Tuesday, September 23, 2014

மன்னரே முதல்வர்!


அங்கம் - 3

அண்மையில் எனது கலாசாலைத் தோழர் ஒருவரைச் சந்தித்த போது ஒரு சிங்கள நாவல் பற்றி விதந்தோதினார். நாட்டுக் கோழிகளை வைத்துத்தான் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது பேசுவது பக்கா அரசியல்.

நாட்டுக் கோழிகளூடாக இலங்கை அரசியலைப் பேசும் அந்த நாவலைத் தான் தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆவலில் இருப்பதாகச் சொன்னார். நாவலாசிரியர் மறைந்து விட்ட போதும் கதை இன்னும் வாழுகிறது. மொழி தாண்டிப் பறக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களும் கவிஞர்களும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் பேசுவது ஒன்றும் புதிய விடயமல்ல.  மக்கள் முன் வைத்தாக வேண்டிய தனது சிந்தனையை, தனக்கேற்பட்ட தெளிவை நேரடியாகச் சொல்லாமல் குறியீடுகள் மூலமும் உருவகங்கள் மூலமும் சொல்வது ஒன்றும் அதிசயமான விடயமில்லைத்தான். ஆனால் பயன்படுத்தப்படும் உத்திகள் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமையுமிடத்து அது உரிய காலத்தின் நிலையை எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ளக் கூடிய வரலாற்று ஆவணமாக மாற்றம் பெற்று விடுகிறது. மட்டுமன்றி ஆதாரமாகவும் நல்லது அல்லதுகளையும், நல்லவர் அல்லவர்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் தந்து விடுகிறது.

1945ம் ஆண்டு ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை' இத்தகைய ஒரு நாவல். மேற்கத்தேய உலகின் அதிசிறந்த நாவல்களில் ஒன்றாகவும் 1923 முதல் 2005 வரையான காலப் பகுதியின் 100 சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் இந்நாவல் கருதப்படுகிறது. பன்றிகளை வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மக்கள் புரட்சி என்பது அதன் தலைவர்களாலேயே சிதைக்கப்படுவதை எடுத்துச் சொல்கிறது. ஜோஸப் ஸ்டாலினின் காலம் குறித்துக் கதை பேசுகிறது.

உலகின் எல்லா மொழிகளிலும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் ஏராளமான சிறு கதைகளும் எழுதப்படுகின்றன. நேரடியாகப் பேச முடியாதவற்றை மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தி மிக அழகாகச் சொல்லப்படும் இக்கதைகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு குவைத்திய சிறுகதை எழுத்தாளரான யூஸூஃப் கலீபா எழுதிய சின்னஞ் சிறு கதைகள் சிலவற்றைப் படிக்க முடிந்தது. அரேபிய அரசியல், அரேபியர் வாழக்கை போன்றவற்றையும் பொதுவான மனித இயல்புகள் ஆகியவற்றையும் குறித்து ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளுக்குள் அவரது கதைகள் பேசுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையும் நமது சிந்தனையை விரிவாக்கிக் உள்ளார்ந்த காட்சிப் புலனை விரித்துச் செல்லும் சக்தி மிக்கவையாக விளங்குகின்றன.

அறபியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதை (இதைக் கதை என்று சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்) ஓர் உரையாடல். மகன் ஒரு வார்த்தை பேசுகிறான், தந்தை ஒரு வார்த்தை பேசுகிறார். கதை முடிந்து விடுகிறது.

'தந்தையே, நான் வாங்கிய ஓவியத்தில் நபிகளின் திருமுகத் தோற்றம் தெரிவதாக அவர்கள் சொல்கிறார்கள்!'

'இறைவன் உனக்கு அருள்பாலிக்கட்டும் மகனே, அதை கவர்னரின் படத்துக்கு இடது புறம் கொளுவி விடு!'

'ஓர் அராபியச் சட்டம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த இரண்டு வசனங்களும் பேசும் விடயம் மிகவும் ஆழமானது. அறேபிய அரசியலையும் அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் மார்க்கத்தையும் சுருக்கமாகவும் இறுக்கமாகவும் தெளிவாகவும் இதைவிட அழகாகச் சித்தரிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இன்னும் இதை விளக்கமாகச் சொல்வதானால் இறை தூதரும் இஸ்லாமும் மன்னர்களின் ஆட்சிக்கு முன்னால் இரண்டாம் தரத்திலேயே பார்க்கப்படுகின்றன என்பதை மாற்று வார்த்தைகளில் இந்த உரையாடல் அல்லது கதை பேசுகிறது. இங்கு மன்னர் என்று சொல்லாமல் ஆளுனர் என்றும் நபிகளாராகவே இருந்தாலும் கவர்னர் இருக்கும் இடத்திலல்லாமல் கவர்னருக்கு வலப்புறத்தில் கூட இல்லாமல் இடப்புறத்துக்குத் தள்ளப்படுவதன் மூலம் எல்லாமே மன்னர்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது இக்கதை.

அறபிகளின் அரசியலை மட்டுமல்ல, உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பதைச் சற்று ஆழச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி ஒரு கதை தமிழ் மொழியிலோ அல்லது அறபு அல்லாத வேறொரு மொழியிலோ வந்திருந்தால் இந்நேரம் எழுதியவரின் கதை கந்தலாகி இருக்கும். கதை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக கதையில் பயன்படுத்தப்பட்ட வாக்கியங்களில் சர்ச்சனையும் அர்ச்சனையும் தொடங்கி ஒரு யுத்தமே ஆரம்பமாகியிருக்கும். நல்ல காலம், ஓர் அறபியே எழுதியிருக்கிறார்.

இல்லையென்றால் எழுதியவனை ஊர்விலக்குச் செய்வதற்கும் மார்க்கத்திலிருந்த விலக்கி வைப்பதற்கும் நிறையப் பேர் பத்வாப் பைகளைத் திறந்திருப்பார்கள்!

இதை முன் வைத்து எழுதியது கூட அமெரிக்கச் சதி என்று சொல்லாமல் இருந்தாலே உத்தமம்!

(மீள்பார்வை பத்திரிகைப் பத்தி)

Sunday, September 14, 2014

நூர்தீன் என்றொரு இசைக் காற்று!


(“இசைக்கோ” அல்ஹாஜ் என்.எம். நூர்தீன் அவர்கள் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வுலகைப் பிரிந்தார். ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
2008ம் ஆண்டு அன்னாரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை இது. அன்னாரைப் பற்றிப் பலரால் எழுதித் தொகுப்பட்ட நூலில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அன்னாரது இழப்பு மிகவும் மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல கலைஞனாக, ஒரு சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்து மறைந்து விட்டார் அல்ஹாஜ் நூர்தீன் அவர்கள்.)

அல்ஹாஜ் நூர்தீனுடனான எனது முதல் சந்திப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நிகழ்ந்தது. எண்பதுகளின் நடுப் பகுதியாக அது இருக்கும். அப்போது அங்கு அறிவிப்பாளனாக நான் இருக்கவில்லை. அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பங்கு கொள்வதற்கும் சென்று வந்த காலப் பகுதி அது. அவ்வாறான வேளைகளில் கலைஞர்ளைச் சந்திப்பது கூட மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது.

இசைக் கலைஞராக மாத்திரமே நான் அறிந்திருந்த நூர்தீன் ஹாஜியாரை உழைத்து முன்னேறி ஓர் ஆல விருட்சமாக இருப்பவர் என்று பின்னாளில் எனக்குச் சொன்னவர் என் மனைவியின் தந்தையார்.   எனக்கு அவர் அறிமுகமான காலப் பகுதிக்கும் என் மாமனார் தந்த தகவலுக்குமிடையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இடை வெளி இருந்தது. இந்த நீண்ட காலப் பகுதிக்குள் ஒரு சந்தர்ப்பத்திலேனும் செல்வப் பகட்டையோ அதற்கேயுரிய அலட்சியத்தையோ அவரிடம் நான் கண்டதில்லை. ஒரு மெல்லிய காற்றுப் போல வந்து வெளியேறிப் போகும் மனிதராக அவரை நான் அப்போது அடையாளம் கண்டிருந்தேன். ஆனால் அவசியமாயின் அவர் சூறாவளியாகவும் இருப்பார் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் அறிந்து கொண்டேன். அது பற்றிப் பின்னால் சொல்கிறேன்.

நூர்தீன் ஹாஜியுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை சென்னையில் 1999ல் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஏற்படுத்தித் தந்தது. அங்குதான் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தோற்றுவிக்கப்பட்டது. நிதிச் செயலாளராக அவரை ஏகமனதாக நாம் தேர்ந்தெடுத்தோம். இலங்கை திரும்பியதும் வரலாற்றுப் புகழ் மிக்க (எங்களைப் பொறுத்தவரை) அதன் முதலாவது கூட்டத்தை அவருக்குச் சொந்தமான மருதானை - பவுன்டைன் ஹவுஸ் வீதியில் உள்ள அவரது வீட்டில் நடத்தினோம். 2002ல் கொழும்பில் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய மாநாட்டுக்கான முதலாவது திட்டமிடல் கூட்டம் அதுவாக இருந்தது. ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த முகவரியே ஆய்வகத்தின் அலுவலக முகவரியாகவும் இருந்தது.

கொழும்பில் நடைபெற்ற மாநாடு அவருடனான நெருக்கத்தை அதிகரித்தது, எங்கள் அனைவரிலும் மூத்தவராக அவர் இருந்தார். அவரை சிரமப்படுத்தக் கூடாது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். ஆனால் ஓர் இளைஞனின் உற்சாகத்தோடு அவர் தோள் கொடுத்து நின்றார். இம்மாநாட்டில் முக்கியமான சில பணிகளை அவர் ஆற்றினார்.

மாநாட்டில் கலைஞர்களுக்கு வழங்குவதற்கான விருதுச் சின்னங்களை வடிவமைத்துத் தருவதற்கு கொழும்புக் கோட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தோம். கோட்டையில் சில பாதைகளில் எவ்வித வாகனமும் செல்ல முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அப்படியான ஓரிடத்தில்தான் அந்த நிறுவனம் அமைந்திருந்தது. பொதுவாக எந்தவொரு விடயத்துக்குச் செல்வதாக இருந்தாலும் எந்தத் தீர்மானத்தை எடுப்பதானாலும் அமைப்புக் குழு அங்கத்தவர்களில் நால்வருக்குக் குறையாமல் பங்கு கொள்வது வழக்கம். சில வேளைகளில் தனித்தனியே வௌ;வேறு விடயங்களுக்கு ஓடித்திரிய வேண்டிய கட்டாயங்களும் ஏற்பட்டதுண்டு. விருதுகளின் மாதிரி வடிவங்களை எடுத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சென்று திரும்பி காரியாலய அறைக்குள் நுழைந்த நூர்தீன் ஹாஜியைக் கண்டு அதிர்ந்து விட்டேன். திடீர் மழைக்குள் அகப்பட்டு நனைந்து கொடுகியபடி பொதியைச் சுமந்து வந்து அவர் நின்றிருந்ததைக் கண்டதும் என் மனம் மிகுந்த சஞ்சலத்துக்குள்ளானது. அந்தக் காட்சி இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. மாநாடு சம்பந்தமாக யாத்ரா 18ல் நான் எழுதிய கட்டுரையிலும் இந்த விடயத்தை நான் பதிவு செய்திருக்கிறேன்.

இம்மாநாட்டில் அத்தனை கலைஞர்களுக்கும் கௌரவம் செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கிருந்தது. ஆனால் இலக்கியவாதிகளின் பட்டியல் மிக நீண்டதாக இருந்ததாலும்  வரையறுக்கப் பட்ட பணத் தொகைக்குள் யாவற்றையும் செய்ய வேண்டியிருந்ததாலும் இசைக் கலைஞர்களையும் நாடகக் கலைஞர்களையும் தவிர்ப்பது என்று முடிவெடுத்தோம். இசைக் கலைஞர்களுக்காக நூர்தீன் ஹாஜி போர்க் கொடி தூக்கினார். சாதக பாதகங்களை அவருடன் அலசி அசாத்தியம் பற்றிய புரிதல் ஏற்பட்ட போது இசையரங்கை தன்னிடம் ஒப்படைத்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். அதன் விளைவாக எங்களுக்கு வேறு காரியங்களில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதை விட முக்கியமான விடயம் நூர்தீன் ஹாஜி தனது சொந்தச் செலவில் இசைக் கலைஞர்களுக்கு ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தார் என்பதுதான். இதனை அந்த அரங்குக்குள்ளேயே அவர் நிறைவேற்றித் தந்தார். இசைத் துறையோடு ஈடுபாடு கொண்ட நூர்தீன் ஹாஜி போல நாடகத்துறைக்கு ஒருவர் இருந்திருந்தால் நாடகக் கலைஞர்களையும் கௌரவித்திருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. அது ஒரு கவலையாக இன்றும் மனதுக்குள் உட்கார்ந்திருக்கிறது.

Thursday, September 11, 2014

எழுத்துச் சேவை


அங்கம் - 2

ஓர் எழுத்தாளராக இருப்பதில் பல அசௌகரியங்கள் உள்ளன.

விடிந்தால் இன்ன இன்ன வேலைகளை முடித்தாக வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளை இரவு எட்டு மணிக்குப்பிறகு ஓர் அழைப்பு வரும். நண்பரோ உறவினரோ ஆரம்ப வகுப்புகளில் கற்கும் தமது பிள்ளைகளுக்கு நாளையன்று நடக்கும் பேச்சுப் போட்டிக்கு ஒரு மூன்று நிமிடப் பேச்சு எழுதித் தர வேண்டும் என்ற வேண்டு கோள் அதிலிருக்கும். பெரியவர்களுக்குக் காரணம் சொல்லி மளுப்பி விடுவோம் என்பதால் அநேகமாகப் பிள்ளைகளே அழைப்பை எடுத்து 'அங்கள்....!' என்று ஆரம்பிக்கும். நாம் மடிந்து விடுவோம்.

நேர்த்தியாக விடயத்தைக் கோத்து எழுதுவதற்கு ஓர் எழுத்தாளராலோ ஊடகத்துறை சார்ந்த ஒருவராலோதான் முடியும் என்பதைச் சமூகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. இதனால் பொதுநலக் கோரிக்கைகள், தன்னிலை விளக்கம் போன்றவற்றை எழுதுவதற்கு எழுத்தார்களை மக்கள் நாடுகிறார்கள். ஒரு விடயத்தை எழுத்தாளன் உரிய வார்த்தையில் சரியாகச் சொல்லுவான் என்பதைச் சமூகம் தெரிந்து வைத்திருந்தாலும் அவனைப் பயன்படுத்துவது அநேகமாகவும் நான் மேற்சொன்னவை போன்ற விடயங்களுக்கு மாத்திரம்தான். கிட்டத்தட்ட பார்த்துக் குரைக்கும் ஒரு நாய்க்கு எறிவதற்கு தெருவில் சட்டென ஒரு கல்லைத் தேடுவோமே.. அந்தக் கல்லின் கதிதான் எழுத்தாளரின் கதி!

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு முதியவர் வந்தார். காதி நீதிமன்றுக்கு தனது பேரன் சார்பில் ஒரு முறைப்பாடு எழுதித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான்கைந்து ஆவணங்கள், சில வெள்ளைத் தாள்கள் கையில் இருந்தன. அவரை அதற்கு முன்னர் நான் கண்டதே கிடையாது.

அவரை அமர வைத்து விட்டு, 'என்னை உங்களுக்கு எப்டித் தெரியும்? என்று கேட்டேன். அவர் வேறு ஒரு நபரிடம் சென்றதாகவும் அவர் இன்னொரு நபரிடம் செல்லக் கேட்டதாகவும் அந்த நபர் தன்னால் சிங்களத்திலேயே எழுத முடியும் என்று சொல்லித் தமிழில் எழுதுவதானால் இன்னாரைச் சந்தியுங்கள் என்று என்னைச் சொல்லியிருக்கிறார்.

விபரத்தைக் கேட்கப் பெரியவர் சொல்லத் தொடங்கினார். நான் குறிப்பெடுத்துக் கொண்டேன். அடுத்த தினம் பிற்பகல் பெரியவருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதால் காலையில் அமர்ந்து எழுதத் தொடங்கினேன்.

' .............................. என்ற முகவரியில் வசிக்கும் ஜோன் ஆசீர்வாதம் என்ற முகம்மது ஷாமில் (அ.அட் இல.....) ஆகிய நானும் ....................... என்ற முகவரியில் வசித்த பாத்திமா ருக்ஷானா (அ.அட்டை இல ........) என்பவரும் ஒருவரை ஒருவர் விரும்பியிருந்த காரணத்தால் பெரியோர் முன்னிலையில் நான் புனித இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி எனது பெயரை முகம்மது ஷாமில் என்று மாற்றிக் கொண்டேன். இரண்டு குடும்பத்தினரதும் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி ..........ம் திகதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் .......... என்ற மணப்பெண் வசித்த முகவரியில் வாழ்ந்து வந்தோம்.

மூன்று வருடங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி என்னுடன் வாழ்ந்து வந்த எனது மனைவி திடீரென ........ம் திகதியிலிருந்து காணாமல் போய்விட்டார். அவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவருடன் சென்று வாழ்வதாகப் பின்னர் தெரிய வந்ததையடுத்து ................ம் திகதி .......... பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கிறேன். முறைப்பாட்டு இல.....................

கடந்த மூன்று வருடங்களான எனது மனைவி வேறு ஒருவருடன் சென்று வாழ்தனால் இனிமேல் அவருடன் எனது வாழ்க்கை இல்லை என்பதாலும் எனது எதிர்காலம் பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் எனது மனைவியிடமிருந்து விவாக ரத்துப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.'

இந்தமாதிரியான காரணம் பற்றியோ வேறு காரணங்களை வைத்தோ விவாக ரத்துப் பெற்றுத் தரக் கோரும் கடிதம் எழுத என்னிடம் யாரும் வரவேண்டாம் என்று இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, August 28, 2014

மொழியாள்கை


மொழியாள்கை

தஃலிமுல் குர்ஆன் அல்லது தத்ரீஸூல் குர்ஆன், அதிலிருந்து அல்குர்ஆனின் இடது புறமாக ஆரம்பிக்கும் 5 ஜூஸ்உ களின் தொகுப்பு, பிறகு முழு குர்ஆன், தொழுகை ஷாபிஈ, மவ்லூதுகள் ஆகியவற்றுடன் குர்ஆன் பாடசாலை இஸ்லாமியக் கல்வி முடிவடைய சாதாரண தரம் வரை படிக்கும் பளீல் மௌலவியின் 'சாந்தி மார்க்கம்' நூலுடன் ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் இஸ்லாம் பற்றிய கல்வி பூரணத்துவம் பெற்றதாகக் கருதப்பட்டது.

இன்று சுருங்கிய உலகு, அரபு நாடுகளுடனான தொடர்பு, சமூகங்களின் வாழ்வியல் மேம்பாடு, சிந்தனை மேம்பாடு, பிறதேசக் கல்வி என்று ஒரு பரந்த வெளிக்கு நமது சமூகம் வந்துவிட்டது. இஸ்லாமிய வரலாறு, சட்டவாக்கம், பொருளாதாரம், நபிகளாரினதும் தோழர்களினதும் வாழ்க்கை முறைகள் என்று எல்லாத் துறைகளையும் நம்மவர்கள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாந்தி மார்க்கத்துடன் இஸ்லாம் பூரணத்துவம் பெற்ற காலத்தில் அமைதியாக வாழ்ந்த இந்த சமூகம் இன்று அறிவியலில் விரிவான விளக்கங்களை வைத்தே தன்னைப் பிரித்து மோதிக் கொண்டிருக்கிறது. நான் பேச வருவது இந்த விடயம் அல்ல.

இஸ்லாம் குறித்த, இஸ்லாமிய சிந்தனையாளர்கள் குறித்த, அவர்களது சிந்தனைகள் குறித்த, உலகளாவிய இஸ்லாமிய அரசியல் குறித்த, நவீன சட்ட விளக்கங்கள் மற்றும் ஆய்வுகள் குறித்த பலநூறு நூல்கள் இன்று கற்றறிந்த நமது சகோதர்களால் எழுதப்பட்டும் மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றன. அவை விற்பனைக்கிடப்பட்டும் உள்ளன.

கல்வி என்பது தேடி அடைய வேண்டியது என்பது உண்மை. பலர் இன்று அவற்றைத் தேடிப் படிக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இவ்வாறு எழுதப்படும் நூல்கள் சாதாரணப் பொதுமகனின் வாசிப்புக்கு, அவனது புரிதலுக்கு உகந்தவையாக இருக்கின்றனவா என்ற ஒரு பலமான கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. வலைப் பூக்களில், சமூக வலைத்தளங்களில், பத்திரிகைகளி கூட இவ்வாறான 'படித்தவர்'களுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்ட மொழி நடையுடன் பல ஆக்கங்களை நான் பார்க்கிறேன்.

சாதாரணப் பொது மகனை விட படித்தவர்களே 'ஈகோ' மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் எழுதியதை மற்றொருவர் கண்டு கொள்வதுமில்லை, அது குறித்துப் பேசுவதுமில்லை, மற்றொருவருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. ஆக இவ்வாறான பல நல்ல விடயங்கள் ஒரே வட்டத்துக்குள் சுழல்வதும் சாதாரண மக்கள் சமூகத்தைச் சென்றடைய முடியாமலும் இருப்பது குறித்து நாம் கவனம் செலுத்துவதுமில்லை.

சாந்தி மார்க்க இஸ்லாத்தைப் பூரணப்படுத்தியிருந்த எனக்கு அடுத்த கட்ட நகர்வைத் தந்தவை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் குத்பாப் பிரசங்கங்களின் தொகுப்பு நூல்கள். மிகச் சிறிய அளவில் அந்நாட்களில் பகுதி பகுதியாக அவை சிறு நூல்களாக விற்பனைக்கிருந்தன. இப்போது முழுத் தொகுப்பாகக் கிடைக்கிறது.  அவற்றிலிருந்து இஸ்லாம் குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்ள எந்த ஒரு சாதாரணப் பொது மகனாலும் முடியும். மிக இலகுவான முறையில் குழப்பமற்ற மொழி நடையில் அந்தத் தொகுப்பு அமைந்திருப்பதே அதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

அந்நாட்களில் புதிதாக இஸ்லாத்துக்குக் கொண்டு வரப்பட்டவன் பற்றிய ஒரு கதை கிராமங்களில் நிலவி வந்தது. தர்மகர்த்தாவால் இஸ்லாம் மார்க்கம் அறிமுகம் செய்யப்பட்டு 'கத்னா' செய்த பிறகு அவனுக்கு இஸ்லாம் சொல்லிக் கொடுக்க முஅத்தினாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான. பள்ளிவாசலுக்குள் முஅத்தினாரின் மேற்பார்வையில் அவனது வேலை தொழுவது மட்டுமே. தஹஜ்ஜத் தொழுகையிலிருந்து முன் பின் சுன்னத்துத் தொழுகை, மேலதிக சுன்னத்துத் தொழுகைகள் ஈறாக இரவில் வித்ருத் தொழுகையில் அவனது இஸ்லாம் தினமும் முடிவடையும்.

இஸ்லாம் மார்க்கத்துக்கு வந்த அவன் மூன்றாம் தினம் எங்கிருந்து வந்தானோ அங்கேயே போய்ச் சேர்ந்து விட்டான். 'ஏன் திரும்பி வந்து விட்டாய்?' என்று அவனிடம் அவனது நண்பன் ஒருவன் கேட்ட போது,

'இஸ்லாத்தில் இருப்பது லேசான வேல இல்ல!' என்று பதில் சொன்னானாம்.

(மீள்பார்வை இதழ் - 300 -பத்திரிகை பத்தித் தொடர் - 01)

Thursday, August 21, 2014

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்தவன்!


முகம்மத் அல் அரீர் தனது குழந்தையுடன்

- ரீஃபாத் அல் அரீர் -
தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
-------------------------------------------

எனது சகோதரர் முகம்மத் அல் அரீர் தனது வீட்டில் இருக்கும் போது இஸ்ரேலிய வான்படைத் தாக்குதலால் உயிரிழந்தான். 31 வயதான அவன் இரண்டு பிள்ளைகளின் தந்தை.

மூன்று தினங்களாக இரத்தம் வெளியேறி இறந்தானா அல்லது வெடி குண்டின் அதிர்வினால்  அல்லது அதன் சப்தத்தினால் இறந்தானா அல்லது இடிபாடுகளுள் சிக்கி இறந்தானா அல்லது இவையெல்லாம் சேர்ந்து அவன் மரணிக்கக் காரணமாய் அமைந்தனவா என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

உண்மை என்னவெனில் நான் என் சகோதரன் முகம்மதை இழந்து விட்டேன்!

நான்கு வயதுடைய ரனீம், ஒரு வயது நிரம்பிய ஹம்ஸா ஆகிய அவனுடைய அழகழகான இரண்டு பிள்ளைகளும் தங்களது தந்தையை நிரந்தரமாகவே இழந்து விட்டனர். எங்களுடைய ஏழு வீடுகள் கொண்ட மாடி வீட்டையும் நாங்கள் இழந்து விட்டோம்.

நாலடுக்கு மாடிகள் என்ன... ஆயிரக் கணக்கான மாடிகள் இப்போது இங்கு அழிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் என்றைக்குமே கண்டிராத கொடூர ஆக்கிரமிப்பின் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களது பெற்றோரின் பிள்ளைகளுக்குள் நான் இரண்டாவது நபர். ஒரு பெண், நான் ஆண்களுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்தவன் முகம்மத். எனது பழைய ஞாபகங்களுக்குள் முகம்மத் பிறந்த நிகழ்வு மறக்க முடியாதது. அப்போது எனக்கு நான்கு வயது.

எனது சகோதரனுக்கு முகம்மத் என்று பெயர் வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போது நான் அழுது ஆகாத்தியம் பண்ணி அதை மறுத்தேன். 'அவனுக்கு முகம்;மத் என்று பெயர் வைக்கக் கூடாது, ஹம்தா என்றுதான் பெயர் வைக்க விரும்புகிறேன்... ஆம் ஹம்தா!'

அவனை யாராவது முகம்மத் என்று அழைத்தால் எனது முழு மூச்சையும் பலத்தையும் ஒன்று திரட்டிக் கோபத்தில் சத்தமிடுவேன். எனது எதிர்ப்புக் கணக்கில் கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படும் வரை நான் அப்படித்தான் நடந்து கொண்டேன். பிறகு பலரும் அவனை ஹம்தா என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். இந்தச் சொல்லும் முகம்மத் என்ற பெயரைச் சார்ந்ததுதான்! எல்லோரும் அவனை ஹம்தா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் எனது கோபத்தைச் சட்டை செய்யாமல் எனது தந்தையார் மட்டும் அவனை முகம்மத் என்றே அழைத்து வந்தார்.

எப்போதும் ஹம்தாவின் நலனே எனது நோக்கமாக இருக்கும். அவன் எனக்கு மட்டும் சொந்தமானவன் போல... இன்னும் சொல்வதானால் அவனது பெயர் ஹம்தா என்று நிரந்தரமாக அழைக்கப்பட வேண்டும் என்றும் அவனை எனது மகனைப் போலவும் பார்த்துக் கொண்டேன்.

1983ல் பிறந்த ஹம்தா தயக்க சுபாவம் கொண்டவனாக இருந்த போதும் நகைச்சுவை உணர்வுள்ளவனாகவும் துணிவுள்ளவனாகவும் இருந்தான். அதிகமாகவும் அமைதியாக இருக்கும் ஹம்தா பேச ஆரம்பித்து விட்டால்  அவனை மிஞ்ச முடியாது.

2000 ம் ஆண்டு உருவான இன்திபாதாவின் போது அவனுடைய வாழ்வில் உண்மையான ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவனது பாடசாலை நண்பர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட போது மரண ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் பிரதான பாத்திரத்தை அவன் வகித்தான்.

மக்கள் தொடர்பாடலில் பட்டம் பெற்ற ஹம்தாவுக்கு பொது மக்களை அணுகும் முறை கைவரப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்திபாதா நடந்து கொண்டிருந்த போது காஸாவில் எங்கு சென்றாலும் 'ஹம்தா உங்கள் சகோதரனா?' என்று என்னிடம் கேட்குமளவு அவன் பிரபல்யம் பெற்றிருந்தான்.

உள்ளார்ந்த ஆச்சரியத்துடனும் ஒரு புன்னகையுடனும் தலையசைப்பேன். இவனை இந்த அளவுக்கு வேகம் கொள்ளச் செய்தது எது என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். தயக்க சுபாவமுள்ள எனது சகோதரன் ஜெரூசலத்திலும் ஷூஜாஇய்யாவிலும் பலஸ்தீனின் எல்லாப் பகுதிகளிலும் நடக்கும் அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யவும் வழி நடத்தவும் உயிர்த்தியாகிகளின் மரண ஊர்வலங்களை ஏற்பாடு செய்யவும் கவிதை நடை ஆர்ப்பாட்ட வார்த்தைகளை உரத்து ஒலிக்கவும் துணிந்து விட்டான் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டேன்.

பதினான்கு சகோதர உறவுகளுக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்தவனாகவும் படைப்பூக்கம் கொண்டவனாகவும் ஹம்தா விளங்கினான். 20 வயதை அடைந்ததும் அவனில் பெரும் மாற்றங்களையும் இயங்காற்றலையும் நான் கண்டேன். பொதுமக்கள் முன் லாகவமாகப் பேசும் அவனது திறன் காஸாவின் அல் அக்;ஸா தொலைக்காட்சியினால் நடத்தப்படும் 'நாளைய தலைமுறையை நோக்கி' நிகழ்ச்சியில் வரும் 'கார்க்கோர்' என்ற குறும்பு மிக்க கோழியின் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

Monday, August 11, 2014

எந்த புத்தர்? யாருடைய பௌத்தம்?


ஆங்கிலத்தில்  - திஸரணீ குணசேகர
சிங்களத்தில் - ஹேமன்த ரணவீர
துட்டகைமுனு மன்னன் முதலில் தனது குடும்பத்தினருடனேயே போர் தொடுத்தான். மகாவம்சம் குறிப்பிடுவது போல, தனது இளைய சகோதரன் திஸ்ஸவுக்கு எதிராக போர் தொடுத்தான். தனது முடியைத் தான் தக்க வைத்துக் கொண்டதன் பின்னரே ஏனைய சிற்றரசர்களுக்கு எதிராகவும் கடைசியாக எல்லாள மன்னனுக்கு எதிராகவும் போர் தொடுத்தான். மகாவம்சத்தின்படி இந்த சிவில் யுத்தத்தில் ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாயின. இங்கு பலியானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆயினும் தனது சகோதர மதத்தவர்களை கொடூரமாகக் கொன்றொழித்தது தொடர்பில் மகாவம்சம் எதுவும் பேசாமலேயே இருக்கின்றது.

அங்கு துட்டகைமுனு எல்லாளன் போரில் காவுகொள்ளப்பட்ட உயிர்கள் பற்றியே வருந்திநின்றான் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு பௌத்த தேரர்கள் பின்னடையவோ பயப்படவோ தேவையில்லை என மன்னன் துட்டகைமுனு குறிப்பிட்டுள்ளான். “(யுத்தத்தில் ஆட்களை கொன்றதனால்) நீங்கள் இறைசந்நிதானம் செல்லும் வழியில் எவ்வித தடையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள். ஒருவர் இறை சந்நிதானத்திற்குச் சென்றவர். அடுத்தவர் பஞ்சமா பாதகங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவர். மற்றையோர் மார்க்கத்தைப் பின்பற்றாத போலி நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் மனித மிருகங்களாகவே கருதப்படுகின்றனர்” என்றிருக்கின்றனர். என்றாலும், அவர் பதவி மோகத்தினால் கொன்றொழித்த மக்கள் தொகையை எடுத்துப் பார்க்கும்போது இச்சான்றிதழ் செயலற்றுச் செல்லும். மகாவம்சம், “ஒரு யுத்தத்தில் ஏற்பட்ட மனித உள்வேதனையை ஒரு போலிவேஷமாகவே காண்கின்றது. கொன்றொழிக்கப்பட்டவர்களை மனித மிருகங்களாகவே வர்ணிக்கின்றது. அவர்கள் இறந்ததனால் எவ்விதப் பாவமும் ஏற்படுவதில்லை. அவர்கள் நேரடியாக இறை சந்நிதிக்குச் சென்றுவிடலாம்” என்ற போலி நம்பிக்கையை விதைக்கின்றது.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் மகாநாம தேரருக்குப் பின்னணியில் சிலர் இருந்தனர். அவ்வாறு செய்வதற்குக் காரணம் இதுதொடர்பில் புத்தபெருமான் குறிப்பிடும் கருத்துக்கள் நன்கு தெளிவாகின்றமையேயாகும். ஓர் உயிரைக் கொல்வது (அதாவது மனிதனாயினும் விலங்காயினும்) மாபெரும் பாவமாகும். அப்பாவத்திலிருந்து எந்தவொரு முறையிலும் வெளியேற முடியாது.
சங்யுக்த நிகாயவில் காமினி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில், கிராமத் தலைவனான யோதஜீவ புத்தரிடம் “யுதத்த்தில் மரணிப்போர் தேவலோகம் (சுவனம்) அடைவார்களா?” எனக் கேட்கிறான். புத்தர் யோதஜீவ்வின் வினாவுக்கு மூன்று முறை பதிலளிக்காமல் மௌனம் காக்கிறார். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் காரணமாக கீழ்வருமாறு பதிலளிக்கிறார் புத்தர்.

“யுத்தத்தில் எதிரியைத் தாக்குவதற்கு முற்படுகின்றவனுக்கு எதிரியைக் கொன்றொழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், அழித்தொழிக்க வேண்டும் என்ற சிந்தனையே இருக்கும். அவ்வேளை எதிரியைத் தாக்கிக் கொன்றொழித்தால் அவர் மீண்டும் நரகத்தில்தான் பிறப்பார்…” யுத்தத்தில் இறப்போருக்கு நடப்பது இதுதான். இதில் எவ்வித மாற்றமோ சிறப்போ கிடையாது. புத்த சமயத்தைக் காப்பதற்காக இறந்துபோவோர் சுவனத்தை அடைவர் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை.

மாற்றமுடியாத இந்த இயற்கை நியதி மகாநாம தேரருக்கும் அக்காலத்தில் இருந்த தாதுசேன மன்னனின் இராஜதந்திரங்களுக்குப் பொருந்துவதாக இல்லை. தாதுசேன மன்னன் மகாநாம தேரரின் பக்தனும் மருமகனுமாவான். மாமன் மருமகனை தன் கெட்ட காலத்திலேயே தன்னுடன் இணைத்துக் கொண்டான். இலங்கை 30 வருடங்கள் பாண்டியர் வசம் மண்டியிட்டிருந்தது. கடைசி பாண்டிய அரசனைத் தோற்கடித்தே தாதுசேனன் ஆட்சிக்கு வந்தான். யுத்தத்தில் ஆட் பலி நடக்கும். சிலவேளை தாதுசேன மன்னனின் கரங்களால் ஆரம்ப தம்ம பதம் முழுமையாக சிதைக்கப்படலாம். அவனது படைவீரர்கள் மரணத்தின் பின்னரான வாழ்க்கை பற்றி சிந்தித்திருக்கலாம். இந்நேரம் மகாநாம தேரர் எதிரேவந்து, “பாவமில்லா யுத்தம்” என்ற பொய்யை உருவாக்கி மன்னனையும் அவனது படையினரையும் உற்சாகப்படுத்தியிருக்கலாம்” என்று கருதுவதில் பிழையில்லை. அது அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே…

Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 3, 1990


- கலாநிதி அலவி ஷரீப்தீன் -


அனல் கக்கும் 90இன்
ஆகஸ்ட் 3
வருடம் தோறும்
வந்து செல்லும் !

சிரியாவின் சித்திரவதைகள்,
காஸாவின் கண்ணீர்க் கதறல்கள்,
ஈராக்கின் இரத்த வெள்ளம்
எம் இதயங்களைப்  பிழிந்தெடுத்தாலும்
ஆகஸ்ட் 3 மட்டும்
எம்மை அதிர வைத்துக் கலக்கி வைக்கும் !

சுதந்திரத்தின் பெயரில்,
போராட்டம் என்று சொல்லி
கண்ணியக் காவியத்தைக் களங்கப்படுத்தி
குமர் தாத்தாமார்களின்
முன்தானைப் புடவையிலும்
உம்மாமார்களின் முக்காட்டு முகட்டிலும்
ஈனச் செயல்கள்  எழுதப்பட்டதை
ஆகஸ்ட் 3
எடுத்துச் சொல்லும் !

ஓந்தாச்சி மடத்தில் ஓங்கி அலறிய
மஹ்ரூப் நானாவின்
அப்பாவி அலறல்கள்;;;;;;
கல்முனையின் காட்டுப்புறத்துக்கு,
விறகு சேர்க்கச் சென்ற
இப்றாஹீம் காக்காவின்
இறந்து போன பைசிக்கல் ;
உன்னிச்சையில்
கண்டதுண்டமாய்  வெட்டி வீசப்பட்ட
வயல் வேலை செய்த தம்பிமார் ;
பூநொச்சிமுனையில்
பூண்டோடு பிடுங்கப்பட்ட
மினாறாவின் அடித்தளங்கள் ;..
தாராபுரத்தில்.. தம்பலகாமத்தில்..
கிண்ணியாவில்..கீச்சான் பள்ளத்தில்
மூதூரில், முல்லைத்தீவில்
முஸ்லிம் என்பதற்காக
பால்மனம் மறக்காத பாலகர்கள்
குற்றம் தெரியாத குடுகுடு ஆச்சிமார்
போராட்டம் என்று
பெயர் போட்டுக் கொண்ட
பொறுக்கிப் பயல்களின் வெறியாட்டங்களுக்கு
இரையாகிப் போனதை
இந்த ஆகஸ்ட் 3
மீண்டும் கிளறி
எம் சிந்தையைச் சீண்டி எடுக்கும் !

எம் வீட்டு அயலில்;,
எம் முற்றத்து ஒரங்களில் சேர்ந்திருந்து
எம்மிடம் நீர் அருந்தி
எம் உதவியோடு உண்டு வாழ்ந்தவர்கள்,
கெப்டன்கள் லெப்டினன்கள் என்று
ஒரு இரவில் பெயர் மாறி,
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த
கர்மக் கதையைக்
கறை படிய விட்டார்கள்
தமிழ் முஸ்லிம் உறவைக்
கறுப்பாக்கி விட்டார்கள் !

செல்வராசா மாஸ்டரும் சீனிக் காக்காவும்
சித்திரா அக்காவும், சித்தி ராத்தாவும்
அமலன் அண்ணாவும், அஹ்சன் தம்பியும்
நடராஜா நண்பனும், நிசார் மச்சானும்
ஒரே கூரையின் கீழ்
ஒன்றாய் இருந்து பெருநாள் உண்டதை
வரலாற்றின் கனவாய்
வடித்து வைத்தார்கள் !

தீபாவளி நாட்களில்
சிவராத்திரி இரவுகளில்
பொங்கல் நாட்களில்
பொங்கிய பாசங்களைப்
பொசுக்கிய சோகத்தை
அதன் அகோரத்தை
ஆகஸ்ட் 3
அமைதியாய்ச் சொல்லும் !

மியான் குளத்தில்  மஹ்மூது சாச்சாவும்
அடுத்த புத்திஜீவிகளும்
இனவெறி கண்ணிவெடிக்குள்
கலைந்து போனதும்
என் சாச்சி பிள்ளைகள்
கலங்கி நின்றதும்
கண் முன்னே வரும் !

வயிற்றுப் பசியில்
பொட்டணி கட்டிச்சென்ற
பக்கத்து வீட்டு அச்சியின் குழந்தைகள் -
காலாகாலமாய் கதறிய கதறல்கள்
காது நிறைய ஒலிக்கும்.

எமது -
ஹூஸைனியா மஸ்ஜிதின்  
புறாக்கூட்டச் சிறார் கூட்டம் -
மஸ்ஜிதின் மூலை யெங்கும்
வெறி கொண்ட வேங்கை
எனும் கோழைகளால்
குதறப்பட்டு கொல்லப்பட்டதை
வெந்த புண்ணில் வேலாய்
குத்திக் காட்டும் !

'ஸஜ்தா'விலும்
'ருக்கூ'விலுமாய்
கூனிக்குறுகியிருந்த கூன் பிறையின்
இறை நேசக்கூட்டம்
இரக்கமில்லா இனவெறியர்களின்
நரமாமிச வேட்டைக்குப்
பலியாகிப் போன சோக காவியத்தை
இந்த ஆகஸ்ட் 3
அன்று
மீண்டுமொரு ஆகஸ்ட் 3
வரக்கூடாதென்று சொல்லி நிற்கும்!

இனவெறி பேசி
இரத்த வெறியில்
ஏராளமான
அப்பாவி உயிர்களை
காவு கொண்ட
முள்ளிவாய்க்கால் வாசிகள்
பல ஆயிரம் தடவைகள்
நொறுக்கப்பட்டாலும்....
ஓந்தாச்சிமடத்தின்
ஓலங்களைப் பார்த்து
எம் ஊர்ப்பள்ளியில்
எம் உடன் பிறப்புக்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்ததைப் பார்த்து
பட்டாசி கொழுத்தி
கைகொட்டிச் சிரித்த
கரிகாலன்கள்
காலா காலமாய்
கண்ராவியாய்
அழுந்திச் செத்தாலும்
எமதூர் மூலையில்
பொக்கை வாய்ப் புலம்பல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
கடத்தப்பட்ட மகனை
வெட்டப்பட்ட வாப்பாவை
அரியப்பட்ட ஆச்சியைப் பற்றி
பேசிக் கொண்டேயிருப்பர்

வரலாற்றில் வேர் பதித்த
தமிழ் முஸ்லிம் உறவை அழித்த
தன்தாய் தாலி அறுத்து
தமிழீழம் என்ற பெயரில்
வெறியுலகை விதைக்கப்பார்த்த
வெறியர்கள் அழிப்பட்டதை
இறைநியதி வந்து
கொலையுலகு நிலைக்காது
சத்தியம் ஜெயிக்கும்
என்று
இந்த ஆகஸ்ட் 3
அடித்துக் சொல்லும்

 (1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் இரண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் நினைவாக இந்தக் கவிதையை எழுதிய கலாநிதி அலவி ஷரீப்தீன் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவத்தில் தனது தந்தை, 5 வயதான தனது சகோதரன், மற்றும் உறவினர்கள் பலரைப் பறிகொடுத்தவர்.)




Friday, August 1, 2014

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்!


- Gary Corseri -

மூஸா (அலை) வினது அல்லது ரோமர்களது
வருகைக்கு முன்பு
ஈஸா (அலை) வினது அல்லது முஹம்;மது (ஸல்) 
அவர்களது வருகைக்கு முன்பு
துருக்கியருக்கும் ஆங்கிலேயருக்கும் முன்பு
நாங்கள் இந்த நிலத்தில் வாழ்ந்திருந்தோம்!

புழுதியிலிருந்து நாங்கள்
நகரங்களை எழுப்பினோம்
கண்ணீர் கொண்டு நீரிறைத்தோம்
மகிழ்ச்சியில் திழைத்திருந்தோம்
கைவிடப்பட்டிருந்த கடல்களில்
மீன் பிடித்தோம்
குளிர்மிகு ஒலிவ் தோட்டங்களில்
எங்களது பிள்ளைகளின்
திருமணங்களை வாழ்த்தினோம்!

என்றென்றும் சாசுவதமான
'மக்கள்' என்ற சொல்லை
எங்களுக்கு நாங்களே சூட்டிக் கொள்வதில்
ஒருபோதும் கவலை கொண்டதில்லை

ஆக்கிரமிப்பாளர்கள் வருகை தந்தனர்
எங்களது நிலத்தில் அணிவகுத்துச் சென்றனர்
இரும்பு ஆயுதங்களையும்
ஆகாயக் கடவுளரையும் கொண்டு வந்தனர்
எமது குழந்தைகளைப் படுகொலை செய்தனர்

முதிய ஆண்கள் இறைவனை வணங்கினர்
வணங்கிய இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்
பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
ஒப்பாரி வைத்த இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்

உலக சபைக்கு மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம் முறையீடு செய்தோம்
சிலபோது அவர்கள் அமைதியாகச் செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென
அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோது எங்கள் காயங்களைப் பார்த்து
அவர்கள் கொட்டாவி விட்டனர்

பாலைச் சூரியன் சுட்ட
எமது தோல் நிறம் கருப்பானது
இளஞ்சிவப்பு நிறத்தோல் கொண்ட
அமெரிக்கர் வந்தனர்
இளஞ்சிவப்பு நிறங்கொண்ட பிள்ளைகளுடன்
வெள்ளை நிறப் பெண்கள்
இங்கிலாந்திருந்து வந்தனர்
இது எமது நிலமென்றனர்
அவர்களே அவர்களை
செமித்தியர் என்றனர்
அவர்களது நிறமோ
செமித்தியர்களின் நிறமாயிருக்கவில்லை
பொன்நிறத் தலை மயிரும்
நீலக் கண்களும் 
செமித்தியருக்குரியவை அல்ல!

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
உங்களது சிறாருக்குத் தேவைப்படுவதைவிட
குறைந்த அளவே
எமது சிறார்களுக்கு
எதிர்பார்க்கிறோம் என்று நினைக்கிறீர்களா?
உங்கள் சிறார்களை விடவும்
குறைந்தளவு பெறவேண்டியவர்கள்
என்றா நினைக்கிறீர்கள்?
எமது அப்பாவிச் சிறுவர்கள்
பெறுமதி குறைந்தவர்களா?
அவர்களது சிரிப்பும் அழுகையும்
மதிப்புக் குறைந்தவையா?
அவர்களும் இந்தப் பூமியின்
குழந்தைகள் இல்லையா?
அவர்களும் இறைவனின்
குழந்தைகள் இல்லையா?
எமது ஆண்கள் குறைந்த வீரமும்
எமது பெண்கள் குறைந்த துணிச்சலும்
கொண்டவர்களா?

நாங்கள் மக்கள் -
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம்
பெரிய மீனைக் கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப் புழு எத்தகையது?
நீங்கள் கௌரவத்தை இழந்து விட்டீர்களா?

நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப் பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்
அந்தத் தெய்வத்துக்கு
உங்கள் குழந்தைகளைப் பலி கொடுக்குறீர்கள்
மற்றவர் குழந்தைகளையும் பலி கொடுக்கிறீர்கள்
உங்களது குழந்தைப் பலி கேட்கும் தெய்வம்
மற்றவர் குழந்தைகளைப் பலி கொண்டு
பெருத்து வளர்ந்து கொண்டிருக்கிறது

பலமும் செல்வமும் 
உங்களை நுகர்கின்றன
மலைகளைத் தகர்க்கிறீர்கள்
பெண்களை அச்சமூட்டிப் பணிவிக்கிறீர்கள்
உங்களது புத்தகங்களில்
உங்களது பெயர்களைக் காண்பிக்கிறீர்கள்
ஆனால்
மரங்களின் வேர்களில் எழுதப்பட்டும்
பழம் பாறைகளில் பொழியப்பட்டும் இருக்கும்
எமது பெயர்களை
உங்களால் கண்டடைய முடியவில்லை

முழங்கும் ஆயிரமாயிரம் யுத்தத் தாங்கிகளால்
எங்களைப் பணிய வைக்க முடியவில்லை
உண்மை கருப்பு நிறம் கொண்டது
நாமும் கருப்பு நிறமான
எமது கண்களால்தான் பார்க்கிறோம்
துருக்கியர் வந்தார்கள்
அவர்க்குப் பிறகு மற்றவர்களும் வந்தார்கள்
ஆங்கிலேயர் வந்தார்கள்
அவர்களுக்குப் பின்
மற்றவர்கள் வந்தார்கள்
கடவுளின் பெயரால்
அவர்கள் கொலை புரிந்தார்கள்
கடவுளின் பெயரால்
கடவுளையே கொலை செய்தார்கள்

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்
எங்கள் வாழ்வாதாரங்களை
எடுத்துக் கொள்ளத வரை...
எம்மை தாழ்மைப்படுத்தாத வரை..
நாங்கள் வாழ்பவர்கள்
வாழவும் விடுபவர்கள்

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
எங்கள் வணிகத்துக்கான உபகரணங்களைக்
காலம் கூர்மைப்படுத்துகிறது
துயரம் எங்களை
மெருகு படுத்துகிறது
நாங்கள் எங்களது கருவிழி கொண்டே
பார்க்கிறோம்!

Tuesday, July 29, 2014

ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் - அஞ்சலி!


ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் காலமானார் என்ற தகவல் சரியாக 11.30க்குக் கிடைத்தது.

நண்பர் ஸனூஸ் முகம்மத் பெரோஸ் எடுத்த அழைப்பு பெருநாள் வாழ்த்தாக இருக்குமென்றுதான் நினைத்தேன். துரதிர்ஷ்டவசமான செய்தியாக அமைந்து விட்டது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். அறிவிப்பாளர்களுக்கு இருக்க வேண்டியது மிகத் தடிப்பமான குரல் வளம் என்ற பிழையான கருத்து மிகப்பலமாக நிலவிய காலத்திலேயே அவரது குரல் மிக மென்மையானதாக இருந்தது. ஆயினும் அவருக்கென தனியே ஒரு இரசிகர் பட்டாளமே இருந்தது என்பதை அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவில் பணிசெய்த யாரும் மறுக்க மாட்டார்கள்.

பாடல்கள் கொண்ட 50 ஒலித் தகடுகளுக்குள் அவருடைய ஒலிபரப்பு இருந்ததாக அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுவே அவருடைய பலமாகவும் இருந்திருக்கிறது.

நான் 1986ல் ஓரு பகுதி நேர அறிவிப்பாளனாக நுழைந்த போது அறிவிப்பாளராகப் பணியாற்றி முடிந்து அறிவிப்பாளர்களுக்குப் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றினார். தமிழ்த் தேசிய சேவை, வர்த்தக சேவை இரண்டுக்குமான அறிவிப்பாளர்களுக்கு அவரே பொறுப்பதிகாரி.

எனக்கும் அவருக்கும் என்றைக்குமே ஒத்துப்போனது கிடையாது. வாரத்துக்கு ஒருமுறை என்னில் அல்லது என்னுடன் தெரிவான ஏ.ஆர்எம். ஜிப்ரி, ஜவஹர் பெர்னாண்டோ ஆகியோரில் ஏதாவது ஒரு பிழை சொல்லிக் கொண்டேயிருப்பார். ஒரு வகையில் பெரும் நச்சரிப்பாகவும் அது இருந்திருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு நடந்த பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வில் நாங்கள் மூவருமே தெரிவு செய்யப்பட்டிருந்தோம். சில போது ஒலிபரப்பு உதவியாளர் விட்ட பிழைக்கும் எம்மிலேயே குற்றம் சொல்லுவார். நீ சரியாக இருந்தால் ஏன் பிழை போகிறது என்று கேட்பார்.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போய், 'இவருக்குமேல் கை வைத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது' என்று அப்துல் ஹமீத் அவர்களிடம் முறையிட்டேன். எனது கோபத்தை ஆசுவாசப்படுத்தியவர் அப்துல் ஹமீத்.

அவர் இல்லாத இடத்தில் அவரைப் போல் மிமிக்ரி செய்து சிரித்து மகிழ்ந்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.

ஒவ்வொரு ஒலிபரப்பாளரோடும் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால் அவை யாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் அவர்களோடு சம்பந்தப்பட்ட அனுபவங்கள் பலருக்கு உண்டு. நாங்கள் அங்கு பணிக்குத் தேர்வாக முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மறைந்த நண்பர் கணேஷ்வரன் ஒரு போது சொன்னார்.

ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் என்றே அவரது பெயர் ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் பெயர் ஆர். எஸ். ஏ. கனகரட்ணம் என்றிருக்கும். கே. எஸ். ராஜாவைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு போது ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் தனது அறிவிப்புப் பணியை முடித்து கே.எஸ். ராஜாவிடம் பணியை ஒப்படைக்கும் போது 'தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்க கே. சிவராஜா காத்திருக்கிறார்' என்று சொல்லி விட்டு ஒப்படைத்திருக்கிறார். கே.எஸ். ராஜாவுக்குத் தனதுவானொலிப் பெயரைச் சொல்லாமல் முழுப் பெயரை வானொலியில் சொன்ன கடுப்பில் வந்து அமர்ந்ததும் 'நன்றி ராஜகுரு சேனாதிபதி அன்னையா கனகரட்ணம் அவர்களே!' என்று ஒரு போடு போட்டு விட்டாராம்.

எனக்கும் அவருக்குமிடையில் இருந்த ஒரே நெருக்கக் கோடு கவிஞர் கண்ணதாசன். அவர் கண்ணதாசன் உபாசகர். நான் கண்ணதாசனின் பெரு ரசிகன்.

பாரதியார் நினைவு தினத்துக்கு நான் எழுதிய நினைவுச் சித்திரம் பெரும் தடைகள் தாண்டி ஒலிபரப்பானது. காலையில் வந்ததும் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் பிழை இருக்கிறது என்று கலகப்படுத்தி விட்டிருந்தார் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான நடேச சர்மாவும் ராஜேஸ்வரி அக்காவும் குரல் கொடுத்த நிகழ்ச்சி அது. என்ன பிழை என்று கேட்டு அவருடன் மல்லுக்கு நின்றேன். ' ஏம்பா... கண்ணனைக் காதலானாகவும் காதலியாகவும் பார்த்தான்னு போச்சுதே... அப்படி மட்டுந்தான் பாரதி பார்த்தானா?' என்று கேட்டார். கண்ணன் பாடல்கள் எல்லாவற்றையுமா ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட முடியும் என்று கேட்ட போது, 'ஆமா... அது பிழைதான்' என்று வாதிட்டார்.

நிர்வாகத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்ளும் அவருக்கு ஒலிபரப்பில் எந்நேரம் தவறுகள் நேர்ந்தாலும் கண்டு பிடித்து விடும் திறமை இருந்;தது. 'இவர் வானொலி கேட்காத நேரம் எது' என்று கண்டு பிடிக்க நாம் ஒரு மாதம் அவதானம் செலுத்திய பிறகு, இரவு 7.30க்கும் 8.00 மணிக்கும் இடையில் என்று கண்டு பிடித்தோம். அவர் பம்பலப்பிட்டி கிறீன்லான்ட்ஸில் இரவு உணவு உண்ணும் நேரம்தான் அது.

பிற்காலத்தில் பலமுறை அவரை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அவர் அன்று பிரயோகித்த அழுத்தங்களால் நான் செம்மைப்படுத்தப்பட்டேன் என்ற உணர்வு அடிக்கடி மேலோங்கும். ஒரு வர்த்தக சேவை அறிவிப்பாளனாக இல்லாமல் (அவ்வப்போது கடமை செய்த போதும்) தேசிய சேவை அறிவிப்பாளனாக இருந்து பணி செய்து அங்கிருந்து தொலைக் காட்சிக்கும் சென்று பெயரும் புகழும் பெற்றோன் என்றால் அதில் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயாவுக்கும் பங்கிருக்கிறது என்றே நம்புகிறேன்.

இவ்வாறான ஒரு பெருநாள் தினத்தில்தான் அவர் தொழிலை விட்டுப் போகவும் நேர்ந்தது. துரதிர்ஷ்ட வசமாக நடந்து போன சம்பவத்திலும் நான் சம்பந்தப்பட்டுள்ளேன்.