Monday, November 2, 2015

மாட்டு இறைச்சியும் மனித நேயமும் !


- பேராசிரியர் கலாநிதி சேமுமு. முகமதலி -

டெல்லிக்கு அருகே உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி தாலுகாவில் உள்ளது பிசோதா எனும் கிராமம். யாரோ பசுவைக் குர்பானி கொடுத்துவிட்டு அதன் இறைச்சியை முஹம்மது அஹ்லாக் என்பவரிடம் கொடுத்ததாகவும் அவர் அதை ஃபிரிஜ்ஜில் வைத்துச் சாப்பிடுவதாகவும் கிராமத்தில் வதந்தி கிளப்பிவிடப்பட்டது. உண்மையில் அவர் ஃபிரிஜ்ஜில் வைத்திருந்தது ஆட்டிறைச்சியே ஆகும்.

இந்துத்துவத் தீவிரவாதிகள் அவரது வீட்டில் திடீரெனப் புகுந்து தாக்கியதில் 58 வயதான அஹ்லாக் அதே இடத்தில் ஷஹீதானார். அவரது 70 வயது தாய் அஸ்ஹரி, 52 வயதான மனைவி இக்ரமன், 21 வயது இளைய மகன் தானிஷ், 16 வயது மகள் ஷாஹிஸ்தா ஆகியோர் காயமுற்றனர். தானிஷ் படுகாயமுற்றுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

முஹம்மது அஹ்லாக்கை உயிர்போகும் வரை அடித்துக் கொன்று உடலை அவரது வீட்டிற்கு முன் போட்டுச் சென்ற கூட்டம், பயந்து குளியலறையில் பதுங்கியிருந்த 70 வயது தாயையும் விட்டுவைக்கவில்லை. தாழ்ப்பாளை உடைத்துவிட்டுத் தாக்கிச் சென்றுள்ளனர்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் முஹம்மது அஹ்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் இந்திய இராணுவப் படையில் சேர்ந்து சென்னை முகாமில் பணியாற்றுகிறார். இந்திய நாட்டிற்காகத் தம் மகனையே அர்ப்பணிப்பு உள்ளத்தோடு இராணுவத்திற்கு அனுப்பிய முஹம்மது அஹ்லாக்கின் நாட்டுப் பற்றுக்குக் கிடைத்த பரிசு இந்துத்துவத் தீவிரவாதிகள் அளித்த உயிர்க்கொலை !

இச்சம்பவத்தையொட்டிப் பல இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகளான பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதையும் முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவோரைக் கொலை செய்ய வேண்டுமென்றும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாட்டிறைச்சி உண்பவருக்கு இதுவே தண்டனை என்று சாத்வி கூறியுள்ளார். அஜய் சிங் என்பவர் இது இந்துக்கள் நாடு என்பதை மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். பிஜேபியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சக்‌ஷி மஹராஜ் பசுவைக் கொல்வோரைக் கொல்லத் தயாராகுங்கள் என்று சொல்கிறார்.
முன் நடந்த ஆட்சிகளின் போதெல்லாம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தவர்கள் மோடி ஆட்சியில் தலைவிரித்துப் பகிரங்கமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மைநிலை. இது குறித்துக் குடியரசுத் தலைவரே மறைமுகமான கருத்தை வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை விதிக்க வேண்டும், மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவது முற்றிலும் தடைவிதிக்க வேண்டுமென்று கூறும் இந்துத்துவத் தீவிரவாதிகள் உண்மைநிலையை மறந்துவிட்டார்கள் என்பது வருத்தம் தருவதாகும். ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்பதாக முடிவு செய்துகொண்டு மதத் துவேஷ வேகத்தில் பேசுகின்றார்கள். மத வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகத்தில் மிக மிக அதிகமாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் கிறிஸ்தவர்களும் யூதர்களுமே ஆவரென்பதே உண்மையாகும். இந்தியாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாழும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் தலித்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சியே ஆகும்.
முதன் முதலாகக் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் சிந்து நதி தீரத்தில் தங்கியிருந்த ஆரியர்களின் முக்கிய உணவே மாட்டிறைச்சியாக இருந்திருக்கிறது. எந்தவோர் இந்து வேதமோ, சாஸ்திரங்களோ மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவில்லை. இன்னும் கூறப்போனால் இந்துக்களின் முக்கியக் கடவுளான இந்திரன் மாட்டிறைச்சியை விரும்பி உண்பதாகவும் அதனால் அந்தக் கடவுளுக்கு மாட்டிறைச்சியே படைக்கப்படுவதாகவுமே கூறப்படுகிறது. அக்னி என்னும் கடவுளுக்கும் மாட்டிறைச்சியே படைக்கப்படுகிறது. மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட பழமையான பல வேத நூல்களில் மாட்டிறைச்சி உண்ணப்பட்ட செய்திகள் பல காணக் கிடைக்கின்றன.

வேதக் காலத்தில் 250 விலங்குகளில் 50 விலங்குகள் உண்ணவும், பலிகொடுக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பசு மற்றும் காளையும் அடங்கியுள்ளன. அக்னி கடவுளுக்குப் பசு பலியிடப்பட்டுள்ளது. மஹா பாரதத்தில் ரந்திதேவன் என்பவன் பிராமணர்களுக்குத் தானியங்களும் மாட்டிறைச்சியும் தானமாகத் தந்துள்ளான். தைத்ரிய பிராமண் பசுவே உணவு எனச் சொல்கிறது. யஜ்னவாக்யா இளம் பசுவின் உணவை உண்ண எடுத்துரைக்கிறது. மிக முக்கிய நூலான மனுஸ்மிருதி மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்கவில்லை. ரிக் மற்றும் அதர்வண வேதங்களில் பிராமணர்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது அதிகமாக இருந்த செய்தி கூறப்படுகிறது.

மாட்டிறைச்சி சூப் பல வியாதிகளைக் குணப்படுத்துகிறது. பசுவின் கொழுப்பு மூட்டுவலிகளுக்கு மிக நல்லது என்று சரக் சம்ஹிதா எனும் வேதநூல் கூறுகிறது. மேகதாவில் குடதந்தா எனும் பிராமணரே மாடுகளைப் பலிகொடுத்து வந்த செய்தி காணப்படுகிறது.

புத்த மதத்தைத் தழுவிய அசோகர் சைவமாக மாறிவிடவில்லை. அவரது உணவில் மாட்டிறைச்சியும் இருக்கவே செய்தது. ஆக இன்றைக்கும் இந்தியாவில் வாழும் இந்துக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மாட்டிறைச்சி உண்போர் இருக்கிறார்கள் என்பதே நடப்பு உண்மையாகும். பாபர், அக்பர், ஜஹாங்கீர், அஹமது ஷா முதலிய முகலாய மன்னர்களின் ஆட்சியின்போதும், ஹைதர் அலி, திப்புசுல்தான் போன்றோரின் ஆட்சியின் போதும் இந்து மதத்தினரின் உணர்வை மதிக்கும் வகையில் பசுவைக் கொல்வது கூடாதெனத் தடுக்கப்பட்டிருந்தது என்பதை இந்துத்துவத் தீவிரவாதிகள் மறந்துவிட்டனர் அல்லது வேண்டுமென்றே மறைத்துவிட்டனர். முதன் முதலில் இந்தியாவில் 1760 இல் மாடு அறுப்பதற்கு என்றே தனி இடத்தைத் தோற்றுவித்தவர் இராபர்ட் கிளைவ் எனும் ஆங்கிலேயர்தான். அன்றைக்கு அவர் தொடங்கி வைத்ததன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்தியாவில் சுமார் 36,000 மாடு அறுக்கும் இடங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்தியாவில் மாடு அறுப்பதற்கோ மாட்டிறைச்சி உண்பதற்கோ தேசிய அளவில் எந்தவொரு பொதுச் சட்டமும் இல்லை. 24 மாநிலங்களில் வேறு வேறு வகையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, குஜராத், டில்லி, பீஹார், ஆந்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பசு மாட்டை அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தான், பஞ்சாப் முதலிய மாநிலங்களில் எந்த ஒரு மாட்டையும் அறுக்கத் தடை உள்ளது. மேற்கு வங்காளத்தில் மாட்டை அறுப்பதற்கான சான்றிதழ் பெற்று மாட்டை அறுக்கலாம்.

72 வகை சாதி மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி விளங்கும் மாநிலமான கேரளா, மணிப்பூர், மிஜோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் எந்தவிதச் சான்றிதழும் இல்லாமலேயே அனைத்து வகை மாடுகளையும் அறுக்கலாம்.

இந்தியாவில் ஏறக்குறைய 300 மில்லியன் மாடுகள் இருக்கின்றன. ஆனால் அவை மேய்வதற்கோ 190 மில்லியன் ஹெக்டேர் நிலங்களே உள்ளன. மேய்ச்சல் நிலங்கள் குறைவாகவும் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கின்றன. 80 மில்லியன் மாடுகள் வயதானவையாகவும், குட்டி ஈன்றெடுக்க இயலாதவையாகவும் உள்ளன. பசியிலும் நோயிலும் சாகும் நிலையில் பல மில்லியன் மாடுகள் இருக்கின்றன. அதிலும் மாடுகளில் ஆண் இனம் வெகுவாகக் குறைந்து வருகிறது. பெண் இனம் அதிகரித்து வருகிறது இன்று 6 பெண்மாடுகளுக்கு ஓர் ஆண் மாடுதான் உள்ளதெனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆகவே இன்றுள்ள சூழலில் எந்த இன மாடுகளை இறைச்சிக்காகப் பயன்படுத்த வேண்டி உள்ளதென்பது சிந்திக்கத் தகுந்ததாகும்.
இத்தகைய நிலையில்தான் உலக நாடுகளில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிறது. வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் கடந்த ஆண்டு வரை இந்தியாதான் முதலிடம் வகித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 4.8 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. மாடுகளை அறுக்கக்கூடாதெனும் இந்துத்துவத் தீவிரவாதிகளின் கருத்தை ஏற்று மோடி அதனைத் தடை செய்து இத்தகைய பெரும் வருமானத்தை இழக்க வைத்து இன்னும் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதாளத்திற்குள் வீழ்த்துவாரா என்பது பில்லியன் டாலர் கேள்வியாகும்.

வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் ஆறு நிறுவனங்களில் நான்கு இந்துக்களால் நடத்தப்படுபவையாகும். மும்பை-400021, செம்பூர், ஜாலி மேக்கர்ஸ் 92 இல் உள்ள அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் சதீஸ் மற்றும் அதுல் சபர்வால் ஆவார்கள். மும்பை-400001, ஓவர்சீஸ், ரஷ்யன் மேன்ஷனில் இயங்கும் அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சொந்தக்காரர் சுனில் கபூர் ஆவார். புதுதில்லி-110001, ஜன்பத், எம்.ஜி. ரோட்டில் உள்ள எம்.கே. ஆர் ஃப்ரோஸன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன் அபாத் ஆவார். சண்டிகார் -160022, செக்டார் 34-ஏ, எஸ்சிஓ 62-63 இலக்கத்தில் இயங்கி வரும் பி.எம்.எல். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எஸ். பிந்த்ரா ஆவார். மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து மிகப் பெரிய இலாபம் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள் யாரென்று இப்போது புரிந்துகொள்ளலாம்.

மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்ல, மதத்துவேஷத்தின் அடிப்படையிலே இந்துத்துவத் தீவிரவாதிகள் மாட்டிறைச்சிப் பிரச்சனையை அரசியல் இலாபம் கருதிச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். மாட்டிறைச்சியைப் பிரச்சனையாக்கிக் கலவரத்தைத் தூண்டுவதென்பது இது முதன்முறையல்ல. 1870 இல் சிக் குகா எனும் நம்தாரி இனத்தவர் பசுவைக் காத்தல் எனும் பெயரால் கலவரத்தில் இறங்கினர். 1882 இல் தயானந்த சரஸ்வதி என்பவர் கோரக்‌ஷினி சபா என்ற ஒன்றை ஏற்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். 1880-90 களில் இந்தியாவில் பல இனக்கலவரங்கள் நடந்துள்ளன. ஆஸம்கார் (1893), அயோத்யா (1912), ஷஹாபாத் (1917) முதலிய இடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. ஆகவே மாட்டிறைச்சி பிரச்சனை இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே இந்துத்துவத் தீவிரவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுதந்திரத்திற்குப் பின்னரும் அவ்வப்போது இப்பிரச்சனை தலைதூக்க முயன்றுள்ளது. ஆனால் இப்போதோ எப்போதுமில்லாத அளவிற்குத் தலை விரித்தாடுகிறது.

2005 பிப்ரவரியில் ஜுனகாத் ஸ்வாமிநாராயண் கோயில் சாமியாக பக்தி ஸ்வரூப் மற்றும் அவரைச் சார்ந்த மூவர் பாலியல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர். 2006 மார்ச்சில் ஜபல்பூரைச் சேர்ந்த விகாஸ் ஜோஷி எனும் ஸ்வாமி விகாசானந்த் என்பவர் ப்ளூ ஃபிலிம் 60 சி.டி.களுடனும், மூன்று பெண்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டனர். 2009 நவம்பரில் மச்சீசப் பெருமாள் கோயிலைச் சேர்ந்த காஞ்சீபூரம் தேவநாதன் பக்தைகளிடம் பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் வீடியோக்கள் பதிவு செய்தது முதலான குற்றங்களுக்கு ஆளானார். 2010 மார்ச்சில் ஸ்ரீமுரத் த்விவேதி என்ற இச்சதாரி சந்த் ஸ்வாமி பிமானந்த் என்பவர் விபச்சார விடுதி நடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். மஹேந்திர கிரி எனும் துன்னு பாபா 24 வயது திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். 2010 ஏப்ரலில் சுவாமி நித்யானந்தா பெங்களூருவில் நடந்த பல்வேறு பாலியல் முறைகேட்டிற்காகத் தேடப்பட்டு ஹிமாச்சலப் பிரதேசத்தில் கைதுச் செய்யப்பட்டார். 2013 செப்டம்பரில் ஜோத்பூரில் ஸ்வாமி ஆஸ்ரம் பாபு என்பவர் மைனர் பெண்ணைக் கற்பழித்தமைக்காகக் கைதுச் செய்யப்பட்டார். 2014 நவம்பரில் சந்த ராம்பால் என்பவர் தனது முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் வெளிவந்த விவகாரத்தில் கொலை செய்ததற்காக ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2015 ஆகஸ்டில் சாரதி பாபா என்பவர் பாலியல் முறைகேடுகளுக்காகவும், ஆள் மாறாட்டம் செய்தமைக்காகவும் ஒடிசா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.கர்நாடக முதல்வர் சித்தாராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மற்றும் அசோக் சிங்கால் முதலியோருடன் நெருக்கமாக உள்ள பண்டிட் சுவாமி இராகேஸ்வரா பாரதி பல்வேறு பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளார்.

இவற்றை இங்கு பட்டியலிடுவதில் காரணம் இருக்கிறது. இத்தகைய சாமியார்கள்தாம் மாட்டிறைச்சி உண்பதற்கும் மாடுகள் அறுப்பதற்கும் எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு குரல் கொடுப்போரின் யோக்கியதை இத்தகையதாகத்தான் உள்ளதென்பது வேதனையிலும் வேதனையாகும். அதே சமயத்தில் விவேகானந்தர் போன்றோர் மாட்டிறைச்சி உண்போர்களுக்கு ஆதரவாகவே கருத்துக்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியத் திருநாட்டில் மாட்டிறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிக அளவிலேயே உள்ளது. உணவு என்பது வசிக்கும் இடத்தையும், செய்யும் தொழிலையும் பொருத்ததாகவே இருந்து வந்துள்ளது. உணவு என்பது மதச் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. தாங்கள் விரும்பும் உயர்தரப் பொருளையே கடவுளுக்குக் காணிக்கையாகத் தரும் மனோபாவம் உள்ள நாடு இது. தனது கண்ணையே பிடுங்கிக் கடவுளுக்கு வைத்த கண்ணப்ப நாயனாரைப் போற்றும் நாடு இது. பெற்ற மகனையே அறுத்துக் கடவுளுக்குக் கறி சமைத்துக் கொடுத்த புராணம் வழங்கப் பெறும் நாடு இது. இந்த வகையில் தாங்கள் உயர்வாகக் கருதும் மாடுகளையே கடவுளுக்குப் பலி தந்து அந்த இறைச்சியையே உண்டு மகிழும் மக்களைக் கொண்ட நாடு இது என்றாலும் மனித நேயத்தில் மாண்போடு உயர்ந்து விளங்கும் அற்புதத் திருநாடு இந்நாடு.

மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொலை செய்பவர்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை. மனித நேயத்தையும் கொன்று வருகிறார்கள். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும், கட்டுக்கோப்பிற்கும் ஊறுவிளைவிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல தங்கள் மதத்துக்கே அவப்பெயர் தேடித்தருகிறார்கள். மனித நேயத்திற்கு உலை வைக்கும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான சித்தாந்தத்தை அடித்து நொறுக்கும் வகையில் மாட்டிறைச்சிப் பிரச்சனையை அரசியலாக்க முயல்வோர் செயலுக்கு இந்தியப் பெரு நாட்டின் அருமைக் குடிமக்கள் எள்முனை அளவுகூட ஆதரவு தர மாட்டார்கள் என்பதே உறுதியாகும்.

( இனிய திசைகள் மாத இதழ் – அக்டோபர் 2015 )
நன்றி - ஜே. மொஹிதீன் பாச்சா

Sunday, November 1, 2015

சத்தியமும் சாற்றும் வழியும்!


Amir Husain 
(முகநூல் பதிவு)

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.
குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.
எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, "பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்."அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங் களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்."குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்

Saturday, October 17, 2015

காய்தலும் நனைதலுமாய்க் கழியும் வாழ்க்கை!

- 29 -

'என்னிடம் ஓரழகான குடையிருந்தது - அதை நீ அபகரித்தாய் - நான் குடைக்கீழிருந்து வெளியேகினேன். வெயிலெனக்கு அவஸ்தையாயிற்று - சூரியன் உச்சந் தலையிற் குறியிட்டான் - அக தீ எனலாய்! ஆகாயம் இடித்து முழங்கி இறங்கிற்று - நானதில் நனையவேண்டியாயிற்று - காயம்பட்டு! நனைதலும் காய்தலும் - இன்று என் இருப்பென்றாயிற்று!'

துயரொழுகும் இக்கவிதை பிறப்பதற்குக் காரணமான நிகழ்வு நடந்து இன்று கால் நூற்றாண்டு கடந்து விட்டது. வடபுலத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான முல்லை முஸ்ரிபா என்ற கவிஞனின் பேனாவின் - ஆத்மாவின் கண்ணீர் இது!

1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினர் மூன்று கட்டங்களாக வடபுலத்திலிருந்து முஸ்லிம்களைத் துரத்தியடித்தனர். யாழ்ப்பாண முஸ்லிம்களை 3 மணி நேரத்தில் முதலிலும் முல்லைத் தீவு மாவட்ட மற்றும் மன்னார் - வவுனியா மாவட்ட முஸ்லிம்களை 3 தினங்களிலும் வெளியேற்றினர். மறுத்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதால் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்கள் அடம்பெயர்ந்து வந்தார்கள். 'எமது பெண்களின் பின் புறங்களில் பிரம்புகளினால் தட்டிப் பரிசோதித்தார்கள்' என்று ஒரு கவிதையில் றஷ்மி எழுதியிருந்ததைப் படித்தது ஞாகபமிருக்கிறது.

'தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது!' - வே. பிரபாகரன்

வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில்  கட்டப்பட்டிருந்த பெனரிலே காணப்பட்ட வாசகம்தான் இது. அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கல்லி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.

90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். அவரும் துரத்தப்பட்ட மக்களின் ஒரு பிரதிநிதிதான்!

ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 25 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.

25 வருடங்கள் கழிந்த நிலையிலும் 30 வீதமான முஸ்லிம்களே மீள்குடியேறியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மீதியாயுள்ளோரது வாழ்க்கை, காய்தலும் நனைவதுமாகவே கழிந்து கொண்டிருக்கிறது.

'தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவர்கள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,' என்கிறார் டி.எஸ்.பி.ஜெயராஜ்.

கவிஞர் யாழ் அஸீம் 'மண்ணில் வேரோடிய மனசோடு' என்று ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ளார். தனது மண்ணின் மீதான பிரிவும் பரிவும் ஏக்கமும் கொண்ட கவிதைகளைக் கொண்டது அத் தொகுதி. அதில் உள்ள ஒரு கவிதையின் பகுதி இது. துரத்தியோரைப் பார்த்து அவர் கேட்கிறார்:-

'வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு
முற்றுப் புள்ளி நீ வைப்பதா?
நீயே அவனிட்ட காற்புள்ளி.
எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?
உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது?'

இக்கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது.

துரத்தப்பட்ட முஸ்லிம்களின் அகதிக் கோலம் அகற்றும் முற்றுப் புள்ளி என்று விழும் என்றுதான் காத்திருக்கிறோம்!

நன்றி - மீள்பார்வை

Friday, October 9, 2015

பயம்!


ஆதம் ஆதில் (ஈராக்)

சிந்தித்துப் பார்க்கிறேன்..
எனது ஆத்மாவைக் கொண்டு 
சிந்தித்துப் பார்க்கிறேன்
வாழ்வைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன்
அலைக்கழிக்கும் ஒரு பாதையில்
எனது ஆத்மா பயணிப்பதைக் கண்டு கொண்டேன்

எண்ணங்களும் சொற்களும்
என்னிடமுள்ளன.
வெளிப்படையாகச் சொல்வதானால்
அவை
ஒரு சிறிய பாதத்தின் கீழ் வைத்து
நசுக்கி விடக் கூடியவை 
ஆனால் அவை அச்சுறுத்துபவை அல்ல

அச்சுறுத்தப்பட்டவனாகவே இருக்க
என்னை அனுமதியுங்கள்
குழந்தைகள் வளர்ந்த பிறகு
மனிதர்களின் நல்லவற்றைப் பார்த்துக் கொள்ளட்டும்.

தொழுகையும் நோன்பும் மாத்திரமே
மார்க்கம் அல்ல என்பதை
அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்
மார்க்கம் என்பது எல்லோர் முகங்களிலும்
உள்ள புன்னகையாகும்
மார்க்கம் என்பது ஒரு விம்மற் பெருமூச்சும்
ஓர் உணர்ச்சிப் பாடலுமாகும்

இல்லை..
நாம் அச்சுறுத்தப்படவில்லை
கருணையுள்ள இறைவனானவன்
எல்லா  இடங்களிலும் இருக்கிறான்
ஆனால் சில வேளைகளில்
பலர்
அதைக் காணமுடியாதோராக இருக்கிறார்கள்

உலகத்தை நோக்கிச் செல்லும் போது
அது விலங்குகளால் ஆனது என்பதைக் காண்கிறேன்
அதன் சுகவியல் நிலைமையோ -
தாண்டிச் செல்லும் 
ஜன்னலுக்குப் பின்னால் தெரியும் 
மரித்த கரம் ஒன்றைப்போலவும்
பின்னாலிருந்து வரும் ஒரு பெண்ணின்
அவலக் குரல்போலவும்
அழுகையின் அமைதி போலவும்
தரை விரிப்பில் விழுந்து கிடக்கிறது

எனது தாயாரின் முகத்தை முதலில் பார்த்த வேளை
வாழ்வின் கருணை நிறம் எதுவென்று கண்டேன்
வாழ்ந்து கொண்டோ அல்லது மரித்த பின்போ
மனிதம் ஓய்வாக இருக்க முடியாது
என்று புரிந்து கொண்டேன்

தொட்டிலில் நான் கிடந்த காலமெல்லாம்
எனது தாய் சொன்ன வார்த்தை
'அமைதி!' என்பதுதான்!
மனிதர்கள் வெளிப்படையாகப் பேச விரும்பாத
வாழ்க்கையையும் உலகத்தையும்
நான் படித்தேன்
பயந்திருப்பதையே மனிதர்கள் விரும்புகிறார்கள்
மனிதர்கள் 
உயரமாக வளர்வதற்கே விரும்புகிறார்கள்
சிந்தனை இல்லாத மரங்களைப் போல!

கனிவு கொள்வதற்கோ ஆவல்கொள்வதற்கோ
அல்லாமல் 
வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமே
அவர்களுக்குக் கண்கள் தேவைப்படுகின்றன
ஒரு பெரிய புன்னகையைக் கூட
முகங்களில் காணக் கிடைக்கவில்லை..
அவர்கள் எனக்குச் சொன்னதெல்லாம்
'வாழ்க்கை சீக்கிரமாகக் கடந்து செல்கிறது
கனவு கண்டு கொண்டிராதே!' என்பதைத்தான்!

பண்டிகைச் சந்தோஷம் என்பது கூட
அர்ப்பணிப்புக்கும் இரத்தச் சகதிக்கும்
மட்டுப்படுத்தப்பட்டது என்றும்
உணர்ச்சி கொண்டு கவிதை வடிப்பது
தடுக்கப்பட்டது என்றும் கற்பித்தார்கள்
மூடிக் கொண்டு வாழ்வு காலத்தைக் 
கழிக்கும்படி சொன்னார்கள்

'காலம் வேகமாகக் கழிந்து கொண்டிருக்கிறது
மனுக்குலம் விரைவில் அழிந்து விடும்'
என்று அவர்கள் எனக்குச் சொன்னார்கள்
'உனது அந்தம் 
கப்ரிலும் நெருப்பிலுமே முடிவடையும்.
எனவே நீ எப்படி இருக்க ஆசைப்படுகிறாயோ
அதற்கெதிராக உறுதியாக நடந்து கொள்'
என்று சொன்னார்கள்
உன்னுடைய ஆத்மாவுடன் இணங்கியிருப்பது
வெட்கக் கேடானது என்றார்கள்

'மகனே..
உனது விதி ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதால்
அதை நம்பாலிருக்கவோ கேள்வி எழுப்பவோ
முற்படாதே' என்றார்கள்
'நல்லதை நோக்கிய பாதையில்
ஒரு வழிகாட்டும் கரம் உனக்குத் தேவை
அதைத் தனியே உன்னால் அடைய முடியாது' என்றார்கள்
'மனித குலம் தனது இயல்பைப் பின்பற்றிச் செல்வது
நல்லதாயிருக்காது ' எனறும்
'பூக்களின் ஒரே நோக்கம் 
மடிவது மட்டுமே' என்றும் சொன்னார்கள்

வணங்குவது எப்படி என்று கற்பித்தவர்கள்
ஒன்றில் நரக நெருப்பிலிருந்து தப்புவதற்கோ
அல்லது பேராசையுடன் சுவர்க்கத்தில் நுழைவதற்கோ
எப்படி இயல்பாக இறைவனை வேண்டுவது என்று
சொல்லித் தரவில்லை.

வாழ்க்கையை 
நியாயத் தீர்ப்பு நாளுடனும் நரகத்துடனும்
ஏன் அவர்கள் வரையறை செய்தார்கள்?

காதடைக்கும் திட்டங்கள் கொண்டு
பெண்கள் ஏன் மீண்டும் எரிக்கப்படுகிறார்கள்

ஏற்றுக் கொள்ளாதவன்
விலக்கி வைக்கப்படுவதும்
எதிர்த்து நிற்பவன் 
நம்பிக்கையற்றவனாக்கப்படுவதும் ஏன்?
சிந்தித்துப் பார்த்தால்
இது வெட்கக் கேடானது அல்லவா
இழிவுண்டாக்கும் செயல் அல்லவா?
கிலியுண்டாக்குவதிலும் அச்சப்படுத்துவதிலும்
ஈடுபடும் தொகையினரைப் பார்த்தால்
மார்க்கம் என்பது
வஞ்சம் தீர்க்கும் ஒரு வழிமுறை என்றே 
எண்ணத் தோன்றுகிறது

மார்க்கம் என்பது
வஞ்சம் தீர்க்கும் ஒரு வழிமுறை என்று
புரிந்து கொள்வது மோசமானது
மார்க்கம் என்பது
சுவர்க்கமாகவும் நரகமாகவும் பார்க்கப்படுவது
மோசமானது
மார்க்கம் என்பது
ஆடையின் நீளத்தால் விளங்கிக் கொள்ளப்படுவது
மோசமானது

இறைவன் ஆத்மாவுடன்தான்
நம்மைப் படைத்திருக்கிறான்
ஆகவே நாம் பறப்போம்!

நமது இதயங்களை 
வர்ணமயப்படுத்துவோம்
ஒவ்வொன்றாக வாழ்வோம்

மனித மனத்தை
ஊசியும் நூலும் கொண்டு வழிநடாத்த முடியாது
மனம் என்பது சிந்தனைக்கானது

மனிதர்கள் கொடியவர்கள் என
மலக்குகள் சொல்லும் போது
'இல்லை.. அவர்கள் களிமண்ணால் ஆனவர்கள்
நல்ல அம்சங்களைக் கொண்டவர்கள்'
என்று அவன் பதிலளித்தான்

-----------------------------------------------------------------

(மொழைிபெயர்ப்பு)

Sunday, October 4, 2015

வெள்ளிக்கிழமை விளக்கம்!


 - 28 -

வெள்ளிக் கிழமைகளின் ஜூம்ஆ பிரசங்கங்களை அந்நாட்களில் லெப்பைகளே நிகழ்த்துவார்கள். “எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ_த்தஆலாவுக்காயிருக்கும். அவன் எப்படிக்கொத்தவன் என்றால்......” இப்படித்தான் உபந்நியாசம் ஆரம்பிக்கும்.

ஓதலுக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ஒரு தாள லயத்தில் லெப்பை தனது 
குத்பாவை நிகழ்த்துவார். அவரது ராகத்தில் அநேகர் தூங்கிப் போவார்கள்.

அநேகமாகவும் குத்பாவுக்கு என்றொரு கிதாபு (நூல்) அவர்களிடம் இருக்கும். அது தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அரபுத் தமிழில் அமைந்த பிரசங்கங்கள் அதில் அடங்கியிருக்கும். அப்போது சிறுவனாயிருந்த எனது நினைவுகளின் எச்சங்களிலிருந்துதான் இதைச் சொல்லுகிறேன்.

70 களின் நடுப்பகுதியில் எனது நண்பர் காத்தான்குடி பௌஸ் ‘தூக்கம் தரும் குத்பா ஊக்கம் தரல் வேண்டும்’ என்ற தலைப்பில் தொடராகப் பத்திரிகை ஒன்றில் கவிதை எழுதியது ஞாபகம் இருக்கிறது. அவர் அப்போது அரபு மத்ரஸா ஒன்றில் ஓதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

கல்விக்கூடங்களை விட அரபு மத்ரஸாக்களே முக்கியம் எனக் கருதிய சமூகம் தத்தமது பிரதேசங்களில் அவற்றை உருவாக்க ஆரம்பித்தது, ஆலிம்கள் வெளிவர ஆரம்பித்தார்கள். ஆயினும் ஒவ்வொரு பிரதேசத்திலும் மரியாதைக்குரியோராகக் கருதப்பட்ட லெப்பைகள் தாமாக ஓய்வு பெற்ற பிறகே ஆலிம்கள் மிம்பர்களில் ஏற ஆரம்பித்தார்கள். ஒரு சில இடங்களில் இதற்கு மாற்றமாகவும் நிகழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் கூட அவர்களில் பெரும்பான்மையோரது மொழிப் பயன்பாடு சிலாகிக்கத்தக்கதாக இருக்கவில்லை. உயர்திணை, அஃறிணை தெரியாதவர்களாகவும் வார்த்தைகளைச் சரிவர முடித்துக் கொள்ள முடியாதோராகவும் அவர்கள் இருந்தனர். அதே நேரம் மிகவும் அற்புதமாக மொழியைப் பயன்படுத்தவும் எடுத்த தலைப்பில் சரியாகவும் அனைவரையும் கொள்ளை கொண்டு கட்டிப் போடக் கூடியோராகவும் ஒரு சிலர் இருக்கவே செய்தனர். இதற்கு உதாரணமாக மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களைக் குறிப்பிட முடியும். அவரது பேச்சின் கவர்ச்சிக்கும் விசால அறிவுக்கும் சிறந்த மொழி நடைக்கும் காரணம் அவரது இடையறாத வாசிப்பு. அவரது வீட்டில் ஒரு நூலகமே இருந்தது.

பழைய நிலை இன்று மாற்றம் பெற்ற போதும் காலப் போக்குக்கேற்ப
ஆலிம்களில் ஒரு தொகுதியினர் தமது பாணிகளை மாற்றிக் கொள்ளாமலே
இருந்து வருகின்றனர். இது குறித்துச் சமூக ஊடகங்களில் மிகக் கடுமையான
விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் கூட தாம் நபிமார்களின்
வாரிசுகள் என்ற மிடுக்குக் கலையாமல் தாம் செய்வது சரி என்ற போக்கில்
அவர்கள் நடந்து கொள்வது கவலைக்குரியது.

உண்மையில் ஆலிம்களுக்கு இன்றும் - இன்னும் சமூகம் மரியாதை செலுத்தியே வருகிறது. அந்த கண்ணியத்தைச் செலுத்திய படியேதான் அவர்களது குத்பாக்கள் பற்றிய கருத்துக்களும் முன்வைக்கப் படுகின்றன. உண்மையில் பொதுமகன் நல்ல உபந்நியாசத்தைச் செவிமடுக்கும் ஆர்வத்தில் பள்ளிவாசல் வருகிறான். தொடர்ந்தும் அவன் ஏமாற்றமடையும் போது அது விமர்சனமாக மாறுவது தவிர்க்க முடியாதது.

இன்று மார்க்க விளக்கங்களைப் பொது மகன் ஒருவன் பெற்றுக் கொள்ளப் பல புதிய வழிகள் உருவாகி விட்டன. அறிவினைப் பெறுகின்ற புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒரு கடமை நிமித்தம், வணக்கம் நிமித்தம் பள்ளிவாசல் வரும் ஒரு பொதுமகன் நல்லதொரு பிரசங்கத்தைச் செவிமடுக்க விரும்பும் போது அவனது எதிர்பார்ப்பு பற்றிய எவ்வித அக்கறையும் அற்றவையாக ஆங்காங்கே குத்பாக்கள் அமைந்து விடுவது பெரும் சோகம்.

;”ஒரு வயோதிபர் இருந்தாராம். அவர் அவருடைய வாலிப வயதிலிருந்தே ஹஜ் செய்து கொண்டு வந்தாராம். அவர் ஒவ்வொருமுறை ஹஜ் செய்த பின்பும் அவருடைய ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் வருமாம். இவ்வாறு 50வது முறை ஹஜ் செய்த பிறகுதான் அவரது ஹஜ்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வானத்திலிருந்து சப்தம் வந்ததாம்.” இப்படி ஓர் ஆலிம் குத்பா பிரசங்கம் செய்ததாக மிக அண்மையில் கிபாரி முகம்மத் என்ற சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைக் குறிப்பிட்டு விட்டு அவர் செய்திருந்த விமர்சனத்தை இங்கே நான் தவிர்த்திருக்கிறேன். இது ஒரு சாதாரணப் பதிவுதான். இதைவிடக் கடும் கோபத்துடன் பலர் பதிவுகளை இட்டிருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் இங்கே எடுத்தாள்வது பொருத்தமானதாக இருக்காது.

கடந்த ஜூலைமாதம் எனது முகநூல் பக்கத்தில் குத்பாக்கள் பற்றி நான் எழுதிய குறிப்பு இது:-

“ஜம்இய்யத்துல் உலமா சபை குத்பாப்பிரசங்கம் நிகழ்த்தும் ஆலிம்களுக்குப் பின்வரும் முக்கிய விடயங்களைத் தெரிவிப்பது நல்லது. 1. ஒரே தலைப்பில் ஒரே விடயத்தை மாத்திரம் பேசுவது. 2. மொழியைச் சரியாகப் பயன்படுத்துவது. 3. 20 முதல் 30 நிமிடங்களில் பிரசங்கத்தை நிறைவு செய்வது. 4. ஒலிபெருக்கி என்பது நமது சாதாரண குரல் ஒலியை பெரிய அளவில் வெளிப்படுத்தக் கூடியது என்பதை அறிவுறுத்துவது. 5. ஜத்பு ஏறாமல் பார்த்துக் கொள்வது.

உண்மையில் குத்பா உரை நிகழ்த்தும் ஆலிம்களுக்கு மொழிசார், உரைசார் தகையாளர்களைக் கொண்டு பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். ‘நாங்கள் சரியாகவே சொல்லுகிறோம். மார்க்கம் சொல்லும் உரிமையும் அதிகாரமும் எங்களுக்கேயுரியது. எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அவர்கள் கருதினால் பொது வெளிகள் விமர்சனங்களால் நிறைவதைத் தவிர்க்க முடியாது போகும். அது அழகும் அல்ல.

எனது முகநூல் பதிவுக்குச் சிலர் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை இட்டிருந்தனர். அதில் ஒரு சகோதரி இட்டிருந்த பின்னூட்டம் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது!

எனது குறிப்பில் அடுத்ததான நான் சொல்லியிருக்க வேண்டியது என்ற வகையில் ‘கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே நரகவாதிகள் என்ற அடிப்படையில் துள்ளாமலிருப்பது!” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Sunday, September 20, 2015

உன்புகழ் கூறாத சொல்லறியேன்!


 - 27 -

ஹஜ் காலங்களில் சுபஹூத் தொழுகைக்குப் பின்னர் மதீனா முனவ்வராவைச் சுற்றியுள்ள ஒலிநாடா மற்றும் இறுவெட்டுக் கடைகளிலிருந்து குளிர் காற்றில் எழுந்து வரும் 'தலஅல் பத்ரு அலைனா' மற்றும் அதையொத்த பரவசப்படுத்தும் பாடல் குரல்கள் மற்றெல்லாப் புலன்களையும் தாண்டிக் காதில் விழுவது ஒரு சுகானுபவமாக இருக்கும்.

அழகுணர்வும் கலா ரசனையும் மனிதனது உள்ளத்துடன் சம்பந்தப்பட்டது. மனித மனதைக் கவர்வதில் பாடல்களுக்குப் பெரும் பங்கு உண்டு. மொழிகள் தோன்றிய பிறகு மனித குலம் இயல்பாகவே உருவாக்கிக் கொண்ட கலை அம்சம் பாடலாகத்தான் இருக்க வேண்டும்.

ஏடும் எழுத்தும் அறியாத மக்களினால் வாய்மொழியாகப் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் எனப்படும் பாமரப்பாக்கள் மனித குலம் பயன்படுத்திய, பயன்படுத்துகிற எல்லா மொழிகளிலும் உள்ளன. தாலாட்டு முதற்கொண்டு ஒப்பாரிப் பாடல்கள் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு கால கட்டங்களிலும் செயற்பாடுகளிலும் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் அறிந்தேயிருக்கிறோம். பொதுவான பாடல்களைப் போலவே மத ரீதியான பாடல்களும் நிலவி வந்திருக்கின்றன.

தமிழிலும் அறபுத் தமிழிலும் பல பாடல் இலக்கியங்கள் வெளிவந்திருக்கின்றன. பெண்புத்திமாலை, றசூல்மாலை போன்றவை குழுக்களாகப் பாடப்பட்டும் வந்திருக்கின்றன. நோன்பு காலங்களில் பெண்களுக்கான தொழுகை நடைபெறும் இடங்களில் ஸலவாத்து மாலையை ஒருவர் படிக்க மற்றவர்கள் கோரஸாக ஸலவாத்துச் சொல்லுவார்கள். தொழுகைக்கு வருவோர் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழுகை ஆரம்பமாகும் வரை இந்நிகழ்வு நடந்து கொண்டிருக்கும். வேறு அநாவசியப் பேச்சுக்களையும் ஊர்வம்பையும் தவிர்ப்பது மட்டுமன்றி சன்மார்க்க விழுமியங்களைப் பாடல்களூடாக மீட்டுவதும் இந்நிகழ்வின் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.

பின்னால் இஸ்லாமிய கீதங்கள் உருவாகின. மிகப் பெரும் ஆலிம்களும் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பாடல்கள் எழுத மிகச் சிறந்த பாடகர்கள் அவற்றைப் பாடினர். அவை மக்களை வெகுவிரைவில் சென்றடைந்தன. முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய கீதங்கனைப் பாடிய பாடகர்களின் நீண்ட பட்டியல் உண்டு. காரைக்கால் தாவூத், நாகூர் ஈ.எம். ஹனிபா, காயல் ஷேக் முகம்மத் ஆகியோரை மேலோட்டமான உதாரணத்துக்குத் தொட்டுக் காட்ட முடியும். இலங்கையிலும் பலர் தோன்றினர். ஏறக்குறைய 50கள் தொடங்கி 90 களின் நடுப்பகுதி வரை இவர்களது பாடல்களின் ஆதிக்கம் முஸ்லிம் சமூகத்தில் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

ஆயினும் 80களின் நடுப்பகுதியில் குறித்த சில பாடல்கள் இறைவனுக்குச் சமமாக சில மார்க்கப் பெரியார்களைக் கொண்டாடுகின்றன என்ற அவதானிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவைதான் இந்த இஸ்லாமிய கீதங்களையும் பாடகர்களையும் மக்கள் சமூகத்திடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தது. எனவே மார்க்கத்துக்கு முரண் எனக் கருதப்பட்ட பாடல்களை முஸ்லிம் சேவை ஒலிபரப்புவதைத் தவிர்த்துக் கொண்டது.

இஸ்லாமிய கீதங்கள் இசையுடனேயே பாடப்பட்ட போதும் கூட அவற்றின் இசையை விட வார்த்தைகளின் கவிநயமே மக்கள் மனதில் தங்கி நின்றன. இன்றும் கூட யாரும் அப்பாடல்களை எழுந்தமானமாகப் பாடக்கூடிய நிலையில் இருப்பதைக் கொண்டு இதனைப் புரிந்துகொள்ளலாம். 'இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வது இல்லை!', 'வாழ்நாளெல்லாம் போதாதே.. வள்ளல் நபிகளின் புகழ்பாட...', 'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?', 'உனையன்றி வேறெதுவும் நினைத்தறியேன்.. உன் புகழ் சொல்லாத சொல்லறியேன்.. இணைவைத்து உனைப்பாட நாடவில்லை, தமிழ் இசைக்காக உன்புகழ் பாடவில்லை!' போன்ற பாடல்கள் மொழியழகும் கவிநயமும் கொண்டவை.

இயல்பாகவே மனிதனின் கலையுணர்வை மோசமான, ஆபாச பாடல்கள் மற்றும் இசையிலிருந்து தவிர்ப்பதில் இப்பாடல்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் சன்மார்க்கத்தை மக்களிடம் சேர்ப்பதிலும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. பிரச்சாரகர்கள் நுழையாத கிராமங்களில் கூட இவை காற்றில் கலந்து ஒலித்திருக்கின்றன.

இன்று இந்த சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக உணர முடிகிறது. பழம் பெரும் பாடகர்கள், பாடலாசிரியர்களின் மறைவு, இசைக்கு எதிரான மார்க்கப் போர், அதைத் தாண்டி பாடல்கள் மூலம் மக்களிடம் நல்லவற்றைக் கொண்டு செல்வதில் திறமையின்மை, கலைகளை மறுப்பதன் மூலம் மனித இயல்பான கலைகளுடனான உணர்வை மிதித்தல் ஆகியவற்றால் இத்துறை பாழ்பட்டு நிற்கிறது. நமது தஃவாப் பணி பேச்சு, பேச்சு, எழுத்து, எழுத்து என்ற எல்லைக்குள் சுருங்கிப் போய்க் கிடக்க, மனித மனத்தின் இயல்பான கலையார்வம் வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

பாடல்கள் சக்தி மிக்கவை. உற்சாகமான பொழுதுகளில் இயல்பாகவே ஒரு பாடல் வரியை நாம் முணுமுணுக்கவே செய்கிறோம். அப்போது வாத்தியக் கோஷ்டியை வரவழைத்து வைத்துப் பாடுவதில்லை.  அல்லது வீட்டில் இருப்போரைத் தாளமிடவோ ஆட்டம் போடவோ அழைப்பதில்லை.

ஒவ்வொரு பாடசாலையிலும் ஆகக்குறைந்தது ஒரு மாணவி, ஒரு மாணவன் மிக இனிமையாகப் பாடக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மோசமான இசை, பாடல் என்று குறை சொல்பவர்கள் நல்ல பாடல்களை எழுதிக் கொடுக்கவோ தட்டிக் கொடுக்கவோ முன்வருவதுமில்லை.

மனிதக் கலையுணர்வை மார்க்கத்தின் பெயரால் மறுத்து அதற்கு மாற்றீடு வழங்காமல் மிம்பர்களிலும் பொது உபந்நியாச மேடைகளிலும் மூலம் வெளிவரச் சத்தம் போடுவதால் மனிதக் கலையுணர்வு அற்றுப் போவதில்லை. அது வேறு வடிவங்களையும் வழிகளையும் தேர்ந்து கொள்ளும்!

அந்த வழியும் வடிவமும் மோசமானதாகவும் மார்க்க முரணானதாகவும் இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

Tuesday, September 1, 2015

ஹஜ் - காசாகி நிற்கும் கடமை!


 - 26 -

எனது ஹஜ் பயணம் அவ்வளவு சந்தோஷமானதாக இருக்கவில்லை!

கடமைகள் யாவற்றையும் திருப்திகரமாகச் செய்து கொள்ள முடிந்த போதும் அழைத்துச் சென்ற அணியினர் சரியாக நடந்து கொள்ளவில்லை.

'ஷீதேவிகளே... விமான நிலையம் ஏசி (குளிரூடட்டப்படது.) அதிலிருந்து விமானம் வரை ஏற்றிச் செல்லும் பஸ் ஏசி. விமானம் ஏசி. சவூதியில் விமான நிலையம் ஏசி. அங்கிருந்து அழைத்துச் செல்லும் பஸ் ஏசி. ஹரம் ஷரீப், மதீனா முனவ்வரா ஏசி. நமக்கு எந்தவிதச் சிரமங்களும் இல்லை. நாளை உயிருடன் இருப்போமோ இல்லையோ தெரியவில்லை. பயணத்துக்கு நிய்யத் வையுங்கள், முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்!' - இது நீண்ட காலத்துக்கு முன்னர் ஹஜ் முகவரான ஒரு ஆலிம் நிகழ்த்திய குத்பாப் பிரசங்கத்தின் சிறு பகுதி. கேட்டுக் கொண்டிருக்க மகிழ்ச்சியும் ஆர்வமும் வரத்தான் செய்யும். பெயரையும் கொடுத்து அட்வான்ஸையும் கொடுத்த பிறகுதான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பதட்டத்திலும் சந்தேகத்திலும் நாட்கள் நகர ஆரம்பிக்கின்றன.

சரியாக பணத்துக்குப் பத்துத் தினங்கள் இருக்கையில் திடீரென விமானக் கட்டணம் அதிகரித்து விட்டதாக மேலும் ஒரு தொகையை என்னிடம் கோரினார் நிறுவனத்தவர். அதுவும் பிரச்சனை இல்லை.

அழைத்துச் செல்லப்படுபவர்களில் பொருளாராத மற்றும் கல்வி ரீதியாக வித்தியாசமானவர்கள். கிராமத்து மனிதர்களை அழைத்துச் செல்வதில் நிறுவனங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. கொஞ்சம் விளக்கம் உள்ளவர்களைச் சமாளிப்பதில்தான் பிரச்சனை அவர்களுக்கு.

இலங்கையில் ஆள்சேர்க்கும் ஆலிம்ஷா முதற்கொண்டு சவூதியில் குர்பான் கொடுப்பதற்கு பிராணிகளைக் கொள்வளவு செய்வது வரை புறோக்கர்கள் இருக்கிறார்கள். ஹஜ் காலம் என்பது அவர்களுக்கு கொமிஷன் குவியும்; காலம். அறபாவில் தரிப்பதும் மினாவில் தரிப்பதும் சற்றுச் சிரமமானதுதான். ஆனால் அதற்குள்ளும் நடக்கும் விளையாட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்குள் தவிர்க்க முடியாத சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். அவற்றைப் பொறுத்தேயாக வேண்டும்.

25 முதல் 27 பேர் வரை தங்கவேண்டிய கொட்டிலுக்குள் 50 பேருக்கு மேல் செருகியதைக் கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை. அனைவரும் பெண்கள். அப்படி நெருக்கடிப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நிறுவனத்துக்குரிய கொட்டில்கள் சவூதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு விற்கப்படுகின்றன. அதன் பலனை நிறுவனம் அனுபவிக்க ஹாஜிகள் துன்பத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு நான்கு கொட்டில்கள் (டென்ட்) விற்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்து நடை வழியில் தர்ணா செய்தேன்.  இறுதியில் பெண்களுக்காக கொட்டிலின் மறுபகுதியை பலாத்காரமாகத் திறந்து விட்டோம்.

வழிகாட்டிகளாக வரும் ஒரு சில ஆலிம்கள் நடந்து கொள்ளும் முறை வருந்தத் தக்கது. நிறுவன உரிமையாளருக்குச் சார்பாக நடந்து கொள்வதற்காக ஹஜ்ஜாஜிகளை 'அச்சமூட்டி எச்சரிக்கும்' பணியை இவர்கள் மிக அழகாக முன்னெடுக்கின்றனர். இடைக்கிடை நடக்கும் உபந்நியாசங்களில் இந்த அம்சமே மிக முக்கியமானதாக இருக்கும். குழுவில் வரும் 'பசை' கொண்ட நபர்களை மையப்படுத்தியே சில முன்னேற்பாடுகள் நடப்பதும் உண்டு. ஹஜ் கடமை முடிந்து நாடு திரும்புவதற்காக இருந்த ஒரு பகல் பொழுதில் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த இரண்டு ஆலிம்கள் எனக்குப் புரியாது என்று எண்ணிக்கொண்ட அறபியில் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததை நான் வெகுவாக ரசித்தேன். இவர்களில் ஒருவர் மினாவின் கூடாரத்துக்குள் தனக்கு இடமில்லை என்று ஒரு ஹாஜி சொன்ன போது எல்லோரையும் கத்திப் பாட்டில் (ஒருக்களித்து) படுக்கும்படி உபதேசம் செய்தவர்.

30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சமாளிக்கும் விதமாக சவூதி அரசு ஏற்பாடுகளைச் செய்திருப்பதைக் காணும் போது, அரபிகள் எவ்வளவு நேர்த்தியாக இவற்றை மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு பிரம்மிப்பு வரும். எவ்வளவு கல்வியறிவு படைத்தவராக இருந்த போதும் வழி தவறினால் உரிய இடத்தை அடைவது சிரமம். ஆனாலும் உரியவரை உரிய இடத்தில் சேர்ப்பிக்கும் ஏற்பாடுகள் பாராட்டத் தக்கவை.

ஹஜ் என்பது மனித குலத்துக்கான ஒற்றுமை மாநாடு. ஓர் அற்புதத் திருவிழா. மனிதர்களுக்கிடையில் எந்த வேற்றுமையும் கிடையாது என்பதை வருடா வருடம் நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்தக் கடமை போல ஒரு கடமை வேறு எந்த மதத்திலும் கிடையாது. நாமெல்லாம் ஒரே உறவு என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு இறைவனின் வீட்டையும் தரிசித்தபடி நபிகளாரும் அவர்களின் தோழர் தோழியரும் நடந்து திரிந்த மண்ணில் குறைந்தது 25 நாட்கள் வாழக் கிடைப்பது பெரும் பாக்கியம்தான்.

ஹஜ்ஜூக்கு அழைத்துச் சென்று வழிகாட்டுவதும் ஹாஜிமாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் உதவுவதும் ஒரு மகத்தான பணி. இந்தப் பணியில் ஹாஜிகளை வருத்தாமல் சிறந்த முறையில் உதவும் நிறுவனங்களும் ஆலிம்களும் இருக்கவே செய்கின்றனர். ஒரு சிலர் மார்க்கத்தின் மீதான பொது மகனின் பற்றையும் பக்தியையும் தேவைக்கு மேல் உழைப்பதற்கான ஒரு வழியாக ஆக்கியிருப்பது பெரும் கவலை தருவதாகும்.

எனக்கு ஹஜ் அனுபவம் கிடைத்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இந்த நிலைமைகளில் தற்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற போதும் ஒரு வியாபாரப் போட்டியாகவே அது இன்னும் இருக்கிறது என்பதற்கு ஒரு சிலர் பொது பலசேனாவை உதவிக்கு அழைத்ததிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹஜ் முடிந்து வந்த பிறகு எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே விமானத்தில் வௌ;வேறு நிறுவனங்களினூடாக நானும் மற்றொரு ஒலிபரப்பாளரும் சொந்தப் பணத்திலேயே துணைவியர் சகிதம் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தோம். அவ்வப்போது பத்திரிகை வெளியிடும் ஒரு சிறு பத்திரிகையாளர் அன்றைய நிலையில் அவர் வெளியிட்ட ஒரு பத்திரிகையில் நானும் நண்பரும் அரச செலவில் ஹஜ் செய்ததாகசும் அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும் கட்டம் கட்டி ஒரு செய்தி போட்டிருந்தார்.

Sunday, August 23, 2015

கௌரவத்துக்குள் பதுங்கிக் கிடக்கும் பொறாமை!


 - 25 -

'சில வாரங்களாக குத்பா பிரசங்கம் எதுவும் நிகழ்த்தவில்லை. குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் பேராவலை நோக்கி எனது நபுஸூ உந்திக் கொண்டேயிருக்கிறது' என்பது மாதிரி ஒரு பதிவொன்றை இட்டிருந்தார் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர். அவரது பதிவின் சாராம்சம் என்னவெனில் நீ குத்பா கேட்டுக் கொண்டிருப்பவன் அல்லன், பிரசங்கம் நிகழ்த்த வேண்டிய ஒரு முக்கியஸ்தன் என்ற ஆசை கொண்ட உணர்வு.

அவர் ஓர் இளம் ஆலிம். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பதிவைக் கண்ட உடனே எனக்கு அவர் மீது பெரும் மரியாதை உண்டானது.

பெரும்பாலும் புத்திஜீவிகளையும், பெரும் ஆலீம்களையும், பிரசாரகர்களையும், துறை சார் விற்பன்னர்னையும் ஆட்டி வைக்கும் ஆசை இது.  உள்ள மனதின் கள்ள மடிப்புக்குள் அமர்ந்து கொண்டு அவ்வப்போது எட்டிப் பார்க்கும் இழிவார்ந்த பண்பு. சாதாரணமானவர்களை இந்த நோய் பாதிப்பதில்லை.

அதே வேளை ஒரு நட்சத்திர அந்தஸ்தஸ்துக்கு எனது ஆன்மா ஆசைப்படுகிறது என்பது இந்த நோய் பிடித்தோரில் அநேகருக்குப் புரிவது இல்லை. புரிந்தாலும் கூட அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெரிதும் முயற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. விதிவிலக்குகளும் இல்லை என்று இல்லை.

பத்திரிகை ஒன்றில் ஒருவரது படைப்பாக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கும் சிலர் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் மறந்து விடுகிறார்கள். ஒரு சிலருக்கோ அந்த எழுத்தாக்கத்தை எழுதியவர் மீது ஒரு பொறாமை ஏற்படுகிறது. பொறாமையின் விகிதாசாரத்துக்கேற்ப அந்த எழுத்தாக்கத்துக்கான விமர்சனம் விஷமாகக் கக்கப்பட ஆரம்பிக்கிறது. அதி உச்ச பொறாமையில் அதை எழுதியவரின் பாட்டன் காலம் தொடங்கி இன்று அவரது இறுதிக் குழந்தை வரை பிய்த்து உதறி எறிகிறார்.

இது எழுத்துத் துறையோடு மட்டும் சார்ந்தது அல்ல. எல்லாத் துறைகளிலும் இந்தப் பிரச்சளை உண்டு. குறிப்பாக இஸ்லாமிய பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் இத்தகைய நோயைக் கண்ணுறவும் கேள்விப்படவும் நேரும் போது ஒரு புறம் கோபமும் மறுபுறம் வேதனையும் ஏற்படுகிறது.

ஓர் அமைப்பு பொது அம்சம் சார் விடயமொன்று குறித்து ஒரு பயிற்சி நெறி நடத்தியது. அமைப்பு சார் ஒருவர் இதை ஏற்பாடு செய்து எனது தலைமையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இரண்டு தினங்கள் நடந்தது. முதல் நாள் காலை அமைப்பு சார் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் அடுத்த தினம் மாலை மீண்டும் வந்து சான்றிதழ்கள் கையளிக்கும் வரை நிகழ்வில் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள். இப்படித்தான் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது.

ஆனால் முழு நாளும் அமைப்பு சார் மற்றொருவர் பின்னால் அமர்ந்திருப்பதை அவதானித்தேன். என்னதான் நடக்கிறது என்று மேலதிகமாக ஒருவரை நியமித்திருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சியின் மறு கட்டம் ஆரம்பமாகியது. வளவாளர்கள் தமது கடமையைச் செவ்வனே நடத்திக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை என்னோடு இணைந்திருந்த அமைப்பின் அங்கத்தவர் காலை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் காதுக்குள் ஒரு தகவல் சொன்னார்.

காலை நிகழ்ச்சி தொடங்கு முன் 'பின்னால் அமர்ந்திருந்த நபரு'க்கு 15 நிமிடம் பேசக் கொடுக்க வேண்டும் என்றார் அவர். அது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றேன் நான். இல்லை, அவர் ஆசைப்படுகிறார் என்றார் நண்பர். இந்த சபஜக்டுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றேன் நான். ஆம். அது தெரியும். ஆனால் அவரையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்றார் நண்பர். மன ஆசையை அடக்க முடியாதவர் எப்படி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கேட்டேன் நான். நண்பர் மிகவும் புரிந்துணர்வு கொண்டவர். அவரது வேண்டுகோளையேற்று பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என்ற ஒப்பந்தத்துடன் அழைத்து வரப்பட்டார் அவர். ஆனால் நாற்பது நிமிடங்கள் பேருரை ஆற்றி விட்டுத்தான் ஓய்ந்தார்.

இந்த மாதிரி ஆசைகளைச் சின்னச் சின்ன ஆசைகள் என்று சொல்லி விட முடியாது. ஆன்மாவோடும் மனப் பக்குவத்தோடும் சம்மந்தப்பட்ட விடயம் இது. ஆசைகளை அறுத்துத் திருப்தியுற்ற ஆத்மாக்களிடம் இந்தப் பண்பு குடிகொள்வது இல்லை. அந்த ஆத்மா இதை வளர விடுவதும் இல்லை. எங்கு நசித்து நாற்றமெடுக்கும் குப்பை இருக்கிறதோ அங்கேதான் புழுக்களும் பூரான்களும், தேள்களும் பிறப்பெடுக்கின்றன.

தன்னளவில் பக்குவமாக இருத்தல், தன்னையே உசாவுதல், சகலரையும் சமமாக மதித்தல், பிழையானதை அழகிய முறையில் சுட்டிக் காட்டுதல், நிறைகளைப் பாராட்டுதல் போன்ற நற்குணங்கள் வாய்க்கப் பெறின் இந்த நோய் நம்மை அண்டுவதற்கு நியாயம் இல்லை. பொறாமை; என்ற குப்பையிலிருந்தே இந்த இழிய புழுக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதைத் தெளியப் புரிந்து கொண்டால் யாவும் நலம்.

முகநூலின் இளம் வயது ஆலிம் நண்பரைப் பிற்காலங்களில் காணக் கிடைக்கவில்லை.  'திறந்து பேசும் மனதை அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கிறான், பாராட்டுக்கள் என்று அவருக்கு ஒரு பின்னூட்டம் இட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!

Sunday, August 9, 2015

அஸ்ஸலாமு அலைக்கும்

- 24 -

அரபு நாடுகளுக்குத் தொழிலுக்குச் சென்றவர்கள் சுவாரஸ்யமாகச் சொல்லும் பிரதான கதைகளில் ஒன்று வாகன விபத்துக்கள்!

இரண்டு அறபிகள் தங்களது வாகனங்களை உரசிக் கொண்டால் நடக்கும் காட்சி. இருவரும் வாகனங்களிலிருந்து வெளியேறி முதலில் ஸலாம் சொல்லிக் கொள்வார்களாம். அதன் பிறகு ஆளை ஆள் கடும் வார்த்தைகளில் திட்டுவார்களாம். இது வெளிநாட்டார் கண்களுக்கு விருந்து. வேறு எங்கு இப்படி விபத்து நடந்தாலும் இறங்கியதும் தடித்த வார்த்தைப் பிரயோகமும் சில வேளை கைகலப்பும் நடக்கும். இங்கு வித்தியாசமான காட்சி!

மற்றொரு அரசியல் திருவிழா ஆரம்பித்து விட்டது. சமூகத்தில் சகலராலும் கவனிக்கத்தக்க அம்சங்களை அரசியல்வாதிகள் மேல் விட்டு விட்டு விமர்சிக்கும் கோலாகலம் ஆரம்பமாகி விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தான் இருக்கும் நிலையிலிருந்து மேலே செல்ல விரும்புவானே தவிர, தனது நிலையைக் கீழிறக்கிக் கொள்வதற்கு விரும்புவதில்லை. அரசியல்வாதியை மட்டும் இந்த நியதிக்கு அப்பால் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. புகழும் செல்வாக்கும் ஒரு போதை. அவற்றிற்குள் அகப்பட்டோர் அவை இல்லாமல் வாழ்வதைப் பெரும் துன்பமாகவே காண்பார்கள்.

எனவே தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் முயற்சியெடுக்கிறான். அவனுக்குத் தேவைப்படுபவை வாக்குகளும் அதற்குரிய மனிதர்களும். அரசியல்வாதியின் வாழ்க்கை வாக்குகளிலேயே தங்கியிருப்பதால் அவன் எல்லா வகையான மனிதர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அரசியல்வாதியோடு இணைந்து இருப்பதிலும் அதைப் பயன்படுத்திச் செல்வாக்குத் தேடவும் பணம் உழைக்கவும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. இவர்களே பெரும்பாலும் ஓர் அரசியல்வாதியின் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

ஏற்கனவே தன்னோடு இருப்பவர்களையும் புதிதாகத் தன்னுடன் இணைவோரையும் சமாளிப்பதில் அரசியல்வாதியின் காலத்தில் பெரும் பகுதி வீணடிக்கப்படுகிறது. எதிராளியான இருந்த போதும் புதிதாக வந்து இணையும் ஒருவரை அரசியல்வாதி ஏற்றுக் கொள்ளத் தயாராகும் போதே ஏற்கனவே அவருடன் இருக்கும் பழைய ஆதரவாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். அல்லது மக்கள் செல்வாக்குள்ள ஒரு நபர் அரசியல்வாதியோடு இணைவதாக இருந்தால் அரசியல்வாதியின் பழைய ஆதரவாளர் அல்லது ஆதரவாளர்கள் சிலர் கழிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை வைப்பதும் உண்டு. இவ்வாறான சிக்கல்கள் பொது வெளியில் வாய்த் தர்க்கத்தில் தொடங்கி கைகலப்பில் முடிகின்றன.

இது போக, இன்றைய முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரை ஓரளவு மக்களுக்கு அறிமுகமானவர், ஓர் அரச ஊழியர், ஒரு வர்த்தகர், ஒரு ஹாஜியார் - எல்லோருமே தம்மை ஒரு முக்கியமான சமூகப் பிரஜையாகக் கருதி அரசியல்வாதி தமது காலடிக்கு வரவேண்டும், தன்னுடன் தனியே உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அநேகமானோர் தத்தமது சொந்த லாபங்கள் கருதிய கோரிக்கைகளை முன் வைத்துப் பேரம் பேசுகின்றனர். அரசியல்வாதி 'ஆம்' என்று ஏற்றுக் கொண்டால் அடுத்த தினம் சமூகத்தின் நன்மைக்காகக் குறித்த அரசியல்வாதியுடன் இணைந்து விட்டேன் என்று கதை விடுகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு ஒரு குறித்த அரசியல்வாதியுடன் இணைபவர் தனது கோரிக்கை நிறைவேறாதவிடத்து அதே கோரிக்கையுடன் வேறு ஓர் அரசியல்வாதியுடன் சேர்ந்து கொள்கிறார். தான் ஏற்கனவே இணைந்திருந்த அரசியல்வாதி சமூகத்துக்குச் சேவையாற்றாமல் சொந்த லாபங்கருதியே செயற்படுகிறார் என்றும் குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்.

கற்ற சமூகம் என்று ஒரு பிரிவினர் இந்த சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் பக்கம் தலை வைத்துப் படுப்பது கூடக் கிடையாது. அரசியல்வாதியைக் கண்டால் பிடிக்காது. சிலவேளை தனது கல்வித் தராதரமோ, அதற்குக் கீழோ அல்லது அதற்கு மேலோ கொண்டிருக்கும் ஓர் அரசியல்வாதியை அவருக்குப் பிடிக்காமல் இருப்பதற்குக் காரணம் பொறாமை. இவர்கள் அரசியல்வாதியின் மேல் குற்றப் பத்திரிகை வாசிப்பதையே வாழ் நான் பூராகவும் செய்து கொண்டிருப்பார். சமூக அக்கறையுடன் ஒரு விடயத்தை நேரடியாகச் சுட்டிக் காட்டவோ தமமைப்போன்ற ஓர் அணியுடன் சென்று சமூகக் குறைகளை அரசியல்வாதியிடம் எடுத்துச் சொல்லவோ இவர்கள் ஒரு போதும் முனைந்தது கிடையாது.

தேர்தல் வந்து விட்டால் புதிய இணைப்புகள் நிகழும் அதேயளவு புதிய பிணக்குகளும் ஏற்படுகின்றன. ஒரே குடும்பம் இரண்டாக சில வேளை மூன்றாகப் பிரிந்து நின்று சண்டை பிடிக்கிறது. சகோதரர்கள் கூடப் பிரிந்து நிற்கிறார்கள், சண்டையிடுகிறார்கள். அந்தச் சண்டை பொலிஸ் நிலையம், நீதி மன்றம் என்று நீண்டு செல்கிறது. வாழும் காலத்தில் பாதியை பிணக்குகளிலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு சிலர்; வருடக் கணக்காக மற்றவரின் முகத்தைக் கூடப் பார்ப்பதுமில்லை. ஸலாம் சொல்லிக் கொள்வது கூட இல்லை.

எந்த அரசியல்வாதிகளுக்காக இவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்களோ அவர்கள் தேர்தல் முடிந்ததும் ஒரே வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள், நட்புப் பாராட்டுகிறார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் ஒரே அணியில் ஒன்று பட்டு விடுவதும் உண்டு.

எந்த ஒரு வாகன விபத்து நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் சண்டையிட்டாலும் முடிவு அடுத்த கட்டம் என்ன செய்வது என்று யோசிப்பதுதான். நடந்து முடிந்து விட்ட பிறகு சண்டையை நீட்டுவதால் பிரயோசனம் எதுவுமில்லை.

வாகனங்களைப் பழுது பார்த்தெடுத்து மீண்டும் வழமைக்குத் திரும்பி விடுவதுபோல தேர்தல் முடிந்த கையோடு பழைய நிலைக்குத் திரும்பும் பக்குவம் நமக்குள் வரவேண்டும்.

ஸலாத்தைப் பகிர்ந்து கொள்வதால் எப்போதும் நஷ்டம் வருவதில்லை!

(மீள்பார்வைக்கு எழுதியது)

Tuesday, July 14, 2015

நோன்புக் குழந்தைகள்!


 - 23 -

எனது மகளின் பிறந்த தினம் இம்முறை ரமளானுக்குள் வந்தது.

ரமளானுக்குள் வந்திருக்கா விட்டாலும் கூட ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. வீட்டிலே சமைக்கப்படும் விசேட உணவோடு அல்லது அன்றைய இரவு ஒரு மத்திய தர உணவுச்சாலை உணவுடன் அது முடிந்து விடும். இம்முறை எனது மகள் இரண்டு நண்பிகளை அன்றைய தினம் இஃப்தாருக்கு அழைத்திருந்தாள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது உறவுகளான சிறு பெண் பிள்ளையுடன் வந்திருந்தார்கள்.

அப் பெண்பிள்ளைகளுள் ஒருத்திக்கு வயது பத்து. மற்றையவளுக்கு வயது ஐந்து. இருவரும் நோன்பு நோற்றிருந்தார்கள். இரண்டும் நடைபாதையில் காலுக்குள் அகப்பட்டு விட்டால் நசுங்கி விடும் ரகம். பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் முகங்கள், உலர்ந்து போயிருந்த போதும் கூட. கட்டைக் கவுண் உடுத்தி தலையில் அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஸ்கார்ஃப் அணிந்திருந்தார்கள்.

அழகான பூக்களைப் பார்க்கும் பரவசத்துடனும் நெகிழ்ந்து உருகியபடி பதைபதைக்கும் நெஞ்சுடனும் அவர்கள் இருவரையும் கொஞ்ச நேரம் உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

தென்னிலங்கையின் கால நிலை இம்முறை பரவாயில்லை. அடிக்கடி மழை பெய்கிறது. கர்ணகடூர வெய்யில் சென்று விட்டது. ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெய்யில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கச்சான் வெப்பக் காற்று வேறு வீசி உடலில் உள்ள நீர்த்தன்மையை உறிஞ்சி இழுத்துச் செல்லும் நிலையில் அந்தப் பகுதிகளில் நோன்பு நோற்க வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுகளைப் பற்றி எனது சிந்தனை நகர்ந்தது.

பிஞ்சுக் குழந்தைகளுக்கு மதிய உணவும் தேநீரும் கொடுப்பது சிரமம் என்பதற்காக எந்தப் பெற்றோரும் அவர்களை நோன்பு நோற்க நிர்ப்பந்திப்பதில்லை. மார்க்கக் கடமை, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை வேண்டிச் செய்யப்படும் கடமை என்பதால் அதைப் பழக்கப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் நோன்பு நோர்க்க வைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 30 வீதமான முஸ்லிம் குடும்பங்களின் வறுமை பிள்ளைகள், குஞ்சு குருமான்களை நோன்பு நோர்க்கத் தள்ளி விடுகிறது என்பது பேச விரும்பாத விடயமாக இருந்த போதும் உண்மை என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

'ஓடி... எங்கட ரிஸானா நோம்பு புடிக்கோணுமென்டு சவருக்கெழும்பி சண்டையல்லியா.. இனிப் புடிக்க விட்டய்தான்...' என்று உம்மாமார் நண்பிகளுடன் பேசிக் கொள்ளவும் 'அவருக்கு நாலு வயசுதான் ஆஜி.. நோம்பு புடிக்கிறான்டு கேட்டன்.. ஓன்டாரு.. சரி பிடிங்கன்னு உட்டுட்டன்..' என்று தந்தைமார் நண்பர்களுடன் கலந்துரையாடவும் பிஞ்சுகளின் நோன்பு முக்கியத்துவம் பெற்றும் விடுகிறது.

எல்லாமே சிறப்பு, எல்லாமே பக்தி பூர்வமானவையாகி விட்ட நமது ரமளான் சிறப்புத்தான். அதில் என்ன சந்தேகம் இருக்கிறது!

குழந்தைகளின் உலகத்தில் நின்று பார்க்கப்படாத பல விடயங்கள் இருக்கின்றன. இன்றைய கல்வி அத்தகைய ஒன்றே. குறிப்பாக 5ம் தர ஸ்கொலர்ஷிப் பரீட்சை பிள்ளைகளுக்கானது அல்ல, தாய்மாரின் கௌரவத்துக்கானது என்ற கருத்துப் பரவலாக இருக்கிறது. பிஞ்சுகளின் நோன்பும் அப்படியான ஒரு கட்டத்துக்கு நகர்கிறதா என்பதைப் பற்றியும் அதிகமாக அல்லாமல் கொஞ்சமாகச் சிந்தித்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

ஒரே நோய் தாக்கிய இருவர். அந்த நோய்க்குரிய மருந்து ஒருவருக்குச் சுகப்படுத்தக் கூடியதாகவும் மற்றவருக்கு வேறொரு நோய்க்குத் திருப்பக் கூடியதாகவும் அமைந்து விடுவதுண்டு. இது ஒவ்வொருவரின் உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்தது. வைத்தியர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இது அல்லாஹ் ஏற்படுத்தியது.

நோன்பு என்பது பொதுவானதுதான். வறுமைக்கோட்டுக்கு மேலேயுள்ள குடும்பங்களின் குழந்தைகளின் உணவுக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பத்தின் உணவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நமது குழந்தைகள் வாழும் சூழல், அவர்களது உணவு, அவர்களது உடற்பலம் ஆகியன முழுநாளும் பசித்தும் தாகித்தும் இருப்பதற்கு சக்தி பெற்றவையா என்பதிலும் அவர்கள் நோன்பு நோற்று விட்டார்கள் எனின் அவர்களது நடத்தையை, போக்கை அவதானித்துக் கொள்வதிலும் நமது கவனம் இருந்தாக வேண்டும்.

நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ரமளான் மாதத்தில் ஸஹருக்கு எழும்பி நோன்பு நோற்க ஆர்ப்பாட்டம் பண்ணிய எனது மூத்த தங்கைக்கு அப்போது வயது பத்து. சாப்பிட்டு விட்டுப் படுத்த ஒரு மணி நேரத்தில் அனுங்கத் தொடங்கினாள். உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற தந்தையார் பெரிய வைத்தியசாலை மாறி அடுத்த நாட்காலை தங்கையின் உயிரிழந்த உடலோடு வந்து சேர்ந்தார். நாங்கள் உண்ட அதே உணவு தங்கைக்கு அவ்வேளை ஒத்துக் கொண்டிருக்கவில்லை.

கடந்த வருடம் நமது நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் நோன்பு நோற்ற ஒரு குழந்தை பிற்பகலில் நீர் அருந்தக் கேட்டதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நோன்பு துறந்து விடலாம் அது வரை தூங்கு எனப் பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டதாம். அக்குழந்தை நோன்பு நோற்க எழுந்திருக்கவில்லை என்ற ஒரு காது வழிச் செய்தி எனக்குக் கிடைத்திருக்கிறது.

குழந்தைகளை நோன்பு நோற்கப் பழக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நோன்பு நோற்க வைக்கப்பட்டால் அவர்களது உலகத்தில் நின்று அவர்களைக் கவனியுங்கள் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

நன்றி - மீள்பார்வை