Thursday, August 4, 2016

காத்தான்குடி காயங்கள் - ஒரு தமிழகக் கவிஞனின் குறிப்பு!

கவிஞர் தக்கலை ஹலீமா

நேற்று (03-08-2016) காத்தான்குடி (ஷஹீதுகளின்) அமரத்தியாகிகளின் 26 வது நினைவு தினத்தையொட்டி கவிஞர் அஷ்ரஃப் ஷிகாப்தீனின் கவிதையொன்றை அவரது முகநூலில் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். வார்த்தை மாமிசங்களிலிருந்து இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது.
 காத்தான்குடி ஷஹீதுகளின் ரத்தம்.

”நதிக்கரைகள் ஓரமெல்லாம் மனிதகுலம்
நாகரீகத் தொட்டில்கட்டி ஆடுமுன்பே
உதித்தெழுந்த மொழிக் குடும்பத் தலைவியான
ஓங்குபுகழ் தமிழினத்தின் திருநாள் வருக”
கடைவீதி சென்றிங்கே கரும்பை வாங்கி
காணுகின்ற தமிழரெல்லாம் பொங்கலோ பொங்கலென்றார்- ஈழ
படைவீதி கண்டு நிற்கும் புலிகள் கைகள்
பற்றியது கரும்பல்ல தோக்குகளாகும்
செந்நெல்லோ ரவை துளைத்த ரத்தத்துளிகள்”

என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு நான் தமிழ் ஈழ விடுதலைப் போரின் மறம்பாடிக் கொண்டிருந்த 1980கள். 1990களில் விடுதலைப் புலிகள் இலங்கை இஸ்லாமிய தமிழினத்தை மதத்தின் அடையாளம் கொண்டு காணமுற்பட்டதின் விளைவாக தமிழ் இஸ்லாமிய குடும்பங்களும் கிராமங்களுமே கூட புலிகளின் தாக்குதலுக்குரிய இலக்குகளாகின.

அதில் ஒன்றுதான் காத்தான்குடி. பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த வாலிபர்கள், முதியவர்கள், பாலகர்கள், என மொத்தம் 103 முஸ்லீம்களை புலிகள் சுட்டு வீழ்த்தியது மட்டுமல்ல புலிகள் நடத்திய மின்கம்ப கொலைகள். - இந்த சம்பவங்களுக்கு பிறகுதான் என் போன்ற மானுடம் நேசிக்கும் பாடிகளெல்லாம் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தின் திசைமாறியப் பயணத்தை உணர்ந்து கொண்டோம்.
 
2002 ல் இலங்கை கப்பற்துறை அபிவிருத்திஅமைச்சும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் இணைந்து நடத்திய முதலாவது உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டின் கவியரங்கில் பங்கேற்கும் பந்நாட்டு கவிஞர்களில் ஒரு கவிஞராக அங்கு சென்றிருந்தேன்.


அந்தக் கவியரங்கமும் காத்தான்குடி துயர நினைவுகளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அன்றுதான் நார்வே அமைதிக்குழுவும் இலங்கைக்கு வந்திருக்கிறது. கவியரங்கம் தொடங்குகிறது. அரங்கில் கவிஞர்கள் பத்து பேர் இருக்கின்றோம். கீழே பார்வையாளர் வரிசையில் B.H. அப்துல் ஹமீது மாண்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம், காப்பியக்கோ ஜின்னா ஷரீபுதீன், கவிக்கோ அப்துல் றகுமான் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அமர்ந்திருக்கிறார்கள்.

என்னுடைய முறை வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிவப்புக் கம்பளத்துக்கு சாயம்பூசிட பக்தாத் குழந்தைகளின் பச்சை ரத்தம் பர்மாறப்பட்ட துயரங்கள், பாலஸ்தீன பிள்ளைகள் கழித்தல் குறிகளாக கபறுஸ்தானத்தில் கிடத்தப்பட்ட துயரங்கள். ஜார்ஜ் புஸ்ஸை பிர்அவ்னாக நினைத்துக் கொண்ட ஆவேசம் என் நரம்புகளில். மூஸாவின் கைக்கோலாக என் பேனா திமிர்கிறது. எனக்கு கவிதை தலைப்பு “மூஸாவின் கைக்கோல்” இலங்கையில் காத்தான்குடி துயரத்தின் நினைவு என் கண்ணீரை திராவகம் ஆக்கியபோது அந்தக் கவிதையில்....

“காத்தான்குடி ஜனாஸா அடுக்குகளிலிருந்து எழுந்து வந்திருக்கும் – என் காலத்தின் கிழக்குகளே” என்று மேடையில் நான் அழைக்கின்றேன். ஆயிரம் பேர் இருந்த அந்த அரங்கமே அதிர்கிறது. பார்வையாளர் வரிசையிலிருந்த கவிக்கோ மெதுவாக இருக்கையிலிருந்து எழுகிறார். அன்றுகாலைதான் அவருக்கு லேசாக நெஞ்சுவலி வந்து டாக்டர் ஹிமானா சையத் மருத்துவம் பார்த்தார். கவிக்கோ மேடையை நோக்கி மெதுவாக நடந்து வருகிறார். மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் ஷிகாப்தீன் ஓரமாக நின்றவர் நின்றபடி நிற்கிறார். நானும் படிப்பதை நிறுத்திவிட்டு கவிக்கோவையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.

என்னை மேடையில் இறுகத் தழுவிய கவிக்கோ அன்று மாலை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அவருக்கு அணிவித்த பொன்னாடையை எனக்கு போர்த்திவிட்டு உண்ர்ச்சிகள் கொப்பளிக்க அமைதியாக அப்படியே இறங்கிச் செல்கிறார். அவர் இருக்கைக்கு திரும்பி சென்று இருந்தபின் கவிதையை மீண்டும் தொடர்ந்தேன்.

அந்த பொன்னாடையை மட்டும் என் காலத்திற்குப் பிறகும் பாதுகாத்திட என் மனைவி பிள்ளையிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஏனென்றால் அது காத்தான்குடி ஷஹீதுகளின் கபனிலிருந்து நெய்த பொன்னாடை

அஷ்ரப் ஷிகாப்தீனின் நேற்றைய முகநூல் நினைவாஞ்சலி ஏனோ எனை நேற்று தூங்கவிடவில்லை.

(நண்பரும் பிரபல மேடைக் கவிஞருமான தக்கலை ஹலீமா அவர்களின் இந்தக் குறிப்பு அவரது முகநூல் பக்கத்திலிருந்து நட்புரிமையுடன் இங்கு மீள்பதிவாகிறது. ஒரு சில இடங்களில் சிறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். உதாரணமான - அமைச்சின் பெயர், இலக்கிய ஆய்வகத்தின் பெயர். நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.)

Wednesday, August 3, 2016

இலக்கியவாதிகள் புண்ணாக்கு மடையர்களா?



பிரதம ஆசிரியர்
நவமணி
தெஹிவளை

அன்புடையீர்

ஆகஸ்ட் 3ம் திகதிய தங்களது 'நவமணி' பத்திரிகையின் கலைவாதி கலீல் தொகுத்து வழங்கும் 'ஜலதரங்கம்' என்ற 6ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள சர்தார் என்பவர் எழுதிய 'இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் - இனியாவது திருந்துவார்களா?' என்ற கட்டுரையின் பால் உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன்.

காயல்பட்டினத்தில் நடந்த ஒரு இலக்கிய மாநாட்டின் இலங்கை இணைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தவன் என்ற வகையிலும் அதில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் சென்னையில் நடைபெற்ற இரண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் அதில் ஒன்றில் இலங்கை இணைப்பாளனாக இருந்தவன் என்ற வகையிலும் - 2002ல் இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளர் என்ற வகையிலும் தற்போது நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய இஸ்லாமிய இலக்கிய விழாவை நடத்தும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் என்ற வகையிலும் மேற்குறித்த கட்டுரைக்குச் சில விளக்கங்களை வழங்க வேண்டியவனாக இருக்கிறேன்.

சர்தார் என்பவர் எழுதிய கட்டுரையானது நான் மேற்குறித்த மாநாடுகள், இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழா குறித்த ஐயங்கள் குறித்துப் பேசுவதால் அக்கட்டுரையில் நான் விடையிறுக்கத் தகுந்த அம்சங்கள் பற்றி மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

சர்தார் என்பவர் எழுதிய இக்கட்டுரையின் கடைசிப் பந்திக்கு முன் பந்தியில் 'பேராசிரியர் அல்லாமா உவைஸ் இலங்கையில் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிலும் கடுமையாக உழைத்தவன் என்ற வகையிலும் குழுவிலிருந்த வடபுலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும்' என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு சர்தார் என்ற நபர் இப்பக்குத் தொகுப்பாளரான கலைவாதி கலீல்தான் என்று விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்த போதும் - ஒரு வசதிக்காக அதை சர்தார்தான் எழுதினார் என்று கொண்டு சில விடயங்களுக்குப் பதில்தர நாடுகிறேன்.

கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களில் என்னை மிகவும் உறுத்தியது பிரதேச ரீதியாக இலக்கியவாதிகளைப் பிரித்துப் பேசியமையாகும். இதைக் குறித்த நபர் பேசுவதற்கான காரணம் என்ன என்பதைச் சொல்வதற்கு முன்னர் அவரது குற்றச் சாட்டுக் குறித்துப் பேச விரும்புகிறேன்.

காயல்பட்டின மாநாட்டில் நான்கு கிழக்குக் கவிஞர்கள் கவிதை படித்தது சர்தாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு அந்த எரிச்சல் வந்ததற்குக் காரணம் அவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்ததுதான். உண்மையில் காயல்பட்டின மாநாட்டில் கவிதை படிப்பதற்கு இலங்கை இணைப்பாளர்கள் கவிஞர்களைச் சிபார்சு செய்யவில்லை. கவிதை படிக்க விரும்புவோர்  கவிதைகளை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு நேரடியாகவே அனுப்பியிருந்தார்கள். கவிஞர் தெரிவை மாநாட்டுக் குழு தீர்மானித்தது. சர்தாரும் ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தால் சில வேளை அவருக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கலாம், அது கவிதையாக இருந்தால்!

இன்னொரு இடத்தில் 'இதுதான் எனது ஆதங்கம்... இத்தகைய இலக்கிய விழாக்கள், சர்வதேச மாநாடுகள் நடைபெறும் வேளைகளில் அறிஞர்களாக, ஆய்வாளர்களாக அழைத்துச் செல்லப்படுபவர்களெல்லாம் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தவர்களே!' என்று சொல்கிறார். இது எத்தகையதொரு அடிமுட்டாள்தனமான கருத்து. மாநாடு ஒன்று நடைபெறுதாக இருந்தால் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியோரை ஆய்வரங்கில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்புவார்கள். ஆய்வரங்கில் கலந்து கொள்ளாத இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கூட அங்கு பேராளராகச் செல்லலாம். அதில் இதுவரை எந்தத் தடையும் இருந்ததில்லை. நான் இலங்கைக்கு வெளியில் கலந்து கொண்ட எந்த மாநாட்டிலும் கட்டுரை படித்ததில்லை. ஆனால் சென்று இலக்கியச் சுவையுண்டு வந்திருக்கிறேன். என்னைப் போல பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்பவர்களது நலன் கருதியே ஒரு குழுவாக அவர்கள் இணைப்பாளர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அக்குழுவோடு செல்ல விரும்பாதவர்கள் தனித்தும் சென்றிருக்கிறார்கள். வேறு குழுவாகவும் சென்றிருக்கிறார்கள். ஆனால் எப்படிச் சென்றாலும் மாநாடு நடத்தும் நிர்வாகத்தோடு முதலில் தொடர்பு கொள்ள வேண்டும்.

சர்தார் விரும்பியிருந்தால் அங்கு சென்றிருக்கலாம். அப்படி சர்தார் முயன்று அவர் மறுக்கப்பட்ட பொழுதுகள் உண்டா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கலந்து கொள்ள விரும்பியவர்கள் செல்கிறார்கள்.. அவர்கள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தால் யாருக்கு என்ன பிரச்சனை? சர்தாருக்கு ஏன் எரிச்சல் வரவேண்டும்?

'ஏற்பாட்டுக் குழுவினர் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்கிறார்கள்' என்றும் ஒரு குற்றச் சாட்டை முன் வைக்கிறார் சர்தார். மாநாட்டை நடத்துபவர்கள் யார், யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்புதல் பெற்ற பின் உத்தியோகக் கடிதம் மூலம் அறிவிக்கிறார்கள். அவர்கள் யார் பொருத்தம் என்று கருதுகிறார்களோ அவர்களை நியமிக்கிறார்கள். அவர்களுடன் ஒத்துழைக்கக் கூடியவர்களை நியமிக்கிறார்கள். அது எப்படித் தன்னைத் தானே நியமிப்பது ஆகும்.

அவரது அடுத்த குற்றச் சாட்டானது என்னவெனில் 'தற்போது நடைபெறவுள்ள இலக்கிய விழாவிலும் முழுக்க முழுக்கக் கிழக்கு மாகாணத்தவர்தான் இடம்பெற்றுள்ளார்கள்' என்பதாகும்.

2002 ம் ஆண்டு இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய மாநாட்டை நடத்திய அமைப்பு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமாகும். இந்த அமைப்பு 1999ல் சென்னை மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு குழுவினரால் அங்கேயே தோற்றுவிக்கப்பட்டது. இதில் அல்ஹாஜ் நூர்தீனைத் தவிர ஏனைய அனைவரும் கிழக்கின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதில் யாருக்கு என்ன பிரச்சனை? ஒரு குழுவினர் சேர்ந்து ஒரு மாநாட்டை நடத்துவதால் ஏன் இன்னொருவருக்கு அரிப்பு வரவேண்டும்?

2002ல் நடந்த கொழும்பு மாநாட்டுக் குழுவில் அங்கத்துவம் வகித்த 15 பேரில் 7 பேர் கிழக்கைச் சேர்ந்தவர்கள். 7 பேர் கிழக்குக்கு வெளியில் உள்ளவர்கள். ஒருவர் பொது. அரச அதிகாரி. நான் சொல்வது பொய்யில்லை என்பதற்கு மாநாட்டு மலரின் முற்பக்கத்தைப் புகைப்படமாகத் தந்துள்ளேன்.


நான் சொல்வது உண்மை என்பதனை 'ஜலதரங்கம்' பக்கத்தைத் தொகுக்கும் கலைவாதி கலீலிடம் கேட்கலாம். ஏனெனில் அவரும் அந்தக் குழுவில் ஓர் அங்கத்தவராவார். அது மட்டுமன்றி அம்மாநாட்டில் பொன் முடிப்பு வழங்கப்பட்ட எழுவரில் கலைவாதி கலீலும் ஒருவராவார். (படம் இணைக்கப்பட்டுள்ளது) பண முடிப்பு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட எழுவரில் ஒருவர் தவிர ஏனைய அனைவரும் கிழக்குக்கு அப்பால் வாழ்பவர்களாவர்.



இக்கட்டுரையில் பின்னணியில் நான் புரிந்து கொண்ட விடயங்கள் சில உள்ளன.

வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்குச் செல்வோருக்கு இலவசமாக விமானச் சீட்டுக் கிடைக்கிறது அல்லது குறைந்தது ஏற்பாட்டாளர்களுக்கு இலவச விமானச் சீட்டுக் கிடைக்கிறது என்று சர்தார் அப்பாவித் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி எதுவும் கிடையாது. நாம்தான் தமிழகத்தவரை விமானச் சீட்டுக் கொடுத்து அழைக்கிறோமே தவிர அவர்கள் ஒரு போதும் தந்ததாக எனக்குத் தெரியாது.

கிழக்கு வாழ் படைப்பாளிகளைப் பிரதேச ரீதியாகப் பார்த்துப் பிரிக்கும் சர்தார் வடபுலத்தைச் சேர்ந்தவர் என்று உணர்கிறேன். அங்கு விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே படைப்பாளிகள். அதற்குள் மூத்த படைப்பாளி வகைக்குள் தான் வரவேண்டும், எல்லா இடத்திலும் புலம் பிரித்;துப் பேசினால்தான் தனக்கு எல்லா இடத்திலும் ஒரு இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார் போல் தெரிகிறது.

இப்போது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழாவுக்கு இதுவரை மாநாட்டுக் குழு நியமிக்கப்படவில்லை. நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விழா நடைபெறுவதற்கு முன்னால்  'கிழக்குப் பிரதேசவாதத்தைத் தூண்டினால் ஓர் இடம் கிடைத்து விடும் என்று சர்தார் எதிர்பார்க்கிறார். அதை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சி வெகுளித் தனமானது!

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற இயக்கம் முன்னின்று செய்யும் இந்த விழாவில் அது விரும்பினால் யாரையும் சேர்க்கலாம். யாரையும் தவிர்க்கலாம். அதற்கு அவ்வியக்கத்துக்குப் பூரண சுதந்திரம் உண்டு. யாரும் அதைக் கேள்விக்குட்படுத்த முடியாது. விரும்பியவர் இணையலாம், விரும்பாதவர் விலகி நிற்கலாம். பதவி, பட்டம், முன்னிலை ஆகியவற்றை எதிர்பார்த்துப் பிரதேசவாதம் பேசும் யாருக்கும் இங்கு இடங்கிடையாது!



அஷ்ரஃப் சிஹாப்தீன்
பொதுச் செயலாளர்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்
03.08.2016

குறிப்ப - வடக்கு இலக்கியவாதிகள் புண்ணாக்கு மடையர்களா? என்று சர்தார் தனது கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்வியைத் தலைப்பாக்கியுள்ளேன்.

Saturday, June 18, 2016

பட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை!


பட்டாம் பூச்சிக் கனவுகள் 
************************** 
றிஜான் முஹம்மது


பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி. வாசிப்புக் காலம் : 05-04-2016 – 07-04-2016 (அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்துக் காலங்கள்) ^_^

வாசித்த ஏனைய நூல்களைவிட “பட்டாம் பூச்சிக் கனவுகள்” தொகுதி தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. நூல் வெளியீட்டில் அடியேன் பங்கேற்ற நிகழ்வையும் எண்ணி இன்புறக் கூடிய சுவையை வாழ்வில் புகைப்படங்கள் மூலமாக ஊட்டிக் கொண்டே இருக்கிறதை நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.

பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் எனும் ஆளுமை, எனக்கு காலம் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னிலையில் வகிப்பவர், என் பேரன்புக்கும், தனி மதிப்புக்கும் பொருத்தமானவர். நூலானது கையில் தவண்ட பொழுதினில் உச்சி நுகராமல் விட்டேனே என சிறு வருத்தம் இருந்ததை தற்போது மறைக்க மனம் இடம் விடுவதாயில்லை. வாசகனுக்கு அதிருப்தியற்ற மனநிலை, அமைதியற்ற சூழல் இவ்விரண்டுமே திறந்துவிட்டிருக்க வேண்டும் என கருதும் நிலைப்பாட்டிலே இருந்தேன்.

 அலுவலகத்தில் இன்டெர்னல் ஒடிட்டினால் ஹெட் லொக்ட் ஆகியிருந்த சமயம் எனக்கு டிராபிக் சிவப்புச் சமிக்ஞையைப் போல் என் உளஅலைவுகளை குறுகிய விட்டத்துக்குள் நிறுத்தி நூலின் எட்டுச் சிறுகதைகளின் சொல்லலங்காரங்கள், சீன் செட்டிங்க்ஸ் எனும் தகைமைகளால் தளர்ந்த மனத் தெவிட்டலின் சீரமைப்புக் காரணிகளாக திகழ்ந்தது மட்டுமில்லாமல் என் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்ய நேர்ந்தது.

பெரும்பாலும் உள்ளடங்கிய எட்டுச் சிறுகதைகளும் குத்துச்சண்டை பிடித்துப் பிறகே நூலினுள் ஏறி சாவகாசமாக நிமிர்ந்திருக்க வேண்டும். காரணம் ஏராளமான போற்றத்தக்க சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல இலக்கியப் பிரசவம் நாளுக்குநாள் எம்மை நெருங்கிக்கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை, தாய்த் தமிழிலும் சரி ஏனைய நம் புழக்கத்தில் உள்ள மொழிகளிலும் சரி. ஏதோ லாபாயில் கிடைத்தது போலில்லாமல், போலி இல்லாமல், (இப்படியானவைகள்தான் குறுகிய காலத்துக்குள் செம்மை இழந்துவிடுவது) மனக்கோட்பாடுகளுடன் ஊன்றி தெரிவுக்குழு நியமித்தே எட்டுத் தரமான சிறுகதைகள் மூலமாக எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதியை நிலை நிறுத்தியிருக்கிறார்.

 றிஜான் முஹம்மது

மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பற்றி ஓய்வுபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழக உப பதிவாளர்-மன்சூர் ஏ. காதர் அவர்களின் முன்னுரையில் கூறி இருப்பார்: “இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேகமான மண்வளத்தையும் காலநிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண்வளத்தையும் வேறொரு காலநிலையையும் கொண்ட இன்னொரு சுற்றாடலுக்கு கொண்டு போய் மீள்நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும்.”

இதனைக்கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக சிந்திக்கும் போது வெற்றிகரமான ஓர் இலக்கிய ஆக்கம் பொழிபெயர்க்கப்படுமாயின் பரவலான சிந்தனைத் திறன் அனுபவத்தோடு குழாமிட்டிருக்க வேண்டும், சர்வதேச நடப்புகளில் ஒத்துப்போகும் வண்ணம் வார்த்தையை முன்நிறுத்த வேண்டும். கதைத் தெரிவைப் போலவே நேருக்கு நேரான காட்சிப் பிணைப்புகளும் மிகைப்படுத்தலில்லாத பாத்திரக் கையாளல்களும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவைகளை என் கணிப்பில் கனகச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது “பட்டாம் பூச்சிக் கனவுகள்”.

“மரணம் பிறக்கும், மற்றதில் இறக்கும் மீண்டும் மிரட்டும்” போன்றதொரு அலைவரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போதும் ஒன்றோடு ஒன்று கைலாகு ஆகும் சம்பவமும் இதில் இல்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். சொற்றொடரின் உச்சரிப்பில் பிரதிபலிக்கும் காட்சி பிம்பங்கள் குறித்த நேர வரையரையைத் தாண்டி மற்றதையும் வாசித்து விட்டு ஆடிட்டிக்கு திட்டமிடுவோம் எனும் மனப்பாங்கை இத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் தந்திருந்தது. அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்து நேரங்களில் என்னைச்சுற்றி இருப்பவர்கள் ஏதோவொரு (உறுதியான உண்மை முகநூல்) சொடுக்குகளை இயக்கிக்கொண்டிருக்கும் சமவெளியிலேயே “பட்டாம் பூச்சிக் கனவுகள்” நூலைப் படிக்கக் கிடைத்தது.

- எ கோண்ஸா புக் ஹே ரெஜான் பாய்..?

- பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர், பச்சோந்திக் குடியிருப்பு எனும் சிறைச்சாலை, நிலப்பகுதி முழுவதும் முதுகுகளில் பல் வர்ணம் காட்டும் பச்சைப்புள்ளிகளுடனான பச்சோந்திக் கூட்டங்கள். இதனை ஸெய்னப் கடப்பதைப் பற்றி யூகிக்கும் வேளையிலேயே எங்கள் டிரைவரின் வினவுதல் காதில் விழுந்தது.

ஒரு சிறு புன்னகைத்ததும்பலுடன், அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் பொறுக்கிய ஹிந்தியில் ஓரிரு சொல்லில் பதில். மீண்டும் முந்தி முறைத்தோடும் வேக வரையறையை மீறிய வாகனங்களின் போக்குவரத்து சப்தத்தில் நிசப்தம் என நகர்கிறது.

Friday, June 10, 2016

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா - 2016


ஆய்வுக் கட்டுரைகள்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள்'தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா' வை நடத்துவதென்று தீர்மானித்துள்ளது. இது பற்றிய தகவல் கடந்த மாதம் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விழாவை முன்னிட்டு ஆறு  ஆய்வரங்குகள் நடத்தப்படவிருக்கின்றன. அரங்கு 5 ஐத் தவிர ஏனைய அரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரைகளை எழுதலாம். 5ம் அரங்கைப் பொறுத்தவரை அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தலைப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆய்வு அமைதல் வேண்டும்.

கட்டுரைகளை முஸ்லிம் அல்லாதோரும் எழுதலாம்.

பின்வரும் கட்டுரைத் தலைப்புக்களுக்கான கட்டுரைகளை எதிர்வரும் ஜூலை 15ம் திகதிக்குள் கிடைக்கக் கூடியவாறு Dr, Jinnah Sherifudeen, 16A, School Avenue, Off Station Road, Dehiwala என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கவும். கட்டுரைகளை அனுப்புவோர் தமது முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட மறக்க வேண்டாம். கட்டுரைகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.

01. தற்கால இலக்கியம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. முஸ்லிம் படைப்பாளிகளின் வலைத்தளப் பதிவுகள்
02. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைச் செல்நெறி
03. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைச் செல்நெறி
04. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் நாவல்களும் பேசுபொருளும்
05. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசுபொருளும்

02. இஸ்லாமும் கலைகளும்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. இலங்கை முஸ்லிம்களின் இசையும் கலைப் பாரம்பரியமும்
02. இலங்கையில் அருகி வரும் முஸ்லிம் பாரம்பரியக் கலை வடிவங்கள்
03. இறைதூதர் காலத்தில் இசையும் கலையும்
04. அடிப்படைவாதச் சிந்தனையும் இஸ்லாமிய இசையும்
05. கஸீதா, புர்தா, தலைப் பாத்திஹா ஆகியவற்றில் இலக்கிய நயம்
06. இஸ்லாமியர் மத்தியில் இசை பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்

03. சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்
 கட்டுரைத் தலைப்புக்கள்.
01.) சினிமா ரசனை பற்றிய எண்ணக் கரு
02) இஸ்லாமியக் கருத்தியலை முன்கொண்டு செல்ல சினிமா ஊடகத்தின் பங்களிப்பு
03) சினிமா தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர் கொள்ளும் கருத்தியல்சார் பிரச்சினைகள்
04) சினிமா மூலம் இஸ்லாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்
05) சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை
06.) மாற்றுச் சினிமாவுக்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்

04. எதிரெழுத்து
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) முஸ்லிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்
02) முஸ்லிம்களின் எதிர்க்குரல் சர்வதேசத்துக்கு எட்டாமைக்கான காரணிகள்
03) மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் - சமூக அரசியல் பரிமாணம்
04) சியோனிஸ சக்திகளுக்கெதிரான இஸ்லாமிய எதிர்ப்பிலக்கியம்
05. இஸ்லாமிய தீவிரவாதம் - ஓர் ஆய்வு

05. வாழும் ஆளுமைகள்
கவனத்தைக் கவர்ந்த தற்கால முஸ்லிம் படைப்பாளிகள்
(ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)
01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்
02) அவர்களது சமூகவியற் பார்வை
03) அவர்களது எழுத்துக்களில் இலக்கிய நயம்
04) அவர்களது எழுத்துக்களில் சமூக, இன நல்லுறவு
05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் விதம்

06. சமூக நல்லிணக்கம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) சமய இலக்கியங்களில் சமூக நல்லிணக்கம்
02) இன உறவைக் கட்டியெழுப்புவதில் இலக்கியத்தின் பங்களிப்பு
03) தமிழ் பேசும் மக்கள் - ஓர் இலக்கியப் பார்வை
04) மலையக இலக்கியப் பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்
05) இஸ்லாமும் இலக்கியமும் - இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் புரிதலும்.

தொடர்புகள்-
Dr. Jinnah Sherifudeen - 077 272 1244
Ashroff Shihabdeen     - 0777 303 818
Dr. Thassim Ahamed   - 077 966 4063


Monday, March 28, 2016

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்

------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர். தாஸிம் அகமது

வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் மகுடத்தின் கீழ் இலங்கை கலை இலக்கிய கர்த்தாக்களை கௌரவித்து வரலாறு கண்ட பெருந்தகை கௌரவ ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆவார். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக அவர் இருந்த போது, 1994களில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு மணிவிழா ஒன்று அவ் அமைச்சினால்; கொழும்பில் வெகு விமரிசையாக எடுக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேராசிரியர் உவைஸ் அவர்களை கௌரவிக்கும் முகமாக மணிவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அம்மலரின் ஆசிரியர் கல்விமான் அல்ஹாஜ். எஸ்.எச்.எம். ஜெமீல் ஆவார்.

பாராட்டு, மணிவிழா மலர் வெளியீடு ஆகியவை மண்டபம் நிறைந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இலக்கிய ஜாம்பவான்கள் மத்தியில் நிகழ்ந்தது. அந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெரு வெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ் அவர்கள் அவ்விழாவின் போது மிகவும் அடக்கத்துடன் அமர்ந்திருந்தார். அறிஞர்களின் வாழ்த்துரைகளும், பேருரைகளும் அன்னாரை எவ்வித சலனத்துக்கும் உட்படுத்தவில்லை. அப்பெருந்தகையின் பெரும் சேவை அவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றே.

பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்கள் 1922ம் ஆண்டு கொழும்பு, காலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் பிறந்தார். தகப்பன் பெயர் மகுமூது லெப்பை தாயார் பெயர் சைனம்பு நாச்சியார் இவ்விருவருக்கும் இவர் ஒரே மகனாவார். ஆரம்ப கல்வியை ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்க முல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயத்தில் கற்றார். அதே விததியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். புhளியைக் கற்றதன் விளைவு பிற்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டுக்கு வழி வகுத்திருக்கலாம். 1938ம் ஆண்டு தமிழ் மொழி மூலம் கல்வி பெற்ற பேராசிரியர் உவைஸ் 1946ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆசிரியர் எவரும் இல்லாமலே தமிழ் கற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

1945ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு ஒன்று உவைஸ் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்றது. அதே ஆண்டில் பல்கலைகழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை தோற்றுவிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஒரு உறுப்பினராக இருந்தார். நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைஸிடம் சுவாமி விபுலானந்தர் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைஸுக்கும்  பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள் அவர்கள் கூறியது உவைஸுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சவாலாக மாறியது.

Tuesday, March 8, 2016

அஷ்ரஃப் சிஹாப்தீனின் அழகியல் மீள்நடுகை!


மன்ஸூர் ஏ. காதர்

ஈழத்துக்கான போராட்டத்தின் கடந்தகாலப் போக்கில் 1985இல் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் விளைந்த உள்ளகச் சச்சரவு நமது காலத்தின் ஒரு கறை படிந்த பயங்கரமாகும். அந்த அதிர்ச்சி உப தேசியவாதத்தின் தோற்றுவாயாக ஈழத்து முஸ்லிம் மக்களிடம் பிரதி பலித்தது. பிரதிபலித்த அந்த உப தேசிய வாதத்தின் அச்சொட்டான குறியீடே 'ஸெய்த்தூன்' என்ற கவிதையாகும். அன்றைய நிலைவரத்தில் அது ஒரு முதன்மையான படைப்பாகவும் அமைந்திருந்தது. இந்தக் கவிதையின் சொந்தக்காரன் யார் என்ற விசாரணையும் ஆச்சரியமும் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்ற ,இலக்கிய ஆளுமையைப் பற்றிய தேடலை தமிழ் இலக்கிய உலகிலே உண்டாக்கிற்று. அவரின் கவிதா ஆளுமையின் வீச்சு பிற்காலத்தில் ஒரு குடம் கண்ணீரையே கொண்டு வந்து தந்துள்ளது. இந்த ஆரம்பமானது ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளனின் ஆடம்பரங்களை விடவும் ஒரு படைப்பாளிக்கான கனதியையும் தன்னடக்கத்தையும் அவருக்கு வழங்கிற்று.

அஷ்ரப் சிஹாபுத்தீன் சமகாலங்களில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் செலுத்த முனைந்துள்ளார். பலஸ்தீனக் கவிதைகளை மொழி பெயர்க்க பேராசிரியர் நுஃமான் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் முதலியோர் செலுத்திய அதே உத்வேகத்தை அஷ்ரப் சிஹாபுத்தீன் அரபு மொழி மூலம் ஆங்கிலத்துக்கு வந்த சிறுகதைகளில் செலுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் சிறியதும் பெரியதுமான எட்டுச் சிறுகதைகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தன்னுடைய தகைசான்ற ஆங்கிலப் புலமை மட்டுமன்றி இக்கதைகளின்  மூலமொழியான அரபியில் இவருக்கிருந்த பரிச்சயமும் நாட்டமுமே இம்முயற்சிக்கான முழுத் தைரியத்தையும் இவருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.


மன்ஸூர் ஏ. காதர்

இலக்கியங்களை மொழி பெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேக மான மண் வளத்தையும் கால நிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண் வளத்தையும் வேறொரு கால நிலையையும் கொண்ட இன்னொரு வித்தியாசமான சுற்றாடலுக்குக் கொண்டுபோய் மீள் நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும். இந்த ' மீள் நடுகை'யின் பின்னர் அத்தாவரத்தின் தப்பிப் பிழைத்தலை ஒத்ததுதான் மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் நிலையுமாகும். அதுவும் கிழக்கத்தைய கலாசாரங்களுடன் பிசையப்படாத ஒரு மொழியின் இலக்கியங்களை கிழக்கத்தைய கலாசார மொழிகளுடன் ஊடுபாவச் செய்வது மிகுந்த சிரம சாத்தியமாகும்.

முதலில் இந்தச் சிரமத்தை பொறுப்புணாச்சியுடன் சிந்தைக்கு எடுத்தவர்களால் மாத்திரமே மொழிபெயாப்பு இலக்கியங்களின் ஆன்மா வைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல் சார் பலங்கள் அல்லது பலவீனங்கள் யாவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் இந்தத் தொகுதி பற்றிய எமது சிந்தனைப் போக்கிற்கு நாம் கடிவாளம் இட்டுக் கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல்சார் பலமும் அதேவேளை அதன் பலவீனமும் பின்வரும் எல்லைக்குள் மட்டுப்படுத்தத் தக்கதாகும்.

இலக்கியங்களை மொழிபெயர்த்தல் தொடர்பான புலமைசார் அறிஞராகக் கருதப்படும் யங்ஃபாங் ஹூ இது பற்றிக் குறிப்பிடும்போது நடைமுறைப்படுத்தப்படும் நோக்கங்களுக்காக ' மூலமொழியைச் சார்ந்து செல்லும்' (source language oriented) மொழிபெயர்ப்புக்கள் என்றும், மொழிபெயர்க்கப்படும் ' இலக்கு மொழியைச் சார்ந்து செல்லும்' (target language oriented)  என்றும் மொழிபெயர்ப்புக்களின் அவசியமான அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கூறுகின்றார்;.

மொழிபெயர்ப்பாளன் இந்த இரண்டு நிலைகளையும்; முழு அவதானத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய தவிர்க்க முடியாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தவறும் பட்சத்தில் விளையும் ஆபத்து, வித்தைக் காரனுக்கு ஏற்படும் ஆபத்தைப் போன்றதே. இந்த சமநிலைத் தன்மையில் காட்டப்பட வேண்டிய அதீத கவனம் மூலமொழி ஆசிரியனின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு வாசகனைக் கொண்டுவந்து சேர்க்கும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்கான மேற்படி வரையறை களைக் கொண்ட இந்த பரிசோதனைக் குழாய்க்குள் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்பவரும் போடப்பட்டே ஆகவேண்டி உள்ளது.

அத்துடன் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் மூலமொழிக்கும் மொழி பெயர்க்கப்படும் மொழிக்கும் இடையிலான முழுமையான மனவெழுச்சிசார் நெருக்கடிகள,; ஒருமைப்பாடுகள,; பழக்கங்கள், வழக்கங் கள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், பெறுமானங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய வற்றுக்கான ' வெளிப்பாட்டுத் திறனுடன்கூடிய வெளிப் படைத்தன்மை' பிரதான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த முயற்சி பற்றிக் கவனக் குறைவாக கருதுபவர்களுக்குத் தழிழ் வகுப்பொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி தந்த ஒரு பயிற்சியை வாசகர்களிடம் கொடுக்க விரும்பு கின்றேன். அதாவது ' அவள் பூவோடும் பொட்டோடும் வாழ்கின்றாள்' என்பதனை வெறுமனே மொழியியல் ரீதியான தொடர்ச்சியுடன் ஆங்கிலமாக்குவதும் அதனைத் தமிழர் வாழ்வியல்சார் அல்லது இந்திய கலாசாரம்சார் தெளிவான அறிவுடன் ஆங்கிலமாக்குவதும் ஒரே வகை யான மொழிக் கையாளுகையுடன் நடைபெறமாட்டாது. இரண்டும் இரண்டு வகையான ஆங்கில மொழித் தொடர்களைக் கையாள மொழி பெயர்ப்பாளனைத் தூண்டும்.

இந்த அடிப்படை நியமங்களை வைத்துக்கொண்டு அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த எட்டு சிறுகதைகளையும் எனது தராசில் போட்டு நிறுத்துப் பார்க்க நான் ஆசைப்படுகின்றேன்.

Tuesday, December 29, 2015

வில்பத்துவும் விவாதமும்!


வில்பத்துக் காடு அழிக்கப்படுவது நாட்டின் சுக, சுவாத்தியங்களுக்கு தீர்க்கவே முடியாத பிரச்சனையாகும் என்று கதையாடிய ஆனந்த தேரோவிடம் 'யார் யாராலோவெல்லாம் சிதைக்கப்படுகின்ற, சீரழிக்கப்படுகின்ற ஏனைய காடுகளைப் பற்றி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பத்திரிகை ஆதரங்களைச் சுட்டிக் காட்டிய போது வில்பத்துப் பிரச்சனைக்குப் பின்னால் மறைகரங்கள் பல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைப் புத்தியுள்ள எவராலும் புரிந்து கொள்ள முடியுமாக இருந்ததைத் தொட்டுக் காட்டலாம்.

நேற்றிரவைய விவாதம் அல்லது பிரச்சனை பற்றிய ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட வடபுல முஸ்லிம்களின் குடியேற்றம் குறித்து முழு நாட்டுக்கும் நாட்டுக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறது.

அமைச்சருக்கெதிராக ஆனந்த தேரர் முன்வைத்த விடயங்களில் சில அமைச்சருக்கெதிரான அரசியல் வன்மம் கொண்டவர்கள் கடந்த காலங்களில் கூவித்திரிந்தவையும் அடங்குகின்றன. குறிப்பாக இந்தக் குழுவுக்குள் ஆனந்த தேரருக்கு ஆதாரம் சமர்ப்பித்தவர்களில் அமைச்சருக்கெதிரான முஸ்லிம் அரசியல் போராளிகளும் உள்ளார்கள் என்பதையும் புரியக்கூடியதாக இருந்தது. அமைச்சருடனான தனிப்பட்ட பொறாமையும் இதற்குள் அடங்குகிறது.

சட்டப்படியான ஏற்பாடுகளுடன் முஸ்லிம்களில் ஒரு பங்கினரே குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதுவும் மீதி நான்கு பங்கினர் இன்னும் அகதி முகாம்களிலும் சொந்த இடங்களுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மைக்கு தேரரிடமோ வினாவெழுப்பியவர்களிடமோ பதில் இருக்கவில்லை. அங்கு எந்தவிதப் பிரச்சனையுமே கிடையாது, இது அமைச்சராகவே தனது பிரபல்யத்துக்காக ஏற்படுத்திக் கொண்டது என்ற அவரது அரசியல் எதிரிகளது கூற்றும் பொய்யாகியிருக்கிறது.

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் சட்டபூர்வமாகத் தமிழர்களைக் குடியேற்றியதைப் பற்றியோ சட்டத்தை மதியாமல் வேறு இடங்களில் சிங்களவர்களை அரசு குடியேற்றியதை எதிர்க்காமல் இருந்தமை பற்றியோ சர்ச்சைகள் எழவில்லை.

கடந்த காலங்களில் அப்பிரதேச முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான காணி உறுதிகள், ஒப்பினைகள், உடைந்து சிதைத்திருக்கும் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் நிறுவப்பட்ட காலங்கள் பற்றிய ஆதாரங்கள் அனைத்தையும் காட்டிய பிறகும் உரிய மக்கள் அங்கு வாழவில்லை அல்லது அப்படியான கிராமங்கள் இருக்கவில்லை என்பவனும் அவனுக்கு ஒத்துழைப்பு வழங்குபவனும் ஒன்றில் குருடனாக, செவிடனாக புத்திசுவாதீனம் அற்றவனாக இருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு சக்தியின் பின்னணியில் இயங்குபவனாக இருக்க வேண்டும்.

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து தமது மக்களைக் குடியேற்ற முடியாமல் குழப்பியடித்துக் கொள்கிறார் என்று குற்றம் சுமத்தியவர்கள் விவாதம் நடைபெறப் போகிறது என்றதும் 'இது வீண் வேலை, மற்றொரு தேரரை அரங்குக்கு கொண்டு வரும் தவறை அமைச்சர் செய்யப்போகிறார், மேலிடத்துடன் பேசி முடித்துக் கொள்ள வேண்டிய கருமம்' என்று புதுப்பாட்டுப் பாட ஆரம்பித்திருந்தார்கள். இவர்களுடை கவலை துரத்தப்பட்ட முஸ்லிம்கள் பற்றியதோ அவர்களது எதிர்காலம் பற்றியதாகவோ அவர்களது பரம்பரையின் கல்வி நடவடிக்கைகள் பற்றியதோ அல்ல. அமைச்சர் முஸ்லிம் அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தடத்தைப் பதிந்து விடுவார் என்பதே.

விடுதலைப் புலிகளின் முஸ்லிம் வெறுப்பு மற்றும் முஸ்லிம் நிராகரிப்புக் கொள்கைளை முன்னெடுத்துச் செல்வோரின் கையாட்கள் என்று சந்தேகிக்கப்படும் முஸ்லிம்கள் ஒரு சிலரின் முகநூல் பதிவுகள் மற்றும் கருத்துப் பரிமாறல்களிலிருந்து 'அமைச்சர் தேவையற்ற காரியத்தில் இறங்கியிருக்கிறார்' என்பதை மட்டுமே படித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றி உக்கிரமாக எதிர்ப்புக் காட்டிய இரண்டாவது தேரர் ஆனந்த தேரர். முறைப்படி ஞானசார தேரரே இதை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரைச சந்தைப் படுத்த முடியாத நிலைமை இருக்கின்ற காரணத்தால் புதிய ஒரு தேரரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முஸ்லிம்கள் எங்கெல்லாம் சென்று வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இரண்டு பெரும்பான்மைளிலும் சில குழுக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன, பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் இந்த நிகழ்ச்சி சொல்லிச் சென்றிருக்கிறது.

டெய்ல் பீஸ்;:- நான்கைந்து அரசியல் பிரமுகர்களைக் கொண்டு விவாதம் நடத்த் தொலைக் காட்சி சார்பில் பெரும்பாலும் ஒருவரே நியமிக்கப்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு மூவர் வந்திருந்ததானது ஒரு வகைப் பயத்தின் வெளிப்பாடாவே தெரிந்தது.

Tuesday, December 22, 2015

அழகு!


கடந்த மாத வலம்புரி கவிதா வட்ட நிகழ்வில்  வாசிக்கப்பட்ட 
நான் மொழிபெயர்த்த கவிதை. படம் - நன்றி மேமன்கவி.

அழகு

பார்த்தவ் நாதிரி
(ஆப்கானிஸ்தான்)

தூரக் கிராமப் பெண்ணைப் போன்றது
உனது குரல்

அவள் 
மலைகளில் உள்ள 
பைன் மரங்களும் அறிந்த
உயரமும் உடல் நேர்த்தியும் கொண்டவள்

அந்திக் கருக்கலில்
நிலவின் சிறு குடையின் கீழ்
சுவர்க்கத்தில் குளித்த
பெண்ணைப் போன்றது 
உனது குரல்

அவள் அதிகாலையில்
வீட்டின்
சுத்தமான ஓர் ஒளிக் குடுவையொத்தவள்

அவள் சூரிய அருவியிலிருந்து
மிடர் மிடராக அருந்துபவள்

தூரக் கிராமப் பெண்ணைப் போன்றது
உனது குரல்

அவள்
சிற்றருவியின் பாடல்களால் ஆன
கொலுசு அணிந்தவள்

அவள்
மழையின் கிசுகிசுப்பைக் கொண்டு
உருவாக்கப்பட்ட 
காதணி அணிந்தவள்

அவள் 
ஒரு நீர் வீழ்ச்சியின் 
பட்டு கொண்டு நெய்யப்பட்ட 
கழுத்து மாலை அணிந்தவள்

இவையனைத்துமே
பல்வர்ணங் கொண்ட
காதலின் மலர்ச்சிக்கு
சூரியனின் தோட்டத்துக்குக் கிடைத்த
கருணையாகும்

நீயுங்கூட அழகானவள்தான் -
உனது குரலைப் போல!





Sunday, November 29, 2015

“சுயமி” - சிந்திக்கத் தூண்டும் சிந்துகள்!


லறீனா அப்துல் ஹக்கின் 'சுயமி' ஒலித்தகட்டை ஒரு முறைக்கு இருமுறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.

நான் இசை உபாசகன் அல்லன். பாடல்களதும் பாடல்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் இசையினதும் இரசிகன்.

கவிதைகளில் எனக்குள்ள ஈடுபாட்டுக்கு அப்பால் ஓர் ஒலிபரப்பாளனாகவும் நீண்ட காலம் வாழும் பாக்கியம் கிடைத்த காரணத்தால் கர்னாடக இசை, சினிமாப் பாடல்கள், இஸ்லாமிய கீதங்கள், வாத்தியங்களின் இசை, வாய்ப்பாட்டு, மெல்லிசைப் பாடல்கள் போன்றவற்றில் கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது.

இதற்கு அப்பால் கஸல், கவாலி, நஃத், நஷீத், ஹம்த், ஸூபி இசை ஆகியவற்றை இரசிக்கும் மனமும் உண்டு.

இவை போக - உலகத்தில் எந்த மூலையிலாயினும் மக்கள் எழுச்சியில் பாடல்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன என்பது குறித்த அவதானமும் உண்டு.

இந்த அனுபவங்களுடன்தான் லறீனாவின் 'சுயமி' பாடல்களையும் நான் கேட்டேன்.

தானே எழுதி, தானே இசையமைத்துத் தானே பாடும் திறமை இவருக்கு எங்கிருந்து வந்தது என்று சிந்தித்தேன்.

அவருடை தந்தையார் கலகெதர அப்துல் ஹக் ஒரு காலத்தில் சிங்களச் சினிமாத் துறையில் புகழ் பெற்றவர். அவர் சுஜீவா, சுனேத்ரா, கீதா, ஒபய் மமய், ச்சூக்கிரி கெல்ல ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர்.

அவரது தாயார் மாத்தளை பர்வீன் மிகவும் பிரபல்யமான எழுத்தாளராக விளங்கியவர். பல சிறுகதைகள், தொடர்கதைகளைப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தவர். அவரது எழுத்துக்களை நானும் படித்திருக்கிறேன்.

பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் பரம்பரை அலகுகள் எல்லோருக்கும் வெற்றிகரமாகச் சித்திப்பதில்லை. அதைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட நிறையப் பிரயத்தனங்கள் தேவை. அந்த முயற்சியும் ஈடுபாடும் லறீனாவிடம் இருக்கிறது.

லறீனா அப்துல் ஹக் நிகழ்கால முஸ்லிம் பெண் ஆளுமைகளும் மிகவும் முக்கியமானவர். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, கல்வியாளராக, வளவாளராக, சமூகச் செயற்பாட்டாளராக, பாடகியாக, இசையமைப்பாளராக என்று ஒரு பெரும் ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். இவ்வளவையும் ஒரு நல்ல மனைவியாகவும் ஒரு நல்ல தாயாகவும் குடும்பங்களைப் பராமரிக்கும் நல்ல நிர்வாகியாகவும் இயங்கியபடி நான் மேலே குறிப்பிட்ட அத்தனை துறைகளிலும் பிரகாசிக்கிறார் என்பது அவதானத்துக்குரியது.

இந்த ஒலித் தகட்டில் அல்லது இறுவட்டில் ஒன்பது பாடல்கள் அடங்கியிருக்கின்றன.

இசையும் ராகமும் எவ்வளவுதான் சிறப்பாக இருந்த போதும் பாடல் வரிகள் நன்றாக இல்லையென்றால் அந்தப் பாடல் எழுச்சி பெறாது. இதற்கு பல நூறு பாடல்களை நம்மால் உதாரணங்களாகக் கொள்ள முடியும்.

லறீனாவின் பாடல் வரிகள் ஆங்காங்கே கவித்துவத்தோடும் அர்த்தங்களோடும் வந்து விழுவதற்கு ஒரு சில உதாரணங்களைச் சொல்லலாம்.

அடையாளம் தொலைத்து விட்டோம்
அடிவாங்கிகிக் களைத்து விட்டோம்
முடிவற்ற கொடுமைகளால்
முகவரிகள் இழந்து விட்டோம்

மேடைகள் மீதேறி அமைதிதான் நோக்கமென்று
நாடகம் ஆடிடுவார்
வேடங்கள் போட்டிடுவார்
எம் துன்பம் உணர்ந்தது போல்
அழுதழுது பேசிடுவார்
நம் கண்கள் மறைந்து விட்டால்
நடு முதுகில் குத்திடுவார்.

இது மண்ணிலே.. இந்த மண்ணிலே என்ற பாடலில் வரும் வரிகள். இந்த இநுவட்டில் அடங்கியுள்ள பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடலும் இதுதான்.

'எங்கள் வாழ்வும் மலரும் காலம்
நாளையேனும் புலரக் கூடும்'

(வையம் மீதிலே என்ற பாடலில் வரும் வரிகள்)

'காற்றுக்கு இல்லை வேலியடி - என்
சிறகுக்கு இல்லை எல்லையடி'

(இசைப் பாடல் ஒன்று பாடினேன் என்ற பாடலில் வரும் வரிகள்)

முன்னால் நான் சொன்ன வரிகள் பாடல்கள் எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்று கூர்ந்து அவதானித்துப் பொறுக்கியவை அல்ல. பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே எனது கவனத்தைத் தானாக ஈர்த்த வரிகளில் சில.

கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் வித்தியாசம் உண்டு. கவிதைகள் அனைத்தும் பாடல்களாக முடியாது. ஆனால் பாடல்கள் கவிதையாகும். கவித்துவம் உள்ள பாடல்கள் காலத்தை வென்று வாழக் கூடியன.

லறீனாவின் பாடல்களில் சில பொதுப் பண்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டிய விடயம் என்னவெனில் நம்பிக்கை ஊட்டும் பண்பு. அநேகமாக எல்லாப் பாடல்களுமே இந்தப் பொதுப் பண்பைக் கொண்டிருக்கின்றன.

பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு செல்லும் போது ஒவ்வொரு பாடலின் வரிகளுக்கு அப்பால் அவர் தேர்ந்தெடுத்த ராகங்கள் மூலம் என்னை ஆச்சரியப்படுத்தினார் என்பதை நான் முழுமையாக ஒப்புக் கொண்டாக வேண்டும். குறிப்பாகச் சில பாடல்கள் இது கர்னாடக பாணியா, கஸல் பாணியா என்ற மயக்கத்துக்குள் என்னைத் தள்ளிக் கொண்டு போய் விட்டன.

பாடல்கள் பற்றியும் ராகங்கள் பற்றியும் அவருக்கு இருக்கும் தேர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடலை வித்தியாசமாக இப்படியும் பாட முடியும் என்று சொல்வது போலவுமிருந்தது. வையகம் மீதினிலே என்ற பாடலை இதற்கு உதாரணமாக முன் வைக்கலாம்.

ஒளியெங்கே என்று ஒரு பாடல் உண்டு. ஒரு புதுக் கவிதை வரி வடிவத்தை அல்லது கவிதையே இல்லாத வரி வடிவத்தைக் கூட லறீனாவால் பாடலாகப் பாட முடியும் என்பதைச் சொல்லி நிற்கிறது அந்தப் பாடல்.

ஒரு காலம் என்ற பாடலில் தனக்குக் கற்பித்த ஆசிரயர்களை நினைவு கூர்ந்து பாராட்டுகிறார். இந்த நூற்றாண்டில் அருகி வரும் பண்பு இது. லறீனாவுக்குக் கற்பித்தவர்கள் பாக்கியவான்கள் என்ற எண்ணமே இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றியது.

ஒரு சில பாடல்களில் வரும் ஹம்மிங் மற்றும் ஆலாபனை ஆகியவை பற்றியும் குறிப்பிட வேண்டும். பாடல்களுக்கு முன்பு வரும் ஆலாபனைகளும் பாடல்களுக்கு இடையில் வரும் ஹம்மிங்களும் நன்றாக இருக்கின்றன.

அன்னை மடியில் என்று ஆரம்பமாகும் பாடலில் பாடலின் ஒரு சில சொற்களுக்குரிய இடத்தை ஹம்மிங் மூலம் நிரப்பியிருக்கிறார்;. இது கவனத்தைக் கோரும் உத்தியாகத் தெரிகிறது. இந்தப் பாடலில் ஒலிக்கும் லறீனாவின் குரல் சிறு பிள்ளையொன்றின் குரலாகவும் ஒலிக்கிறது.

பொறு மகனே என்ற ஒன்பதாவதாக இருக்கும் பாடலில் லறீனா தனது துயரக் குரலையும் அழுகுரலையும் பதிவு செய்கிறார். வானொலி நாடகத்துக்கான ஒரு நடிகை கூட அவருக்குள் மறைந்து கிடப்பதை உறுதி செய்யும் பாடல் இது.

பொதுவாக இப்போது வரும் இசைப்பாடல்கள் யாவற்றிலுமே இசைக் கருவிகளின் இரைச்சல் வரிகளையும் பாடல் அர்த்தங்களையும் கொலை செய்து விடுகின்றன என்ற ஓர் அபிப்பிராயம் உண்டு.

இது தவிர ஒரே மாதிரியான இசையமைப்புப் போக்கும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. லறீனாவின் ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமான இசையமைப்புப் போக்கை உணர முடிகிறது.

ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான ராகத்துடனும் இசையமைப்புப் போக்குடனும் அமைந்திருப்பதால் அலுப்பையோ இலங்கைப் பாடல்கள் யாவும் இப்படித்தான் என்கிற பொது எண்ணத்தையோ இப்பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பதை அழுத்திச் சொல்ல முடியும்.

பாடல்களின் முக்கியத்துவம் என்ன என்று ஒரு வினா எழுப்பப்பட்டால் மனித ஆத்மாவின் ஜீவன் பாடல்கள்தாம் என்றுதான் நான் பதில் சொல்வேன். மனித வாழ்வானது ஏனைய எல்லாக் கலை வடிவங்களைம் விடப் பாடல்களுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது.

 தாலாட்டு முதற்கொண்டு ஒப்பாரி வரையான பாடல்கள் இதற்கு உதாரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இன்று இவையெல்லாம் வேறு வடிவங்களை எடுத்துள்ளனவே தவிர மொத்தமாக அழிந்து விடவில்லை என்பதை அவதானிக்க வேண்டும்.

பாடல் எத்தகையது என்பதைச் சொல்வதற்கு எளிய உதாரணமாகத் தேசிய கீதங்களைச் சுட்டிக் காட்டிவிட முடியும்.

பாடல் ஹலாலா ஹறாமா என்று முடிவற்ற பட்டி மன்றம் நடத்துவதற்குப் பின்னணியிலுக்கும் தேசங்கள் முதற் கொண்டு நேற்று ஸ்தாபிக்கப்பட்ட தேசம் வரை இசையோடிணைந்த தேசிய கீதம் இசைக்காத தேசம் ஒன்றை உலக வரைபடத்தில் யாராலும் காட்ட முடியாது.
தேசிய உணர்வை, ஒற்றுமையை, ஒன்றித்த பக்தியை ஏற்படுத்துவதற்கு தேசிக் கவிதையோ தேசிய நாடகமோ தேசிய வசனங்களோ தேசிய சிறுகதையோ பயன்படுத்தப்படுவதில்லை.

அது பாடலால் மாத்திரமே சாத்தியம் என்பதால்தான் அந்த வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மனிதனின் மென்மையான உணர்வில் சங்கமித்துச் செயற்படுத்தும்  வல்லமை பாடலுக்கு மாத்திரமே உண்டு.

மனித குலத்தின் பாதுகாப்புக்கான எழுச்சியில் - போராட்டத்தில் பாடல் ஓர் ஒப்பற்ற ஆயுதமாக இருக்கிறது. உலகில் தோன்றிய மக்கள் எழுச்சிகள் அனைத்திலும் பாடல் பெரும் பங்கு வகித்திருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும்.

நம் கண்முன்னே பாடலின் வலிமை சொல்லும் இரண்டு அண்மைய சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.

சிரியப் பாடகரான இப்றாஹிம் கஷவ்ஸ் சிரியாவின் டமஸ்கஸை விடப் பெரிய பிரதேசமான அலப்போவில் பஷர் அல் அஸாத்தை எதிர்த்துப் பாடினார். அவர் சொன்னதெல்லாம் ' யா பஷ்ஷார்.. யா பஷ்ஷார் நாட்டை விட்டுப் போ பஷ்ஷார். இசையோ தாளங்களோ இல்லாத பாட்டு அது. அந்தப் பாடல் வசனங்களை அவர் ஒவ்வொரு வரியாகப் பாடப்பாட லட்சக் கணக்கான மக்கள் திரும்பப் பாடினார்கள்.

தினமும் மக்கள் கூட்டம் பெருகியது. மிரண்டு போன பஷ்ஷாரின் கொலை அணி மிருகங்களை அறுப்பது போல அவரது குரல் வளையை அறுத்துத் தெருவில் போட்டு விட்டுச் சென்றது.

மிக அண்மையில் தமிழகத்தில் நாட்டுப் பாடல்களைப் பாடும் கோவன் கைது செய்யப்பட்டு விடுதலையானதை அறிவோம். அவரது பாடலின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று உறுதியாக நான் நம்பிய போதும் எளிமையாக அவர் பயன்படுத்திய வசனங்கள் மக்கள் கவனத்தைப் பெற்றதை மறுக்க முடியாது.

பெரும் யுத்தத் தாங்கிகளை விட, மல்டிபரல் குண்டு வீச்சை விட  பாடல்கள் வலியமையானவை என்பதற்கு இவை நல்ல உதாரணங்களாகும்.

மெல்லிசையையும் இஸ்லாமிய கீதங்களையும் வளர்த்தெடுத்ததில் அளப்பரிய பங்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குரியது. தமிழ் மெல்லிசை நிகழ்ச்சிகளை வர்த்தக சேவையும் தேசிய சேவையும் ஒலிபரப்பி வந்தன.

தமிழ் மெல்லிசைப் பாடல்களை எழுதிய முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் எனக்கு இப்போதைக்கு ஞாபகம் வருவது தற்போது வெளிநாட்டு அமைச்சில் கடமையாற்றும் நண்பர் எச்.ஏ.அஸீஸூம், அக்கரையூர் அப்துல் குத்தூஸூம்தாம். அப்துல் குத்தூஸ் அநேக மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். மெல்லிசைப் பாடகர்களில் எம்.ஜே.எம். அன்ஸாரும் எம்.எச்.பௌஸூல் அமீரும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

நமது கவனத்துக்கு எட்டாமல் பல இசை இறுவட்டுக்கள் வெளிவந்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்மணி என்ற வகையில் தானே எழுதி, தானே ராகம் தேர்ந்து, வாத்தியங்கள் தேர்ந்து, இசையமைத்துத் தானே பாடிய முதலாவது இறுவட்டு இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

இதைப் பிரித்துத் தனித்துச் சொல்வதற்குக் காரணம் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதே.

இந்த இடத்தில்தான் லறீனா அப்துல் ஹக்கின் திறமை மட்டுமன்றி துணிச்சலும் ஓர்மமும் வெளிப்பட்டு நிற்கிறது என்பதைச் சொல்ல எனக்கு எந்தவிதத் தயக்கங்களும் கிடையாது.

(இன்று நடந்த வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரையின் வரிவடிவம்)

Wednesday, November 18, 2015

எதை மேலும் சொல்ல இருக்கிறது யுத்தம் பற்றி!


 - 31 -

சிரியாவின் உள்நாட்டு யுத்தம் பிராந்திய யுத்தமாக மாறி உலக யுத்தமாக மாற்றம் பெற்று வருகிறது. யுத்தம் என்பதன் அர்த்தம் துயரம் என்பதுதான்.

யுத்தம் பற்றிப் பேசும் பல்லாயிரக் கணக்கான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. வந்து கொண்டுமிருக்கின்றன. சிரிய யுத்தத்தின் கொடுமையை இரண்டு தினங்கள் நேரில் கண்டு ஒரு கவிஞர் எழுதிய கவிதையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். அந்தனி ஜே. மார்செலா என்ற கவிஞர் இந்தக் கவிதையை 2013 ஆகஸ்ட்டில் எழுதியிருந்தார். யுத்தம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையை விரிக்கும் கவிதை இது என்று உணர்கிறேன்.

ஏற்கனவே சொல்லப்படாத
ஏற்கனவே எழுதப்படாத
ஏற்கனவே பாடல்களில் பாடப்படாத
செய்யுள்களில் ஓதப்படாத
காவியக் கதைகளில் பகிரப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது 
யுத்தம் பற்றி

தலை சிறந்த நடிகர்களைக் கொண்டு
குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய 
திரைப்படங்களில் 
கொடிகளின் அசைவுகளுக்கு மத்தியில்
பெருமையுடன் சண்டையிட்டும் செத்தும்
சித்தரிக்கப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி? 

அல்லது
கவனமாகச் செம்மைப்படுத்தப்பட்ட
புகைப்படங்கள் கொண்டு
எழுத்துக்கள் கொண்டு
இடையறாத சோக இசைக்கு மத்தியில்
துன்பமளிக்கும் வார்த்தைகளிலான
புலம்பல்கள் கொண்டு
தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களில்
காட்டப்படாத எi மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி?

ஏற்கனவே சலவைக் கற்களில்
செதுக்கப்படாத
கித்தான்களில் வரையப்படாத
ஈர்க்கும் வர்ணங்களிலும்
கருப்பு - வெள்ளைப் புகைப்படங்களிலும்
இரத்தம் சிவப்பு நிறத்திலும்
எலும்பு வெள்ளை நிறத்திலும்
மரணம் முடிவுறாதது என்றும் காட்டப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி?

ஏற்கனவே
தப்பிப் பிழைத்த வீரர்களின்
மனதிலும் உடலிலும் பதியப்படாத
பொது மகனால் பொறுத்துக் கொள்ள முடியாத
பிடிக்கப்பட்ட சிறைக் கைதிகளின்
வெளித்தெரியும் காயங்களும்
வெளித் தெரியாத காயங்களும் சொல்லாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

சூரிய ஒளியினாலும் நிழலினாலும் மூடப்பட்டு
தேசிய மரண நிகழ்வுகளில்
அர்ப்பணிப்புக்கான கௌரம் வழங்கப்பட்ட
உடல்களுக்கென
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட
கிரனைற் நடுகற்களில் செதுக்கப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

கதாநாயகர்களையும் வில்லன்களையும்
சிப்பாய்களையும் தளபதிகளையும்
மாவீரர்களையும் சொங்கிகளையும்
சுதந்திரப் போராளிகளையும்
பயங்கரவாதிகளையும்
பாதிக்கப்பட்டவர்களையும்
ஆதரவாளர்களையும்
மன்னிப்புக் கோரலையும்
இழப்பீடு வழங்குதலையும்; பற்றி
ஏற்கனவே சொல்லப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

பழிவாங்கல், ஆதிக்கம், மேலாண்மை,
நன்னடத்தைக் கடமைகள், பொறுப்பு,
வாய்ப்புகளையும் வளங்களையும் மேம்படுத்தல்,
கட்டுப்படுத்தலுக்கும் அதிகாரத்துக்குமான பேராசை,
தீமை பயத்தல், பெருஞ்சிறப்பு...
இத்தியாதி வார்த்தைகளால் சொல்லப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

உயிர்கள் காவு கொள்ளப்படுகிற
சிந்ததைகள் சிதைக்கப்படுகிற
வாட்டர்லூ, பலூஜா போன்று
வெற்றி கொண்டோரின் பக்கச்சார்பான சொற்கள் கொண்டு
வரலாற்றாசிரியர்கள் வடிவப்படுத்துகிற
யுத்தகளங்கள் புகழப்படாத 
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

யுத்தத்தில் வெற்றியாளர் என்று
யாரும் கிடையாது!

எவ்வளவோ எழுதப்பட்டும்
எவ்வளவோ பேசப்பட்டும்
எவ்வளவோ செதுக்கப்பட்டும்
யுத்தத்தின் பாடங்கள் 
தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்
தொடர்ந்து மறுக்கப்படுவதும்
தொடர்ந்து திரித்துக் கூறப்படுவதும்
ஏன்?

இதோ... இன்று சிரியா....

(நன்றி - மீள்பார்வை)