்கும் உனது வாழ்வை
கடவுளின் பெயரால் அதை மறந்து விடாதே
மறந்து விடாதே

மிருகங்கள் 
உனக்கும் எனக்குமான காடுகளை அழித்து விட்டன
குஞ்சுகளையும் புறாக்களையும் கொன்று விட்டன
இன்னும் நமது சிறகுகளால் நெய்யப்படும்
நமது குழந்தைகளுக்கான ஆடைகளை
அவை கனவு காண்கின்றன

இருப்பின் ஒளிதுலங்கும் நமது கவிதை பற்றியோ
நமது வசம் இல்லாத நமது குடிசை பற்றியோ
எது பற்றியும்
அவை கவலை கொள்வதில்லை

மிருகங்கள் அலையும் இந்த நகரத்தில்
நான்
ஒரு பறக்கும் கனவை அடிக்கடி காண்கிறேன்
அது
பெருங்கடலில் தனித்தலையும்
குருவியினுடையதைப் போன்றது

(எஸ்.போஸ்  என்ற சந்திரபோஸ் சுதாகர், போஸ் நிஹாலே என்ற பெயரிலும் கவிதைகளை எழுதி வந்தவர். கவிஞனாக மட்டுமன்றிச் சஞ்சிகை ஆசிரியராகவும் இயங்கியவர். 16.04.2006 அன்று 'இனந்தெரியாத' ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கவிதை 2006 அக்டோபரில் வீரகேசரியில் பிரசுரமானது. நன்றி: வீரகேசரி)

Saturday, March 8, 2014

அறுபத்தைந்தாம் கலை



காலை ஆறு மணிக்கே அவன் வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் அவர். தெளிவான சிந்த னையுடனான எழுத்துப் பணிக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் அமைதியான காலை வேளை மிகவும் பொருத்தமானது. காலைத் தேனீரோடு எழுத்தையும் வாசிப்பையும் அவர் எட்டு மணி வரை மேற்கொண்ட பிறகுதான் அடுத்த வேலை களைக் கவனிக்கப் பழகியிருந்தார்.

அவனது வருகையால் அவருக்கு மிகவும் விருப்பமான அந்த இரண்டு மணிநேரம் இழக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண் டார். வீட்டுக்கு வந்தவரை வாசலில் நிறுத்த முடி யுமா? அவனை உள்ளே அழைத்தார்.

000

'நம்மால் கடந்த காலங்களில் கைவிடப் பட்டவற்றை மட்டுமே அருகிவரும் கலைகள் எனக் கருதி வருகிறோம். இந்தக் கருத்தே பிழையானது. ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப் படுகிறது. அவை என்னவென்று கூட நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை' என் றார் பேச்சாளர்.

'வசியக் கலை பற்றி நீங்கள் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறீர் கள். அது குறித்து நானும் பல விடயங்களைப் படித்திருக்கிறேன். இதற்கு மாந்திரீகம் என்றும் சொல்லப்படுகிறது. வாராந்திரிகளில் இக்கலையை அடிப்படையாகக் கொண்ட பல விளம்பரங்களை நீங்கள் பார்க்க முடியும். இந்த விடயத்தில் எனக்கும் ஓரளவு பரிச்சயம் உண்டு. இங்கேயிருக்கும் பெண்களில் யாராவது ஒருவர் முன்வருவாராக இருந்தால் நான் எனது பேச்சை முடித் துச் செல்லுகையில் அவரை என் பின்னால் வரச் செய்ய என் னால் இயலும்.'

வயதான பெண்கள் நான்கு பேர் ஆங்காங்கே உட்கார்ந்திருந் தார்கள். பேச்சாளரின் வயதொத்த முப்பது பேரளவில் ஆண்கள் அங்கி ருந்தார்கள். அவர்களில் சிலர் அப் பெண்களை ஒரு முறை சின்னச் சிரிப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். பேச்சாளரையே பார்த்தபடி இருபத்தேழு அல்லது முப்பது வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் தனியே பின்னால் அமர்ந்திருந்தான்.

சவால் விட்டு அவர் பின்னால் போக வேண்டி வந்தால் மானக் குறைவாகிவிடும் என்ற பயத்தில் அல்லது தனது பேச்சுக்குச் சுவையூட்டப் பேச்சாளர் குசும்புத்தனம் பண்ணுகிறார் என்ற என்ற எண்ணத்தில் எது வுமே காதில் விழாதது போல் பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.

'பேச்சாளரே அறுபத்தைந்து வயது தாண்டியவர், இவர் பின்னால் போய் என்னதான் ஆகப் போகிறது' என்ற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பேச்சாளர் தொடர்ந்தார்....

'அணிமா மகிமா இலகிமா
அரிய கரிமா பிராத்திமலப்
பிணிமா சுடையோர்க் கடைவரிய
பிராகா மியமீ சத்துவமெய்
துணிமா யோகர்க் கெளியவசித்
துவமென் றெட்டா மிவையுளக்கண்
மணிமா சறுத்தோர் விளையாட்டின்
வகையா மவற்றின் வகையுரைப்போம்'

என்று திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடல் சொல்வது என்ன? இந்தப் பாடல் அட்டமா சித்தி களைப் பற்றிப் பேசுகிறது. இந்த எட்டுச் சித்திகளும் மாபெரும் கலைகள். 'அணிமா' என்பது பூதவுடலை அணுப் போன்று சிறியதாக்குதல். 'மகிமா' என்பது உடலை மலை போன்று பெரிய தாக்குதல். 'இலகிமா' என்பது காற்றைப் போல இலகு வாக்குதல். 'கரிமா' என்பது பளுவாக்குதல். 'பிராப்தி' என்பது அனைத் தையும் ஆளுதல். 'வசித்துவம்' என்பது யாரையும் வசியப் படுத்துதல். 'பிராகாமியம்' என்பது கூடுவிட்டுக் கூடு பாய்தல். 'ஈசத்துவம்' என்பது விரும்பிய எதையும் செய்து அனுபவித்தல்.

இதிலே வசித்துவம் என்பதைத்தான் நான் முதலில் பேச்சுக்குச் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். தவிர வசியம் என்பதை நாம் இன்றும் நம்புகிறோம். இன்றைய மக்கள் சமூகம் அதைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் ஆசை. அடைய முடியாததை அல்லது சிரமப்பட்டு அடைய வேண்டியதை இலகுவாக அடைந்து விடும் பேராசை. வசியம் செய்வதாக இன்றும் பலர் பிரகடனப்படுத்திக் கொண்டு காசு பார்த்து வருகிறார்கள். அது சாத்தியப்படுகிறதா இல்லையா என்பதல்ல, எனது தலைப்புக்குரியது. இவ்வாறான அற்புதமான கலைகள் அன்று இருந்தன என்பதுதான்.'

இம்மாதிரித் தலைப்புக்களில் வெகு அபூர்வமாகவே உரைகள் இடம் பெறுகின்றன என்று அவனுக்குத் தோணியது. தன்னைத் தவிர இளைய வயதுக்காரர்கள் யாரும் இக்கூட்டத்துக்கு வருகை தராதது அவனுக்குக் கவலையாக இருந்தது.

அவர் தொடர்ந்தார்.

'பாருங்கள். எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைகள் இவை. இலகுவில் யாருக்கும் சித்திக்காதவை. இவற்றைப் பெற்றுக் கொள்ள மிகுந்த பிரயாசையும் அர்ப்பணிப்பும் தியாகமும் உழைப்பும் தேவை. சக்தி வாய்ந்த எதுவும் மிகச் சாதாரண மாக மனிதனுக்குக் கிடைத்துவிடுவதில்லை.

உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளக் கூடிய அற்புதமான சக்தியுள்ள கலைகள் இவை. பொறாமை, காழ்ப்பு ணர்வு, பேராசை மற்றும் எல்லாம் தன்வசமே இருக்க வேண் டும் என்கிற ஆதிக்கவுணர்வு ஆகியவற்றை அடியோடு அகற்றி விட்டுத்தான் இக்கலைகளைப் பெற்றுக் கொள்ளப் போராட வேண்டும். தனது புலன்களை அடக்கி ஒடுக்கி, புலன்களாலும் உணர்வுகளாலும் ஆட்டிப் படைக்கப் படாத மனதைப் பெற்றுக் கொண்டே இவற்றையடைய முயல வேண்டும்.'

அவன் கூட்டத்தின் பின்னாலிருந்து எழுந்து கையை உயர்த்தினான்.

பேச்சாளர், 'என்ன' என்பது போல் அவனைப் பார்த்தார்.

'புலன்களை அடக்கி விட்டு உலோகாயுத ஆசைகளை ஒழித்து விட்டு இக்கலைகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது?' அவன் கேட்டான்.

'நல்ல கேள்வி. நீங்கள் இன்னும் இன்றைய உலகத்தில் - ஆசை யும் வன்மமும் கொண்ட உலகத்தில் நின்றபடி இந்தக் கேள் வியைக் கேட்கிறீர்கள். இந்தக் கலைகளைப் பெற்றுக் கொள்வது பிறன் மனை நாடலுக்கோ, தனக்குப் பிடிக்காதவனை நோவினை செய்வதற்கோ, நாட்டை ஆள்வதற்கோ, உலகத்தின் செல்வங் களையெல்லாம் நாமே வைத்து அனுபவிப்பதற்கோ அல்ல.

தன்னலம் அறுத்து மற்றோருக்கு அன்பும் கருணையும் செய்வ தற்காக. அதுவே நித்தியமானது. உன்னதமிக்கது. சாஸ்வத மானது. மட்டற்ற சந்தோஷத்தைத் தருவது. ஆத்மாவின் அள விட முடியாப் பசியைத் தீர்க்க வல்லது.

குறுக்கு வழியில் மனிதன் இவற்றை அடைந்து விட முடியாது. அவ்வாறு உலோகாயுத சுய நன்மைகளுக்காகக் குறுகிய வழியில் இவற்றைப் பெற முடியுமாக இருந்தால் பலரும் இவற்றை அடை யப் பெற்றிருப்பார்கள். எல்லோரும் குட்டிக் கடவுள்களாக உலா வருவார்கள். அப்படியானால் இன்றை மனித குலத்தின் கதி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.'

அவன் அமர்ந்தான். பேச்சாளர் தொடர்ந்தார்.

'இந்தக் கலைகளில் வசியக் கலை பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்பதால் அதைப்பற்றிப் பேசுவது ஓர் அற்ப எதிர் பார்ப்பை மனதுக்குள் ஏற்படுத்தக் கூடியது. நம்மால் செய்யச் சாத்தியப்படாததை நாம் யார் மூலமாவது பெற்றுக் கொள்ள விழைகிறோம். இதனால் இக்கலையின் பெயரால் பலர் ஏமாற்றப் படுகிறார்கள். நான் முன்னர் குறிப்பிட்ட மற்றைய கலைகளைக் கொண்டு யாரையும் ஏமாற்ற முடியாது. அவை மக்கள் கண் முன்னே நேரடியாகச் செய்துகாட்ட வேண்டிவை என்பதால் இவற்றைப் பற்றிப் பேசுவாரில்லை.

தாயுமான சுவாமிகளின் பாடல் ஒன்றை இந்த இடத்தில் நான் எடுத்தாள விரும்புகிறேன். அவர் சொல்லும் விடயங்களை அவதானியுங்கள்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒருசிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத் தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்திலும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே!

இங்கே குறிப்பிடப்படுகின்ற செயல்கள் எவையும் வெறுங் கற்ப னைகள் அல்ல. ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதும் இவற்றில் ஏதாவது ஒன்று வெகு அபூர்வமாக நடந்து கொண்டிருக்கலாம். நமது கண்காணா இடத்தில் சித்தர்களும் யோகிகளும் தமது புலன் அடக்கியாளும் வல்லமையால் இவற்றை அடைந் திருக்கலாம்.

பிராகாமியம் என்ற கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஒரு சுவாரஸ்யமான விடயமாக இருக்கிறது. இறந்த ஒரு உடலில் தனது ஆத்மா வையும் உயிரையும் உட்புகுத்தி நடமாடுவதைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று அழைக்கிறார்கள். திருமூல நாயனார் கூடு விட்டுக் கூடுபாய்ந்தார் என்று வரலாறு சொல்கிறது.'

Sunday, February 23, 2014

குண்டுச் சட்டிக்குள் குதிரைகள் ஓடும் கும்பகோண மாநாடு!


பகுதி - 01

இம்மாநாடு பற்றிய எனது முகநூல் குறிப்பைக் கடந்த வார தினகரன் வார மஞ்சரி பிரசுரித்திருந்ததையடுத்துச் சில நண்பர்கள் இதுபற்றிய உங்கள் கருத்தை எழுத  வேண்டும் என்று வைத்த வேண்டுகோளுக்கமைய இதனை எழுதுகிறேன்.

இஸ்லாமிய இலக்கியக் கழகமே உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தி வந்தது. 1999 வரை செய்யிது முகம்மது ஹஸன் போன்ற பெருந்தகைகள் உயிருடன் இருந்தவரை எல்லாம் சுபமாகவே இருந்தது. அம்மாநாடுகளில் ஓர் ஆலோசகர் வட்டத்தில்தான் கவிக்கோ வைக்கப்பட்டிருந்தார்.

2007 மாநாடு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திலேயே நடத்தப்பட்டது. சரியாக இயங்கி வந்த இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அதிகாரத்தைக் கவிக்கோவும், இதாயத்துல்லா என்கிற காங்கிரஸ் அரசியல்வாதியும் தனிப்பட்ட கனவுகளோடு நுழைந்து கைப்பற்றினர். திமுகவும் காங்கிரஸூம் கூட்டணியில் இருந்த காலம் அது. இதாயத்துல்லாவுக்கு ஒரு நாடாளுமன்றக் கதிரைக் கனவு இருந்தது. கவிக்கோவுக்கு ஒரு சட்டசபை அங்கத்தவர் கனவு. இப்படித்தான் தமிழகத்தில் சந்தித்த நண்பர்களது கருத்தையும் மாநாடு சென்ற போக்கையும் அவதானித்து என்னால் முடிவுக்கு வரமுடிந்தது.

இதாயத்துல்லாவின் கனவில் மண் விழுந்தது. கவிக்கோவின் பாதிக் கனவு நிறைவேறிற்று. அம்மாநாட்டின் பின் வக்ஃ;ப் சபைக்குத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். உள்ளே கச்சேரி குழம்பியது. 'இனிமேல் மாநில மாநாடுதான், உலக மாநாடு இல்லை' என்று அறிவிப்பு வந்தது. ஒன்றோ இரண்டு மாநில மாநாடுகள் நடைபெற்றன. மீண்டும் இஸ்லாமிய இலக்கியக் கழகம் கூடியது. இதாயத்துல்லா வெளியேற்றப்பட்டார். கும்பகோண மாநில மாநாடு அறிவிக்கப்பட்டது.

என்னுடைய அறிவுக்கும் கணிப்புக்கும் எட்டியவரை இஸ்லாமிய இலக்கியம் சார் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களான இலங்கையராக டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன், மானா மக்கீன், எஸ்.முத்துமீரான் ஆகிய மூவரைத்தான் குறிப்பிட முடியும்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அதிகாரத்தைக் கையில் எடுத்தக் கொண்டதும் கடந்த காலங்களில் தமது சொந்தப் பணம், நேரம் என்று பாராது செலவழித்து அர்ப்பணிப்புடன் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தத் துணை நின்ற தமிழகத்தவர்களையே கூடக் கவிக்கோ கழட்டித்தான் விட்டிருந்தார். 2007ல் கழகத்தின் முன்னாள் பொருளாளர்; ஹாஜி. ஏ.வி.எம். ஜாபர்தீன் அவர்களைத் தூரப்படுத்தி வெற்றுக் காசோலையில் கையெழுத்துக் கேட்ட கதைகள் எல்லாம் உள்ளன.

எனவே, அனுபவசாலிகளைத் தூரப்படுத்தி விட்டுத் தம்முன்னால் நான்காக, ஐந்தாக மடிந்து, பணிந்து நிற்பவர்களை கவிக்கோ இணைத்துக் கொள்ள நினைத்திருக்கலாம்.

2007ல் வெளிநாட்டுப் பேராளர்களுக்கு ஏற்பட்ட அவமரியைதை காரணமாகத் தனக்கு வழங்கப்படவிருந்த கௌரவத்தையும் விருதையும் பெற்றுக் கொள்ளாமல் வெளியேறியவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன். இதைக் கவிக்கோ மனதில் கொண்டு அவரை அழைக்காமலும் இணைப்பாளராக்காமலும் தவிர்த்திருக்கலாம் என்றே கருதுகிறறேன்.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று உணர்கிறேன். இலக்கிய உலகில் காப்பியங்களுக்கென்று எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. இன்றைய தலைமுறைக்கு அது ஒவ்வாது போனாலும் கூட காப்பியங்களே மொழியில் செல்வங்களாக மொழி அறிஞர்கள் மத்தியில் கருதப்படுகின்றன. இன்றைய நிலையில் தமிழில் பத்துக் காப்பியங்களை எழுதிய உயிர்வாழும் ஒரேயொரு ஜீவன் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மட்டுமே. கவிக்கோ 'பாலை நிலா' என்று ஒரு காப்பியத்தைத் துவங்கி 15 வருடங்களாக இன்னும்தான் எழுதுகிறார். 2002ம் ஆண்டு எமது மாநாட்டு மலரில் அக்காப்பியத்தின் முகவுரைப் பகுதி இடம்பெற்றிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு புத்தகச் சந்தை விழாவில் அதன் ஓர் அத்தியாயம் வெளியானது. இந்த மாநாட்டிலும் அதே 'ட்ரெயிலர்' ஓட்டப்பட இருப்பதாகத்தான் அறிய வருகிறேன். எனவே ஜின்னாஹ்வின் காப்பியத் தகுதி அவருக்கு உள்ளார்ந்த ஒரு உறுத்தலாக இருக்கலாம் என்றும் எண்ண இடமுண்டு.

கவிக்கோவையே குறை சொல்வதா என்று சிலருக்கு வியப்பு வரக்கூடும். சிலர் என்னையே ஒரு கிண்டல் பார்வை பார்க்கக் கூடும். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், கண்ணியமான பதவியில் இருப்பவன் சுயநலவாதியாக இருக்கமாட்டான், ஓர் ஆலிம் அல்லது வசதிபடைத்தவன் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பழக்கப்பட்டுப் போன சமூகத்திலிருந்து இந்தச் சிந்தனைகள் எழுவது வெகு சாதாரண விடயமே. விமர்சிப்பது என்றால் பேசக் கூசும் வார்த்தையில் அரசியலவாதிகளை மட்டுமே திட்டிப் பழகிப்போனவர்கள் நாம். அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய 'முக்கியத்துவம் பெற்றவர்கள்' அனைவரும் புனிதர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களும் தம்மை சமூகத்தின் மத்தியில் அவ்வாறுதான் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் பிராந்தியங்களில் நடக்கும் மாநாடுகள் இரண்டு நிர்வாகங்களின் கீழ் இயங்குகின்றன. ஒன்று இலக்கியக் கழகங்கள். மற்றது, மாநாடு நடத்தும் பிரதேச முக்கியஸ்ர்களும் பிரதேசத்தவரும். பிரதேசத்தவரே பணத்தை வழங்குகிறார்கள்.  இலக்கியக் கழகங்கள் ஏனைய செயற்பாட்டில் ஈடுபடுகின்றன.

கும்பகோணத்தில் நடக்கும் பிராந்திய மாநாட்டுக்கு இங்கே ஓர் இணைப்பாளரை நியமித்து 15 பேரை அழைத்து வாருங்கள் என்று கூறுவதைத் தப்பாகக் கொள்ள முடியாது. ஆனால் அது உலக மாநாடாக மாற்றிய பிறகு இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களைக் கட்டுப்படுத்த முயல்வது மிகவும் தவறானது. பெருந்தொகையினரைச் சமாளிக்க வக்கற்றவர்கள் எதற்காக உலக மாநாடு நடத்த ஆசைப்பட வேண்டும்?

இதை இலங்கை இணைப்பாளர் கும்பகோணத்தாரிடம் கேட்டிருக்க வேண்டும். உலக மாநாடாக மாற்றிய பிறகு குறைந்தது 50 பேராவது பங்குபற்றக் கோரியிருக்க வேண்டும். மறுத்திருந்தால் 'நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள்' என்று சொல்லி விட்டிருக்க வேண்டும். 'உமக்கும் நீர் சிபார்சு செய்யும் நால்வருக்கும் பொன்னாடை, விருது' என்ற வார்த்தைகளுக்கு மயங்கிப் போவதால்தான் இவ்வாறான இலக்கியச் சீரழிவும் கேவலமும் ஏற்படுகின்றன. ஒரு பொன்னாடையையும் விருதையும் காட்டினால் எப்படி வேண்டுமானாலும் இவர்களை மேய்க்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள்.

இலங்கையர் புறப்பட்டுச் செல்ல ஒரு மாதத்தின் முன்னரே இது உலக மாநாடு என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. எந்த மாநாடாக இருந்தாலும் இணைப்பாளர் இதுபற்றிய அறிவித்தலை பொது ஊடகங்களுக்குத் தந்திருக்க வேண்டும். யாருக்கும் தெரியாமல் தானும் தனக்குப் பிடித்தவர்களும் சென்று இலங்கையின் இஸ்லாமிய இலக்கியத்தைப் பிரதிநிதிப்படுத்துவது தர்மமானதா?

இது வரை இலங்கைக்கு வெளியில் நடந்த மூன்று மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரேயொரு மாநாட்டில் மட்டுமே கவிதை வாசித்திருக்கிறேன். இலங்கையில் நடந்த மாநாட்டின் செயலாளராகச் செயற்பட்ட போதும் கவிதை படிக்கவோ ஓர் அரங்குத் தலைமை வகிக்கவோ ஆசைப்பட்டதில்லை. ஒரு முறை நமக்குக் கிடைத்த வாய்ப்பு மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மலேசிய மாநாடு பற்றி நான் விமர்சிக்காமல் இருந்திருந்தால்  நஜ்முல் ஹூஸைனுக்கும் பொத்துவில் அஸ்மினுக்கும் கவிதை படிக்கும் வாய்ப்புக் கிட்டியிராது. காயல்பட்டின மாநாட்டின் இணைப்பாளர்களான ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் மானா மக்கீனும், பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஏ.இக்பால் அவர்களைச் சிபார்சு செய்து அவருடைய 'தமிழ்மாமணி' விருதைப் பெற்று வந்த இங்கே கையளித்தார்கள்.

இரண்டு தினங்களாக கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் புகைப்படமொன்றை இணையத்தில் தேடினேன். கவிஞர் திலகம், ஆசிரியர் திலகம் என்றெல்லாம் பெயர் பெற்ற அதிசிறந்த ஒரு கவிஞனின் ஒரு முன்னோடியின், ஓர் உண்மையான அறிஞனின்,பல நூல்களை எழுதிய ஒரு பெருந்தகையின் இணையத்தில் இல்லை என்றதும் பெரும் கவலை மனதில் குடிகொண்டது.

ஆனால் யாரோ எழுதிய பாட்டுக்களைத் தொகுப்புப் போட்டவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்ற ஹோதாவில் எல்லா மாநாடுகளிலும் தம்மை முற்படுத்திக் கொண்டு பாராட்டுப் பெறவும் அரங்கத் தலைமை வகிக்கவும் பொன்னாடை போர்த்திக் கொள்ளவும் யாருக்கும் தெரியாமல் பின் கதவுகளுக்குள்ளால் ஓடிப் புகுந்து கொள்கிறார்கள். மற்றொருவருக்கு வாய்ப்புக் கிடைக்க விடாமல்  தாமே ஆய்வரங்குகளில்  தலைமை வகிக்க விரும்புகிறார்கள். வெளியிலே பெரும் கண்ணியவான்களாகத் தெரியும் சிலரின் உள்ளார்ந்த ஆசைகள் எத்தனை கேவலமானதாக இருக்கிறது என்பதற்கு ஆகக் குறைந்தது இவ்வாறான விழாச் செய்திகளையாவது வெளியில் விடாமல் அடக்கி வைக்கிறார்கள், அதற்குத் துணை செல்கிறார்கள் என்பதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ஒரு சிலரின் 'பொன்னாடை, விருது' என்றே மாறிப்போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தக் கேவலங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இளைய தலைமுறை வெறுத்துப் போயிருக்கிறது. அவர்கள் மாற்றங்களை விரும்புகிறார்கள். தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் பத்து அல்லது பதினைந்து வீதமளவே மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் பொது இலக்கியப் போக்குகளுடன் ஓரளவாவது இணைந்து போகாமலும் அவற்றில் ஐம்பது வீதமாவது புதிய தலைமுறையைச் சேர்த்துக் கொள்ளாமலும் தொடர்ந்து இருட்டுக்குள் கூடி குருட்டுக் கோழி பிடித்துக் கொண்டிருப்பின் ஒரு கட்டத்தில் வேடிக்கையும் விநோதமும் மிகுந்த கற்காலக் கூட்டமாகவே எதிர்கால வரலாறு நம்மைப் பதிவு செய்யும்.

கடந்த 16, மற்றும் இன்று 23 - 02 - 2014 ஆகிய தினங்களில் வெளியான தினகரன் பத்திரிகையில் இடம் பெற்ற எனது கருத்துப் பதிவு.

குறிப்பு - இது முழுமையான கட்டுரை. ஆனால் இம்மாநாடு பற்றிய மற்றொரு தொகுப்பு எனது வலைத் தளத்தில் விரைவில் பதிவேற்றப்படும். அதற்காகவே பகுதி - 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Saturday, February 22, 2014

ஸ்ரீதர் என்றொரு சீர்மிகு கலைஞன்!


ஸ்ரீதர் பிச்சையப்பா நம்மை விட்டுப் பிரிந்து நான் கு ஆண்டுகள் கழிந்து விட்டன. நண்பர் டிரோன் பெர்னாண்டோ முகநூலில் நினைவு படுத்தியிருக்கவில்லையெனில் இவ்வாண்டின் மறைவு தினம் எல்லோருக்கும் மறந்துதான் போயிருக்கும்.

ஸ்ரீதருக்கும் எனக்குமான நட்பு முகம் காணாத நிலையில் எழுபதுகளின் பிற்பகுதியில் நிகழ்கிறது.

புதுக்கவிதை சிறகு கட்டிப் பறந்த காலம் அது. மேமன் கவியும் ஸ்ரீதரும் சேர்ந்து ஒரு கவிதைச் சிற்றிதழ் வெளியிட இருப்பதாக ஒரு செய்தி பத்திரிகையில் படித்து, நானும் சில வரிகளை ஒரு போஸ்கார்ட்டில் எழுதி அனுப்பியிருந்தேன். அந்த இதழ் வரவே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

1985ம் ஆண்டு கொழும்பில் அவனை முதன் முதலாகச் சந்திக்கிறேன். 'உன் போஸ்ட் கார்ட் இன்னும் நினைவிருக்கிறது, அதற்குக் காரணம் உனது எழுத்து அழகு!' என்று சொன்னான். எண்பதுகளின் எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக் கலையரங்கில் நடந்த ஒரு சுவையான தமிழ் நிகழ்ச்சியில் மரிக்கார் ராம்தாஸூடன் ஒரு கும்மாளம் நடத்தினான். அன்று ஒரு மேளகாரனாக அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் அவன் நடித்ததைப் பார்த்த போது அவன் பிறந்திருக்க வேண்டியது இங்கு அல்ல என்று என் மனது சொன்னது.

ஓவியத்தில் அவனுக்கு இருந்த ஈடுபாடு போல் கவிதையிலும் இருந்தது. எந்த இடத்தில் சந்திக்க நேர்ந்தாலும் தனியே இழுத்துக் கொண்டு போய் இந்தக் கவிதை வரியைக் கேளு என்று சொல்லிக் காட்டுவான். அதே போல எனது கவிதை வரிகள் பிடித்திருந்தாலும் சொல்வான். 'கிணற்றுக்குள் இருப்பவர்கள்' என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கற்பனையை வென் வெகுவாகச் சிலாகித்தான். அவன் கவிதைகள் எழுதியிருக்கக் கூடும் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அவற்றை யாருக்கும் காட்டினானா என்பது தெரியவில்லை.

2000 மாம் ஆண்டு 'யாத்ரா' முதலாவது இதழ் வெளியீட்டில் கலந்து கொண்டான். ஏக்கலயில் இருந்த அவனது வீட்டுக்குச் சென்று அவனது ஓவியங்கள் சிலதை பலாத்காரமாகப் பறித்துக் கொண்டு வந்து யாத்ராவில் பிரசுரித்தேன்.

'யாத்ரா - 6'ல் அவனைப் பற்றி கவிஞர் அல் அஸூமத் எழுதிய நடைப்பாவிலிருந்து மூன்று அடிகளைப் பிரசுரித்தேன். தமிழக ஓலியர் விஸ்வம் வரைந்த அவனுடைய கோட்டோவியத்தை மட்டும் தனியொரு பக்கத்தில் இடம்பெறச் செய்தேன். கவிஞர் அஸூமத் எழுதிய அந்த நடைப்பா பகுதிகள் இவை:-

கண்ணுமேல நிக்காம கழண்டுபோயி மூக்குக்கு
முன்னால வழுக்கிவாற முசுப்பாத்திக் கண்ணாடி
ரெண்டுவயல் மீசைதாடி ரஸ்தியாதித் தலைமயிரு
கண்டவாட்டம் சுத்திவர்ர கால்ரெண்டு கைரெண்டு
கழுத்தையே அறுக்கிறதாக் கால்கால்னு வாயொன்னு
சுளுக்காத கண்ணுஜோடி சுத்தமான பொந்துமூக்கு
மைக்கேலு ஜக்ஸன்னு மனுஷிபோல் ஆடுவானே
ஐக்கியமாக் கொட்டமால அவென்மாதிரிப் போட்டிருப்பான்
சாவியொன்னும் அடுத்தாப்ல சங்கிலீல தொங்கீடும்
காவிமட்டும் கட்டீட்டாக் கச்சிதமா சந்நியாசி!

ஃப்ரீயாவே திரியிறவன் ஃப்ரீதரு பிச்சாஸோ
சுரீருன்னு சிரிக்காட்டிச் சுள்ளுன்னு தொணதொணப்பான்
றோட்லஒரு துண்டையும் றோலாக உடமாட்டான்
பாட்லஒரு துண்டையாச்சும் பாடாம உடமாட்டான்
சகலரையும் மொறவச்சிச் சட்டசேப்ல வச்சிருப்பான்
பகலெல்லாம் ஊருசுத்திப் பரிகாசம் பண்ணீட்டு
ராத்திரியில் ஊடுவந்து லைன்லைனாக் கோடிழுப்பான்
பாத்தம்னா பண்டாரம்! பாக்கலைன்னா பெருங்கலைஞ்சன்!

நாடகமும் நடிச்சுக்குவான் நையாண்டி பண்ணிக்குவான்
மேடைலயும் கவிதைன்னு வெடவெடப்பான் வந்து நின்னு
புளிமாங்காய் தேங்காய்லாம் புரியல்லன்னு பொலம்பிக்குவான்
முழியுருட்டி எழுதினத மூக்கிலயே வாசிப்பான்
புதுக்கவித மரபுன்னு பூச்சாண்டி புடிக்கமாட்டான்
எதுவருதோ அதையெழுதி எல்லாரையுங் கலங்கடிப்பான்
செலசமயம் என்னென்னமோ சீரியாசா வாசிப்பான்
செலசமயம் எப்படியுஞ் சிரிங்கடான்னு வாசிப்பான்
நாமயாருஞ் சிரிக்காட்டி நறுக்குன்னு அவஞ்சிரிப்பான்
நாமபின்ன அதப்பாத்து நல்லாவே சிரிச்சிடுவோம்!

கவிஞர் அல் அஸூமத்தை அவன் அப்பா என்றுதான் அழைப்பான். அவனைப் பற்றிய தகவல்கள் அவரிடமும் நிறைய உண்டு என்று நினைக்கிறேன்.

அவன் வெறுமனே ஒரு வித்தைகாட்டும் பபூன் என்றுதான் அநேகர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவன் ஓயாத வாசிப்புக் கொண்ட அறிவாளி என்பது அவனை நன்கு அறிந்தோருக்கு மட்டுமே தெரியும். பல்துறைத் திறமைகள் அவனிடம் இருந்த போதும் வெகு சாதாரணமாகவே நடமாடுவான். எப்போதும் எளிமையாகவே தோற்றந் தருவான். நகைச்சுவை அவனுக்கு கைவந்த கலை.

வானொலி நாடகம் ஒன்றை நடித்து விட்டு வந்த அவனை ஒருநாள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தாழ்வாரத்தில் கண்டேன். “இங்கே வா.. ஒரு விசயம் சொல்லவேணும்” என்றான். இப்பதான் நாடகம் முடிச்சிட்டு வர்ரேன். எம்பேர எனவுன்ஸ் பண்ணின... (அறிவிப்பாளர் பெயர்) ஏம் பேர பிச்ச்ச்ச்ச்சயப்ப்பான்னு பிச்சி எடுத்துட்டான்டா! என்றான்.

2008ல் எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அவனை இரண்டொரு வார்த்தைகள் பேச வைக்க ஆசைப்பட்டேன். நானும் கவிஞர் அல் அஸூமத்தும் அவனைத் தேடி இரண்டாவது முறை சென்போதே அவனைக் கண்டு பிடித்தோம். ஒரு மாலை நேரம் கட்டிலில் சாய்ந்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தான். வழமைபோல கவிதை சொன்னான். நகைச்சுவை சொன்னான். ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் அவனுடன் பேசிக் கொண்டிருந்தோம். வருவேன் என்று வாக்குறுதி தா என்று நின்றேன். வருவேன் என்றான். ஆனால் அவன் வரவில்லை.

கோபத்துடன்தானிருந்தேன். அவனைச் சந்தித்த அடுத்த கணம் அந்தக் கோபத்தை இல்லாதாக்கும் மந்திரம் அவனிடம் இருந்ததையும் அறிவேன். அதன் பிறகு அவனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் மேமன் கவியிடமிருந்து அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

'ஸ்ரீதர் போய் விட்டான்!'

அவனுடைய ரசிகர் வட்டமும் நட்பு வட்டமும் மிகப் பெரியது. ஆனால் பெரிதாக இருக்கவேண்டிய அவனது வாழ்க்கை வட்டத்தை அவனே மிகச் சிறியதாக மாற்றிக் கொண்டு போய்விட்டான்!